Tuesday, May 02, 2017

விசோகனுக்குப் பரிசளித்த பீமன்! - கர்ண பர்வம் பகுதி – 76

Bhima awards Visoka! | Karna-Parva-Section-76 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; யுதிஷ்டிரன் ஓடிவிட்டதாகவும், அர்ஜுனன் இறந்துவிட்டதாகவும் ஐயுற்ற பீமன், ஆயுதங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றவா என்று தன் தேரோட்டியான விசோகனிடம் ஆய்வு செய்யுமாறு சொன்னது; அர்ஜுனன் வருவதைக் கண்டு பீமனுக்குச் சொன்ன விசோகன்; மகிழ்ச்சியடைந்த பீமன் விசோகனுக்குப் பரிசுகளை அளிப்பது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தக் கடும்மோதல் நடக்கையில், தனி ஒருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன், எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்டபோது, {பீமன்} தன் சாரதியிடம் {விசோகனிடம்}, “தார்தராஷ்டிரப் படைக்கு மத்தியில் என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! தேரோட்டியே, இந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு வேகமாகச் செல்வாயாக. இந்தத் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் நான் யமனின் முன்னிலைக்கு அனுப்புவேன்” என்றான். இவ்வாறு பீமசேனனால் தூண்டப்பட்ட தேரோட்டி, பீமன் எந்த இடத்தில் உமது மகனின் {துரியோதனனின்} படையை அழிக்க விரும்பினானோ, அந்த இடத்திற்கு அதை எதிர்த்து மிக மூர்க்கமாகவும், வேகமாகவும் சென்றான். அப்போது யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியவற்றோடு கூடிய எண்ணற்ற கௌரவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை எதிர்த்து விரைந்தன.(2,3) பிறகு ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும், பீமனுக்குச் சொந்தமான முதன்மையான வாகனங்களைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் அவர்கள் {கௌரவர்கள்} தாக்கினர். எனினும், உயர் ஆன்ம பீமன், தன்னை நோக்கி வரும் எதிரிகளின் கணைகள் அனைத்தையும் தங்கச்சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அறுத்தான்.(4)


இவ்வாறு பீமனின் கணைகளால் இரண்டு, அல்லது மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அவனது எதிரிகளின் கணைகள் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட முதன்மையான க்ஷத்திரியர்களுக்கு மத்தியில், யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியன,(5) ஓ! ஏகாதிபதி, இடியால் பிளக்கப்படும் மலைகள் உண்டாக்கும் ஆரவாரத்திற்கு ஒப்பாக உரக்க ஓலமிட்டன. இவ்வாறு பீமனால் தாக்கப்பட்ட அந்த முதன்மையான க்ஷத்திரியர்கள், பீமனின் பலமிக்கக் கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு, புதிதாக வளர்ந்த பறவைகள் ஒரு மரத்தை நோக்கிச் செல்வதைப் போல, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீமனை எதிர்த்து விரைந்தனர். இவ்வாறு அவனை {பீமனை} எதிர்த்து உமது துருப்புகள் சென்ற போது, சீற்றமும், மூர்க்கமும் கொண்ட அந்தப் பீமன், யுக முடிவின்போது கதாயுதம் தரித்த காலன், உயிரினங்கள் அனைத்தையும் எரித்து அழிப்பதைப் போலத் தன் வேகமனைத்தையும் வெளிப்படுத்தினான்.(6-7) யுக முடிவில் வாயை அகல விரித்து அனைத்து உயிர்களையும் அழிக்கும் காலனைப் போலச் சீற்றமும், வேகமும் கொண்டிருந்த அந்தப் பீமனை உமது படைவீரர்களால் தடுக்க முடியவில்லை.(8) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் சிதறடிக்கப்படும் மேகத்திரள்களைப் போல, உயர் ஆன்மப் பீமனால் அந்தப் போரில் இவ்வாறு சிதைத்து எரிக்கப்பட்ட அந்தப் பாரதப் படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளக்கப்பட்டுத் தப்பி ஓடியது. அப்போது, வலிமைமிக்கவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமசேனன், தன் தேரோட்டியிடம் உற்சாகமாக,(9,10) “ஓ! சூதா {விசோகா}, என்னை நோக்கி வரும் அந்தத் தேர்களும், கொடிமரங்களும் நமக்குச் சொந்தமானவையா? எதிரிகளுக்குச் சொந்தமானவையா? என்பதை உறுதி செய்வாயாக. போரில் உள்ளிழுக்கப்பட்டிருப்பதால், அவற்றை வேறுபடுத்திப் பார்க்க என்னால் இயலவில்லை. என் கணைகளால் என் துருப்புகளையே நான் மறைக்காமல் இருக்க வேண்டும்.(11)

ஓ! விசோகா, அனைத்துப் பக்கங்களிலும் பகை போர்வீரர்களையும், தேர்களையும், அவர்களது கொடிமரங்களின் உச்சிகளையும் {மட்டுமே} காண்பதால் நான் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். மன்னரோ {யுதிஷ்டிரரோ} துன்பத்தில் இருக்கிறார். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனும் இன்னும் வரவில்லை. ஓ! சூதா, இக்காரியங்கள் என் இதயத்தைக் கவலையால் நிறைக்கின்றன.(12) ஓ! தேரோட்டி, எதிரிகளுக்கு மத்தியில் என்னை விட்டுவிட்டு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் சென்று விட்டார் என்பதே என் துயரமாகும். பீபத்சுவும் {அர்ஜுனனும்} உயிரோடிருக்கிறானா? அல்லது இறந்துவிட்டானா? என்பதை நான் அறியவில்லை. இஃது என் துயரத்தை இன்னும் அதிகரிக்கிறது.(13) எனினும், பெரும் துன்பத்தில் நிறைந்திருந்தாலும், பெரும் வலிமையைக் கொண்ட இந்தப் பகைவரின் துருப்புகளை நான் அழிப்பேன். கூடியிருக்கும் எதிரிகளுடனான போருக்கு மத்தியில் இவ்வாறு அழிவை உண்டாக்கி, இன்று நான் உன்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்வேன்.(14) ஓ! சூதா, கணைகளைக் கொண்ட என் அம்பறாத்தூணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, என் தேரில் எஞ்சியிருக்கும் கணைகளின் அளவையும், வகைகளையும், நன்றாக உறுதி செய்வாயாக” என்றான் {பீமன்}.(15)

இவ்வாறு ஆணையிடப்பட்ட விசோகன், “ஓ! வீரரே {பீமரே}, கணைகளில் நீர் இன்னும் அறுபதாயிரத்தைக் {60,000} கொண்டிருக்கிறீர், உமது கத்தித் தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் {10,000} எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறீர். ஓ! வீரரே, துணிக்கோல் கணைகளில் {நாராசங்களில்} இன்னும் இரண்டாயிரம் {2,000} இருக்கின்றன, ஓ, பார்த்தரே {பீமரே}, பிரதரங்களில் {சிறப்பு வகைக் கணைகள்} இன்னும் மூவாயிரம் {3,000} இருக்கின்றன. உண்மையில், ஓ! பார்த்தரே {பீமரே}, ஆறு எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சுமக்க முடியாத அளவுகளுக்கான ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றன.(16) ஓ! கல்விமானே, கரங்களைக் கொண்டு மட்டுமே பயன்படுத்தும் ஆயுதங்களில் கதாயுதங்கள் மற்றும் வாள்கள் மட்டுமே இன்னும் ஆயிரம் ஆயிரமாக இருக்கின்றன. அதே அளவுக்கு வேல்கள், குறுவாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியனவும் இருக்கின்றன. உமது ஆயுதங்கள் தீர்ந்து போகும் என்று ஒருபோதும் அஞ்சாதீர்” என்றான் {விசோகன்}.(17)

பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! சூதா, இந்தப் பயங்கரமான போரில் என் வில்லில் இருந்து சீற்றத்துடன் ஏவப்படும் வேகமான கணைகளால், என் எதிரிகள் அனைவரையும் சிதைத்து, அனைத்தையும் மறைக்கப்போவதால் சூரியன் மறைந்து யமனின் இருள் உலகங்களுக்கு ஒப்பாக இந்தப் போர்க்களத்தை ஆக்கப்போகிறது.(18) ஓ! சூதா, போரில் பீமசேனன் அடிபணிந்தான், அல்லது குருக்கள் அனைவரையும் அவன் அடியபணியச் செய்தான் என்பதைக் குழந்தைகள் உள்ளிட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் இன்று அறியப் போகிறார்கள்.(19) கௌரவர்கள் அனைவரும் போரில் வீழ்வார்கள், அல்லது என் கடந்த காலச் சாதனைகளைத் தொடக்கமாகக் கொண்டு உலகமனைத்தும் என்னை இன்று மெச்சப் போகிறது. தனி ஒருவனாக நான் அவர்கள் அனைவரையும் வீழ்த்தப் போகிறேன், அல்லது அவர்கள் அனைவரும் பீமசேனனைத் தாக்கி வீழ்த்தப் போகிறார்கள்.(20) நற்செயல்களைச் சாதிக்க உதவி செய்யும் தேவர்கள் எனக்கு அருள் வழங்கப் போகிறார்கள். முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் சக்ரன் {இந்திரன்}, வேகமாக ஒரு வேள்விக்கு வருவதைப் போல எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் இப்போது இங்கே வரப்போகிறான்.(21) பாரதப்படை பிளப்பதைப் பார். அந்த மன்னர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள்? மனிதர்களில் முதன்மையான சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் கணைகளால் அந்தப் படையை மறைக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(22)

ஓ! விசோகா, அந்தக் கொடிமரங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களின் கூட்டம் ஆகியன ஓடிப்போவதைப் பார். ஓ! சூதா, கணைகள் மற்றும் ஈட்டிகளால் தாக்கப்படும் இந்தத் தேர்கள், சிதறடிக்கப்படுவதைப் பார்.(23) தங்கச் சிறகுகள் மற்றும் மயிலின் இறகுகள் ஆகியவற்றைக் கொண்டவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் அதிகமாகக் கொல்லப்பட்டாலும், இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் அந்தக் கௌரவப் படையை அதோ பார்.(24) தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன காலாட்படைவீரர்களின் கூட்டத்தை நசுக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றன. உண்மையில், தங்கள் உணர்வுகளை இழந்த கௌரவர்கள் அனைவரும், எரியும் காட்டில் அச்சத்தால் நிறைந்த யானைகளைப் போலத் துன்பக் குரலை வெளியிட்டபடியே தப்பி ஓடுகின்றனர். ஓ! விசோகா, அந்தப் பெரும் யானைகளும் கணைகளால் தாக்கப்பட்டு உரக்கப் பிளிறுகின்றன” என்றான் {பீமன்}.(25,26)

விசோகன் {பீமனிடம்}, “ஓ! பீமரே, பார்த்தரால் {அர்ஜுனரால்} கோபத்துடன் வளைக்கப்படும் காண்டீவத்தின் நாணொலியை நீர் கேட்காமலிருப்பது எவ்வாறு? இந்த உமது காதுகள் இரண்டும் செயலிழந்துவிட்டனவா?[1](27) ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறிவிட்டன. (எதிரியின்) யானைப்படைக்கு மத்தியில் (அர்ஜுனரின் கொடியில் உள்ள) குரங்கு அதோ காணப்படுகிறது. நீல மேகங்களுக்கு மத்தியில் மின்னலைப் போலக் காண்டீவத்தின் நாண்கயிறுகள் கீற்றுகளாகத் தெரிவதைப் பாரும்.(28) அதோ தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில் உள்ள குரங்கானது இந்தப் பயங்கரப் போரில் பகைவரின் படைப்பிரிவுகளை அனைத்துப் பக்கங்களிலும் அச்சுறுத்துகிறது. நான் கூட அதைப் பார்க்கும்போது அச்சத்தால் தாக்கப்படுகிறேன்.(29) அங்கே, அர்ஜுனரின் அழகிய கிரீடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கிரீடத்தில் உள்ள ரத்தினம் சூரியனின் காந்தியோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(30)

[1] வேறொரு பதிப்பில், “இச்சமயத்தில் காண்டீவத்தினுடைய அதிகோரமான இந்தத்வனியை நீர் கேட்கவில்லையா? கோபங்கொண்டிருக்கின்ற பார்த்தனால் இழுக்கப்பட்ட நாண்கயிற்றின் ஒலியினால் உம்முடைய இந்த இரு காதுகளும் செவிடாகாமலிருக்கின்றனவா?” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இத்தகவல் {இந்த ஒரு சுலோக வரி} இல்லை.

அவருக்குப் பக்கத்தில் உரத்த சங்கொலியைக் கொண்டதும், வெண்மேகங்களின் வண்ணத்தைக் கொண்டதுமான அவரது தேவதத்த சங்கை அங்கே பாரும். கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு, பகைவரின் படைக்குள் ஊடுருவும் ஜனார்த்தனருக்கு {கிருஷ்ணருக்குப்} பக்கத்தில் சூரியப் பிரகாசத்தைக் கொண்டதும், கத்தி போன்ற கூர்மை கொண்டதுமான அவரது சக்கரத்தைப் பாரும். ஓ! வீரரே, எப்போதும் யதுக்களால் வழிபடப்படுவதும், புகழைப் பெருக்குபவனான கேசவனுடையதுமான அந்தச் சக்கரத்தைப் பாரும்.(31,32) முற்றிலும் நேராக உயர்ந்திருக்கும் மரங்களுக்கு ஒப்பானவையான பெரும் யானைகளின் அந்தத் துதிக்கைகள், கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்ட பூமியில் விழுகின்றன. அந்தப் பெரும் உயிரினங்களும், கணைகளால் துளைத்துப் பிளக்கப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போலத் தங்கள் பாகர்களுடன் அங்கே கீழே விழுகின்றன.(33) ஓ! குந்தியின் மகனே {பீமரே}, மிக அழகானதும், சந்திரனின் நிறத்தைக் கொண்டதுமான கிருஷ்ணரின் பாஞ்சஜன்யத்தையும், அவரது மார்பில் சுடர்விடும் கௌஸ்துபத்தையும், அவரது வெற்றி மாலையையும் அங்கே காண்பீராக.(34)

தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், முதலானவருமான பார்த்தர் {அர்ஜுனர்}, வெண்மேகங்களின் நிறத்தைக் கொண்டவையும், கிருஷ்ணரால் தூண்டப்பட்டவையுமான தன் முதன்மையான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பகைவரின் படையைக் கொன்றபடியே வருகிறார் என்பதில் ஐயமில்லை.(35) தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனனால்} சிதைக்கப்பட்ட அந்தத் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களின் கூட்டத்தைப் பாரும். கருடனின் சிறகுகளால் உண்டாக்கப்பட்ட புயலில் வேரோடு பிடுங்கப்பட்ட காட்டைப் போல அவை விழுந்து கொண்டிருப்பதைப் பாரும்.(36) தங்கள் குதிரைகள் மற்றும் சாரதிகளுடனும் கூடிய நானூறு தேர்வீரர்களும், எழுநூறு யானைகளும், எண்ணற்ற காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைவீரர்களும் கிரீடியின் {அர்ஜுனரின்} வலிமைமிக்கக் கணைகளால் இந்தப் போரில் கொல்லப்படுவதைப் பாரும்.(37) குருக்களைக் கொன்றபடியே வலிமைமிக்க அர்ஜுனன், சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைப் போல உமது பக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறுகின்றன. உமது எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். உமது வலிமையும், உமது வாழ்நாளும் எப்போதும் அதிகரிக்கட்டும்” என்றான் {விசோகன்}.(38)

பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! விசோகா, அர்ஜுனனின் வருகையை நீ சொன்னதாலும், நீ சொன்ன அந்தச் செய்தியால் உன்னிடம் எனக்கு மகிழ்ச்சி உண்டானதாலும், மக்கள் தொகை நிறைந்த பதினான்கு கிராமங்களையும், நூறு அடிமைப்பெண்களையும், இருபது தேர்களையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான் {பீமன்}”.(39)
----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி - 76ல் உள்ள சுலோகங்கள் : 39

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்