Thursday, October 06, 2016

அனைவராலும் புகழப்பட்ட அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 155ஈ

Aswatthama applauded by all! | Drona-Parva-Section-155d | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனின் வில்லை வெட்டிய கடோத்கசன்; கடோத்கசனின் தேரை அழித்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனின் தேரில் ஏறிய கடோத்கசன்; ராட்சசக் கூட்டத்தை அழித்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன் உண்டாக்கிய குருதிப்புனல்; துருபதன் மகன்களையும், குந்திபோஜன் மகன்களையும் கொன்ற அஸ்வத்தாமன்; மயக்கமடைந்த கடோத்கசனை வேறு தேரில் ஏற்றிய திருஷ்டத்யும்னன்; அனைவராலும் புகழப்பட்ட அஸ்வத்தாமன்...


{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்ததைப் போல அவ்விரவில், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்} இடையிலான போர் நடைபெற்றது.(126) சினத்தில் நிறைந்த கடோத்கசன், நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பத்து கடுங்கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} மார்பைத் தாக்கினான்.(127) பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அஸ்வத்தாமன், புயலால் அசைக்கப்பட்ட நெடிய மரம் ஒன்றைப் போலத் தன் தேர்த்தட்டில் நடுங்கிக் கொண்டிருந்தான்.(128) கடோத்கசன் மீண்டும் ஒரு பல்லத்தைக் கொண்டு துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கைகளில் இருந்த பிரகாசமான வில்லை வெட்டினான்.(129) பிறகு பெருங்கடினத்தைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவன் {அஸ்வத்தாமன்}, (தன் எதிரியின் மீது) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைகளைப் பொழிந்தான்.(130) பிறகு அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வானுலாவுபவையும், எதிரிகளைக் கொல்பவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைகள் பலவற்றை வானுலாவும் அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது ஏவினான்.(131)


அப்போது அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவையும், அகன்ற மார்பினரான ராட்சசர்களைக் கொண்டவையுமான அந்தப் பெரிய படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதயானைக் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(132) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சர்களைத் தன் கணைகளால் எரித்த அவன் {அஸ்வத்தாமன்}, யுக முடிவில் உயிரினங்களை எரிக்கும் புகழத்தக்க அக்னியைப் போலச் சுடர்விட்டெரிந்தான்.(133) தன் கணைகளால் ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளை எரித்த அஸ்வத்தாமன், முந்நகரத்தை {திரிபுரத்தை} [11] எரித்த தெய்வீக மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(134) வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமது எதிரிகளை எரித்து, யுகமுடிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் யுக நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(135)

[11] “திரிபுராசுரனின் நகரமான திரிபுரம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது சினத்தால் நிறைந்த கடோத்கசன், “துரோணரின் மகனைக் கொல்வீராக” என்று சொல்லி அந்தப் பரந்த ராட்சசப் படையைத் தூண்டினான்.(136) பிரகாசமான பற்களையும், பெரிய முகங்களையும், பயங்கரத் தன்மைகளையும், அகன்ற வாய்களையும், நீண்ட நாக்குகளையும், கோபத்தால் சிவந்த கண்களையும் கொண்ட அந்தப் பயங்கர ராட்சசர்கள், கடோத்கசனின் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.(137) தங்கள் சிங்க முழக்கங்களால் பூமியை நிறைத்து, பல்வேறு வகை ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அவர்கள் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்வதற்காக அவனை எதிர்த்து விரைந்தனர்.(138) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனின் தலை மீது நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஈட்டிகள், சதக்னிகள், பரிகங்கள், அசனிகள், நீண்ட வேல்கள் {சூலங்கள்}, கோடரிகள், கத்திகள், கதாயுதங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, கனமான தண்டாயுதங்கள், போர்க்கோடரிகள், பராசங்கள், வாள்கள், வேல்கள் {தோமரங்கள்}, குணபங்கள், பளபளப்பான கம்பனங்கள், ஸ்தூலங்கள் {புசுண்டிகள்}, ஏவுகணைகள், கற்கள், (சூடான) பாகு நிறைந்த பாத்திரங்கள், எஃகால் ஆன ஸ்தூணங்கள் {தூண்கள்}, உலக்கைகள் மற்றும் பயங்கரமான வடிவத்துடன் கூடியவையும் எதிரிகளை அழிக்கவல்லவையான அனைத்தையும் வீசினார்கள்.(139-142)

துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலையில் விழுந்து கொண்டிருந்த, அந்த ஆயுதங்களின் அடர்த்தியான கணைமாரியைக் கண்ட உமது போர்வீரர்கள் மிகவும் துன்புற்றனர்.(143) எனினும், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆகாயத்ததில் எழுந்த மேகத்தைப் போலத் தெரிந்ததும், இடியின் பலத்தைக் கண்டதுமான அந்தப் பயங்கர ஆயுத மழையைத் தன் கூரிய கணைகளால் அச்சமற்றவகையில் அழித்தான்.(144) பிறகு அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், தெய்வீக ஆயுதங்களின் சக்தியை மந்திரங்களால் ஈர்த்திருந்தவையுமான பிற ஆயுதங்களால் வேகமாக ராட்சசர்களில் பலரைக் கொன்றான்.(145) அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகலமான மார்பைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதங்கொண்ட யானைகளின் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(146)

அப்போது, துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், சீற்றத்தால் நிறைந்து, முன்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(147) அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, தன் சுடர்மிக்கக் கணைகளால் அந்த ராட்சசப் படையை எரித்தவனும், உயர்ந்த வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனுமான அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தனியாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்து கொண்டே, உயிருடன் கூடிய வேறு எந்த உயிரினங்களும் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்ததால், அப்போது துரோணரின் மகனால் வெளிக்காட்டப்பட்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(148,149) ராட்சசப் படையை எரித்துக் கொண்டிருந்த போது, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, யுகமுடிவில் அனைத்தையும் எரிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(150)

உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால், அந்தப் போரில் அவர்களது படைகளை எரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} பார்க்கவல்ல சக்தி, வலிமைமிக்க ராட்சச இளவரசனான அந்த வீர கடோத்கசனைத் தவிர வேறு எவனிடமும் இல்லை.(151,152) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்களை உருட்டிக் கொண்டும், உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டும், தன் (கீழ்) உதட்டைக் கடித்துக் கொண்டும் இருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் தேரோட்டியிடம், “துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} என்னைச் சுமந்து செல்வாயாக” என்றான்.(153)

வெற்றிக் கொடிகளைக் கொண்ட அந்த உறுதிமிக்கத் தேரில் ஏறிச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன் {கடோத்கசன்}, துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மீண்டும் ஒரு தனி மோதலை விரும்பி, பின்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சென்றான். பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சிங்க முழக்கமொன்றை முழங்கி, அந்த மோதலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது, தெய்வீகக் கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்டதும், எட்டு மணிகளுடன் கூடியதுமான ஒரு பயங்கர அசனியை[12] ஏவினான்.(154-156) எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் வில்லை விட்டுவிட்டுத் தேரில் இருந்து கீழே குதித்து, அதை {அந்த அசனியைப்} பிடித்து, மீண்டும் கடோத்கசன் மீதே அதைத் திருப்பி வீசினான். அதே வேளையில் கடோத்கசன், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே இறங்கினான்.(157) பளபளக்கும் பிரகாசம் கொண்ட அந்த உறுதி மிக்க அசனியானது, குதிரைகள், சாரதி, கொடிமரம் ஆகியவற்றோடு கூடிய அந்த ராட்சசனின் வாகனத்தைச் சாம்பலாக்கி, பூமியைத் துளைத்து அவளுக்குள் {பூமிக்குள்} நுழைந்தது.(158) தன் தேரில் இருந்து கீழே குதித்து, தெய்வீகக் கைவண்ணம் கொண்ட அந்தப் பயங்கர அசனியைப் பிடித்த அந்தத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருஞ்செயலைக் கண்டு உயிரினங்கள் அனைத்தும் மெச்சின.(159)

[12] “அசனி என்றால் உண்மையில் இடி அல்லது வஜ்ரம் என்று பொருள். ஒருவேளை இஃது ஒரு வகை இரும்பு கதாயுதமாக இருக்கலாம்” என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தேருக்குச் சென்ற அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, இந்திரனின் பெரிய வில்லுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, சிறப்புமிக்கத் துரோணரின் மகன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான்.(160) திருஷ்டத்யும்னனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான முதன்மையான கணைகள் பலவற்றை அஸ்வத்தாமனின் மார்பில் ஏவினான். பிறகு துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆயிரக்கணக்கான குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} ஏவினான்.(161,162) எனினும், கடோத்கசன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், நெருப்பின் தீண்டலுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் அஸ்வத்தாமனின் கணைகளைத் தாக்கி அவற்றைக் கலங்கடித்தனர். (ஒரு புறத்தில்) மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவர், (மறுபுறத்தில்) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என அவர்களுக்கு இடையில் மிகக் கடுமையாக நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதக் குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள் மற்றும் ஆறாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் அந்த இடத்திற்குப் பீமசேனன் வந்தான்.(163, 164) எனினும், துரோணரின் அற மகன் {அஸ்வத்தாமன்}, களைப்பறியா ஆற்றலுடன் தொடர்ந்து பீமனின் வீர மகனுடனும் {கடோத்கசனுடனும்}, {பின் தொடர்ந்து வரும்} தொண்டர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனுடனும் போரிட்டான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் அத்தகு அருஞ்செயல்களை உயிரினங்கள் அனைத்தில் எவையும் செய்ய முடியாது எனும் அளவுக்குத் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(165-167) பீமசேனன், ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, விஜயன் {அர்ஜுனன்} மற்றும் அச்யுதன் {கிருஷ்ணன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் கூரிய கணைகளால் அவன் {அஸ்வத்தாமன்} அழித்தான்.(168,169) நேராகச் செல்லும் (அஸ்வத்தாமனின்) கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட யானைகள், சிகரங்களற்ற மலைகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன. வெட்டப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த துதிக்கைகளால் விரவிக் கிடந்த பூமியானது நெளியும் பாம்புகளால் நிறைந்திருப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. தங்கத் தண்டுகள் மற்றும் அரசக் குடைகளால் விரவிக் கிடந்த பூமியானது, யுக முடிவின் போது கோள்கள், நட்சத்திரங்கள், நிலவுகள் மற்றும் சூரியன்கள் பலவற்றால் விரவிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(170, 171)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேகமான ஓடையுடன் கூடிய குருதிப்புனல் ஒன்றை அங்கே ஓடச் செய்தான். யானைகள், குதிரைகள் மற்றும் போராளிகளின் குருதியே அதன் {அந்த ஆற்றின்} நீரானது. நெடிய கொடிமரங்கள் அதன் தவளைகளாகின. பேரிகைகள் அதன் பெரும் ஆமைகளாகின; குடைகள் அதன் அன்ன {அன்னப்பறவை} வரிசையாகின; அபரிமிதமான சாமரங்கள் அதன் நுரைகளாகின; கங்கங்கள், கழுகுகள் ஆகியன அதன் முதலைகளாகின; அபரிமிதமான ஆயுதங்கள் அதன் மீன்களாகின; பெரும் யானைகள் கரையில் கிடக்கும் அதன் கற்கள் மற்றும் பாறைகளாகின; யானைகளும், குதிரைகளும் அதன் சுறாக்களாகின; தேர்கள் அதன் நிலையில்லாத கரைகளாகின; கொடிகள் அதன் அழகிய மர வரிசைகளாகின. கணைகளைத் தன் (சிறு) மீன்களாகக் கொண்ட அந்தப் பயங்கர ஆறு, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றைத் தன் பாம்புகளாகக் கொண்டிருந்தது; மஜ்ஜை மற்றும் இறைச்சியைச் சேறாகவும், தலையற்ற உடல்களை  மிதக்கும் தெப்பங்களாகவும் கொண்டிருந்தது. (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மயிர்களால் அடைக்கப்பட்ட அஃது அவற்றைப் பாசியாகக் கொண்டிருந்தது. மேலும் அது மருண்டோரை அச்சங்கொள்ளவும், உற்சாகமிழக்கவும் செய்தது. போராளிகளின் ஓலம் அதன் பயங்கர முழக்கமாக இருந்தது. இரத்த அலைகளே அதன் பரப்பில் தெரிந்தன.(172-177) காலாட்படை வீரர்களால் நிறைந்து பயங்கரமாக இருந்த அது, கடலான யமனின் வசிப்பிடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ராட்சசர்களைக் கொன்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிறகு, தன் கணைகளால் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(178) மீண்டும் சினத்தால் நிறைந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கணைகள் பலவற்றால், விருகோதரன் {பீமன்} மற்றும் பிருஷதன் {துருபதன்} மகன்கள் உள்ளிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களைத் துளைத்த பிறகு, துருபதன் மகன்களில் ஒருவனான சுரதனைக் {சுருதனைக்} கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்}, சத்ருஞ்சயன் என்ற பெயர் கொண்ட சுரதனின் தம்பியையும் கொன்றான்.(179,180) மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, பலானீகன், ஜயானீகன், ஜயன் ஆகியோரையும் கொன்றான். சிங்க முழக்கம் செய்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மீண்டும் கூரிய கணையொன்றால் பிருஷத்ரனையும், அதன் பிறகு செருக்குமிக்கச் சந்திரசேனனையும் கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} பத்து கணைகளால் குந்திபோஜனின் பத்து மகன்களைக் கொன்றான்.(181,182) மேலும் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுஷை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவன் {அஸ்வத்தாமன்}, அழகிய சிறகுகளையும், கண்களையும் {!} கொண்ட மூன்று பிற கூரிய கணைகளால் வலிமைமிக்கச் சத்ருஞ்சயனைச் {!} சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பினான் [13].

[13] “இதற்கு முந்தைய மூன்று சுலோகங்களைப் பொறுத்தவரை, வங்கம் மற்றும் பம்பாய்ப் பதிப்புகளுக்கிடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி. அதனால்தான் சத்ருஞ்சயன் இருமுறை சொல்லப்படுகிறான் போலும். இவையும், சுருதாயுஷ் பற்றிய குறிப்பும் வேறு பதிப்பில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

பிறகு சினத்தால் நிறைந்த அஸ்வத்தாமன், கடுமையானதும், நேரானதுமான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(183,184) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, அந்த நாணைத் தன் காது வரை இழுத்து, கடுமையானதும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதுமான அந்தச் சிறந்த கணையால் கடோத்கசனைக் குறிபார்த்து வேகமாக ஏவினான்.(185) அழகிய சிறகுகளைக் கொண்ட அந்த வலிமைமிக்கக் கணை, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்துக் கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது. அதன்பேரில் கடோத்கசன் அந்தத் தேரிலேயே கீழே விழுந்தான். அவன் விழுவதைக் கண்டு, அவன் இறந்துவிட்டான் என்று நம்பியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} அகற்றி, மற்றொரு தேரில் அவனைக் கிடத்தச் செய்தான்.(187)

இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரனின் தேர்ப்படையானது போரில் இருந்து புறமுதுகிட்டது. அப்போது, தன் எதிரிகளை வென்ற துரோணரின் வீர மகன் {அஸ்வத்தமான்} உரக்கச் சிங்க முழக்கமிட்டான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவராலும், மனிதர்கள் அனைவராலும் அவன் {அஸ்வத்தாமன்} வழிபடப்பட்டான்.(188) நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இறந்து கிடந்த ராட்சசர்களின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, மலைச் சிகரங்களால் விரவிக் கிடப்பதைப் போலப் பயங்கரத் தோற்றத்தை அடைந்து கடக்கமுடியாததாக ஆனது.(189) சித்தர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், நாகர்கள், பறவைகள், பித்ருக்கள், அண்டங்காக்கைகள், அங்கே பெரும் எண்ணிக்கையிலான மனித ஊனுண்ணிகள், பேய்கள், அப்சரஸ்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} புகழ்வதில் ஒன்று சேர்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(190)
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155ஈ-ல்  வரும் மொத்த சுலோகங்கள்-65


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்