Sunday, March 05, 2017

“கர்ணா நீயொரு நரி!” என்ற சல்லியன்! - கர்ண பர்வம் பகுதி – 39

“Karna, you are a jackal!” said Shalya! | Karna-Parva-Section-39 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் தனியாகப் போரிட வேண்டாம் என்று கர்ணனை எச்சரித்த சல்லியன்; தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்த கர்ணன்; கர்ணனின் செருக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத சல்லியன் அவனை இகழ்ந்தது; கர்ணன் மற்றும் அர்ஜுனனை, நரி மற்றும் சிங்கமாக ஒப்பிட்டுச் சொன்ன சல்லியன்...


சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, யானையளவு பெரிதான ஆறு காளைகளுடன் கூடிய தங்கத் தேரை எவனுக்கும் கொடுத்துவிடாதே. நீ இன்று தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணப் போகிறாய்.(1) நீயே பொக்கிஷத் தலைவன் {குபேரன்} என்பதைப் போலச் செல்வங்களைக் கொடுப்பதாக மடமையினாலே நீ சொல்கிறாய்.[1] எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, எந்தத் இடருமில்லாமலே நீ இன்று தனஞ்சயனைக் காண்பாய்.(2) அறிவற்ற மனிதனைப் போல நீ செல்வத்தைக் கொடுக்கிறாய்; தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும் அப்பரிசுகளில் இணைந்திருக்கும் குறைகளை நீ காணவில்லை.(3) நீ கொடுக்க விரும்பும் அப்பெருஞ்செல்வத்தைக் கொண்டு, நிச்சயம் வேள்விகள் பலவற்றை நடத்திவிட முடியும். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ அவ்வேள்விகளைச் செய்வாயாக.(4) மடமையினால் தூண்டப்பட்ட அவ்விருப்பம் நிச்சயம் வீணானதாகும். இரண்டு சிங்கங்கள் ஒரு நரியால் வீழ்த்தப்பட்டதை நாம் எப்போதும் கேட்டதில்லை.(5)


[1] வேறொரு பதிப்பில், “பலத்தினால் மதங்கொண்டவனான நீ குபேரன் போலப் பொருளைச் செலவிடுகிறார். ராதேய! யதனமின்றியே இப்பொழுது நீ தனஞ்சயனைப் பார்ப்பாய்” என்றிருக்கிறது.

எதை நீ எப்போதும் வேண்டக்கூடாதோ அதையே வேண்டுகிறாய். சுடர்மிகும் நெருப்புக்குள் வேகமாக விழும் உன்னைத் தடுக்க நண்பர்கள் எவரும் உனக்கு இல்லை என்பது தெரிகிறது.(6) எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் வேறுபாடு காண உன்னால் இயலவில்லை. உன் காலம் நிறைவுபெற்றது என்பதில் ஐயமில்லை. வாழ விரும்பும் எந்த மனிதன்தான் இந்தளவுக்குக் கேட்பதற்கு ஒத்திசையாத, தகாத பேச்சுகளைப் பேசுவான்?(7) இந்த உனது முயற்சியானது, கழுத்தில் கனமான கல்லைக் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளால் மட்டுமே பெருங்கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போலவோ, மலைச்சிகரத்தில் இருந்து குதித்துவிட விரும்பும் ஒருவனைப் போலவோ இருக்கிறது.(8) உன் நன்மைக்கான வெற்றியை நீ அடைய விரும்புவாயெனில், அணிவகுக்கப்பட்ட உன் படைப்பிரிவுக்குள் நல்ல பாதுகாப்புடன் இருந்து கொண்டு, உனது போர்வீரர்கள் அனைவரின் உதவியுடன் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடம்} போரிடுவாயாக. {தனியாகப் போரிடாதே}.(9) உன் மீது எந்தத் தீய நோக்கமும் கொள்ளாமல், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகவே இதை நான் உன்னிடம் சொல்கிறேன். உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விருப்பமேதும் நீ கொண்டிருந்தால், என்னால் சொல்லப்பட்டும் வார்த்தைகளை ஏற்பாயாக” என்றான் {சல்லியன்}.(10)

கர்ணன் {சல்லியனிடம்}, “என் கரங்களின் வலிமையை நம்பியே நான் அர்ஜுனனுடன் போரிட முயல்வேன். எனினும், நண்பனின் முகத்தோடு கூடிய பகைவரான நீர் என்னை அச்சுறுத்த விரும்புகிறீர்.(11) இந்தத் தீர்மானத்தில் இருந்து என்னைப் பின்வாங்கச் செய்ய எவனாலும், ஏன் வஜ்ரத்தை உயர்த்தும் இந்திரனாலும் கூட முடியாது எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?” என்றான்.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணனுடைய வார்த்தைகளின் முடிவில், அவனது கோபத்தைத் தூண்ட விரும்பிய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(13) {சல்லியன்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} ஏவப்படுபவையும், கங்க இறகுகளால் சிறகுகள் அமைந்தவையும், அவனது வில்லின் நாணில் இருந்து தூண்டப்பட்டவையும், அவனது சக்தி அனைத்தையும் திரட்டி ஏவப்பட்டவையுமான கூர்முனை கணைகள் உன்னை நாடும்போது, அந்த வீரனுடனான உன் மோதலைக் குறித்து நீ வருந்துவாய்.(14) சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு (குரு) படையை எரித்து, கூரிய கணைகளால் உன்னை அதீதமாகப் பீடிக்கும்போது, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ (உன் மடமைக்காக) வருந்துவாய்.(15) தாயின் மடியில் கிடக்கும் குழந்தை, நிலவைப் பிடிக்க முயல்வதைப் போல நீயும் உன் மடமையினால் தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை வெல்ல முயல்கிறாய்.(16) ஓ! கர்ணா, கூர்முனை சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் அங்கங்களைத் தேய்த்துக் கொள்கிறாய்[2].(17)

[2] வேறொரு பதிப்பில், “நீ இப்போது அர்ஜுனனோடு யுத்தம் செய்ய விரும்புவது நன்கு தீட்டப்பட்டதும், கூர்மையான முனையுள்ளதுமான கத்தியைப் பூமியில் நாட்டி (அதன் முனையில் கையினால்) அடிப்பது போலவும் கூர்மையான பாணங்களாலே (தன் மேல்) குத்திக் கொள்வது போலவும் இருக்கிறது. கர்ண, நீ மிக்கக் கூர்மையுள்ள ஆயுதத்தினுடைய நுனிக்கொப்பான செய்கையுள்ள அர்ஜுனனோடு இப்பொழுது போர்புரிய விரும்புகிறபடியால், மிக்கக் கூர்மையுள்ள நுனியுடன் கூடின திரிசூலத்தைக் கட்டிக் கொண்டு எல்லா அங்கங்களையும் உரைத்துக் கொள்ளுகிறாய்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ கர்ணா, சிறப்புமிக்கச் சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் உடலைத் தேய்த்துக் கொள்கிறாய்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “உன் மயக்கத்தினால், தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை நீ இன்று வெல்ல விரும்புகிறாய். அது திரிசூலத்தின் கூர்முனைகளில் உன் அங்கங்கள் அனைத்தையும் தேய்த்துக் கொள்வதைப் போலாகும். நீ இன்று மிகக் கூர்மையான அருஞ்செயல்களைச் செய்த அர்ஜுனனுடன் நீ போரிட விரும்புகிறாய்” என்றிருக்கிறது.

ஓ! சூதன் மகனே {கர்ணனே}, சுறுசுறுப்பும், இளமையும், மடமையும் கொண்ட ஒரு சிறு மானானது, கோபத்தால் தூண்டப்பட்ட ஒரு பெரும் சிங்கத்தை அறைகூவியழைப்பதைப் போன்றதே இந்த உனது அறைகூவல் இருக்கிறது.(18) ஓ! சூதன் மகனே {கர்ணா}, காட்டில் இறைச்சியில் நிறைவு கொண்ட ஒரு நரியானது, பிடரிமயிர் கொண்ட காட்டு ஏகாதிபதியை {பெருஞ்சிங்கத்தை} அறைகூவியழைப்பதைப் போல, வலிமையும் சக்தியும் கொண்ட அந்த இளவரசனை {அர்ஜுனனை} நீ அறைகூவியழைக்காதே. அர்ஜுனனோடு மோதி அழிவையடையாதே.(19) ஓ! கர்ணா, ஒரு முயலானது, கலப்பைகள் அளவு பெரிய தந்தங்களைக் கொண்டதும், வலிமைமிக்கதும், வாயிலும், கன்னத்திலும் மத நீர் பெருக்குவதுமான ஒரு யானையை அறைகூவியழைப்பதைப் போல, நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(20) பார்த்தனோடு போரிட விரும்பும் மடமையினால் நீ, பொந்துக்குள் கிடக்கும் கடும் நஞ்சுமிக்கக் கருநாகத்தை மரத்துண்டினால் {குச்சியினால்} துளைத்து, அதன் சீற்றத்தைத் தூண்டுகிறாய்.(21) ஓ! கர்ணா, சிறுமதி கொண்ட நீ, மனிதர்களில் சிங்கமான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அலட்சியம் செய்து, கோபத்தால் தூண்டப்பட்டதும், பிடரிமயிர் கொண்டதுமான ஒரு சிங்கத்தை நோக்கி ஊளையிடும் நரியைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி ஊளையிடுகிறாய்.(22)

ஒரு பாம்பானது, பறவைகளில் முதன்மையானவனும், அழகிய இறகுகள் கொண்டவனும், பெரும் சுறுசுறுப்புடையவனுமான வினதையின் மகனை {கருடனை} தன் அழிவுக்காகவே அறைகூவியழைப்பதைப் போல, பாண்டுவின் மகனான தனஞ்சயனை நீ அறைகூவியழைக்கிறாய்.(23) நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடமும், மலைகளைப் போன்ற அலைகளைக் கொண்டதும், நீர்வாழ் உயிரினங்கள் நிறைந்ததும், சந்திரன் உதிக்கையில் உயரமாக எழுவதுமான பயங்கரமானபெருங்கடலை நீ படகில்லாமல் கடக்க விரும்புகிறாய்.(24) ஓ! கர்ணா, ஒரு கன்றானது, கூரிய கொம்புகளையும், பேரிகையைப் போன்ற தடித்த திமில்களையும் கொண்டதும், தாக்கவல்லதுமான காளையொன்றை அறைகூவியழைப்பதைப் போல, போரில் நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {குந்தியின் மகனான அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(25) அபரிமிதமான மழையைப் பொழியும் பயங்கரமான பெரும் மேகத்தைக் கண்டு கரையும் தவளையைப் போல, மனிதர்களில் பர்ஜன்யனான {மேகதேவனான}[3] அர்ஜுனனைக் கண்டு நீ கரைகிறாய்.(26) தன் தலைவனின் வீட்டு எல்லைக்குள் இருக்கும் நாயானது, காட்டில் திரியும் புலியைக் கண்டு குரைப்பதைப் போல, ஓ! கர்ணா, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு நீ குரைக்கிறாய்.(27)

[3] பர்ஜன்யன், மேகங்களின் தேவனாவான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார். அதாவது மழையைப் பொழியும் மேகத்தைப் போலக் கணைகளைப் பொழியும் மனித மேகம் என்பது பொருள்.

ஓ! கர்ணா, காட்டில், குழிமுயல்களுக்கு மத்தியில் வசிக்கும் நரியானது, உண்மையில் ஒரு சிங்கத்தைப் பார்க்குவரை, தன்னையே ஒரு சிங்கமாகக் கருதிக் கொள்ளும்.(28) அது போலவே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எதிரிகளை ஒடுக்குபவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சனை நீ காணாததால், உன்னையே சிங்கமாக நீ கருதிக் கொள்கிறாய்.(29) ஒரே தேரில் சூரியனையும், சந்திரனையும் போல இருக்கும் கிருஷ்ணர்கள் {கருபர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும் நீ காணாதவரை உன்னை நீயே சிங்கமாகக் கருதிக் கொள்வாய்.(30) பெரும்போரில் காண்டீவத்தின் நாணொலியை நீ எதுவரை கேட்கவில்லையோ, அதுவரை நீ விரும்பியதைச் செய்ய இயன்றவனாக இருப்பாய்.(31) பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேரின் சடசடப்பொலியாலும், தன் வில்லின் நாணொலியாலும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைப்பதைக் கண்டும், புலியைப் போல அவன் முழங்குவதைக் கண்டும், நீ நரியாகப் போகிறாய்.(32) நீ எப்போதும் நரியே ஆவாய், தனஞ்சயனோ {அர்ஜுனனோ} எப்போதும் சிங்கமேயாவான். ஓ! மூடா, அந்த வீரர்களிடம் கொண்ட பொறாமை மற்றும் வெறுப்பின் விளைவால், நீ எப்போதுமே நரியாகவே தெரிகிறாய்.(33) எலியும் பூனையும் ஒன்றுக்கொன்று பலத்தில் எப்படியோ, நாயும் புலியும் எப்படியோ, நரியும் சிங்கமும் எப்படியோ, முயலும் யானையும் எப்படியோ, பொய்மையும், மெய்யும் எப்படியோ, விஷமும் அமுதமும் எப்படியோ, அப்படியே நீயும் பார்த்தனும் உங்கள் செயல்களால் அனைவராலும் அறியப்படுகிறீர்கள்” {என்றான் சல்லியன்}.(34)
--------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 39-ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்