Sunday, August 07, 2016

மலைவாசிகளை வீழ்த்திய சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 120

Satyaki defeated the mountaineers! | Drona-Parva-Section-120 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 36)

பதிவின் சுருக்கம் : சாத்யகியின் திறனை வியந்த திருதராஷ்டிரன்; சாத்யகிக்கு எதிராக மலைநாட்டினரைத் தூண்டிய துச்சாசனன்; சாத்யகியால் கொல்லப்பட்ட யானைகளும், குதிரைகளும், வீரர்களும்; கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளின் போர்முறை; சாத்யகியால் கொல்லப்பட்ட மலைவாசிகள்; துரோணரும் அவரது தேரோட்டியும் பேசிக்கொண்டது; சாத்யகிக்கு அஞ்சி துரோணரை நோக்கி ஓடி வந்த கௌரவர்கள்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பெரும்படையைக் கலங்கடித்தபடியே அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்டு, ஓ! சஞ்சயா, உண்மையில் வெட்கங்கெட்டவர்களான என் மகன்கள் என்ன செய்தனர்? சவ்யசச்சினுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனான அந்த யுயுதானன் {சாத்யகி} தங்கள் எதிரில் இருந்த போது, உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த இழிந்தவர்களால் போரில் எப்படித் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய முடிந்தது? போரில் வெல்லப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன செய்தனர்? உலகம் பரந்த புகழைக் கொண்ட சாத்யகியால், உண்மையில், போரில் எப்படி அவர்களைக் கடந்து செல்ல முடிந்தது? ஓ! சஞ்சயா, என் மகன்கள் உயிரோடிருக்கையிலேயே அந்தச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} எப்படிப் போரிட முடிந்தது? இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக. ஓ! ஐயா {சஞ்சயா}, உன்னிடமிருந்து கேட்டவாறே, ஒருவனுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல் மிக அற்புதமானாதாகவே இருக்கிறது.


ஓ! சூதா {சஞ்சயா}, சாத்வத குல வீரனான தனி ஒருவனால் {சாத்யகியால்}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் கொல்லப்பட்டதால் விதியானது இப்போது என் மகன்களுக்குச் சாதமானதாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஐயோ, ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி} என்ற ஒற்றை வீரனுக்குக்கூட என் படை இணையானதாக இல்லையே. {அப்படியிருக்கையில்} பாண்டவர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஆயுதங்களில் திறன்மிக்கவரும், போர்க்கலையின் முறைகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணரையே போரில் வென்ற சாத்யகி, சிறு {அற்ப} விலங்குகளைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல என் மகன்களைக் கொன்றுவிடுவான். போரில் மூர்க்கமாகப் போரிட்டும் கிருதவர்மன் முதலிய எண்ணற்ற வீரர்களால் யுயுதானனைக் கொல்ல முடியவில்லையே. பின்னவன் {சாத்யகி} என் மகன்களைக் கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. சிநியின் புகழ்பெற்ற பேரன் போரிட்டது போலப் பல்குனனேகூட {அர்ஜுனனேகூட} போரிடவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய ஆலோசனைகளாலும், துரியோதனனின் செயல்களாலுமே இவை யாவும் வந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்பீராக.

உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சம்சப்தகர்கள் அனைவரும் கடுமையாகப் போரிடத் தீர்மானித்து மீண்டும் திரண்டனர். துரியோதனன் தலைமையில் மூவாயிரம் {3000} வில்லாளிகளும், சகர்கள், காம்போஜர்கள், பாஹ்லீகர்கள், யவனர்கள், பாரடர்கள் [1], கலிங்கர்கள், தங்கணர்கள், அம்பஷ்டர்கள், பிசாசர்கள் {பைசாசர்கள்}, பர்ப்பரர்கள், சினத்தால் தூண்டப்பட்டு, கற்களை ஆயுதமாக ஏந்திய மலை நாட்டினர் ஆகியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பை எதிர்க்கும் விட்டிற்பூச்சிகளைப் போல அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர். அதே போல, ஓ! மன்னா, ஐநூறு {500} வீரர்களான பிறரும் சாத்யகியை எதிர்த்து விரைந்தனர். ஆயிரம் {1000} தேர்களையும், பெரும் தேர்வீரர்களான நூறு பேரையும், ஆயிரம் {1000} யானைகளையும், இரண்டாயிரம் {2000} வீரர்களையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொண்ட மற்றொரு பெரிய படையும் சிநியின் பேரனை எதிர்த்து விரைந்தது.

[1] கங்குலியில் இங்கே Paradas என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இங்குப் {வேறு} பாரதர்கள் என்று இருக்கிறது. இவர்கள் பரதவம்சத்தவர் அல்ல. இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தப் பாரடர்கள் என்று புரானிக் என்சைக்ளோபீடியா சொல்கிறது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், "அவனை {சாத்யகியைக்} கொல்வீராக" என்று சொல்லி அந்த வீரர்கள் அனைவரையும் தூண்டியபடியே சாத்யகியைச் சூழ்ந்து கொண்டான். அந்த எண்ணிலடங்கா எதிரிகளுடன், தனி ஒருவனாக அச்சமற்றவகையில் போராடிய சிநியின் பேரனுடைய நடத்தை மகத்தானதாகவும், அற்புதமானதாகவும் இருப்பதை நாங்கள் கண்டோம். அவன் {சாத்யகி}, தேர்வீரர்கள் அடங்கிய அந்த மொத்த படையையும், அந்த யானைப் படையையும், அந்தக் குதிரைவீரர்கள் அனைவரையும், கள்வர்களின் அந்தப் படை முழுவதையும் கொன்றான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போல, அந்தப் போர்க்களமானது, உடைந்த தேர்ச்சக்கரங்கள், அவனது {சாத்யகியின்} வலிமைமிக்க ஆயுதங்களால் நொறுக்கப்பட்ட எண்ணற்ற அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, துண்டுகளாகக் குறைக்கப்பட்ட அழகிய தேர் அச்சுக்கள், நசுங்கிய யானைகள், வீழ்ந்த கொடிமரங்கள், சிதறிக் கிடக்கும் கவசங்கள் மற்றும் கேடயங்கள், மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், அனுஷ்கரங்கள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றால் விரவி கிடந்தது [2].

[2] வேறொரு பதிப்பில் இதற்குப் பிறகு இன்னும் அதிகமாக, "மலைகளின் வடிவம் போன்ற வடிவத்தையுடைவையும், மிலேச்சர்களால் ஏறப்பட்டவையும், விள்ளப்பட்ட {கட்டிச் சேர்க்கப்பட்ட} மைக்கட்டி போன்றவையும், கீழே விழுந்திருப்பவையுமான பெரும் யானைகளாலும், பருத்திருக்கும் மலை போன்றவையான விலங்குகளாலும், மந்தரங்களாலும், பத்ரங்களாலும், மிருகமந்தரங்களாலும், மந்தரபத்ரங்களாலும், மந்தரமிருகங்களாலும், மிருகபத்ரங்களாலும், பத்ரமிருகங்களாலும் ஆங்காங்கு யுத்த பூமியானது வியாபிக்கப்பட்டிருந்தது" என்று இருக்கிறது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யானைகளில் முதன்மையானவை பலவும், ஓ! மன்னா, மலைகளைப் போலப் பெரியவையும், அஞ்சனம், வாமனம், மற்றும் பிற இனங்களில் பிறந்த முதன்மையான யானைகள் பலவும், உயிரையிழந்து தரையில் கிடந்தன [3]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாத்யகியால், வனாயு, மலைநாடு, காம்போஜம், பாஹ்லீக இனங்களைச் சேர்ந்த முதன்மையான பல குதிரைகள் கொல்லப்பட்டன. அந்தச் சிநியின் பேரன், பல்வேறு மாநிலங்களில் பிறந்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுமான காலாட்படை வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.

[3] வேறொரு பதிப்பில், "அஞ்சனத்தின் வம்சத்திற் பிறந்தவையும், வாமனத்தினுடைய குலத்தில் தோன்றியவையும், சுப்ரதீகத்தின் குலத்தில் தோன்றியவையும், குமுதத்தினுடைய வம்சத்தில் தோன்றியவையும், ஐராவதத்தின் குலத்தில் பிறந்தவையும், அவ்வாறே மற்றத்திக்கஜங்களுடைய குலங்களில் தோன்றியவையுமான பல சிறந்த யானைகள் அடிக்கப்பட்டு விழுந்தன" என்று இருக்கிறது

அந்தப் படைவீரர்கள் இப்படிக் கொல்லப்பட்டு வருகையில் கள்வர்களிடம் பேசிய துச்சாசனன், "அறநெறியறியா வீரர்களே போரிடுவீராக! ஏன் பின்வாங்குகிறீர்?" என்றான். தன் வார்த்தைகளைக் கேளாமல் ஓடிச் செல்லும் அவர்களைக் கண்டவனும், உமது மகனுமான துச்சாசனன், கற்களைக் கொண்டு போரிடுவதில் திறம்பெற்றவர்களான துணிச்சல் மிக்க அந்த மலைவாசிகளிடம், "கற்களைக் கொண்டு போரிடுவதில் நீங்கள் சாதித்தவர்களாக இருக்கிறீர்கள். எனவே நிற்பீராக. அந்த வீரன் {சாத்யகி} போரிடும் விருப்பத்துடன் இருப்பினும், அவன் {சாத்யகி} உங்கள் போர் முறையை அறியாதவனாவான். கௌரவர்கள் அனைவரும் இந்தப் போர்முறையை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். சாத்யகியை நோக்கி விரைவீர். அஞ்சாதீர். சாத்யகியால் உங்களை அணுக இயலாது" என்று சொல்லி அவர்களைத் {மலைவாசிகளைத்} தூண்டினான்.

இப்படித் தூண்டப்பட்டவர்களும், கற்களைக் கொண்டு போரிடும் முறையை அறிந்தவர்களும், மலைவாசிகளுமான அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், மன்னனை நோக்கி விரையும் அமைச்சர்களைப் போலவே அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தனர். பிறகு அந்த மலைவாசிகள், யானைகளின் தலையைப் போன்று பெரிய அளவிலான கற்களைத் தங்கள் கரங்களில் உயர்த்தியபடியே அந்தப் போரில் யுயுதானனுக்கு எதிராக நின்றனர். உமது மகனால் {துச்சாசனனால்} தூண்டப்பட்ட பிறரும், ஏவுகணைகளைத் தரித்துக் கொண்டு அந்தச் சாத்வதனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தில், பின்னவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது சாத்யகி, கற்களைக் கொண்டு போரிடும் விருப்பத்தால் தன்னை நோக்கி விரைந்து வரும் அவ்வீரர்களைக் குறிபார்த்து, அவர்கள் மேல் கூரிய கணைகளை ஏவினான். அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, பாம்புகளைப் போன்று தெரிந்த அந்தக் கணைகளால், அந்த மலைவாசிகள் வீசிய கற்களின் அடர்த்தியான மழையைத் துண்டுகளாக வெட்டினான். சுடர்மிக்க விட்டிற்பூச்சிகளைப் போலத் தெரிந்த அந்தக் கற்களின் துண்டுகள், பல போராளிகளைக் கொன்றன. அதன்பேரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, "ஓ!" என்றும், "ஐயோ" என்றும் அந்தக் களத்தில் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கரங்களில் பெரும் கற்களை உயர்த்திப் பிடித்திருந்த துணிச்சல் மிக்க ஐநூறு {500} போர் வீரர்களின் கரங்களும் வெட்டப்பட்டுக் கீழே தரையில் கிடந்தன. மேலும் முழுமையாக ஆயிரம் {1000} பேரும், அதன் பிறகு ஒரு நூறாயிரம் {1,00,000} பேரும், கற்களைப் பிடித்திருந்த நிலையிலேயே தங்கள் கரங்கள் வெட்டப்பட்டுச் சாத்யகியை அணுகமுடியாமல் கீழே விழுந்தனர். உண்மையில் சாத்யகி, கற்களைக் கொண்டு போரிட்ட அந்த வீரர்களில் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.

பிறகு அவர்களில் பலர் மீண்டும் போரிடத் திரும்பி கற்களின் மாரியைச் சாத்யகியின் மீது பொழிந்தனர். வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த தரதர்கள், தங்கணர்கள், கசர்கள், லம்பகர்கள், புளிந்தர்கள் ஆகியோரில் பலர் அவன் {சாத்யகியின்} மீது தங்கள் ஆயுதங்களை வீசினர். எனினும், ஆயுதப் பயன்பாடுகளை நன்கறிவந்தனான சாத்யகி, அந்தக் கற்களையும், ஆயுதங்களையும் தன் கணைகளால் வெட்டினான். சாத்யகியின் கூரிய கணைகள் துளைத்து, ஆகாயத்தில் உடைக்கப்பட்ட அந்தக் கற்கள் உண்டாக்கிய அந்தக் கடும் ஒலியால் அச்சமடைந்த பல தேர்வீரர்களும், குதிரைகளும், யானைகளும் போரில் இருந்து ஓடின. அந்தக் கற்களின் துண்டுகளால் தாக்கப்பட்ட மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன, குளவிகளால் கடிபட்டதைப் போல உணர்ந்து போரில் நிற்க முடியாதவர்களாக ஆனார்கள். (சாத்யகியைத் தாக்கிய) யானைகளில் எஞ்சியவை சில குருதியால் நனைந்து, தங்கள் தலைகளும், கும்பங்களும் பிளக்கப்பட்டு யுயுதானனுடைய தேரின் அருகில் இருந்து தப்பி ஓடின. அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாதவனால் {சாத்யகியால்} இப்படிக் கலங்கடிக்கப்பட்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் அலைகள் நிரம்பிய பெருங்கடலைப் போல ஆரவாரம் எழுந்தது.

அந்தப் பெரும் ஆரவாரத்தைக் கேட்ட துரோணர், தன் தேரோட்டியிடம், "ஓ! சூதா, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்தப் பெரும் தேர்வீரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு நம் படையைப் பல்வேறு துண்டுகளாகச் சிதறடித்து, அந்தகனைப் போலவே களத்தில் திரிந்து கொண்டிருக்கிறான். இந்தச் சீற்றமிகு ஆரவாரம் வரும் இடத்திற்குத் தேரைச் செலுத்துவாயாக. யுயுதானன், கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளுடன் போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. நமது தேர்வீரர்களும், மூர்க்கமாக ஓடும் குதிரைகளால் சுமந்து செல்லப்படுவது காணப்படுகிறது. ஆயுதங்களற்றவர்களாகவும், கவசமற்றவர்களாகவும் காயமடைந்தவர்களாகவும் இருக்கும் அவர்களில் பலர் கீழே விழுகின்றனர். இந்தக் குதிரைகள் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருப்பதால் தேரோட்டிகள் அவற்றைத் தடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்" என்றார் {துரோணர்}.

பரத்வாஜர் மகனின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரிடம், "ஓ! நீண்ட நாட்களால் {ஆயுளால்} அருளப்பட்டவரே, கௌரவத் துருப்புகள் ஓடுகின்றன. (எதிரியால்) முறியடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் நமது போர்வீரர்களைக் காண்பீராக. மேலும், ஒன்று கூடியிருப்பவர்களான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் உம்மைக் கொல்லும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து வருகின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இப்பணிகளில் {இவ்விரு பணிகளில்}, கவனத்தைக் கோரும் முதன்மையான பணி யாது என்பதை நீர் தீர்மானிப்பீராக. (முன்னேறி வரும்) பாண்டவப் படையைச் சந்திக்க நாம் இங்கே நிற்க வேண்டுமா? அல்லது (சாத்யகியை நோக்கிச்) நாம் செல்ல வேண்டுமா? சாத்யகியைப் பொறுத்தவரை, இப்போது அவன் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கிறான்" என்றான் {துரோணரின் தேரோட்டி}.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரோட்டி இப்படிப் பரத்வாஜர் மகனிடம் {துரோணரிடம்} பேசிக் கொண்டிருக்கையில், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களைக் கொன்றபடி சிநியின் பேரன் {சாத்யகி} அங்கே திடீரெனத் தோன்றினான். அந்தப் போரில் உமது துருப்புகள் இப்படி யுயுதானனால் கொல்லப்படுகையில், யுயுதானனுடைய தேரின் அருகே இருந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கி அவை ஓடின. அதேபோலவே, எந்தப் (பிற) தேர்வீரர்களோடு சேர்ந்து துச்சாசனன் சென்றானோ, அவர்கள் அனைவரும், துரோணரின் தேர் காணப்பட்ட அந்த இடத்திற்கே பீதியடைந்து விரைந்து வந்தனர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்