Thursday, August 10, 2017

குதிரையில் தப்பி ஓடிய துரியோதனன்! - சல்லிய பர்வம் பகுதி – 25

Duryodhana retreated riding on horseback! | Shalya-Parva-Section-25 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 25)


பதிவின் சுருக்கம் : துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனிடம் தோல்வியடைந்த துரியோதனன் ஒரு குதிரையில் தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனிடம் தப்பிய சஞ்சயன் சாத்யகியிடம் உயிரோடு அகப்பட்டது; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் துரியோதனனைத் தேடிக்கொண்டு சகுனி இருக்கும் இடத்திற்குச் சென்றது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}   சொன்னான், "தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் போராடிக் கொண்டிருந்தவர்களும், பின்வாங்காதவர்களுமான அந்த வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் வீணாகும்படி செய்தான்.(1) அர்ஜுனனால் ஏவப்பட்டவையும், தடுக்கப்பட முடியாதவையும், பெரும் சக்தி கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தீண்டலைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் மேகத்தால் பொழியப்படும் மழைத்தாரைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிரீடியால் {அர்ஜுனனால்} இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(3)


சிலர் தங்கள் தந்தைமாரையும், சகோதரர்களையும் கைவிட்டனர்; வேறு சிலர், தங்கள் தோழர்களைக் கைவிட்டனர். சில தேர்வீரர்கள் தங்கள் விலங்குகளை இழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிலருடைய அச்சுகளோ, நுகத்தடிகளோ, சக்கரங்களோ உடைந்தன.(4) சிலருக்குக் கணைகள் தீர்ந்து போயின. சிலர் கணைகளால் பீடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். காயம்படாதவர்களாக இருப்பினும் சிலர், அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கூட்டமாகத் தப்பி ஓடினர்.(5) தங்கள் சொந்தங்கள் அனைவரையும், விலங்குகளையும் இழந்த சிலர், தங்கள் மகன்களைக் காக்க முயன்றனர். சிலர் தங்கள் தந்தைமாரை உரக்க அழைத்தனர், சிலர் தங்கள் தோழர்களையும், தொண்டர்களையும் அழைத்தனர்.(6) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, சிலரோ, தங்கள் உறவினர்கள, சகோதரர்கள் மற்றும் பிற சொந்தங்களைக் கைவிட்டுத் தப்பி ஓடினர்.(7)

பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாக, கடினத்துடன் மூச்சுவிடுபவர்களாகத் தென்பட்டனர்.(8) அவர்களைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்ட வேறு சிலர், சிறிது நேரம் அவர்களின் துயராற்றி, அவர்களை ஓய்வெடுக்கச் செய்து, நீர் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணித்து, மீண்டும் போரிடச் சென்றனர்.(9) போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களான சிலர், காயம்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு, உமது மகனின் கட்டளைகளைக்குக் கீழ்ப்படிய விரும்பி மீண்டும் போரிடச் சென்றனர்.(10) தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டோ, விலங்குகளைக் களைப்பாறச் செய்தோ சிலரும், ஓ! பாரதர்களின் தலைவரே, (புதிய) கவசம் அணிந்து கொண்ட சிலரும்,(11) தங்கள் சகோதரர்கள், மகன்கள் மற்றும் தந்தைமாருக்கு ஆறுதலளித்து, அவர்களை முகாமில் விட்டுவிட்டு மீண்டும் போரிட வந்தனர்.(12) மூத்தோர், சிறியோர் வரிசையில் தங்கள் தேர்களை அணிவகுத்துக் கொண்ட சிலர், மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்.(13) (தங்கள தேர்களில்) மணிவரிசைகளால் மறைக்கப்பட்ட அந்த வீரர்கள், மூன்று உலகங்களையும் வெற்றிகொள்ளும் நோக்குடன் செல்லும் தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(14) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வாகனங்களில் பதற்றத்துடன் விரைந்த சிலர், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் இருந்த திருஷ்டத்யும்னனுடன் போரிட்டனர்.(15)

பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், பெரும் தேர்வீரனான சிகண்டி, நகுலனின் மகனான சதானீகன் ஆகியோர் எதிரியின் தேர்ப்படையோடு போரிட்டனர்.(16) அப்போது சினத்தால் நிறைந்தவனும், ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டம்யும்னன்}, கோபக்காரர்களான உமது துருப்பினரைக் கொல்லும் விருப்பத்தோடு அவர்களை நோக்கி விரைந்தான்.(17) பிறகு, உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, இவ்வாறு தன்னை நோக்கி விரைந்து வந்த அந்தப் பாஞ்சால இளவரசன் மீது கணைமாரிகள் பலவற்றை ஏவினான்.(18) அப்போது திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, வில்லைக் கொண்டு போரிட்டு வந்த உமது மகனின் {துரியோதனனின்} கணைகள் பலவற்றால் மார்பிலும், கரங்களிலும் வேகமாகத் துளைக்கப்பட்டான்.(19) கூரிய வேல்களால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல ஆழத்துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கணைகளைக் கொண்டு துரியோதனனின் நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அடுத்ததாக, மற்றோர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, அவன் தன் எதிரியுடைய {துரியோதனனுடைய} சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தெடுத்தான்.(20)

எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துரியோதனன், இவ்வாறு தன் தேரை இழந்து, ஒரு குதிரையின் முதுகில் ஏறிக்கொண்டு, ஒரு தொலைவான இடத்திற்குப் பின்வாங்கிச் சென்றான்.(21) தன் படையானது ஆற்றலை இழந்ததைக் கண்டவனும், வலிமைமிக்கவனுமான உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றான்.(22) கௌரவத் தேர்கள் நொறுக்கப்பட்டபோது, தேர்வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் மூவாயிரம் பெரும் யானைகள் சூழ்ந்து கொண்டனர்.(23) யானைப்படையால் சூழப்பட்டவர்களான அந்த ஐந்து சகோதரர்களும், ஓ! பாரதரே, ஓ! மனிதர்களில் புலியே, மேகங்களால் மறைக்கப்பட்ட கோள்களை {கிரகங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர்.(24) வலிமைமிக்கக் கரங்களையும், வெண்குதிரைகளையும், இலக்கில் துல்லியத்தையும் கொண்டவனான அர்ஜுனன், ஓ! மன்னா, கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டு தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(25)

மலைகளைப் போன்ற அந்தப் பெரும் யானைகளால் சூழப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கூரியவையும், பளபளக்கப்பட்டவையுமான தன் கணைகளால் அவ்விலங்குகளை அழிக்கத் தொடங்கினான்.(26) தனித்தனி கணைகளால் கொல்லப்பட்ட பெரும் யானைகள் ஒவ்வொன்றும், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவையாகவோ, வீழ்ந்து கொண்டிருப்பவையாகவோ, சிதைக்கப்படுபவையாகவோ இருப்பதை நாங்கள் கண்டோம்.(27) மதங்கொண்ட யானையைப் போன்றவனான பீமசேனன், அந்த ஆனைகளைக் கண்டு, உறுதிமிக்கத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தண்டந்தரித்த யமனைப் போலத் தன் தேரில் இருந்து கீழே குதித்து அவற்றை நோக்கி விரைந்து சென்றான்.(28) பாண்டவர்களில் பெரும் தேர்வீரனான அவன் {பீமன்}, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் வருவதைக் கண்ட உமது படைவீரர்கள் அச்சத்தால் நிரம்பியவர்களாக மலமும், சிறுநீரும் கழித்தனர்.(29) அப்போது நாங்கள், பீமனின் கதாயுதத்தால் மத்தகம் பிளக்கப்பட்டு, அங்கமெல்லாம் குருதியால் நனைக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருப்பவையாக மலைகளைப் போன்ற அந்தப் பெரிய யானைகளைக் கண்டோம்.(30)

பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகள், வலியால் கதறிக் கொண்டே அவனிடம் இருந்து அப்பால் ஓடிச்சென்று, சிறகிழந்த மலைகளைப் போலக் கீழே விழுந்தன.(31) மத்தகம் பிளக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பவையோ, கீழே விழுந்து கொண்டிருப்பவையோவான அந்த யானைகள் எண்ணிக்கையில் பலவாக இருப்பதைக் கண்டு உமது படைவீரர்கள் அச்சத்தை அடைந்தனர்.(32) பிறகு, யுதிஷ்டிரனும், மாத்ரியின் இரு மகன்களும் {நகுல, சகாதேவன்} கோபத்தால் நிறைந்து, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட கணைகளால் அந்த யானைவீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.(33) போரில் தோல்வியடைந்த (குரு) மன்னன் {துரியோதனன்} அவ்விடத்தில் இருந்து குதிரையின் முதுகிலேறி தப்பிச் சென்ற பிறகு, (கௌரவ) யானைகளால் பாண்டவர்கள் அனைவரும் சூழப்பட்டிருப்பதைத் திருஷ்டத்யும்னன் கண்டான்.(34) ஓ! ஏகாதிபதி, பாஞ்சால மன்னனின் மகனான திருஷ்டத்யும்னன் இதைக் கண்டு, அந்த யானைகள் அனைத்தையும் கொல்ல விரும்பி அவற்றை நோக்கிச் சென்றான்.(35)

அதேவேளையில், தேர்ப்படைக்கு மத்தியில் துரியோதனனைக் காணாதவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், "துரியோதனன் எங்குச் சென்றுவிட்டான்?" என்று அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அனைவரிடமும் கேட்டனர்.(36) அந்தப் பேரழிவுக்கு மத்தியில் மன்னனை {துரியோதனனைக்} காணாதவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், உமது மகன் கொல்லப்பட்டதாக நினைத்தனர். எனவே, துன்பம் நிறைந்த முகங்களுடன் அவர்கள் அவனைக் குறித்து விசாரித்தனர்.(37) அவனுடைய சாரதி வீழ்ந்ததும் அவன் {துரியோதனன்} சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} சென்று விட்டதாகச் சிலர் அவர்களிடம் சொன்னார்கள்.(38) காயங்களுடன் அங்கே மிகவும் சிதைக்கப்பட்டிருந்த சில க்ஷத்திரியர்கள், "துரியோதனனால் இங்கே என்ன தேவை இருக்கிறது? அவன் இன்னும் உயிரோடிருந்தால் பாருங்கள். ஒற்றுமையுடன் நீங்கள் அனைவரும் போரிடுவீராக. மன்னன் உங்களுக்கு என்ன செய்யப் போகிறான்?" என்று சொன்னார்கள்.(39)

மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தவர்களும், எதிரியின் கணைகளால் இன்னும் பீடிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுமான வேறு சில க்ஷத்திரியர்கள், "நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தப் படைகளைக் கொல்வோம். யானைகளைக் கொன்றதும் பாண்டவர்கள் இங்கே வருகிறார்கள் பாருங்கள்" என்று தெளிவற்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(40,41) அவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், பாஞ்சால மன்னனின் தடுக்கப்படமுடியாத படையைத் துளைத்துக் கொண்டு, கிருபருடனும், கிருதவர்மனுடனும் சேர்ந்து சுபலனின் மகன் {சகுனி} இருக்குமிடத்திற்குச் சென்றான். உண்மையில், உறுதிமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் தேர்ப்படையை விட்டுவிட்டு (துரியோதனனைத் தேடி) சென்றனர்.(42,43) அவர்கள் அங்கிருந்த சென்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யுமன்ன தலைமையிலான பாண்டவர்கள் தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(44) வீரமும், துணிச்சலும் கொண்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவர்களை உற்சாகமாக விரைவதைக் கண்டவர்களும், முகம் வெளிறியவர்களுமான உமது துருப்பினர், தங்கள் உயிர்களில் நம்பிக்கையிழந்தனர்.(45)

கிட்டத்தட்ட ஆயுதங்களை இழந்தவர்களும், (எதிரியால்) சூழப்பட்டவர்களுமான நமது படைவீரர்களைக் கண்டவனும், இரு வகைப் படைகளை மட்டுமே கொண்டவனுமான {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதித்து,(46) நமது படையின் ஐந்து தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, சரத்வான் மகன் {கிருபர்} நின்று கொண்டிருந்த இடத்தில் நம் மனிதர்களை நிறுத்தி, பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} படைகளோடு போரிட்டேன்.(47) கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் நாங்கள் பீடிக்கப்பட்டோம். இருப்பினும், எங்களுக்கும், திருஷ்டத்யும்னனின் படைப்பிரிவுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. இறுதியில் பின்னவனால் {திருஷ்டத்யும்னனால்} வெல்லப்பட்ட நாங்கள் அனைவரும் அம்மோதலில் இருந்து பின்வாங்கிச் சென்றோம்.(48) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி எங்களை எதிர்த்து விரைந்து வருவதை நான் கண்டேன். அந்தப் போரில் நானூறு {400} தேர்களுடன் அந்த வீரன் எங்களைப் பின்தொடர்ந்து வந்தான்.(49) குதிரைகள் களைத்துப் போயிருந்த திருஷ்டத்யும்னனிடம் இருந்து பெருங்கடினத்துடன் தப்பித்த நான், நகரத்திற்குள் வீழும் பாவியைப் போல மாதவனின் {சாத்யகியின்} படைகளுக்கு மத்தியில் விழுந்தேன். அங்கே குறுகிய காலத்திற்குச் சீற்றமும் கடுமையும் கொண்ட ஒரு போர் நடந்தது.(50)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, என்னை உயிரோடு பிடிக்க விரும்பி என் கவசத்தை வெட்டினான். உணர்விழந்தவனாகத் தரையில் கிடந்த என்னை அவன் {சாத்யகி} கைப்பற்றினான் {உயிரோடு பிடித்தான்}.(51) அப்போது குறுகிய காலத்திற்குள்ளாகவே பீமசேனனின் கதாயுதத்தினாலும், அர்ஜுனனின் கணைகளாலும் அந்த யானைப்படையானது அழிக்கப்பட்டது.(52) மலைகளைப் போன்று பெரியவையான அந்த வலிமைமிக்க யானைகள், நொறுங்கிய அங்கங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்ததன் விளைவால், தங்கள் வழி முற்றிலும் அடைக்கப்பட்டதைப் பாண்டவப் போர்வீரர்கள் கண்டனர்.(53) அப்போது வலிமைமிக்கப் பீமசேனன், ஓ! ஏகாதிபதி, அந்தப் பெரும் யானைகளை இழுத்துத் தள்ளி, பாண்டவர்கள் வெளியே வருவதற்கான வழியை உண்டாக்கினான்.(54) அதேவேளையில், அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், தேர்ப்படைக்கு மத்தியில் எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனைக் காணாமல், உமது அரச மகனைத் தேடினர்.(55) அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்ட அவர்கள், மன்னனைக் காணும் ஆவலால் சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.(56)
-------------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 25ல் உள்ள் சுலோகங்கள் : 56

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்