Thursday, October 05, 2017

அஸ்வத்தாமன் செய்த படுகொலைகள்! - சௌப்திக பர்வம் பகுதி – 08அ

The slaughter made by Aswatthama! | Sauptika-Parva-Section-08a | Mahabharata In Tamil

(சௌப்திக பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : கிருபரையும், கிருதவர்மனையும் வாயிலில் அமர்த்திவிட்டு முகாமுக்குள் நுழைந்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தாக்கிக் கொன்றது; ருத்திர ஆயுதத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது. உறங்கிக் கொண்டிருந்த உத்தமௌஜஸைக் கொன்றது; திரௌபதியின் மகன்களைக் கொன்றது; சிகண்டியை இரண்டாகப் பிளந்து கொன்றது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} பகைவரின் முகாமை நோக்கிச் சென்ற போது, அச்சத்தால் கிருபரும், போஜனும் {கிருதவர்மனும்} நின்று விட்டார்களா?(1) பெரும் தேர்வீரர்களான அவர்கள் இருவரும், கோரமான காவலர்களால் தடுக்கப்பட்டு, எதிராளிகள் தடுக்கப்பட முடியாதவர்கள் என்று கருதி கமுக்கமாகத் தப்பி ஓடவில்லையா?(2) அல்லது சோமகர்கள் மற்றும் பாண்டவர்களின் முகாமை கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, துரியோதனன் சென்ற உயர்ந்த மகிமையான வழியிலேயே சென்றுவிட்டார்களா?(3) அந்த வீரர்கள் பாஞ்சாலர்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் சாதனை ஏதும் செய்தார்களா? ஓ! சஞ்சயா, இவையாவையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(4)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உயரான்ம துரோணர்மகன் {அஸ்வத்தாமன்} முகாமை நோக்கிச் சென்றபோது, கிருபரும், கிருதவர்மனும் வாயிலில் காத்திருந்தனர்.(5) ஓ! மன்னா, தங்களையும் {இம்முயற்சியில்} ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்ட அஸ்வத்தாமன், மகிழ்ச்சியில் நிறைந்து, அவர்களிடம் கிசுகிசுக்கும் தொனியில், "முயற்சி செய்தால், க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்லத்தக்கவர்கள் நீங்கள்.(6) எனவே, எஞ்சியிருக்கும் இந்தப் (பாண்டவப்) படையை என்ன சொல்வது? அதிலும் குறிப்பாக உறக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கும் போது அஃதை என்ன சொல்வது?(7) நான் முகாமுக்குள் நுழைந்து யமனைப் போலத் திரியப் போகிறேன். எம்மனிதனும் உயிரோடு தப்பிச் செல்லாத வகையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் உறுதி கொள்கிறேன்" என்றான்.(8) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகைச் சொல்லிவிட்டு, பார்த்தர்களின் பரந்த முகாமுக்குள் நுழைந்தான். அச்சமனைத்தையும் உதறிவிட்டு, எங்கே கதவு இல்லையோ அந்த இடத்தின் வழியாக அதற்குள் ஊடுருவினான்.(9) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன், முகாமுக்குள் நுழைந்ததும், அடையாளங்களால் வழிநடத்தப்பட்டு மெதுவாகத் திருஷ்டத்யும்னனின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(10)

சாதனைகளைச் செய்திருந்த பாஞ்சாலர்கள் போரால் மிகவும் களைத்திருந்தனர். ஒன்றாகக் கூடிய அவர்கள், ஒருவருக்கொருவர் அருகருகே நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.(11) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன், திருஷ்டத்யும்னனின் அறைக்குள் நுழைந்து, தன் எதிரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பாஞ்சால இளவரசனைக் கண்டான்.(12) விலைமதிப்புமிக்கதும், சிறந்ததுமான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த அழகிய பட்டு விரிப்பில் அவன் கிடந்தான். அந்தப் படுக்கையில் சிறந்த மலர்க்குவியல்கள் தூவப்பட்டு, தூபப்பொடிகளால் அது நறுமணமூட்டப்பட்டிருந்தது.(13) ஓ! மன்னா, அஸ்வத்தாமன், நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் தன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த உயர் ஆன்ம இளவரசனை {திருஷ்டத்யும்னனை} உதைத்து, அவனை விழித்தெழச் செய்தான்.(14) போரில் தடுக்கப்பட முடியாதவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உதையை உணர்ந்து, உறக்கத்தில் இருந்து விழித்து, தன் முன்னே நிற்கும் துரோணரின் மகனை அறிந்து கொண்டான்.(15)

அவன் தன் படுக்கையில் இருந்து எழுந்தபோதே, வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவனது {திருஷ்டத்யும்னனின்} தலைமுடியைப் பிடித்து, தன் கரங்களால் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். இவ்வாறு அஸ்வத்தாமனால் பெரும்பலத்துடன் அழுத்தப்பட்ட அந்த இளவரசன், அச்சத்தாலும், உறக்கக் கலக்கத்தாலும் அந்நேரத்தில் தன் பலத்தை வெளிப்படுத்த முடியாதவனாக இருந்தான்.(17) ஓ! மன்னா, தன் பலி {திருஷ்டத்யும்னன்} அலறித் துடித்துக் கொண்டிருந்தபோது, தன் காலால் அவனது தொண்டை மற்றும் மார்பில் மிதித்த துரோணரின் மகன், ஒரு விலங்கைப் போலக் கருதி அவனைக் கொல்ல முயற்சித்தான்.(18)

அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தன் நகங்களால் அஸ்வத்தாமனைக் கிழித்து, இறுதியாக மெதுவாக, "ஓ! ஆசான் மகனே, தாமதிக்காதீர் என்னை ஆயுதத்தால் கொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது செயலின் மூலமாக என்னை நீதியாளர்களின் {நல்லோரின்} உலகத்தை அடையச் செய்வீராக" என்றான்.(19) எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பாஞ்சால மன்னின் மகன் இவ்வளவே சொன்னபோது, அந்த வலிமைமிக்க வீரனின் பலத்தால் தாக்கப்பட்டு அமைதியடைந்தான்.(20) தெளிவில்லாத அந்த ஒலிகளைக் {திருஷ்டத்யும்னனின் குரலைக்} கேட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, "ஓ! உன் குலத்தில் இழிந்தவனே, ஆசான்களைக் கொன்றோருக்கு எவ்வுலகமும் கிடையாது. ஓ! தீய புரிதல் {துர்ப்புத்தி} கொண்டவனே, நீ எந்த ஆயுதத்தாலும் கொல்லப்படத் தகுந்தவனல்ல" என்றான்.(21) அப்படிச் சொன்னவாறே சினத்தில் நிறைந்த அஸ்வத்தாமன், தன் குதிகால்களின் வலிமையான உதைகளால் தன் பலியின் {பலியாடான திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்களைத் தாக்கத் தொடங்கி, மதங்கொண்ட யானையைக் கொல்லும் சிங்கத்தைப் போலத் தன் எதிரியைக் கொன்றான்[1].(22)

[1] கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் அஸ்வத்தாமன், திருஷ்டத்யும்னனை மிதித்தே கொன்றான் என்று பொருள்படும்படி வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. கும்பகோணம் பதிப்பிலோ, "குரூரபுத்தியுள்ளவரும், அதிகக் கோபமுள்ளவருமான துரோணபுத்திரர் பாஞ்சால ராஜகுமாரனை விரைவாகப் பூமியில் தேய்த்துப் பரபரப்புடன் வில்லிலுள்ள நாண்கயிற்றை அவிழ்த்து அவனுடைய கழுத்தில் அந்த நாண்கயிற்றைக் கட்டி விரைவுள்ளவராகவும், கோபமீறினவராகவும் மனத்தைக் குரூரமாகச் செய்துகொண்டு அப்பொழுது அவனைக் கொன்றார். மன்னரே, துரோணபுத்திரர் காலினால் அவனைக் கழுத்திலும் மார்பிலும் கால்களிலும் ஏறி மிதித்துக் கொண்டு அலறுகின்றவனும், துடிக்கின்றவனுமான அந்தத் திருஷ்டத்யும்னனை ஆட்டைக் கொல்வதுபோலக் கொன்றார்" என்றிருக்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} கொல்லப்படும்போது கதறியதைக் கேட்டு, பாசறையில் இருந்த அவனது மனைவியரும், பாதுகாவலர்கள் அனைவரும் விழித்தெழுந்தனர்.(23) மனித சக்திக்கு அப்பாற்பட்ட பலத்துடன் யாரோ ஒருவன் இளவரசனை நொறுக்குவதைக் கண்ட அவர்கள், தாக்குபவன் இயற்கையைக் கடந்த உயிரினம் {பூதம்} எனக் கருதி அச்சத்தால் கதறாமல் இருந்தனர்.(24) பெரும் சக்தி கொண்டவனான அஸ்வத்தாமன், இத்தகு வழியில் அவனை {திருஷ்டத்யும்னை} யமலோகம் அனுப்பி வைத்துவிட்டு, வெளியே சென்று, தன் அழகிய தேரில் ஏறி நின்றான்.(25) உண்மையில், ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனின் வசிப்பிடத்தில் இருந்து வெளிய வந்த அஸ்வத்தாமன், தன் முழக்கங்களால், திசைப்புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தபடியே தன் எதிரிகளைக் கொல்வதற்காக முகாமின் பிற பகுதிகளுக்குச் சென்றான்.(26)

வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சென்ற பிறகு, பெண்களும், பாதுகாவலர்கள் அனைவரும், துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(27) தங்கள் மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னனின் மனைவியர் அனைவரும், பெரும் சோகத்தால் நிறைந்து உரக்க அழுதனர்.(28) வலிமைமிக்க க்ஷத்திரியர்கள் பலர், அந்த ஓலத்தைக் கேட்டு விழித்தெழுந்து, தங்கள் கவசங்களைப் பூட்டிக் கொண்டு, அந்தக் கூச்சலின் காரணத்தை விசாரிக்க அங்கே வந்தனர்.(29) அஸ்வத்தாமனைக் கண்டு பீதியடைந்திருந்த அந்த மங்கையர், தாமதமில்லாமல் அவனைப் பின்தொடருமாறு பரிதாபகரமான தொனியில் அம்மனிதர்களைக் கேட்டுக் கொண்டனர்.(30) அவர்கள், "அவன் ராட்சசனோ? மனிதனோ? அவன் யாரென்று நாங்கள் அறியவில்லை. பாஞ்சால மன்னனை {திருஷ்டத்யும்னனைக்} கொன்றுவிட்டு அவன் இங்கே இருக்கிறான்" என்றனர்.(31) இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான போர்வீரர்கள் திடீரெனத் துரோணரின் மகனைச் {அஸ்வத்தாமனைச்} சூழ்ந்து கொண்டனர். பின்னவனோ {அஸ்வத்தாமனோ}, அவர்கள் அனைவரையும் ருத்திர ஆயுதத்தின் மூலம் கொன்றான்.(32)

திருஷ்டத்யும்னனையும், அவனது தொண்டர்களையும் கொன்ற பிறகு, படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தமௌஜஸை அவன் {அஸ்வத்தாமன்} கண்டான்.(33) தன் காலால் அவனது தொண்டையையும், மார்பையும் தாக்கிய துரோணரின் மகன், அந்தப் பெரும் வீரன் {உத்தமௌஜஸ்} வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போதே கொன்றான்.(34) அங்கே வந்த யுதாமன்யு, தன் தோழன் ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டான் என்று நம்பி, ஒரு கதாயுதத்தால் வேகமாகத் துரோணரின் மகனைத் தாக்கினான்.(35) அவனை {யுதாமன்யுவை} நோக்கி விரைந்து சென்ற அஸ்வத்தாமன், அவனைப் பிடித்துத் தரையில் சாய்த்து, அவன் உரக்கக் கதறிக் கொண்டிருக்கும்போதே ஒரு விலங்கைக் கொல்வதைப் போல அவனைக் {யுதாமன்யுவைக்} கொன்றான்.(36) இவ்வாறு யுதாமன்யுவைக் கொன்ற அந்த வீரன், உறங்கிக் கொண்டிருந்தவர்களும், மன்னனைச் சேர்ந்தவர்களுமான பிற தேர்வீரர்கள் அனைவரையும் எதிர்த்துச் சென்றான்.(37) அவன், நடுங்கிக் கூச்சலிட்டவர்களான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் வேள்வியில் விலங்குகளைக் கொல்வதைப் போலக் கொன்றான். அப்போது அவன், தன் வாளை எடுத்துக் கொண்டு வேறு பலரையும் கொன்றான்.(38)

வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன் ஒன்றன்பின் ஒன்றாக முகாமின் பல்வேறு பாதைகளில் சென்று, பல்வேறு குல்மங்களைக் கண்டு, அவற்றுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களும், ஆயுதமற்றவர்களும், களைத்தவர்களுமான போர்வீரர்களைக் கணப்பொழுதுக்குள் கொன்றான்.(39) அந்தச் சிறந்த வாளைக் கொண்டு அவன் போராளிகளையும், குதிரைகளையும், யானைகளையும் வெட்டிச் சாய்த்தான். மேனியெங்கும் குருதியால் நனைந்திருந்த அவன் {அஸ்வத்தாமன்}, காலத்தால் நியமிக்கப்பட்ட அந்தகனைப் போலவே அப்போது தெரிந்தான்.(40) {வலது, இடது அசைவுகள் மற்றும் சுழற்றுதல் ஆகிய} தன் மூவகை வாள்வீச்சுகளால் மீண்டும் மீண்டும் தன் எதிரிகளை நடுங்கச் செய்த அஸ்வத்தாமன் குருதியில் குளித்தவனானான்.(41) குருதியில் நனையும், சுடர்மிக்க வாளுடன் போரில் திரிந்து கொண்டிருந்த அவனது வடிவம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பயங்கரமானதாக இருந்தது.(42)

ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர்கள், (சுற்றிலும் தாங்கள் கேட்ட) உரத்த ஒலியால் திகைப்படைந்தனர். துரோணரின் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட அவர்கள், ஒருவரையொருவர் முகங்களைப் பார்த்துக் கொண்டு (அச்சத்தால்) நடுங்கினர்.(43) அந்த எதிரிகளை நொறுக்குபவனின் வடிவத்தைக் கண்ட க்ஷத்திரியர்கள், அவனை ராட்சசனாகக் கருதி தங்கள் கண்களை மூடிக் கொண்டனர்.(44) பயங்கர வடிவத்துடன் யமனைப் போல முகாமுக்குள் திரிந்து கொண்டிருந்த அவன், இறுதியாகத் திரௌபதியின் மகன்களையும், எஞ்சிய சோமகர்களையும் கண்டான்.(45) ஒலியைக் கேட்டு அஞ்சியவர்களும், திருஷ்டத்யும்னன் கொல்லப்பட்டதை அறிந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தத் திரௌபதியின் மகன்கள், விற்களைத்தரித்துக் கொண்டு, அச்சமில்லாமல் துரோணரின் மகன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(46) அவர்களது ஒலியால் விழித்தெழுந்த சிகண்டியின் தலைமையிலான பிரபத்ரகர்கள், தங்கள் கணைகளால் துரோணர் மகனைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.(47) துரோணரின் மகன் தன் மீது கணைகளைப் பொழியும் அவர்களைக் கண்டு உரக்க முழங்கி, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொல்லும் விருப்பம் கொண்டான்.(48) தன் தந்தையின் மரணத்தை நினைத்துப் பார்த்த அஸ்வத்தாமன் சினத்தால் நிறைந்தான். அவன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி (தன் எதிரிகளை எதிர்த்து) மூர்க்கமாக விரைந்தான்.(49) வலிமைமிக்கவனான அஸ்வத்தாமன், பளபளப்பானதும், ஆயிரம் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கேடயத்தையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெரிய வாளையும் எடுத்துக் கொண்டு, திரௌபதியின் மகன்களை எதிர்த்து விரைந்து, தன் ஆயுதத்தால் அவர்களைக் வீழ்த்தத் தொடங்கினான்.(50)

அப்போது அந்த மனிதர்களில் புலி {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் போரில் {அந்தவாளால், யுதிஷ்டிரனின் மகனான} பிரதிவிந்தியனை வயிற்றில் தாக்கினான். அதன்பேரின் அவன் {பிரதிவிந்தியன்} கீழே விழுந்து தன் உயிரை இழந்தான்.(51) வீரனான {பீமன் மகன்} சுதசோமன், ஈட்டியினால் துரோணர் மகனைத் துளைத்து, வாளை உயர்த்திக் கொண்டு அவனை நோக்கி விரைந்து சென்றான்.(52) எனினும், அஸ்வத்தாமன், கையில் வாளுடன் கூடிய சுதசோமனின் கரங்களை வெட்டி, மீண்டும் அவனை விலாப்புறத்தில் தாக்கினான். இதனால் சுதசோமன் உயிரை இழந்து கீழே விழுந்தான்[2].(53) நகுலனின் மகனான சதானீகன், தன் இரு கரங்களாலும் ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துக் கொண்டு, அஸ்வத்தாமனின் மார்பைத் தாக்கினான்.(54) மறுபிறப்பாளனான அஸ்வத்தாமன், தேர்ச்சக்கரத்தை சதானீகன் வீசியபிறகு, வன்மையுடன் அவனைத் தாக்கினான். மிகவும் கலங்கிப் போன நகுலனின் மகன் பூமியில் விழுந்தான். அப்போது துரோணரின் மகன் அவனுடைய {சதானீகனின்} தலையை அறுத்தான்.(55)

[2] கும்பகோணம் பதிப்பில் "மார்பு பிளக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான்" என்றிருக்கிறது.

அப்போது {அர்ஜுனன் மகன்} சுருதகர்மன், ஒரு பரிகத்தை எடுத்துக்கொண்டு அஸ்வத்தாமனைத் தாக்கினான். துரோணர் மகனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அவனது இடது நெற்றியில் பலமாகத் தாக்கினான்.(56) அப்போது அஸ்வத்தாமன் தன் சிறந்த வாளால் சுருதகர்மனின் முகத்தைத் தாக்கினான். அவன் {சுருதகர்மன்}, தன் உணர்வுகளை இழந்து, {கோரமாக} முகம் சிதைந்தவனாக உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(57) பெரும் தேர்வீரனும், {சகாதேவனின் மகன்} வீரனுமான சுருதகீர்த்தி இவ்வொலியைக் கேட்டு அங்கே வந்து, அஸ்வத்தாமன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(58) தன் கேடயத்தால் அந்தக் கணைமாரிகளைக் கலங்கடித்த அஸ்வத்தாமன், காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் {சுருதகீர்த்தியின்} தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(59)

பீஷ்மரைக் கொன்றவனான வலிமைமிக்கச் சிகண்டி, பிரபத்ரகர்கள் அனைவருடன் சேர்ந்து, பல்வேறு ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் அஸ்வத்தாமனைத் தாக்கினான். சிகண்டி, ஒரு கணையால் அஸ்வத்தாமனின் புருவங்களுக்கு மத்தியில் தாக்கினான்.(60) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிகண்டியை அணுகி, தன் வாளால் அவனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டான்.(61) சிகண்டியைக் கொன்ற பிறகு சினத்தால் நிறைந்தவனான அஸ்வத்தாமன், வேறு பிரபத்ரகர்களை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். அவன் எஞ்சியிருந்த விராடப் படையை எதிர்த்தும் சென்றான்.(62) பெரும் பலம் கொண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஒருவர் பின் ஒருவராகத் துருபதனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரைத் தனியாக்கி அவர்களுக்கு மத்தியில் பேரழிவை நிகழ்த்தினான்.(63) வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன், பிற போராளிகளை எதிர்த்து விரைந்து தன் சிறந்த வாளால் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.(64)

பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்கள், கரிய உருவம் கொண்டவளும், குருதி வழியும் வாய் மற்றும் கண்களுடன் கூடியவளும், சிவப்பு மாலை அணிந்தவளும், சிவப்பு வண்ண சந்தனத்தைப் பூசியிருந்தவளும், சிவப்புத் துணியாலான ஒற்றையாடையை உடுத்தியவளும், கையில் சுருக்குக் கயிற்றுடன் கூடியவளும், கிழவிக்கு ஒப்பாகத் தோன்றியவளும், பொலிவிழந்த குரலில் பாடுபவளும், தங்கள் கண்களுக்கு முன்னே முழுமையாக நிற்பவளும், தடித்த கயிற்றில் மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தையும் கட்டி இழுத்துச் செல்பவளுமாக உடல் கொண்டு வந்த அந்தக் கால இரவை {காளராத்ரியைக்} கண்டனர்.(65,66) அவள், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், கயிற்றில் ஒன்றாகக் கட்டப்பட்டவர்களுமான பல்வேறு வகைப் பூதங்களையும், ஆயுதங்களை இழந்த பல வலிமைமிக்கத் தேர்வீரர்களையும் கொண்டு செல்பவளாகத் தெரிந்தாள்.(67) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வேறு நாட்களில், பாண்டவ முகாமைச் சேர்ந்த அந்த முதன்மையான போர்வீரர்கள், உறங்கிக் கொண்டிருக்கும் போராளிகளையும், அவர்களைப் பின்னால் இருந்து தாக்கும் துரோணரின் மகனையும் வழிகாட்டி அழைத்துச் செல்லும் அந்த வடிவத்தை {காளராத்ரியைத்} தங்கள் கனவுகளில் வழக்கமாகக் கண்டு வந்தனர்.(68) அந்தப் பாண்டவப் படைவீரர்கள், முதலில் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் தொடங்கிய போதிலிருந்தே ஒவ்வொரு நாள் இரவிலும், அந்தப் பெண்ணையும், துரோணரின் மகனையும் தங்கள் கனவுகளில் கண்டு வந்தனர்.(69) முன்பே விதியால் பீடிக்கப்பட்ட அவர்கள் இப்போது அச்சந்தரும் வகையில் முழங்கி பீதியடையச் செய்த துரோணரின்  மகனால் {அஸ்வத்தாமனால்} தாக்கப்பட்டனர்.(70) விதியால் பீடிக்கப்பட்டவர்களும், பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் தங்கள் கனவில் ஏற்கனவே கண்டவற்றை நினைத்துப் பார்த்து, இப்போது தாங்கள் காண்பதை அடையாளம் கண்டனர்" {என்றான் சஞ்சயன்}.(71)

 சௌப்திக பர்வம் பகுதி – 08அ -வில் உள்ள சுலோகங்கள் : 71

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்