Friday, December 29, 2017

ஆசிரம மாற்றங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 63

Changing modes of life! | Shanti-Parva-Section-63 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 63)


பதிவின் சுருக்கம் : பிராமணன் செய்யத்தகாத செயல்கள் மற்றும் தொழில்கள்; எந்தப் பிராமணன் சூத்திரனாகிறான்? ஆசிரம மாற்றங்கள்; சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் பின்பற்றத்தக்க வாழ்வு முறைகள்; க்ஷத்திரிய தர்மத்தின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{வில்லின்} நாண்கயிற்றை இழுத்தல், எதிரிகளை அழித்தல், உழவு, வணிகம், கால்நடை வளர்த்தல், செல்வத்துக்காகப் பிறருக்குப் பணிவிடை செய்தல் ஆகிய இவை ஒரு பிராமணனுக்கு முறையற்றவையாகும்.(1) நுண்ணறிவு கொண்ட ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையை நோற்று, வேதங்கள் சுட்டும் ஆறு செயல்களை[1] முறையாகச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையில் தன் கடமைகள் யாவையும் முறையாகச் செய்த பிறகு, காடுகளுக்குள் ஓயச் செல்லலாம் {வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றலாம்}.(2)

ஒரு பிராமணன், மன்னனுக்குப் பணிசெய்தல், உழவால் அடையப்படும் செல்வம், வணிகத்தால் கிடைக்கும் வாழ்வாதாரம், அனைத்து வகைக் கோணல் நடத்தைகள், தான் மணந்து கொண்ட மனைவியரைத் தவிர வேறு துணை, நியாயமற்ற வட்டி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.(3)

ஓ! மன்னா, கடமைகளில் இருந்து வீழ்ந்தவனும், தீய நடத்தை கொண்டவனுமான இழிந்த பிராமணன் ஒருவன் சூத்திரனாகிறான். சூத்திரப் பெண்ணை மணந்து கொள்தல், தீய நடத்தை கொள்தல், ஆடல்கலைஞனாதல், கிராமப் பணியாளாதல், முறையற்ற செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஏதொன்றையும் செய்யும் ஒரு பிராமணன் சூத்திரனாகிறான்.(4) ஓ! மன்னா, அவன் {பிராமணன்} வேதங்களை உரைத்தாலும், இல்லாவிட்டாலும், முறையற்ற செயல்களைச் செய்பவனானால், அவன் சூத்திரனுக்கு இணையானவனாகிறான், உணவு உண்ணும் சந்தர்ப்பங்களில் அவனுக்குச் சூத்திரர்களுக்கு மத்தியிலேயே இடம் ஒதுக்கப்பட வேண்டும்.(5)


[1] இவை, "பிராணாயாமம், பிரத்யாஹாராம், த்யாநம், தாரணை, தர்க்கம், ஸமாதி" எனக் கும்பகோணம் பதிப்புக் குறிப்பிடுகிறது.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களுக்கு இணையான பிராமணர்கள், தேவர்களின் வழிபாடுகள் நடக்கும் நிகழ்வுகளில் விலக்கப்பட வேண்டும்[2].(6)

கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறியவர்களோ, தூய்மையற்ற நடத்தை கொண்டவர்களோ, தீய தொழில்கள், கொடுஞ்செயல்கள் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களோ, ஒழுங்குமுறையான கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களோவான பிராமணர்களுக்கு, தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுகள் கொடுக்கப்பட்டால் அவை (அவற்றைக் கொடுப்பவனுக்கு) எந்தத் தகுதியையும் ஈட்டிக் கொடுக்காது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன்காரணமாகவே, தற்கட்டுப்பாடு, தூய்மை, எளிமை ஆகியன ஒரு பிராமணனின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இவற்றைத் தவிர்த்து, நான்கு வாழ்வுமுறைகளும் அவனுக்காகவே பிரம்மனால் விதிக்கப்பட்டன.(7) எவன் தற்கட்டுப்பாட்டுடன், வேள்விகளில் சோமம் குடித்து, நல்ல நடத்தையுடனும், அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடனும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையுடனும், செல்வத்தை அடைவதன் மூலம் தன் நிலையைச் சிறப்பாக்கிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல், வெளிப்படையானவனாக, எளியவனாக, மென்மையானவனாக, கொடூரங்களில் இருந்து விடுபட்டவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்கிறானோ, அவனே பிராமணனாவான்; பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன் பிராமணனாக மாட்டான்.(8) ஓ! மன்னா, அறம் ஈட்ட விரும்பும் மனிதர்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் உதவியை நாடுவார்கள். எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்த (மூன்று) வகையினரும், அமைதி நிறைந்த கடமைகளைப் பின்பற்றவில்லையெனில், அவர்களுக்கு விஷ்ணு தன் அருளை நீட்டிக்க மாட்டான். விஷ்ணு நிறைவுபெறவில்லையெனில், சொர்க்கத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரின் மகிழ்ச்சி, வேதங்களின் தீர்மானங்கள், அனைத்து வகை வேள்விகள், மனிதர்களின் பிற அறச்செயல்கள் அனைத்தும், பல்வேறு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் தொலைந்துபோகும்[3].(10)

[2] "புரோகிதர்களாக அவர்களது தொண்டு ஏற்கப்படக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] கும்பகோணம் பதிப்பில், "தர்மத்தை விரும்பும் உலகங்கள் யாவும் பிராம்மணனையும், க்ஷத்திரியனையும், வைசியனையும் அடுத்திருக்கின்றன. பாண்டுபுத்ரனே, ஆகையால், தன் ஜாதிக்குரிய தர்மங்களில் நிலைத்திருக்கும் ஜனங்களை ஸ்ரீ விஷ்ணுபகவான் கைவிட விரும்பார். உலகமெல்லாம் விரும்பத்தக்க ஸுவர்க்கலோகமும், நான்கு வர்ணங்களும், ஆஸ்ரமங்கள் யாவும், வேத பாடங்களும் எல்லா வைதிகலௌகிக கர்மங்களும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அருளின்றி உலகில் ஒரு க்ஷணமும் நிலைபெறமாட்டா" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உலகில் தர்மத்தை விரும்புவோர் யாவரும், சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் இளவரசர்களை நாடுவார்கள். ஓ பாண்டுவின் மகனே, எனவே, ஜாதி மற்றும் வர்ண தர்மத்தைப் பின்பற்றாதோரிடம் விஷ்ணு அன்பு கொள்வதில்லை. அத்தகு உலகில், மக்களுக்கு மத்தியில் நான்கு வர்ணங்களோ, வேதங்களைக் குறித்த பேச்சோ, பல்வேறு வேள்விகளோ, மக்களுக்கு மத்தியில் உள்ள அனைத்து சடங்குகளோ இருக்காது, எவரும் எந்த ஆசிரமத்தையும் பின்பற்ற மாட்டார்கள்" என்றிருக்கிறது.

ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளில் நோற்கப்பட வேண்டிய கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக[4]. ஒரு க்ஷத்திரியன், (தன் நாட்டிலுள்ள மற்ற) மூன்று வகையினரும் {வர்ணத்தாரும்}, அந்த வாழ்வுமுறைகளின் அந்தந்தக் கடமைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்பினால், இவை {பின்வருவன} அவனால் அறியப்பட வேண்டும்.(11)

(சாத்திரங்களைக்) கேட்க விரும்புபவனும், தன் கடமைகளை நிறைவேற்றியவனும், ஒரு மகனைப் பெற்றவனும், உயர்ந்த வகையினருக்கும் தனக்கும் இடையில் நடத்தையின் தூய்மையில் பெரிய வேறுபாடுகள் இல்லாதவனுமான ஒரு சூத்திரனுக்கு, உலகளாவிய அமைதி, (அவனுக்குத் தேவையில்லாத) தற்கட்டுப்பாடு ஆகியவற்றைத் தவிர்த்து, அனைத்து வாழ்வுமுறைகளும் விதிக்கப்படுகின்றன[5].(12,13) ஓ! மன்னா, இந்தக் கடமைகள் யாவையும் பயிலும் ஒரு சூத்திரனுக்கும், ஒரு வைசியனுக்கும், ஒரு க்ஷத்திரியனுக்கும், {இறுதியாக} பிக்ஷு வாழ்வுமுறை விதிக்கப்பட்டிருக்கிறது.(14)

[4] பிபேக்திப்ராயின் பதிப்பில், மூன்று வர்ணத்தாரும், ஆசிரமங்களைப் பின்பற்றி, அந்த ஆசிரமங்களின் படி செயல்பட விரும்பினால், அவர்கள் பின்பற்ற வேண்டிய தர்மத்தைக் கேட்பாயாக" என்றிருக்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பில், "மேற்குலத்தோர்களுக்குப் பணிவிடைசெய்து தன் கடமையை நிறைவேற்றினவனும் மக்களைப் பெற்றவனும், வைதிகர்களிற்சிறிது குறைந்த ஆசாரமுள்ளவனும், தேசாசாரத்தை அடைந்தவனுமான சூத்திரன், அரசனிடம் அனுமதி பெற்று ஆசைகளற்ற ஸந்யாஸமென்னும் ஓர் ஆஸ்ரமத்தை விலக்கி மற்ற ஆஸ்ரமங்களை அடையத்தக்கவனாவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு சூத்திரன் பணியாளுக்குரிய செயல்களைச் செய்து, வாரிசைப் பெற்று, மன்னனின் ஆணைகளைப் பின்பற்ற வேண்டும். அவனுக்கு அனைத்து ஆசிரமங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும், அவனுக்குச் சிறிதளவே வாழ்வு எஞ்சியிருந்தாலும், அல்லது தசதர்மத்தைப் பின்பற்றுபவனாக இருந்தாலும், அவன் ஆசையைக் கைவிடக்கூடாது" என்றிருக்கிறது. மேலும் இதன் அடிக்குறிப்பில், "தசதர்மம் குறித்துச் சொல்லப்படுவதால், இது மொழிபெயர்க்க மிகக் கடினமான சுலோகமாகும். ஒரு சூத்திரன் தன் வாழ்வின் பத்தாவது (தசம்) பத்தாண்டில் இருந்தாலும் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இது சமணத்தின் பத்து கொள்கைகளைச் சுட்டுவதாகவும் தெரிகிறது. எவ்வாறாகினும், ஒரு சூத்திரன் ஆசையைக் கைவிடக்கூடாது, இரக்கும் வாழ்வை நோற்கக்கூடாது என்பது இங்கே பொருளாகும்" என இருக்கிறது.

வயதில் முதிர்ந்த ஒரு வைசியன், தன் வகைக்கான கடமைகளைச் செய்த பிறகு, மன்னனுக்கும் தொண்டாற்றிய பிறகு, மன்னனின் அனுமதியுடன், {தான் பின்பற்றி வரும் வாழ்வுமுறையை விட்டு விலகி} மற்றொரு வாழ்வுமுறையை ஏற்கலாம்.(15)

ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, ஒரு வயது முதிர்ந்த க்ஷத்திரியன், வேதங்களையும், மன்னர்களின் கடமைகள் குறித்த ஆய்வுகளையும் முறையாகக் கற்று, பிள்ளைகளைப் பெற்று, அதே இயல்புடைய பிற செயல்களையும் செய்து, சோமத்தைக் குடித்து,(16) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, நீதியுடன் தன் குடிமக்கள் அனைவரையும் பாதுகாத்து, அவர்களை ஆட்சி செய்து, ராஜசூயம், குதிரை வேள்வி மற்றும் பிற பெரும் வேள்விகளைச் செய்து,(17) சாத்திரங்களை ஓதுவதற்குக் கல்விமான்களான பிராமணர்களை அழைத்து, அவர்களது தகுதிக்குத்தக்க அவர்களுக்குக் கொடைகளை அளித்து, சிறிய அல்லது பெரிய போரில் வெற்றிகளை அடைந்து,(18) தன் மடியில் பிறந்த மகனையோ, நற்குடியில் பிறந்த வேறு க்ஷத்திரியனையோ தன் குடிமக்களைக் காக்க அரியணையில் அமர்த்தி,(19) பித்ருக்களைக் கௌரவிக்கச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை முறையாகச் செய்து, அவர்களை வணங்கி, வேள்விகளைச் செய்து தேவர்களைக் கவனமாக வணங்கி, வேதங்களைக் கற்று முனிவர்களை வணங்கிய பிறகு,(20) ஓ! மன்னா, அவன் மற்றொரு வாழ்வுமுறையை ஏற்க விரும்பினால், அவன் தற்போது பின்பற்றும் வாழ்வுமுறையைக் கைவிட்டு, உடனே அதற்கடுத்த வாழ்வுமுறையாக இருப்பதைப் பின்பற்றுவதன் மூலம் அவன் (தவ) வெற்றியை அடைகிறான்.(21)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முனிவரின் வாழ்வை வாழ விரும்பும் ஒரு க்ஷத்திரியன், பிக்ஷு வாழ்வு முறையைப் பின்பற்றலாம்; ஆனால், அவன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக ஒருபோதும் அதைச் செய்யக் கூடாது. இல்லறவாழ்வைக் கைவிட்டு, தன் உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இரக்கும் துறவியின் வாழ்வை அவன் பின்பற்றலாம்.(22) துறவு வாழ்வானது, (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய) மற்ற மூன்று வகையினருக்கான கடப்பாடாகாது. எனினும், அவர்கள் {க்ஷத்திரியர்கள்} இந்த {துறவு} வாழ்வுமுறையைப் பின்பற்றத் தேர்ந்தெடுப்பதைப் போலவே, இவை நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} திறந்தேயிருக்கின்றன.(23)

மனிதர்களுக்கு மத்தியில், க்ஷத்திரியர்களால் பயிலப்படும் கடமைகளே உயர்ந்தவையாகும். மொத்த உலகமும் அவர்களுடைய கரங்களின் வலிமைக்கு அடங்கியதாகும். வேறு மூன்று வகையினரின் முக்கிய மற்றும் துணைக் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளைச் {அவை நோற்கப்படுவதைச்} சார்ந்தே இருக்கின்றன. இதை வேதங்களே அறிவித்திருக்கின்றன.(24) பிற விலங்குகள் அனைத்தின் காலடித்தடங்களும், யானையின் காலடித்தடத்தால் விழுங்கப்படுவதைப் போலவே, அனைத்துச் சூழ்நிலைகளிலும், பிற வகையினரின் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளால் விழுங்கப்படுகின்றன.(25) வேறு மூன்று வகையினரின் கடமைகள் சிறு ஆறுதலையோ, பாதுகாப்பையோ அளித்து, சிறு வெகுமதிகளை அளிக்குமெனச் சாத்திரமறிந்த மனிதர்கள் சொல்கின்றனர். க்ஷத்திரியக் கடமைகள், பெரும் ஆறுதலை அளித்துப் பெரும் வெகுமதிகளைக் கொடுக்கும் எனக் கற்றோர் சொல்கின்றனர்.(26)

அனைத்துக் கடமைகளும், தங்களைவிட  அரசகடமைகளையே முதன்மையாகக் கொண்டுள்ளன. அனைத்து வகையினரும் அவற்றால் பாதுகாக்கப்படுகின்றனர். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அரசகடமைகளின் போது துறவு நேர்கிறது, துறவே அழிவில்லா அறமெனவும், அனைத்திலும் முதன்மையானது எனவும் செல்லப்படுகிறது[6].(27) தண்டநீதி மறைந்தால், வேதங்களும் மறையும். மனிதர்களின் கடமைகளைச் சொல்லும் சாத்திரங்கள் அனைத்தும் தொலைந்து போகும். உண்மையில், க்ஷத்திரியர்களுக்குரிய இந்தப் பழங்கடமைகள் கைவிடப்பட்டால், அனைத்து வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகளும் மறைந்து போகும்.(28) அரச கடமைகளில் அனைத்து வகைத் துறவும் தென்படுகின்றன; அனைத்து வகைத் தொடக்கங்களும் அவற்றில் தோன்றுகின்றன; அனைத்து வகைக் கல்வியும் அவற்றோடு தொடர்புடையனவாக இருக்கின்றன; அனைத்து வகை உலக நடத்தையும் அவற்றில் நுழையும்.(29)

[6] "குடிமக்களால் அடையப்படும் தகுதிகளில் {புண்ணியங்களில்} ஆறில் ஒரு பங்கை மன்னன் அடைகிறான். எனவே, துறவில் இருந்து எழும் மொத்த தகுதியானது மிகப் பெரியதாகும். இதையும் தவிர்த்து, அனைத்து வகைத் துறவின் தகுதியும் அவ்வழியில் அவனுக்கே சொந்தமாகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இழிந்தோரால் கொல்லப்படும் விலங்குகள், அறத்தையும், அவர்களின் அறச்செயல்களையும் அழிப்பதைப் போலவே, அரச கடமைகளால் கொடுக்கப்படும் பாதுகாப்பை மனிதர்கள் இழந்தால், அவர்களது பிற கடமைகள் அனைத்தும் தாக்குதலுக்கும், அழிவுக்கும் உள்ளாகி, கவலையில் நிறைந்து, அவர்களுக்காக விதிக்கப்பட்ட நடைமுறைகளை {அறச்செயல்களை} அலட்சியம் செய்வார்கள்" என்றார் {பீஷ்மர்}.(30)

சாந்திபர்வம் பகுதி – 63ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்