Saturday, January 14, 2017

பீமனால் கொல்லப்பட்ட க்ஷேமதூர்த்தி! - கர்ண பர்வம் பகுதி – 12

Kshemadhurti slain by Bhima! | Karna-Parva-Section-12 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீமனுக்கும் க்ஷேமதூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற போர்; க்ஷேமதூர்த்திக் கொல்லப்பட்டது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சிமிக்க மனிதர்களாலும், குதிரைகள், மற்றும் யானைகள் ஆகியவற்றாலும் நிறைந்த அந்தப் பரந்த இரு படைகளும், தேவாசுர படைகளுக்கு ஒப்பான காந்தியுடன் ஒன்றோடொன்று சந்தித்து, ஒன்றையொன்று தாக்கத் தொடங்கின.(1) பெரும் ஆற்றலைக் கொண்ட மனிதர்களும், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவையும், காலாட்படை வீரர்களும், உடல்களுக்கும், பாவங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் கட்டுறுதியான வீச்சுகளுடன் தாக்குதலைத் தொடுத்தனர்[1].(2) சிங்கத்தைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவரும், முழு நிலவுக்கோ, சூரியனுக்கோ ஒப்பானவையும், தாமரையின் நறுமணத்தைக் கொண்டவையும் சிங்கத்தைப் போன்றவையுமான வேறு மனிதர்களின் தலையால் பூமியை தூற்றினர்.(3) போராளிகள், பிறை வடிவம் மற்றும் அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {அர்த்தச்சந்திர பாணம் மற்றும் பல்லங்களாலும்}, கத்திமுகக் கணைகளாலும் {க்ஷுரப்ரங்களாலும்}, கோடரிகளாலும், போர்க்கோடரிகளாலும் வேறு போராளிகளின் தலைகளை வெட்டினர்.(4) ஆயுதங்களாலும், கடகங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட மனிதர்களின் கரங்கள், பருத்த கரங்களைக் கொண்ட வேறு மனிதர்களால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்து ஒளிர்ந்தன.(5) சிவந்த விரல்கள், உள்ளங்கை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு நெளிந்து கொண்டிருந்த அந்தக் கரங்கள், கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகள் கிடப்பதைப் போலப் பிரகாசமாகப் பூமியில் படர்ந்து கிடந்தன.(6)


[1] “நான் வங்க உரையில் உள்ள ‘தேஹபாப்மபிரனாசணன்’ ’Dehapaapmapranaachanan’ என்ற சொல்லையே பின்பற்றியிருக்கிறேன். ’போரில் இறப்பது சொர்க்க வெகுமதியைக் கொடுப்பதால், உடல்கள் அழிக்கப்படும் போது, அவர்களது பாவங்களும் அழியும்படி மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்’ என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

புண்ணியம் தீர்ந்து போய்த் தங்கள் தெய்வீகத் தேர்களில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போல, எதிரிகளால் தாக்கப்பட்ட துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றில் இருந்து கீழே விழுந்தனர்.(7) வேறு துணிச்சல் மிக்க வீரர்களும், கனமான கதாயுதங்கள், முள் பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, மற்றும் குறுந்தடிகளுடன் கூடிய மேலும் துணிச்சல்மிக்கப் போராளிகளால் அந்தப் போரில் நசுக்கப்பட்டு நூற்றுகணக்கில் விழுந்தனர்.(8) கொந்தளிப்படைந்த அந்தப் போரில் தேர்கள், தேர்களால் நசுக்கப்பட்டன, மதங்கொண்ட யானைகள், வேறு மதங்கொண்ட யானைகளாலும், குதிரைவீரர்கள், வேறு குதிரைவீரர்களாலும் நசுக்கப்பட்டனர்.(9) தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்களும், காலாட்படைவீரர்களால் கொல்லப்பட்ட குதிரைவீரர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களும், காலாட்படை வீரர்களால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், குதிரைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், காலாட்படை வீரர்களும் மற்றும் யானைகளும், தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளும் களத்தில் கீழே விழுந்தன.(10,11) கைகள், கால்கள், ஆயுதங்கள், தேர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மனிதர்களும், குதிரைகளும், யானைகளும், தேர்வீரர்களும், தேர்வீரர்கள், குதிரைகள், யானைகளுக்கு ஏற்படுத்திய பேரழிவு பெரியதாக இருந்தது.(12)

வீரம் மிகுந்த போர்வீரர்களால் இப்படி அந்தப் படை தாக்கிக் கொல்லப்பட்ட போது, விருகோதரன் {பீமன்} தலைமையிலான பார்த்தர்கள் {பாண்டவர்கள்} எங்களை எதிர்த்து வந்தனர்.(13) அகன்ற தோள்களும், நீண்ட கரங்களும், நெடிய உடற்கட்டும், பெரிய கண்களும் கொண்டோரான, பாண்டியர்கள், சோழர்கள், கேரளர்கள் {சேரர்கள்} ஆகிய அனைவருடன் கூடிய வலிமைமிக்க ஓர் அணிவகுப்பால் சூழப்பட்டவர்களும், திராவிடர்களின் படைகளுடன் கூடியவர்களுமான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சேகிதானன் ஆகியோரும் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} இருந்தனர்.(14,15) சாத்யகியால் வழிநடத்தப்பட்ட ஆந்திர இனக்குழுவைச் சேர்ந்த காலாட்படை போராளிகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும், சிவந்த பற்களுடையவர்களாகவும், மதங்கொண்ட யானைகளின் ஆற்றலைக் கொண்டவர்களாகவும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளை உடுத்தியிருந்தவர்களாகவும், நறுமணப்பொடிகளைப் பூசியிருந்தவர்களாகவும்,(16) வாள்களையும், சுருக்குக் கயிறுகளையும் தரித்திருந்தவர்களாகவும், வலிமைமிக்க யானைகளையே தடுக்கவல்லவர்களாகவும், ஒருவரையொருவர் கைவிடாத மரணத் தோழர்களாகவும் {காலனின் தோழர்களாகவும்} [2],(17) அம்பறாத்தூணிகளைக் கொண்டவர்களாகவும், விற்களைத் தாங்கியிருந்தவர்களாகவும், நீண்ட குழல்களை {மயிரைக்} கொண்டவர்களாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவர்களாகவும், கடும் வடிவங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவர்களாகவும் இருந்தனர் [3].(18)

[2] வெற்றியைக் கருதியவர்களாகையால் மரணத்தையும் உயிர்வாழ்வதையும் சமமாக நினைத்தவர்கள். என்றாவது மாண்டால் அனைவரும் இறப்போமென்று ஒரே தீர்மானமுள்ளவர்கள்” என்பது இங்கே கருத்து.

[3] வேறொரு பதிப்பில், “அவ்வாறு அந்தப்படையானது சூரர்களாலே வதம் பண்ணப்பட்டு நாசம் அடையும்போது, பீமசேனனை முதன்மையாகக் கொண்ட பாண்டவர்கள் நம்மை எதிர்த்து வந்தனர். திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், திரௌபதீபுத்திரர்களும், பிரபத்ரகர்களும், ஸாத்யகியும், சேகிதானனும் திராவிடத் தேசத்திலுண்டான ஸைனிகர்களோடு எதிர்த்தார்கள். அகன்ற மார்பையுடையவர்களும், நீண்ட கைகளையுடையவர்களும், உயர்ந்தவர்களும், அகன்ற கண்களையுடையவர்களுமான பாண்டியர்களும், சோழர்களும், கேரளர்களும் பெரிய வியூகத்தால் சூழப்பட்டார்கள். பூஷணங்களை அணிந்தவர்களும், சிவந்த பற்களையுடையவர்களும், மதங்கொண்ட யானை போல வல்லமைபொருந்தியவர்களும், பற்பலவிதமான சாயவஸ்திரங்களைத் தரித்தவர்களும், வாசனைப்பொடிகளாலே பூசப்பட்டவர்களும், கத்திகளைக் கட்டிக்கொண்டவர்களும், பாசத்தைக் கையில் கொண்டவர்களும், யானைகளை எதிர்க்கின்றவர்களுமான வீரர்களனைவரும் சமமான மிருத்யுவையுடைவர்களாக இருந்து கொண்டு ஒருவரையொருவர் விலகினார்களில்லை. பூஷணத்தை அணிந்தவர்களும், விற்களைக் கையில் பிடித்தவர்களும், நீண்ட மயிர்களையுடையவர்களாகவும், பிரியமான வார்த்தையைச் சொல்லுகின்றவர்களும், கோரமான ரூபத்தையும், பராக்ரமத்தையும் உடையவர்களுமாகக் காலாட்கள் பாணங்களால் அடிக்கப்பட்டார்கள்” என்றிருக்கிறது. கங்குலியில் உள்ளதைப் போல ஆந்திரர்கள் பற்றிய குறிப்பு இஃதில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

துணிச்சல் மிக்கப் பிற போர்வீரர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள், காருஷர்கள், கோசலர்கள், காஞ்சிகள், மகதர்கள் ஆகியோரும் விரைந்து முன்னேறினர்.(19) முதன்மையான வகைகளைச் சேர்ந்த அவர்களது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியனவும், அவர்களது கடும் காலாட்படை வீரர்களும், பல்வேறு இசைக்கருவிகளின் இசையால் மகிழ்ந்து ஆடுவதாகவும், சிரிப்பதாகவும் தெரிந்தது.(20) அந்தப் பரந்த படைக்கு மத்தியில், யானையின் கழுத்தில் ஏறிக் கொண்ட விருகோதரன் {பீமன்}, பல முதன்மையான யானைவீரர்களால் சூழப்பட்டபடியே, உமது படையை எதிர்த்து வந்தான்.(21) முறையாக ஆயுதங்களைத் தரித்திருந்தவையும், கடுமையானவையும், முதன்மையானவையுமான அந்த யானைகள், உதய மலையின் மேலே உதயச் சூரியனால் மகுடம் சூட்டப்பட்டதும் கல்லால் கட்டப்பட்டதுமான மாளிகை போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(22) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையுமான அவற்றின் {அந்த யானைகளின்} இரும்புக் கவசங்களும், நட்சத்திரங்களால் விரவிக் கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசித்தன.(23)

கூதிர்காலத்து நடுப்பகல் சூரியனின் காந்தியுடன் கூடிய அந்தப் பீமன், விரிந்து நீட்டப்பட்ட தன் கைகளில் வேலுடனும், தன் தலையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கிரீடத்துடனும், தன் எதிரிகளை எரிக்கத் தொடங்கினான்.(24) அந்த {பீமனின்} யானையைத் தொலைவிலிருந்தே கண்டவனும், தானும் யானையில் ஏறியிருந்தவனுமான க்ஷேமதூர்த்தி, மிகவும் மகிழ்ச்சியாக இருந்த பீமனை நோக்கி அறைகூவியபடியே விரைந்து சென்றான்.(25) அப்போது, மேலே மரங்களைக் கொண்ட இரு பெரும் மலைகளுக்கு ஒப்பானவையும், ஒன்றோடொன்று போரிட விரும்பியவையும் கடும் வடிவங்களுடன் கூடியவையுமான அந்த இரு யானைகளுக்கும் இடையில் ஒரு மோதல் நடந்தது.(26) ஒன்றோடொன்று மோதிய அந்த யானைகளில் இருந்த அவ்விரு வீரர்களும், சூரியக் கதிர்களின் காந்தியுடன் கூடிய வேல்களால் பலவந்தமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு உரத்த முழக்கமிட்டனர்.(27) பிறகு, பிரிந்த அவர்கள், தங்கள் யானைகளுடன் வட்டமாகத் திரிந்து, விற்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(28)

தங்கள் உரத்த முழக்கங்களாலும், தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டதாலும், தங்கள் கணைகளின் விஸ் என்ற ஒலியாலும் சுற்றியிருந்த மக்களை மகிழ்ச்சியடைச் செய்தபடியே அவர்கள் தொடர்ந்து சிங்க முழக்கமிட்டனர்.(29) பெரும் பலம் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான அவ்விருவரும், காற்றில் மிதக்கும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் யானைகளின் உயர்த்தித் தூக்கப்பட்ட துதிக்கைகளைப் பயன்படுத்திப் போரிட்டனர்.(30) பிறகு, அடுத்தவரின் வில்லை வெட்டிய அவ்விருவரும், ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே, மழைக்காலத்து இரு மேகத் திரள்கள் மலைத்தாரைகளைப் பொழிவதைப் போல ஈட்டிகள் மற்றும் வேல்களின் மழையை ஒருவர்மீதொருவர் பொழிந்தனர்.(31)

அப்போது, க்ஷேமதூர்த்தி, பெரும் மூர்கத்தைக் கொண்ட வேலொன்றால் பீமசேனனின் நடுமார்பைத் துளைத்து, மேலும் ஆறால் துளைத்து, உரக்க முழங்கினான்.(32) தன் உடலில் தைத்திருந்த அந்த வேல்களுடன் கூடியவனும் கோபத்தால் சுடர்விட்டவனுமான பீமசேனன், மேகத்திரையின் வழியே கதிர்களை வெளியேற்றும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(33) அப்போது பீமன், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமானதும், முற்றிலும் நேராகச் செல்வதும், முழுவதும் இரும்பாலானதுமான வேல் ஒன்றைத் தன் எதிராளியின் மீது கவனமாக வீசினான்.(34) பிறகு அந்தக் குலுட்டர்களின் {கரூசர்களின்} ஆட்சியாளன் {க்ஷேமதூர்த்தி}, தன் வில்லை வளைத்துப் பத்துக் கணைகளால் அந்த வேலை அறுத்து, மேலும் அறுபது {60} கணைகளால் பாண்டுவின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(35) பிறகு பாண்டுவின் மகனான பீமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, உரக்க முழங்கிய படியே தன் எதிராளியின் யானையைத் தன் கணைகளால் ஆழமாகப் பீடித்தான்.(36) அந்தப் போரில் பீமசேனனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்த யானை, அதைத் தாங்கிக் கொள்ள முனைந்தாலும், காற்றால் விரட்டப்படும் மேகத்தைப் போலக் களத்தில் நிற்கவில்லை.(37) பீமனுக்குச் சொந்தமானதும், கடுமையானதுமான யானைகளின் இளவரசன், காற்றால் விரட்டப்படும் மேகத்திரள்களைப் புயலால் விரட்டப்படும் மற்றொரு மேகத்திரளைப் போல (ஓடிக் கொண்டிருக்கும்) தன் எதிராளியைப் பின்தொடர்ந்து சென்றது.(38) தன் யானையை நிறுத்திய வீர க்ஷேமதூர்த்தி, பின்தொடர்ந்து வந்த பீமசேனனின் யானையைத் தன் கணைகளால் துளைத்தான்.(39) நன்கு அடிக்கப்பட்டதும், முற்றிலும் நேரானதுமான கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் தன் எதிராளியின் வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, பிறகு அந்தப் பகை யானையைப் பீடித்தான்.(40)

அப்போது அந்தப் போரில் கோபத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி, பீமனைத் துளைத்து, அவனது யானையின் அனைத்துப் பகுதியையும் நீண்ட கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் தாக்கினான்.(41) எனினும், தன் யானை வீழ்வதற்கு முன்பே அந்த விலங்கில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்ற பீமன், பிறகு தன் கதாயுதத்தால் எதிராளியின் யானையை நசுக்கினான்.(42) நசுக்கப்பட்ட தன் யானையில் இருந்து கீழே குதித்து, உயர்த்திய ஆயுதத்துடன் தன்னை நோக்கி வந்த க்ஷேமதூர்த்தியையும், பீமன் அவ்வாறே தாக்கினான்.(43) இப்படித் தாக்கப்பட்ட க்ஷேமதூர்த்தி, இடியால் வீழ்த்தப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலையின் அருகிலேயே கிடக்கும் சிங்கத்தைப் போலத் தன் கையில் வாளுடன் தன் யானையின் அருகிலேயே உயிரற்று விழுந்தான்.(44) குலுட்டர்களின் {கரூசர்களின்} கொண்டாடப்படும் மன்னன் {க்ஷேமதூர்த்தி} கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மிகவும் துன்புற்று தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.(45)
--------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 12-ல் உள்ள சுலோகங்கள் : 45

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்