Wednesday, November 30, 2016

திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 192

Satyaki rescued Dhrishtadyumna! | Drona-Parva-Section-192 | Mahabharata In Tamil

(துரோணவத பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : துரோணர் அழைத்தும், தோன்றாமல் போன தெய்வீக ஆயுதங்கள்; துரோணரின் ஆயுதங்கள் தீர்ந்து போனது; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான கடும் மோதல்; திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி; சாத்யகியின் வீரத்தை மெச்சிய அர்ஜுனன்; சாத்யகியின் ஆற்றலை இரு படைகளும் புகழ்ந்ததாகச் சொன்ன சஞ்சயன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பெருங்கவலையில் மூழ்கியிருப்பதையும், துயரால் கிட்டத்தட்ட உணர்வுகளை இழந்திருப்பதையும் கண்டவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி விரைந்து சென்றான்.(1) ஒரு பெரும் வேள்வியில், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனின் {அக்னியின்} மூலம், மனிதர்களின் ஆட்சியாளனான துருபதனால் அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} துரோணரின் அழிவுக்காகவே பெறப்பட்டான்.(2) துரோணரைக் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, வெற்றியைத் தரவல்லதும், உறுதிமிக்கதும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதும், பெரும் பலத்துடன் கூடிய நாண்கயிற்றைக் கொண்டதும், மீற முடியாததும், தெய்வீகமானதுமான வில்லொன்றை எடுத்தான். அவன் {திருஷ்டத்யும்னன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், நெருப்பின் காந்தியைக் கொண்டதுமான கடுங்கணை ஒன்றை அதில் பொருத்தினான்.


நெருப்பின் கடுந்தழல்களுக்கு ஒப்பானதும், அவனது வட்டமான வில்லுக்குள் அடங்கி இருந்ததுமான அந்தக் கணையானது, பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் உள்ள {பரிவேஷத்துடன் கூடிய} பெரும் காந்தியுடைய கூதிர் காலச் சூரியனுக்கு ஒப்பாக இருந்தது.(3-5) அந்தச் சுடர்மிக்க வில்லானது பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} பலத்துடன் வளைக்கப்படுவதைக் கண்ட துருப்புகள், (உலகின்) இறுதி நேரம் வந்துவிட்டது என்றே கருதினர்.(6) அந்தக் கணை தன்னை நோக்கிக் குறிவைக்கப்படுவதைக் கண்ட அந்த வீரப் பரத்வாஜ மகன் {துரோணர்}, தன் உடலின் இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்தார்.(7) அந்தக் கணையைக் கலங்கடிப்பதற்காக ஆசான் {துரோணர்} கவனமாகத் தயாரானார். எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மா கொண்டவரின் {துரோணரின்}ஆயுதங்கள், அவரது உத்தரவுக்குப் பிறகும் தோன்றாமல் போயின[1].(8)

[1] “அனைத்து தெய்வீக ஆயுதங்களும் தங்களை இருப்பு அழைக்கத் தெரிந்தவனின் உத்தரவுக்கேற்பத் தோன்றும் உயிர் கொண்டவையே ஆகும். எனினும், வழக்கமான சூத்திரங்களின் படி இருப்புக்கு அழைக்கப்பட்டாலும், மரணத்திற்கான நேரம் வந்த அந்த மனிதரை அவை கைவிட்டன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

நான்கு நாட்கள் மற்றும் இரவுகளாக அவர் இடையறாமல் தமது ஆயுதங்களை ஏவிக்கொண்டிருந்தாலும், அவை தீர்ந்துவிடவில்லை. எனினும், அந்த ஐந்தாம் நாளின் மூன்றாம் பகுதியில் அவரது ஆயுதங்கள் தீர்ந்தன.(9) தன் கணைகள் தீர்ந்து போனதைக் கண்டும், தமது மகனின் {அஸ்வத்தாமனின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டும், தன் உத்தரவுக்கு ஏற்பத் தோன்ற வேண்டிய தெய்வீக ஆயுதங்களின் விருப்பமின்மையின் காரணமாகவும்,(10) முனிவர்களின் வார்த்தைகளில் உந்தப்பட்டும் அவர் {துரோணர்} தமது ஆயுதங்களைக் கீழே வைக்க விரும்பினார். பெரும் சக்தியால் நிறைந்திருந்தாலும், அவரால் முன்பு போலப் போரிட முடியவில்லை.(11) பிறகு, அங்கிரஸ் முன்பு தமக்குக் கொடுத்திருந்த மற்றொரு தெய்வீக வில்லையும், பிராமணனின் சாபத்திற்கு ஒப்பான சில குறிப்பிட்ட கணைகளையும் எடுத்துக் கொண்ட அவர், திருஷ்டத்யும்னனுடன் போரிடுவதைத் தொடர்ந்தார்.(12) அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} அடர்த்தியான கணை மாரியால் மறைத்த அவர், சினத்தால் நிறைந்து, தமது கோபக்கார எதிரியைச் {திருஷ்டத்யும்னனை} சிதைத்தார்.(13) அவர் {துரோணர்} தன் கூரிய கணைகளைக் கொண்டு அந்த இளவரசனின், கணைகள், கொடிமரம் மற்றும் வில் ஆகியவற்றை நூறு துண்டுகளாக அறுத்தார். பிறகு அவர் {துரோணர்} தன் எதிராளியின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியை வீழ்த்தினார்.(14)

அப்போது திருஷ்டத்யும்னன், புன்னகைத்தபடியே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒரு கூரிய கணையால் துரோணரின் நடுமார்பைத் துளைத்தான்.(15) அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, அம்மோதலில் தன்னிலையை இழந்த அந்த வலிமைமிக்க வில்லாளி, பிறகு, அகன்ற தலை கொண்ட கூரிய கணை {பல்லம்} ஒன்றால் மீண்டும் திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தார்.(16) உண்மையில் அந்த வெல்லப்பட முடியாத துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் காதாயுதம் மற்றும் வாளைத் தவிர அவன் {திருஷ்டத்யும்னன்} கொண்டிருந்த ஆயுதம் மற்றும் விற்கள் அனைத்தையும் அறுத்தார்.(17) சினத்தால் நிறைந்த அவர் {துரோணர்}, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, எந்த எதிரியின் உயிரையும் எடுக்க வல்லவையான ஒன்பது கூரிய கணைகளால் கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் துளைத்தார்.(18)

அப்போது அளக்க முடியாத ஆன்மா {தைரியம்} கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தன் தேரின் குதிரைகளோடு தன் எதிரியின் குதிரைகளைக் கலக்கச் செய்தான்.(19) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சிவப்பு நிறம் கொண்டவையும், புறாக்களின் நிறத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகள் இப்படி ஒன்றோடொன்று கலந்தது மிக அழகாகத் தெரிந்தது.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் இப்படி ஒன்றோடொன்று கலந்த அந்தக் குதிரைகள் மழைக்காலங்களில் மின்னலின் சக்தியூட்டப்பட்டு முழங்கும் மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(21) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த இருபிறப்பாளர் {பிராமணரான துரோணர்}, திருஷ்டத்யும்னனுடைய தேரின் ஏர்க்கால் இணைப்புகளையும், சக்கர இணைப்புகளையும், தேரின் (பிற) இணைப்புகளையும் அறுத்தார்.(22)

தனது வில்லை இழந்து, தேரற்றவனாக, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், பெரும் துயரத்தில் விழுந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான்.(23) சினத்தால் நிறைந்தவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், அந்தக் கதாயுதம் தன் மீது வீசப்படத் தயாராக இருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கூரிய கணைகளால் அஃதை அறுத்தார்.(24) துரோணரின் கணைகளால் தன் கதாயுதம் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த மனிதர்களில் புலி (பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}), குறையற்ற ஒரு வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(25) அந்தச் சூழ்நிலையில், உயர் ஆன்மப் போர்வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஐயமறத் தீர்மானமாக இருந்தான்.(26) சில நேரங்களில் தேர்க்கூட்டில் பதுங்கியும், சிலநேரங்களில் தன் தேரின் ஏர்க்கால்களில் நின்றபடியும் இருந்த அந்த இளவரசன், தன் வாளை உயர்த்தியபடியும், பிரகாசமான தன் கேடயத்தைச் சுழற்றியபடியும் திரிந்து கொண்டிருந்தான்[2].(27) வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மடமையினால் ஒரு கடினமான சாதனையை அடைய விரும்பி, அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மார்பைத் துளைக்க எண்ணினான்.(28) அவன் {திருஷ்டத்யும்னன்}, சில நேரங்களில் நுகத்தடியிலும், சில நேரங்களில் துரோணருடைய சிவப்பு குதிரைகளின் இடுப்புக்குக் கீழும் இருந்தான். அவனது இந்த நகர்வுகளை {இயக்கங்களைத்} துருப்புகள் அனைத்தும் உயர்வாகப் பாராட்டின.(29) உண்மையில், அவன் நுகத்தடியின் கட்டுகளுக்கு மத்தியிலோ, அந்தச் சிவப்புக் குதிரைகளுக்குப் பின்புறமோ இருக்கையில், அவனைத் தாக்க எந்த வாய்ப்பையும் துரோணர் காணவில்லை. இவை யாவும் காண்பதற்கு மிக அற்புதமானவையாக இருந்தன.(30)

[2] வேறொரு பதிப்பில், “அவ்வாறு கத்தியையும் கேடகத்தையுங் கையிலெடுக்கின்ற பாஞ்சால ராஜகுமாரன் மகாத்மாவும் ஆசார்ய முக்கியருமான துரோணருடைய வதத்திற்கு ஸமயம் வந்ததென்று ஸம்சயமற்று நன்றாக எண்ணினான். அவன் கத்தியையும், தேஜஸுள்ள கேடகத்தையுங் கையிலெடுத்துத் தன் ரதத்தினுடைய ஏர்க்கால்வழியாக ரதமத்தியிலிருக்கின்ற துரோணரிடம் சென்றான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 26 மற்றும் 27ம் சுலோகங்கள், “இந்தச் சூழ்நிலையில் பாஞ்சால இளவரசன், சிறப்புமிக்கப் பெரும் வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பினான் என்பதில் ஐயமில்லை. பிறகு தன் தேர்த்தட்டில் இருந்து கீழே குதித்து, அந்தத் தேரின் ஏர்க்காலில் பயணித்தபடியே தன் வாளையும், பிரகாசமான கேடயத்தையும் உயர்த்திக் கொண்டு, தமது தேரில் அமர்ந்திருந்த பின்னவரை {துரோணரை} அணுக முயன்றான்” என்றிருக்கிறது.

அந்தப் போரில் துரோணர் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் இயக்கங்களும், இறைச்சித் துண்டு ஒன்றிற்காக ஆகாயத்தில் திரியும் ஒரு பருந்துக்கு ஒப்பானவையாக இருந்தன.(31) அப்போது துரோணர், ஓர் ஈட்டியின் மூலமாகத் (தமக்குச் சொந்தமான) சிவப்புக் குதிரைகளைத் தாக்கிவிடாதவாறு, தன் எதிராளியின் வெண்குதிரைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் துளைத்தார்[3].(32) திருஷ்டத்யும்னனுடைய அந்தக் குதிரைகள் உயிரையிழந்து பூமியில் விழுந்தன. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருடைய சிவப்புக் குதிரைகள், திருஷ்டத்யும்னனுடைய தேரில் சிக்கியிருந்த நிலையில் இருந்து விடுபட்டன.(33) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் தன் குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போராளிகளில் முதன்மையானவனுமான பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(34) அந்த வாள்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரை இழந்தாலும், தன் வாளை எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வினதையின் மகன் (கருடன்) ஒரு பாம்பின் மீது வேகமாகப் பாய்வதைப் போலத் துரோணரை நோக்கிப் பாய்ந்தான்.(35)

[3] இங்கே பம்பாய்ப் பதிப்பைப் பின்பற்றியிருப்பதாகக் கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “துரோணர், சிவப்பான குதிரைகளை விட்டுவிட்டுத் திருஷ்டத்யும்னனுடைய புறா நிறமுள்ள குதிரைகளெல்லாவற்றையும் தாழை மடல் போன்ற முனையுள்ள சக்தியினால் ஒவ்வொன்றாகப் பிளந்தார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அதன்பின்னர், பலமிக்கத் துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, தன் எதிராளியுடைய நீல நிறக் குதிரைகளை ஒரு சக்திவாய்ந்த கணையால் ஒன்றன்பின் ஒன்றாகக் கொன்றார்” என்றிருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அத்தருணத்தில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பழங்காலத்தில் ஹிரண்யகசிபுவைக் கொல்ல விரும்பிய விஷ்ணுவின் வடிவத்தைக் கொண்டிருந்தான்.(36) மேலும் அவன் {திருஷ்டத்யும்னன்} பல்வேறு பரிணாமங்களைச் செய்தான். உண்மையில் அந்தப் பிருஷதன் மகன், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, நன்கு அறியப்பட்டவையும், பல்வேறு வகைகளிலான இருபத்தோரு நகர்வுகளையும் {இயக்கங்களையும்}[4] களத்தில் திரிந்தபடியே வெளிக்காட்டினான்.(37) வாள்தரித்துக் கையில் கேடயத்துடன் கூடிய அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் வாளை உயரச் சுழற்றி {பிராந்தம்}, பக்கத்தூண்டுதல்கள் செய்து {உத்ப்ராந்தம்}, முன்நகர்ந்து விரைந்து {ஆவித்தம்}, பக்கவாட்டில் ஓடி {ஆப்லுதம்}, உயரக் குதித்து {ப்ரஸ்ருதம்}, தன் எதிராளிகளின் பக்கங்களை {விலாப்புறங்களைத்} தாக்கி {ஸ்ருதம்}, பின்புறமாக விலகி {பரிவ்ருத்தம்}, எதிரியை நெருங்கியும் {நிவ்ருத்த சம்பாதம்} மற்றும் அவர்களைக் கடுமையாக அழுத்தியபடியும் {சமுதீர்ணம்} திரிந்து கொண்டிருந்தான். அவற்றை நன்றாகப் பயின்ற பிறகு, அவன் {திருஷ்டத்யும்னன்}, பாரதம், கௌசிகம், சாத்வதம் என்ற பரிமாணங்களையும் காட்டியபடியே துரோணருக்கு அழிவை உண்டாக்குவதற்காக அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான் [5].

[4] வாள்போரின் இருபத்தோரு முறைகள்:

[5] வேறொரு பதிப்பில், “அந்தப் பார்ஷதன் கத்தியையுங் கேடகத்தையுங் கையிலெடுத்துக் கொண்டு 1.பிராந்தம், 2.உத்ப்ராந்தம், 3.ஆவித்தம், 4.ஆப்லுதம், 5.ப்ரஸ்ருதம், 6.ஸ்ருதம், 7.பரிவ்ருத்தம், 8.நிவ்ருத்த ஸம்பாதம், 9.ஸமுதீர்ணம், என்கிற மார்க்கங்களைக் காண்பித்தான். அவன் யுத்தத்தில் துரோணரைக் கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்துடன் கைத்தேர்ச்சியினால் 1.பாரதம், 2.கௌசிகம், 3.ஸாத்வதம் என்கிற (கத்தி சுழற்றும்) வகைகளையுங் காண்பித்துக் கொண்டு சஞ்சரித்தான்” என்றிருக்கிறது.

கையில் வாளுடனும், கேடயத்துடனும் களத்தில் திரிந்து கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் அந்த அழகிய பரிணாமங்களைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மேலும் அங்கு இருந்த தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அப்போது மறுபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், அந்தப் போரின் நெருக்கத்தில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே, திருஷ்டத்யும்னனின் வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கேடயத்தையும் அறுத்தார். மிக அருகில் இருந்து போரிட்ட அந்தத் துரோணர் ஏவிய கணைகள் {வைஸ்திகங்கள்}, ஒரு முழம் அளவு நீளத்திற்கே இருந்தன[6].(38-42) அத்தகு கணைகள் நெருங்கிய போரில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சரத்வான் மகன் (கிருபர்), பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோரைத் தவிர அவ்வகையிலான கணைகள் வேறு எவரிடமும் இல்லை.(43) அத்தகு கணைகளைப் பிரத்யும்னன், யுயுதானன் {சாத்யகி}, அபிமன்யு ஆகியோரும் வைத்திருந்தனர்.

[6] வேறொரு பதிப்பில், “நெருங்கி நின்று செய்யும் போரில் ஸமீபத்திலுள்ள பகைவர்களை நன்றாக அடிக்கும் திறமைவாய்ந்த பன்னிரண்டங்குல நீளமுள்ள “வைஸ்திகம்” என்னும் பாணங்கள் துரோணரிட்ம உள்ளன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

பிறகு அந்த ஆசான் {துரோணர்}, தம் சொந்த மகனைப் {அஸ்வத்தாமனைப்} போன்ற தமது அந்தச் சீடனைக் {திருஷ்டத்யும்னனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகம் கொண்ட வலிமையான கணையொன்றைத் தன் வில்லின் நாணில் பொருத்தினார். எனினும், உமது மகனும் {துரியோதனனும்}, உயர் ஆன்மக் கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கணையைப் பத்து கணைகளால் வெட்டிய சாத்யகி, துரோணருக்கு அடிபணியும் தருவாயில் இருந்த திருஷ்டத்யும்னனைக் காத்தான்.(44-46) அப்போது கேசவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (குரு போர்வீரர்களின்) தேர்த்தடங்களில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவனும், துரோணர், கர்ணன் மற்றும் கிருபரின் கணைகள் தாக்கும் தொலைவில் இருந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியைக் கண்டனர். “நன்று, நன்று” என்று சொன்ன அவர்கள் இருவரும், அந்தப் போர்வீரர்கள் அனைவரின் தெய்வீக ஆயுதங்களையும் இப்படி அழித்துக் கொண்டிருந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தச் சாத்யகியை உரக்கப் பாராட்டினர். பிறகு கேசவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} குருக்களை நோக்கி விரைந்தனர்.(47-49)

கிருஷ்ணனிடம் பேசிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மது குலத்தைத் தழைக்க வைப்பவனும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, என்னையும், இரட்டையரையும் {நகுல-சகாதேவரையும்}, பீமரையும், மன்னர் யுதிஷ்டிரரையும் மகிழச் செய்யும் வகையில், ஆசான் மற்றும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முன்பு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(50-51) விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவனான சாத்யகி, பயிற்சியால் அடைந்த திறனுடனும், செருக்கில்லாமலும் போரில் திரிந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(52) போரில் வெல்லப்பட முடியாத அவனைக் {சாத்யகியைக்} கண்டு இந்தத் துருப்புகள் அனைத்தும், (வானிலிருக்கும்) சித்தர்களும் ஆச்சரியத்தால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவனைப் {சாத்யகியைப்} புகழ்கின்றனர்” என்றான் {அர்ஜுனன்}. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இருபடைகளைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், அந்தச் சாத்வத வீரனுடைய {சாத்யகியுடைய} சாதனைகளின் விளைவாக அவனைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(53)
--------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 192-ல் உள்ள சுலோகங்கள்: 53


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்