Sunday, August 13, 2017

மற்றுமொருவனைக் கொன்ற பீமன்! - சல்லிய பர்வம் பகுதி – 27

Bhima killed onemore! | Shalya-Parva-Section-27 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 27)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்சியிருந்த இருவர்; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன்; திரிகர்த்தப் படையை நோக்கிச் சென்று சுசர்மனைக் கொன்ற அர்ஜுனன்; திருதராஷ்டிரன் மகனான சுதர்சனனைக் கொன்ற பீமன்; பீமனுக்கும் கௌரவப்படைக்கும் இடையில் ஏற்பட்ட போர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது பிள்ளைகளில் இன்னும் கொல்லப்படாதவர்களான துரியோதனன் மற்றும் உமது மகன் சுதர்சனன் ஆகிய இருவர் மட்டுமே அந்நேரத்தில் (கௌரவ) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் இருந்தனர்.(1) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த துரியோதனனைக் கண்ட தேவகியின் மகன் (கிருஷ்ணன்), குந்தியின் மகனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(2) "நமது பாதுகாப்பைப் பெற்றிருந்த உறவினர்களான பெரும் எண்ணிக்கையிலான நமது எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதோ, சஞ்சயனைக் கைப்பற்றிக் கொண்டு சிநியின் பேரன் {சாத்யகி} திரும்பி வருகிறான்.(3) நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், ஓ! பாரதா, தார்தராஷ்டிரர்களுடனும், அவர்களின் தொண்டர்களுடனும் போரிட்டு களைத்துப் போயிருக்கின்றனர்.(4) கிருபர், கிருதவர்மன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் ஆகியோர் துரியோதனனின் தரப்பைவிட்டு, வேறெங்கோ தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளனர்.(5) துரியோதனனின் துருப்புகளைக் கொன்றுவிட்டு, அதோ பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரபத்ரகர்களுக்கு மத்தியில் பேரழகுடன் நிற்கிறான்.(6)


ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ, தலைக்குமேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டபடியே தன் குதிரைப்படைக்கு மத்தியில் துரியோதனன் நிற்கிறான்.(7) அவன், (எஞ்சியிருக்கும் தன்) படையை மீண்டும் அணிவகுத்திருக்கும் தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறான். உனது கூரிய கணைகளால் இவனைக் கொன்றுவிட்டால், உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைந்தவனாவாய்.(8) இந்தத் துருப்புகள், தங்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னைக் கண்டும், தங்கள் யானைப்படையின் அழிவைக் கண்டும் தப்பி ஓடாதவரை, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ துரியோதனனைக் கொல்ல முயற்சிப்பாயாக.(9) யாராவது ஒருவர் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} சென்று, அவனை இந்த இடத்திற்கு வரச் சொல்லட்டும். ஓ! ஐயா, கௌரவத் துருப்புகள் அனைத்தும் களைத்துப் போயிருக்கின்றன. பாவியான துரியோதனனால் ஒருபோதும் தப்ப இயலாது.(10) போரில் பெரும் எண்ணிக்கையிலான உன் துருப்புகளைக் கொன்றிருக்கும் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்கள் வெல்லப்பட்டதாக நம்பி செருக்கை வெளிப்படுத்துகிறான்.(11) அவனது துருப்புகள் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டு, அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, அவனது அழிவுக்காகவே நிச்சயம் போரிட வருவான்" என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12)

"ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரரின் மகன்களில் கிட்டத்தட்ட அனைவரும் பீமரால் கொல்லப்பட்டுவிட்டனர். இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் எஞ்சியிருக்கின்றனர். எனினும், ஓ! கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ! கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ! கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ! ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, துரியோதனனின் எஞ்சிய படையாக இருக்கின்றன. உண்மையில் இவ்வுலகத்தில் எவராலும் மரணத்தில் இருந்து தப்பிக்க இயலாது.(17)

இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் துரியோதனன் உயிரோடிருப்பதைப் பார். எனினும், மன்னன் யுதிஷ்டிரர் இன்று தன் எதிரிகள் அனைவரிடம் இருந்தும் விடுபடுவார். எதிரிகளில் எவரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.(18) மனிதர்களைவிடவும் சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பினும், போர்க்களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடாமலிருந்தால், போர் எவ்வளவு மூர்க்கமாக நடைபெற்றாலும் நான் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(19) இன்றைய போரில் கோபத்தால் நிறையும் நான், என் கூரிய கணைகளால் காந்தார இளவரசனைக் {சகுனியைக்} கொல்வதன் மூலமாக, நீண்ட காலமாக அவதிப்பட்டு வரும் மன்னருடைய {யுதிஷ்டிரருடைய} தூக்கமற்ற நிலையை விலக்குவேன்.(20) சபையில் நடந்த சூதாட்டத்தில் தீய நடத்தை மூலமாக எங்களிடம் இருந்து சுபலனின் மகன் {சகுனி} வென்ற விலைமதிப்புமிக்க அனைத்துப் பொருட்களையும் மீண்டும் நான் வென்றெடுப்பேன்.(21) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திலிருக்கும் {ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்} பெண்கள் அனைவரும், பாண்டவர்களின் கரங்களால் தங்கள் கணவர்கள், மகன்கள் ஆகியோர் போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு உரக்க ஓலமிடப் போகின்றனர்.(22)

ஓ! கிருஷ்ணா, இன்று நமது பணி முடிவை அடையும். இன்று துரியோதனன் சுடர்மிக்கத் தன் செழிப்பனைத்தையும், தன் உயிர் மூச்சையும் கூட விட்டுவிடுவான்.(23) ஓ! விருஷ்ணி குலத்தோனே, இன்று என்னால் தொடுக்கப்படும் போரில் இருந்து அவன் தப்பி ஓடவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, திருதராஷ்டிரரின் மூட மகன் {துரியோதனன்} இறந்துவிட்டதாகவே கருதிக் கொள்வாயாக.(24) அந்தக் குதிரைகள், என் வில்லின் நாணொலியையும், உன் உள்ளங்கையொலியையும் தாங்கிக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, அவற்றை நான் கொல்லும் வகையில், நீ அங்கே செல்வாயாக" {என்றான் அர்ஜுனன்}.(25)

பெரும் மனோவலிமை கொண்ட அந்தப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படைப்பிரிவை நோக்கித் தன் குதிரைகளைத் தூண்டினான்.(26) (துரியோதனன் இருந்த) அந்தப் படையைக் கண்டு, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் சகாதேவன் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அதைத் தாக்குவதற்காகத் தங்களை ஆயத்தம் செய்து கொண்டு, துரியோதனனைக் கொலும் விருப்பத்தால் உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே அதை {அந்தப் படையை} எதிர்த்து ஒன்றாக விரைந்து சென்றனர்.(27) உயர்த்திய விற்களுடன் ஒன்றாகச் சேர்ந்து விரைந்து வரும் அம்மூன்று போர்வீரர்களையும் கண்ட சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளான பாண்டவர்களை எதிர்த்து அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(28) உமது மகன் சுதர்சனன் பீமசேனனை எதிர்த்து விரைந்து சென்றான். சுசர்மனும், சகுனியும் கிரீடியுடன் {அர்ஜுனனுடன்} மோதினார்கள். குதிரையின் முதுகில் இருந்து உமது மகன் துரியோதனன் சகாதேவனை எதிர்த்துச் சென்றான்.(29)

அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கவனத்துடனும், பெரும் வேகத்துடனும், பலத்துடனும், ஒரு வேலால் சகாதேவனின் தலையைத் தாக்கினான்.(30) உமது மகனால் இவ்வாறு தாக்கப்பட்ட சகாதேவன், அங்கமெங்கும் குருதியால் குளித்து, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(31) பிறகு, தன் உணர்வுகள் மீண்ட சகாதேவன், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, கூரிய கணைகளால் துரியோதனனை மறைத்தான்.(32) பார்த்தன் என்றும் வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, குதிரைமுதுகுகளில் இருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலரின் தலைகளை வெட்டினான்.(33) உண்மையில் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கூரிய கணைகள் பலவற்றால் அந்த (குதிரைப்) படையை அழித்தான். குதிரைகள் அனைத்தையும் வீழ்த்திய அவன், அடுத்ததாக, திரிகர்த்தர்களின் தேர்களை எதிர்த்துச் சென்றான்.(34) இதன் காரணமாக ஒன்று சேர்ந்த திரிகர்த்தர்களில் பெரும் தேர்வீரர்கள், கணைமாரிகளால் அர்ஜுனனையும், வாசுதேவனையும் மறைத்தனர்.(35)

பெரும்புகழைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} சத்தியகர்மனைத் தாக்கி, தன் எதிராளியுடைய தேரின் ஏர்க்கால்களையும் அறுத்தான்.(36) அந்தக் கொண்டாடப்பட்ட வீரன் சிரித்துக் கொண்டே, ஓ! தலைவா, பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிராளியின் {சத்தியகர்மனின்} தலையை மற்றொரு கத்தித் தலைக் கணையால் அறுத்தான்.(37) அடுத்ததாக அவன், போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பசித்திருந்த சிங்கமொன்று காட்டில் ஒரு மானைத் தாக்குவதைப் போலச் சத்யேஷுவைத் தாக்கினான்.(38) அவனைக் கொன்ற பார்த்தன், மூன்று கணைகளால் சுசர்மனையும் துளைத்து, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் கொன்றான்.(39) பிறகு அவன், வெகுகாலம் பேணிக் காக்கப்பட்ட கோபமெனும் கடும் நஞ்சைக் கக்கியபடியே பிரஸ்தலத்தின் ஆட்சியாளனான சுசர்மனை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(40)

ஓ! பாரதக் குலத்தின் காளையே, முதலில் ஒரு நூறு கணைகளால் அவனை மறைத்த அர்ஜுனன், பிறகு அந்த வில்லாளியின் குதிரைகள் அனைத்தையும் கொன்றான்.(41) பிறகு, தனது வில்லின் நாண்கயிற்றில், யமதண்டத்திற்கு ஒப்பான வலிமைமிக்கக் கணையொன்றைப் பொருத்திய பார்த்தன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே சுசர்மனைக் குறி பார்த்து அவன் மீது வேகமாக அதைத் தொடுத்தான்.(42) கோபத்தால் சுடர்விட்ட அந்த வில்லாளியால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, சுசர்மனை அடைந்து, அந்தப் போரில் அவனது இதயத்தைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலும், உமது போர்வீரர்கள் அனைவரையும் துன்புறச் செய்யும் வகையிலும் அந்தச் சுசர்மன் உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(44) அந்தப் போரில் சுசர்மனைக் கொன்ற பார்த்தன், பிறகு பெரும் தேர்வீரர்களான, அந்த மன்னனின் {சுசர்மனின்} முப்பத்தைந்து {35} மகன்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(45) சுசர்மனின் தொண்டர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், எஞ்சியிருக்கும் பாரதப் படையை எதிர்த்துச் சென்றான்.(46)

அந்தப் போரில் சினத்தால் நிறைந்த பீமன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சிரித்துக் கொண்டே உமது மகனான சுதர்சனனைக் காணமுடியாதபடி மறைத்தான்.(47) சினத்தால் நிறைந்தவனான அந்தப் பாண்டுவின் மகன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} தன் எதிராளியின் {சுதர்சனனின்} தலையைக் கொய்தான்[1].(48) அந்த (குரு) வீரனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் அவனது {சுதர்சனனின்} தொண்டர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டு கூரிய கணைகளின் மாரியை அவன் மீது ஏவினார்கள்.(49) எனினும் விருகோதரன் {பீமன்}, தன்னைச் சுற்றிலும் மறைத்திருந்த படையை, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட தன் கூரிய கணைகளால் மறைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாவே பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(50)

[1] நமது கணக்கின்படி சுதர்சனனோடு சேர்த்து இதுவரை பீமனால் 97 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு அழிவை அடைந்து கொண்டிருந்தபோது, பெரும் வலிமை கொண்ட கௌரவ வீரர்கள் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனை அணுகி அவனோடு போரிடத் தொடங்கினர்.(51) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் மறைத்தான். அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, உமது வீரர்களும் அனைத்துப்பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களை மறைத்தனர்.(52) அப்போது இரு தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டபடியே மிகவும் கலக்கமடைந்தனர்.(53) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரு படைகளின் போராளிகளும், ஓ! மன்னா, (இறந்து போன) தங்கள் உறவினர்களுக்காக உரத்த ஓலமிட்டபடியே கீழே விழத் தொடங்கினர்" {என்றான் சஞ்சயன்}.(54)
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 54


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்