Wednesday, October 04, 2017

மஹாதேவன் நுழைந்தான்! - சௌப்திக பர்வம் பகுதி – 07

Enter Mahadeva! | Sauptika-Parva-Section-07 | Mahabharata In Tamil

(சௌப்திக பர்வம் - 07)


பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனின் மஹாதேவத் துதி; அவன் முன்னே தோன்றிய தங்கமயமான வேள்விப் பீடம்; அஸ்வத்தாமன் சொன்ன ஸர்வபூதோபஹாரத் துதி; இயல்புக்குமீறிய பல பூதங்கள் தோன்றியது; தன்னையே காணிக்கையாக்கிய அஸ்வத்தாமன்; அங்கே தோன்றிய மஹாதேவன் பாஞ்சாலர்களைக் காத்த காரணத்தைச் சொன்னது; அஸ்வத்தாமனுக்கு ஒரு வாளைக் கொடுத்து, அவனையும் தன் சக்தியால் நிறைத்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வாறு சிந்தித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேர்த்தட்டில் இருந்து கீழே இறங்கி, அந்த உயர்ந்த தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்கி நின்றான்.(1) அவன் {அஸ்வத்தாமன்}, "கடுமையானவன், ஸ்தாணு, சிவன், ருத்திரன், சர்வன், ஈசானன், ஈஸ்வரன், கிரிசன் என்று அழைக்கப்படுபவனும், அண்டத்தின் படைப்பாளனும், தலைவனுமான வரங்கொடுக்கும் தேவனும்;(2) நீலமிடறு கொண்டவனும், பிறப்பற்றவனும், சங்கரன் என்று அழைக்கப்படுபவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், ஹரன் என்று அழைக்கப்படுபவனும், அண்டமே வடிவானவனும், முக்கண்ணனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனும்;(3) சுடலைகளில் வசிப்பவனும், சக்தியில் பெருகுபவனும், பல்வேறு பூதகணங்களின் தலைவனும், அழியாத செழிப்பு மற்றும் சக்தியைக் கொண்டவனும்; மண்டையோட்டு நுனியுடன் கூடிய தண்டத்தைத் தரிப்பவனும், ருத்திரன் என்று அழைக்கப்படுபவனும், தலையில் சடாமுடி தரிப்பவனும், பிரம்மச்சாரியுமான தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(4), அற்பசக்தியே கொண்டவனான நான், தூய்மைப்படுத்த கடினமானதான என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, திரிபுரத்தை அழித்தவனைத் துதித்து என்னையே பலியாகக் காணிக்கை அளிக்கிறேன்[1].(5)


[1] பின்வரும் துதி ஸர்வபூதோபஹாரம் என்றழைக்கப்படுகிறது.

துதிக்கப்படும் நீ துதிகளுக்குத் தகுந்தவனே, உன் மகிமையை நான் துதிக்கிறேன்.

கலங்காத நோக்கங்கள் கொண்டவன் நீ.

தோலாடை உடுத்தியவன் நீ, செஞ்சடை கொண்டவன் நீ;

நீலத் தொண்டை கொண்டவன் நீ;

தாங்கிக்கொள்ளப்பட முடியாதவன் நீ;

தடுக்கப்பட முடியாதவன் நீ.(6)

தூய்மையானவன் நீ;

பிரம்மனைப் படைத்தவன் நீ;

பிரம்மமும் நீ;

பிரம்மச்சாரியும் நீ;

நோன்புகளை நோற்பவன் நீ;

தவத்துறவுகளில் அர்ப்பணிப்புள்ளவன் நீ;

அளவில்லாதவன் நீ;

தவசிகள் அனைவரின் புகலிடம் நீ;(7)

பல்வேறு வடிவினன் நீ;

பல்வேறு பூதகணங்களின் தலைவன் நீ;

முக்கண்ணன் நீ;

தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்படும் பூதங்களுக்கு அன்பானவன் நீ;

பொக்கிஷத் தலைவனால் {குபேரனால்} எப்போதும் காணப்படுபவன் நீ;

கௌரியின் இதயத்துக்கு அன்பானவன் நீ;(8)

குமாரனின் {முருகனின்} தந்தை நீ;

பழுப்பானவன் நீ;

சிறந்த காளைக் கொடியைக் கொண்டவன் நீ;

நுண்ணிய ஆடை உடுத்தியவன் நீ;

மிகக் கடுமையானவன் நீ;

உமையைப் போற்றும் ஆவல் கொண்டவன் நீ;(9)

உயர்ந்தவை அனைத்திற்கும் உயர்ந்தவன் நீ;

தன்னை விட உயர்ந்தவை ஏதுமில்லாதவன் நீ;

ஆயுதங்களைத் தரித்திருப்பவன் நீ;

அளக்கமுடியாதவன் நீ,

அனைத்துப் பகுதிகளையும் பாதுகாப்பவன் நீ;(10)

தங்கக் கவசம் பூண்டவன் நீ;

தெய்வீகமானவன் நீ;

புருவத்தில் ஆபரணமாக நிலவைக் கொண்டவன் நீ.

ஓ! தேவா, குவிந்த கவனத்துடன் நான் உன்னிடம் பாதுகாப்பை நாடுகின்றேன்.(11)

கடப்பதற்கு அரிதான இந்த அச்சந்தரும் துயரில் இருந்து வெளியேறுவதில் வெற்றிபெற, தூய்மையிலும் தூய்மையானவனான உனக்கு, (ஐம்)பூதங்களாலான என் உடலைக் காணிக்கையளிக்கிறேன்" என்றான் {என்று துதித்தான் அஸ்வத்தாமன்}.(12)

தன் நோக்கத்தை அடையும் விருப்பத்தின் விளைவால் ஏற்பட்ட அவனது இந்தத் தீர்மானத்தை அறிந்து, துரோணரின் உயர் ஆன்ம மகனின் {அஸ்வத்தாமனின்} முன்பு தங்கமயமான ஒரு வேள்விப் பீடம் தோன்றியது.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வேள்விப்பீடத்தில், முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடியே பிரகாசத்துடன் சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(14) சுடர்மிக்க வாய்களையும், கண்களையும் கொண்டவர்களும், பல கால்களையும், தலைகளையும், கரங்களையும் கொண்டவர்களும், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடியவர்களும், யானைகளையும், மலைகளையும் போலத் தெரிந்தவர்களுமான பல்வேறு வலிமைமிக்கப் பூதகணங்கள் அங்கே தோன்றினர். அவர்களின் முகங்கள், முயல்கள், பன்றிகள், ஒட்டகங்கள், குதிரைகள், நரிகள் மற்றும் மாடுகளைப் போன்றும்,(15,16) கரடிகள், பூனைகள், புலிகள், சிறுத்தைகள், காக்கைகள், குரங்குகள் மற்றும் கிளிகளைப் போன்றும் இருந்தன.(17) சிலரின் முகங்கள் பெரும்பாம்புகளைப் போலவும், சிலரின் முகங்கள் வாத்துகளைப் போலவும் இருந்தன. ஓ! பாரதரே, சிலரின் முகங்கள் மரங்கொத்திகள், காடைகள்,(18) ஆமைகள், முதலைகள், கடற்பன்றிகள் {சிம்சுமாரங்கள்}, பெரும் சுறாக்கள், திமிங்கலங்கள்,(19) சிங்கங்கள், நாரைகள், புறாக்கள், யானைகள் மற்றும் நீர்க்காக்கைகளைப் போல இருந்தன.(20)

கருங்காக்கைகள், பருந்துகள் போன்ற முகங்களுடன் சிலரும் இருந்தனர். சிலருக்குக் கைகளில் காதுகள் இருந்தன, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிலர் ஆயிரம் கண்களைக் கொண்டிருந்தனர். சிலர் பெரும் வயிறுகளைப் படைத்தவர்களாக இருந்தனர். சிலர் சதையே இல்லாமல் இருந்தனர்.(21) ஓ! மன்னா, சிலருக்குத் தலைகள் இல்லை, ஓ! பாரதரே, சிலருக்கு கரடிகளைப் போன்ற முகங்கள் இருந்தன. சிலரின் கண்கள் நெருப்பைப் போலவும், சிலரின் நிறம் நெருப்பைப் போலவும் இருந்தன.(22) சிலரின் தலைகளிலும், உடல்களிலும் இருந்த முடிகள் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. சிலர் நான்கு கரங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். ஓ! மன்னா, சிலரின் முகங்கள் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளைப் போலவும் இருந்தன.(23) சிலரின் நிறம் சங்குகளைப் போல இருந்தது, சிலரின் முகங்கள் சங்குகளைப் போல இருந்தன, சிலரின் காதுகளும் சங்குகளைப் போல இருந்தன. சங்குகளாலான மாலைகளைச் சிலர் அணிந்திருந்தனர். சிலரின் குரல்கள் சங்கொலியைப் போல இருந்தன.(24) சிலர் மெலிந்த வயிறுகளைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு பற்களைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு நாக்குகளைக் கொண்டிருந்தனர், சிலர் அம்பைகளைப் போன்ற காதுகளைக் கொண்டிருந்தனர். சிலரின் புருவங்களில் கிரீடங்கள் இருந்தன.(25)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிலர் புல்லிழைகளைத் தங்கள் உடல்களில் கொண்டிருந்தனர். சிலரின் முடி சுருள்முடியாக இருந்தது. சிலர் துணியாலான மகுடங்களை அணிந்திருந்தனர், சிலர் சிறு மகுடங்களை அணிந்திருந்தனர். சிலர் அழகான முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.(26) தாமரைகளாலான ஆபரணங்களைச் சிலர் அணிந்திருந்தனர், மலர்களால் சிலர் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் {பூதங்கள்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்தனர்.(27) சிலர் சதக்னிகளையும், சிலர் வஜ்ரத்தையும், சிலர் தங்கள் கரங்களில் முசலங்களையும் கொண்டிருந்தனர். ஓ! பாரதரே, சிலர் புசுண்டிகளையும், சிலர் சுருக்குக் கயிறுகளையும், சிலர் கதாயுதங்களையும் தங்கள் கைகளில் கொண்டிருந்தனர்.(28) சிலரின் முதுகுகளில் சிறந்த கணைகளைக் கொண்ட அம்பறாத்தூணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் போரில் கடுமையானவர்களாக இருந்தனர். கொடிகள் மற்றும் மணிகளுடன் கூடிய கொடிமரத்தைச் சிலர் கொண்டிருந்தனர், சிலர் போர்க்கோடரிகளைத் தரித்திருந்தனர்.(29) சிலர் உயர்த்தப்பட்ட தங்கள் கரங்களில் பெரும் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். சிலர் தண்டாயுதங்களையும், தடிகளையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் பருமனான கம்புகளைக் கொண்டிருந்தனர், சிலர் வாள்களைக் கொண்டிருந்தனர். சிலர், தங்கள் கிரீடங்களில் நிமிர்ந்த தலை கொண்ட பாம்புகளைக் கொண்டிருந்தனர்.(30)

சிலர், அங்கதங்களுக்குப் பதிலாக (தங்கள் தோள்களைச் சுற்றிலும்) பெரும்பாம்புகளை அணிந்திருந்தனர். சிலர் அழகிய ஆபரணங்களைத் தங்கள் மேனியில் அணிந்திருந்தனர். சிலர் புழுதி படிந்தவர்களாகவும், சிலர் சகதி பூசப்பட்டவர்களாகவும் இருந்தனர். அனைவரும் வெள்ளை உடையும், துணியும் அணிந்திருந்தனர். சிலரின் அங்கங்கள் நீல நிறத்தில் இருந்தன, வேறு சிலரின் அங்கங்களோ பழுப்பு நிறத்திலிருந்தன. அங்கே இருந்த சிலர் தாடியற்றவர்களாக இருந்தனர்.(31) தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்பட்ட அவர்கள், தங்க நிறம் கொண்டவர்களாக, மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாக, பேரிகைகள், சங்கங்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள் கோமுகங்கள் ஆகியவற்றை இசைத்துக் கொண்டிருந்தனர்.(32) சிலர் பாடினர், சிலர் உரத்த ஒலிகளை வெளியிட்டவாறே ஆடிக் கொண்டிருந்தனர், சிலர் தாவினர், குறுக்கே பாய்ந்னர்.(33) பெரும் வேகம் கொண்ட அவர்கள், உரத்த முழக்கங்களைச் செய்தபடியே ஆசையால் மதங்கொண்ட பெரும் யானைகளைப் போலத் தங்கள் தலையில் இருந்த முடிகள் பறக்க மிக மூர்க்கமாக ஓடினர்.(34) அச்சந்தரும் பயங்கர முகங்களுடனும், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்தும் இருந்த அவர்கள், பல்வேறு வண்ணங்களில் ஆடைகள் உடுத்தியவர்களாக, அழகிய மாலைகள் மற்றும் களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(35)

ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கதங்களைக் கொண்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களைக் கொண்டவர்களுமான அவர்கள், பெரும் துணிவையும் கொண்டவர்களாக இருந்தனர். எதிரிகள் அனைவரையும் பலவந்தமாகக் கொல்லவல்ல அவர்கள், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்.((36) இரத்தம், கொழுப்பு மற்றும் விலங்குப் பொருள் ஆகியவற்றைக் குடிப்பவர்களான அவர்கள், விலங்குகளின் இறைச்சியையும், உள்ளுறுப்புகளையும் உண்டு வாழ்ந்து வந்தனர். சிலர் தங்கள் தலைக்கு மேலே நெடு குடுமியாகத் தங்கள் சடைகளைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஒற்றைக் குடுமியைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் காதுகளில் வளையங்களை அணிந்திருந்தனர். சிலர், சமைப்பதற்குப் பயன்படுத்தும் மண்பாண்டங்களைப் போன்ற வயிறுகளைக் கொண்டிருந்தனர்.(37) சிலர், உடற்கட்டில் மிகக் கட்டையானவர்களாகவும், சிலர் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தனர். சிலர் நெடியவர்களாகவும், மூர்க்கர்களாகவும் இருந்தனர். சிலர் பயங்கரத் தன்மைகளைக் கொண்டிருந்தனர். சிலர் பெரிய உதடுகளைக் கொண்டிருந்தனர், சிலரின் பிறப்புறுப்புகள் மிக நீண்டவையாக இருந்தன.(38) சிலர், விலைமதிப்புமிக்கவையும், பல்வேறு வகைகளிலானவையுமான மகுடங்களைத் தங்கள் தலையில் சூடியிருந்தனர்; சிலர் வழுக்கைத் தலையர்களாக இருந்தனர், சிலர் சடாமுடியால் மறைக்கப்பட்ட தலையைக் கொண்டவர்களாக இருந்தனர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆகாயத்தில் இருந்து பூமிக்குக் கொண்டவர வல்லவர்களாகவும், படைக்கப்பட்ட நான்கு வகையினரையும் அழிக்கவல்லவர்களாகவும் இருந்தனர்.(39) அச்சம் என்பது என்ன என்றே அவர்கள் அறியாதவர்களாகவும், ஹரனின் கடுஞ்சினத்தைத் தாங்கிக் கொள்ள வல்லவர்களாகவும் இருந்தனர்.(40)

அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பப்படி செயல்படுபவர்களாகவும், மூவுலங்களின் தலைவனுக்குத் தலைவர்களாகவும் இருந்தனர். எப்போதும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்ட அவர்கள், பேச்சில் முற்றான திறம் கொண்டவர்களாகவும், செருக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர்.(41) எட்டு வகைத் தெய்வீக செல்வங்களைப் பெற்ற அவர்கள் எப்போதும் செருக்கற்றவர்களாகவே இருந்தனர். தெய்வீக ஹரன், அவர்களின் அருஞ்செயல்களால் எப்போதும் ஆச்சரியத்தில் நிறைந்தபடியே இருக்கிறான்.(42) அவர்கள் மஹாதேவனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்களாவர். மனம், சொல், மற்றும் செயல் ஆகியவற்றைக் கொண்டு அவர்களால் துதிக்கப்படும் அந்தப் பெரும் தேவன் {சிவன்}, தன்னை வழிபடுவோரை {அந்த பூதகணங்களைத்} தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் போலவே கருதி மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவர்களைப் பாதுகாக்கிறான்.(43) சினத்தால் நிறைந்த அவர்கள், பிரம்மத்தை வெறுப்போர் அனைவரின் குருதியையும், கொழுப்பையும் எப்போதும் குடிக்கின்றனர். அவர்கள் நால் வகைச் சுவையுடன் கூடிய சோமச்சாற்றையும் எப்போதும் குடிக்கின்றனர்.(44) வேதம் ஓதி, பிரம்மச்சரியத்துடனும், தவத்துறவுகளுடனும், தன்னடக்கத்துடனும் திரிசூலபாணியான அந்தத் தேவனைத் துதிக்கும் அவர்கள், அந்தப் பவனையே {சிவனையே} தங்கள் தோழனாக அடைந்திருக்கின்றனர்.(45) கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் தலைவனும், பார்வதியின் தலைவனுமான அந்தத் தெய்வீக மஹேஸ்வரன், தன் இயல்பையே கொண்டவர்களும், பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்களுமான அந்த வலிமைமிக்கப் பூதங்களுடனே எப்போதும் உண்கிறான்.(46)

{அப்படிப்பட்ட} அவர்கள், பல்வேறு வகை இசைக்கருவிகளின் ஒலியாலும், சிரிப்பொலியாலும், உரத்த முழக்கங்களாலும், கூச்சல்களாலும், சிங்க முழக்கங்களாலும் அண்டத்தை எதிரொலிக்கச் செய்தபடியே அஸ்வத்தாமனை அணுகினர்.(47) மஹாதேவனின் புகழைச் சொல்லியபடியும், சுற்றிலும் பிரகாசமாக ஒளியைப் பரப்பியபடியும், அஸ்வத்தாமனின் மதிப்பையும், உயர்ஆன்ம ஹரனின் மகிமையையும் பெருக்கியபடியும், அஸ்வத்தாமனின் சக்தியின் எல்லையை உறுதி செய்து கொள்ள விரும்பியும், உறங்கும் நேரத்தில் படுகொலையைக் காண விரும்பியும்,(48) அந்த விநோதமான பூதக்கூட்டம், பயங்கரமான, கடுமையான தண்டங்கள், நெருப்புச் சக்கரங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்தனர்.(49) தங்களைப் பார்ப்பதாலேயே மூவுலகங்களையும் அச்சங்கொள்ளச் செய்ய வல்லவர்களாக அவர்கள் இருந்தனர். எனினும், வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவர்களைக் கண்டும் எந்த அச்சமும் கொள்ளவில்லை.(50)

அப்போது, வில்தரித்திருந்தவனும், உடும்பின் தோலாலான விரலுறைகளை விரல்களுக்கு அணிந்திருந்தவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன்னையே மஹாதேவனுக்குக் காணிக்கையாக {பலியாக} அளித்தான்.(51) ஓ! பாரதரே அந்த வேள்விச் செயல்பாட்டில், விற்களே விறகுகளாகின, கூரிய கணைகளே கரண்டிகளாகின, பெரும் வலிமை கொண்ட அவனது ஆன்மாவே நீர்க்காணிக்கையானது.(52) வீரமும் கோபமும் நிறைந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உரிய மந்திரங்களைச் சொல்லி, தன் ஆன்மாவையே பலியாகக் காணிக்கையளித்தான்.(53) அஸ்வத்தாமன், கடுஞ்செயல்புரிபவனான ருத்திரனைக் கடும் சடங்குகளால் துதித்து, கூப்பிய கரங்களுடன் அந்த உயர் ஆன்மத் தேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(54)

அஸ்வத்தாமன் {ருத்ரனிடம்}, "ஓ! தேவா, அங்கிரச குலத்தில் உதித்த நான், இந்த நெருப்பில் என் ஆன்மாவை நீர்க்காணிக்கையாக ஊற்றப்போகிறேன் {ஹோமம் செய்யப் போகிறேன்}. ஓ! தலைவா, இந்தப் பலியை ஏற்பாயாக.(55) ஓ! அண்டத்தின் ஆன்மாவே, துயர்மிக்க இந்த நேரத்தில், உன்னிடம் கொண்ட பக்தியால், தியானத்தில் குவிந்த இதயத்துடன் என்னையே வேள்விப் பலியாக உனக்குக் காணிக்கையளிக்கிறேன்.(56) அனைத்து உயிரினங்களும் உன்னிலிருக்கின்றன, அனைத்து உயிரினங்களிலும் நீ இருக்கிறாய். உயர்ந்த குணங்கள் அனைத்தின் ஒருமை உன்னில் நேர்கிறது.(57) ஓ! தலைவா, அனைத்துயிர்களுக்கும் புகலிடமாய் இருப்பவனே, என் எதிரிகளை வீழ்த்த முடியாதவனாக இருப்பதால் நான் உனக்கான நீர்க்காணிக்கையாக {ஆகுதியாகக்} காத்திருக்கிறேன். ஓ! தேவா, என்னை ஏற்பாயாக" என்றான்.(58)

இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர் மகன், அந்த வேள்விப் பீடத்தில், பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தன்னையே பலியாகக் காணிக்கையளித்து, சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தான்.(59) அசையாமல் உயர்த்திய கரங்களுடன், தன்னையே காணிக்கையளித்த அவனைக் கண்ட தெய்வீக மஹாதேவன் {சிவன்}, சிரித்துக் கொண்டே அங்கே தோன்றி,(60) "தூய்மையான செயல்களைச் செய்யும் கிருஷ்ணன், உண்மை, தூய்மை, நேர்மை, பொறுப்புதுறப்பு, தவத்துறவு, நோன்புகள், மன்னிப்பு {பொறுமை}, அர்ப்பணிப்பு {பக்தி}, பொறுமை, எண்ணம் செயல் ஆகியவற்றால்(61) என்னை முறையாகத் துதித்திருக்கிறான். இதன் காரணமாக, கிருஷ்ணனைவிட எனது அன்புக்குரியவன் வேறு எவனும் இல்லை.(62) அவனை மதிப்பதற்காகவே, அவனது வார்த்தைகளின் படி, பாஞ்சாலர்களைக் காப்பதற்காகப் பல்வேறு வகை மாயைகளை நான் வெளிப்படுத்தினேன்.(63) பாஞ்சாலர்களைப் பாதுகாத்ததால் நான் அவனை {கிருஷ்ணனை} மதித்தேன். எனினும் அவர்கள் காலத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வின் காலமும் தீர்ந்துவிட்டது" என்றான் {சிவன்}.(64)

உயர் ஆன்ம அஸ்வத்தாமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன், பளபளப்பான சிறந்த வாளொன்றை அஸ்வத்தாமனிடம் கொடுத்து, அவனது உடலுக்குள் நுழைந்தான்.(65) அந்தத் தெய்வீகமானவனால் நிறைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} சக்தியில் சுடர்விட்டெரிந்தான். அந்தப் பரமனிமிருந்து பெறப்பட்ட சக்தியின் விளைவால் அவன் போரில் பெரும் பலம்மிக்கவனாக ஆனான்.(66) அவன் {அஸ்வத்தாமன்} புறப்பட்டபோது, தன் எதிரிகளின் முகாமுக்குள் நுழையும் தலைவன் மஹாதேவனைப் போலவே, கண்ணுக்குத் தெரியாத பல பூதங்களும், ராட்சசர்களும் அவனுக்கு வலப்பக்கத்திலும், இடப்பக்கத்தில் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.(67)

சௌப்திக பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 67

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்