Showing posts with label துர்முகன். Show all posts
Showing posts with label துர்முகன். Show all posts

Sunday, August 28, 2016

போரை விட்டோடிய கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 133

Karna fled forsaking the battle! | Drona-Parva-Section-133 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 49)

பதிவின் சுருக்கம் : பீமனால் தோற்கடிக்கப்பட்டுத் தேரை இழந்த கர்ணன், மற்றொரு தேரில் ஏறி வந்து மீண்டும் பீமனுடன் மோதியது; மீண்டும் தேரையிழந்த கர்ணன்; துரியோதனன் தன் தம்பி துர்முகனிடம் கர்ணனுக்குத் தேரளிக்கும்படி அனுப்பியது; துர்முகனைக் கொன்ற பீமன்; கர்ணனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; பீமனின் வலிமையால் பீடிக்கப்பட்டுப் போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீமனால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனான தேரற்ற கர்ணன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, பாண்டுவின் மகனை {பீமனை} வேகமாகத் துளைக்க ஆரம்பித்தான். (1) தங்கள் தந்தங்களால் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் இரு பெரும் யானைகளைப் போல அவர்கள், முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) அப்போது கணைப்பொழிவால் பீமனைத் தாக்கி பெருமுழக்கம் செய்த கர்ணன், மீண்டும் அவனை {பீமனை} மார்பில் தாக்கினான்.(3) எனினும் பதிலுக்குப் பீமன், பத்து நேரான கணைகளால் கர்ணனைத் தாக்கி, மீண்டும் அவனை {கர்ணனை} இருபது நேரான கணைகளால் தாக்கினான்.(4) பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஒன்பது கணைகளால் பீமனின் நடுமார்பைத் துளைத்து, ஒரு கூரிய கணையால் பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தையும் தாக்கினான்.(5) பதிலுக்குப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, வலிமைமிக்க யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போல, அல்லது குதிரையைச் சாட்டையால் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணனை அறுபத்து மூன்று {63} கணைகளால் துளைத்தான்.(6)


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட வீரக் கர்ணன், நாவால் தன் கடைவாயை நனைத்து, சினத்தால் கண்கள் சிவந்தான்.(7) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணன், வஜ்ரத்தை ஏவும் இந்திரனைப் போல, பீமசேனனின் அழிவுக்காக அனைத்தையும் துளைக்கவல்ல ஒரு கணையை அவன் {பீமன்} மீது ஏவினான்.(8) அழகிய இறகுகளைக் கொண்டதும், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்டதுமான அந்தக் கணை, அந்தப் போரில் பார்த்தனை {பீமனைத்} துளைத்துச் சென்று பூமிக்குள் ஆழ மூழ்கியது.(9)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முழுதாக நான்கு முழம் நீளம் கொண்டதும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானதும், ஆறு பக்கங்களைக் கொண்டதுமான கனமிக்க ஒரு கதாயுதத்தை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான். உண்மையில், இந்திரன் தன் வஜ்ரத்தால் அசுரர்களைக் கொல்வதைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாரதக் குலத்துக் காளை {பீமன்}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} குதிரைகளை அக்கதாயுதத்தாலேயே கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், க்ஷுரப்ரங்கள் இரண்டைக் கொண்டு கர்ணனின் கொடிமரத்தை அறுத்தான்.(10-12) பிறகு அவன் {பீமன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளைக் கொண்டு தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியைக் கொன்றான். குதிரைகளற்ற, சாரதியற்ற, கொடிமரமற்ற அந்தத் தேரைக் கைவிட்ட கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற நிலையிலேயே தன் வில்லை வளைத்தபடி பூமியில் நின்றான். தேரை இழந்தாலும் தொடர்ந்து எதிரியைத் தடுத்த அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(13-14)

மனிதர்களில் முதன்மையான அந்த அதிரதன் மகன் {கர்ணன்} தேரிழந்து இருப்பதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் தம்பியான) துர்முகனிடம், “ஓ! துர்முகா, ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனால் தன் தேரை இழந்திருக்கிறான்.(15-16) ஓ! பாரதா {துர்முகா} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனுக்கு {கர்ணனுக்கு} ஒரு தேரை அளிப்பாயாக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துர்முகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}(17), கர்ணனை நோக்கி வேகமாக விரைந்து, தன் கணைகளால் பீமனை மறைத்தான். அந்தப் போரில் துர்முகன், சூதனின் மகனை ஆதரிக்க விரும்புவதைக் கண்ட(18) வாயு தேவனின் மகன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்து தன் கடைவாயை {நாவால்} நனைக்கத் தொடங்கினான். பிறகு தன் கணைகளால் சிறிது நேரம் கர்ணனைத் தடுத்த(19) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, விரைவாகத் துர்முகனை நோக்கித் தன் தேரைச் செலுத்தினான். அக்கணத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் முனை கொண்ட ஒன்பது நேரான(20) கணைகளால் பீமன் துர்முகனை யமலோகம் அனுப்பிவைத்தான் [1].

[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வத்தின் இந்தப் பகுதியில் அதே 14ம் நாள் போரிலும் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 37 பேரைக் கொன்றிருக்கிறான். {?} என்ற அடைப்புக்குறிகளுக்குள் மீண்டும் கூறப்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

துர்முகன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இளவரசனின் {துர்முகனின்} தேரில் ஏறிய அதிரதன் மகன் {கர்ணன்} சூரியனைப் போலச் சுடர்விட்டபடி பிரகாசமாகத் தெரிந்தான். (கணைகளால்) தன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, குருதியால் குளித்த மேனியுடன் களத்தில் கிடக்கும் துர்முகனைக் கண்ட கர்ணன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் போரிடுவதிலிருந்து ஒருக்கணம் விலகினான். வீழ்ந்த அந்த இளவரசனை {துர்முகனை} வலம்வந்து, அவனை {துர்முகனை} அங்கேயே விட்ட(21-23) வீரக் கர்ணன், நீண்ட நெடிய அனல்மூச்சுகளை விட்டு {அடுத்து} என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கழுகின் இறகுகளைக் கொண்ட பதினான்கு {14} நாராசங்களைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கச் சிறகுள் மற்றும் பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டனவும், குருதியைக் குடிப்பனவுமான அக்கணைகள், பத்து திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே ஆகாயத்தில் பறந்து சென்று சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தைத் துளைத்து அவனது உயிர்க்குருதியைக் குடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(24-26) காலனால் ஏவப்பட்டுப் பொந்துக்குள் தங்கள் பாதி உடல்கள் நுழைந்த நிலையிலிருக்கும் கோபக்காரப் பாம்புகளைப் போல, ஓ! ஏகாதிபதி, அவை {அந்தக் கணைகள்} அவனது உடலை ஊடுருவி பூமிக்குள் மூழ்கிப் பிரகாசமாகத் தெரிந்தன.(27)

அப்போது அந்த ராதையின் மகன் {கர்ணன்} ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பதினான்கு கடுங்கணைகளால் பதிலுக்குப் பீமனைத் துளைத்தான். கடும் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் பீமனின் வலக்கரத்தைத் துளைத்தபடி(28, 29) மரத்தோப்புக்குள் நுழையும் பறவைகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பூமியைத் அக்கணைகள், அஸ்த மலைகளுக்குச் செல்லும் சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(30) அந்தப் போரில் அனைத்தையும் துளைக்கவல்ல அக்கணைகளால் துளைக்கப்பட்ட பீமன்(31), நீரோடைகளை வெளியிடும் ஒரு மலையைப் போல அபரிமிதமான இரத்த ஓடைகளைச் சிந்தத் தொடங்கினான். பிறகு பீமன் கருடனின் வேகத்தைக் கொண்ட மூன்று கணைகளால் சூதன் மகனை {கர்ணனைப்} பதிலுக்குத் துளைத்து, மேலும் பின்னவனின் {கர்ணனின்} தேரோட்டியையும் ஏழு கணைகளால் துளைத்தான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் வலிமையால் இப்படிப் பீடிக்கப்பட்ட கர்ணன், மிகவும் துன்புற்றவனானான்.(32-33) பிறகு அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, போரைக் கைவிட்டு, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் தப்பி ஓடினான் [2]. எனினும், அதிரதனான பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை வளைத்தபடியே அந்தப் போரில் நிலைத்து, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}(34)

[2] வேறொரு பதிப்பில், “பீமனுடைய அம்புகளால் அடிக்கப்பட்டுத் தளர்ச்சியடைந்தவனான அந்தக் கர்ணன் வேகமுள்ள குதிரைகளோடு பெரும்பயத்தினால் யுத்தரங்கத்தைவிட்டு ஓடினான்” என்றிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 133ல் வரும் மொத்த சுலோகங்கள் 34


ஆங்கிலத்தில் | In English

Tuesday, July 19, 2016

சாத்யகிக்கு அஞ்சிய வீரர்கள்! - துரோண பர்வம் பகுதி – 106

Warriors frightened by Satyaki! | Drona-Parva-Section-106 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : க்ஷேமதூர்த்தியைக் கொன்ற கைகேயப் பிருஹத்க்ஷத்ரன்; திரிகர்த்த வீரதன்வானைக் கொன்ற திருஷ்டகேது; துரியோதனனின் தம்பியான துர்முகனைத் தேரிழக்கச் செய்த சகாதேவன், திரிகர்த்த மன்னன் சுசர்மனின் மகனான நிரமித்ரனைக் கொன்றது; விகர்ணனை வென்ற நகுலன்; மகத வியாக்ரதத்தனைக் கொன்ற சாத்யகி, மகத வீரர்கள் அனைவரையும் கொன்றது; சாத்யகியுடன் போரிட அஞ்சிய வீரர்கள்; சாத்யகியை நோக்கி விரைந்த துரோணர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, க்ஷேமதூர்த்தி [1], {தன்னை நோக்கி} முன்னேறி வருபவனும், பெரும் வீரம் கொண்டவனும், கைகேகயர்களின் இளவரசனுமான பிருஹத்க்ஷத்ரனைப் பல கணைகளால் மார்பில் துளைத்தான். அப்போது மன்னன் பிருஹத்க்ஷத்ரன், ஓ! ஏகாதிபதி, துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பிளந்து செல்ல விரும்பி, தொண்ணூறு நேரான கணைகளால் தன் எதிராளியை {க்ஷேமதூர்த்தியை} வேகமாகத் தாக்கினான். எனினும், சினத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி நன்கு கடினமாக்கப்பட்ட கூரிய பல்லம் ஒன்றால் கைகேயர்களின் இளவரசனுடைய {பிருஹத்க்ஷத்ரனின்} வில்லை அறுத்தான். அப்படி அவனது வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, அம்மோதலில், நேரான கூரிய கணை ஒன்றால் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவனை {பிருஹத்க்ஷத்ரனை} வேகமாகத் துளைத்தான்.


[1] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [1]ல் க்ஷேமதூர்த்திப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (தன் எதிரியைப் பார்த்துப்) புன்னகைத்த பிருஹத்க்ஷத்ரன், விரைவில், வலிமைமிக்கத் தேர்வீரனான க்ஷேமதூர்த்தியைக் குதிரைகளற்றவனாகவும், தேரோட்டியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான். மேலும் அவன் {பிருஹத்க்ஷத்ரன்}, நன்கு கடினமாக்கப்பட்டதும், கூர்மையானதுமான மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காது குண்டலங்களால் சுடர்விட்ட தன் அரசெதிராளியின் {க்ஷேமதூர்த்தியின்} தலையை உடலில் இருந்து வெட்டினான். கேசத்தாலும், கிரீடத்தாலும் அருளப்பட்ட அந்தத் தலை திடீரென வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்த போது, வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன் தன் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியால் நிறைந்து, பார்த்தர்களின் நிமித்தமாக உமது துருப்புகளின் மேல் பெரும் சக்தியுடன் பாய்ந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான வீரதன்வான் [2] துரோணரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த திருஷ்டகேதுவைத் தடுத்தான். கணைகளையே தங்கள் நச்சுப் பற்களாகக் கொண்டு, ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பெரும் சுறுசுறுப்புடன் பல்லாயிரம் கணைகளால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உண்மையில், மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், ஆழ்ந்த காடுகளுக்குள் இரு தலைமை யானைகள் சீற்றத்துடன் மோதிக்கொள்வதைப் போலத் தங்களுக்குள் போரிட்டனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் இருவரும், மலைக்குகையொன்றில் மோதிக் கொள்ளும் கோபம்கொண்ட இரு புலிகளைப் போல மற்றவனைக் கொல்ல விரும்பத்துடனே போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. காணத்தகுந்த அது {அம்மோதல்} மிக அற்புதமானதாக இருந்தது. பெரும் எண்ணிக்கையிலான சித்தர்களும், சாரணர்களுமே கூட அற்புதத்திற்காகக் காத்திருக்கும் கண்களுடன் அதைக் கண்டனர்.

[2] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [2]ல் இவனைப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அப்போது வீரதன்வான், ஓ! பாரதரே, சினத்துடன் சிரித்தவாறே, பல்லங்களைக் கொண்டு திருஷ்டகேதுவின் வில்லை இரண்டாக அறுத்தான். சேதிகளின் ஆட்சியாளனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டகேது}, உடைந்த வில்லை எறிந்துவிட்டு, இரும்பாலானதும், தங்கப் பிடியைக் கொண்டதுமான கடும் ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டான். ஓ! பாரதரே, கடும் சக்தி கொண்ட அந்த ஈட்டியைத் தன் கரங்களால் வீரதன்வானின் தேரை நோக்கிச் சாய்த்த திருஷ்டகேது அதைக் கவனமாகவும், பெரும் பலத்துடனும் ஏவினான். வீரர்களைக் கொல்லும் அந்த ஈட்டியால் பெரும்பலத்துடன் தாக்கப்பட்டு, இதயம் துளைக்கப்பட்ட வீரதன்வான், வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவ்வீரன் {வீரதன்வான்} வீழ்ந்ததும், ஓ! தலைவா, பாண்டவர்களால் உமது படை பிளக்கப்பட்டது.

(உமது மகன்) துர்முகன், அறுபது கணைகளைச் சகாதேவன் மீது ஏவி, அந்தப் போரில் பாண்டுவின் மகனை {சகாதேவனைச்} சவாலுக்கழைப்பதற்காக உரக்க முழங்கினான். அப்போது, சினத்தால் நிறைந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, சிரித்துக் கொண்டே சகோதரனைத் தாக்கும் சகோதரனாகக் கூரிய கணைகள் பலவற்றால் துர்முகனைத் துளைத்தான். வலிமைமிக்கத் துர்முகன், மூர்க்கத்துடன் போரிடுவதைக் கண்ட சகாதேவன், ஓ! பாரதரே, ஒன்பது கணைகளால் மீண்டும் அவனைத் {துர்முகனைத்} தாக்கினான். பெரும்பலம் கொண்ட சகாதேவன், ஒரு பல்லத்தால் துர்முகனின் கொடிமரத்தை வெட்டி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் தாக்கி வீழ்த்தினான். மேலும் நன்கு கடினமாக்கப்பட்ட, கூரிய மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காதுகுண்டலங்களால் ஒளிர்ந்து கொண்டிருந்த துர்முகனின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். மேலும் ஒரு க்ஷுரப்ரத்தால் துர்முகனின் பெரிய வில்லை அறுத்த சகாதேவன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் துர்முகனையும் துளைத்தான்.

குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து அச்சமற்றவகையில் கீழே குதித்த துர்முகன், ஓ! பாரதரே, நிரமித்ரனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு சினத்தால் நிறைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சகாதேவன், அந்தப் பெரும்போரில் தன் படைக்கு மத்தியில் இருந்த நிரமித்ரனை ஒரு பல்லத்தால் கொன்றான். அதன்பேரில், திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடைய {சுசர்மனின்} மகனான நிரமித்ரன், உமது படையைப் பெரும் துயரத்தில் பீடிக்கச் செய்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். அவனைக் {நிரமித்ரனைக்} கொன்றதும், வலிமைமிக்க (ராட்சசன்) கரனைக் கொன்ற தசரதன் மகன் ராமனைப் போல வலிமைமிக்கச் சகாதேவன் பிரகாசமாகத் தெரிந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இளவரசன் நிரமித்ரன் கொல்லப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, திர்கர்த்த வீரர்களுக்கு மத்தியில் "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் உரத்த கதறல்கள் எழுந்தன.

நகுலன், ஓ! மன்னா, பெரிய கண்களைக் கொண்ட உமது மகன் விகர்ணனை ஒருக்கணத்தில் வென்றான். இது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

வியாக்ரதத்தன் [3], தன் படைப்பிரிவுக்கு மத்தியில் இருந்த சாத்யகியின் குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரம் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் கண்ணுக்குப் புலப்படாதபடி மறைத்தான். சிநியின் துணிச்சல்மிக்கப் பேரன், பெரும் கரநளினத்துடன் அக்கணைகளைக் கலங்கடித்துத் தன் கணைகளின் மூலம் வியாக்ரதத்தனை, அவனது குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்தோடு சேர்த்து வீழ்த்தினான். ஓ!தலைவா {திருதராஷ்டிரா}, அந்த மகதர்களின் இளவரசனுடைய {வியாக்ரதத்தனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, தீவிரத்துடன் போராடிக் கொண்டிருந்த மகதர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர்.

[3] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [3]ல் இவனைப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளையும், வேல்களையும் ஆயிரக்கணக்கில் இறைத்தபடியும், அந்தப் போரில் பிண்டிபாலங்கள், பராசங்கள், முத்கரங்கள், உலக்கைகள் ஆகியவற்றைக் கொண்டும், சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத அந்த வீரனுடன் {சாத்யகியுடன்} போரிட்டனர். பெரும் வலிமையைக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், வெல்லப்படமுடியாதவனுமான சாத்யகி, சிரித்துக் கொண்டே மிக எளிமையாக அவர்கள் அனைவரையும் வென்றான். மகதர்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டனர். எஞ்சிய மிகச் சிலரும் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.

ஓ! தலைவா, ஏற்கனவே யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த உமது படையானது, இதைக் கண்டு பிளந்து ஓடியது. மது குலத்தில் முதன்மையானவனும், சிறந்த வீரனுமான அவன் {சாத்யகி}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் உமது துருப்பினரைக் கொன்று, தன் வில்லை அசைத்தபடியே பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஓ! மன்னா, இப்படியே அந்தப் படை, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்மாவால் {சாத்யகியால்} முறியடிக்கப்பட்டது. உண்மையில், நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரன் {சாத்யகியின்} மீது கொண்ட அச்சத்தால், போரிடுவதற்காக எவனும் அவனை அணுகவில்லை. அப்போது சினத்தால் நிறைந்த துரோணர், தன் கண்களை உருட்டியபடி, கலங்கடிக்கப்பட முடியாத சாதனைகளைக் கொண்ட சாத்யகியை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Saturday, April 23, 2016

யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 020

Drona rushed near Yudhishthira! | Drona-Parva-Section-020 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : பனிரெண்டாம் நாள் போரில் கருட வியூகம் அமைத்த துரோணர்; அர்த்தச்சந்திர வியூகம் அமைத்த யுதிஷ்டிரன்; கௌரவப்படையின் அந்த வியூகத்தில் எந்தெந்த நிலைகளில் யார் யார் நின்றனர் என்ற குறிப்பு; கௌரவ வியூகத்தில் பகதத்தன் ஏற்ற நிலை; திருஷ்டத்யும்னனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் உறுதி கூறிய திருஷ்டத்யும்னன் துரோணரைத் தடுத்தது; திருஷ்டத்யும்னனுக்கும் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; களத்தின் பயங்கர நிலவரம்; யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இரவைக் கழித்ததும், சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “நான் உன்னவன் [1]. சம்சப்தகர்களுடன் பார்த்தன் {அர்ஜுனன்} மோதுவதற்கான ஏற்பாடுகளை நான் செய்துவிட்டேன் [2]” என்றார்.


[1] பம்பாய் உரையில் இது வேறு மாதிரியாக உள்ளது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் துரோணர், துரியோதனனுடன் பலவாறாகப் பேசினார் என்று மட்டுமே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போலவே உள்ளது.

[2] இங்கே உள்ள உரை சரியானதாகத் தெரியவில்லை. இது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த ஒரு சுலோகம் முழுமையும் பிழையானதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் துரோணர், துரியோதனனுடன் பலவாறாகப் பேசினார் என்று மட்டுமே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போலவே உள்ளது.

பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களைக் கொல்வதற்காக வெளியே சென்ற பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் துருப்புகளின் தலைமையில் நின்றபடி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிக்க முன்னேறினார். துரோணர் தன் படைகளைக் கருட வடிவில் {கருட வியூகத்தில்} அணிவகுத்திருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், தன் துருப்புகளை அரை வட்ட வடிவில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} எதிரணிவகுத்தான்.

அந்தக் கருடனின் வாய்ப்பகுதியில் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரே நின்றார். தன் உடன் பிறந்த தம்பிகளால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன் அதன் தலையாக அமைந்தான். கிருதவர்மனும், சிறப்புமிக்கக் கிருபரும் அந்தக் கருடனின் இரு கண்களாக அமைந்தனர். பூதசர்மன், க்ஷேமசர்மன், வீரமிக்கக் கரகாக்ஷன், கலிங்கர்கள், சிங்களர்கள், கிழக்கத்தியர்கள், சூத்திரர்கள், ஆபிரர்கள், தசேரகர்கள், சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், ஹம்சபதர்கள், சூரசேனர்கள், தரதர்கள், மத்திரர்கள், காலிகேயர்கள் ஆகியோரும், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைகள் ஆகியவற்றுடன் கூடி அதன் {அந்தக் கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றனர்.

ஒரு முழு அக்ஷௌஹிணியால் சூழப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், சோமதத்தன், பாஹ்லிகன் ஆகிய இந்த வீரர்கள் வலது சிறகில் தங்கள் நிலைகளை எடுத்தனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு முன்பு இடது சிறகில் நின்றனர். (அந்தக் கருடனின்) பின்புறத்தில் கலிங்கர்கள், அம்பஷ்டர்கள், மகதர்கள், பௌண்டரர்கள், மத்ரகர்கள், காந்தாரர்கள், சகுனர்கள், கிழக்கத்தியர்கள், மலைவாசிகள் மற்றும் வசாதிகள் ஆகியோர் இருந்தனர்.

{கருட வியூகத்தின்} வாலில், விகர்த்தனன் மகன் கர்ணன், தன் மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோருடன் பல்வேறு நாடுகளால் உண்டான ஒரு பெரிய படையால் சூழப்பட்டு நின்றான். போரில் சாதித்தவர்களான ஜெயத்ரதன், பீமரதன், சம்பாதி, ரிஷபன், ஜயன், போஜர்கள், பூமிஞ்சயன், விருஷன், கிராதன், நிஷாதர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் ஆகியோர் ஆனைவரும் பெரிய படை ஒன்றால் சூழப்பட்டவர்களாகப் பிரம்மலோகத்தைத் தங்கள் கண்களின் முன் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் இதயப்பகுதியில் நின்றனர்.

துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகமானது அதன் காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவாக (போருக்கு அது முன்னேறியபோது) புயலால் கொந்தளிக்கும் கடல் போல நிலையற்றதாக இருந்தது. கோடை காலத்தில் {கோடை காலத்தின் முடிவில்} மின்னலுடன் முழங்கும் மேகங்கள் அனைத்துப் புறங்களில் இருந்தும் (வானத்தில்) விரைவதைப் போல, போரை விரும்பிய வீரர்கள், அந்த வியூகத்தின் சிறகுகளிலிருந்தும் பக்கங்களிலிருந்தும் போரிடத் தொடங்கினர்.

பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட தன் யானையின் மீதேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உதயச் சூரியனைப் போல அந்தப் படையின் மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தன் தலைக்கு மேலே வெண்குடை கொண்ட அவன் {பகதத்தன்} கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்துடன் கூடிய முழு நிலவைப் போலத் தெரிந்தான். மது போன்ற கசிவினால் குருடானதும், கறுமாக்கல் திரளைப் போலத் தெரிந்ததுமான அந்த யானை பெரும் மேகங்களால் (மேகங்கள் மழை பொழிவதால்) துவைக்கப்பட்ட பெரும் மலையைப் போலப் பிரகாசித்தது. அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தேவர்களால் சூழப்பட்ட சக்ரனை {இந்திரனைப்} போலவே, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த மலை நாடுகளைச் சேர்ந்த வீர மன்னர்கள் பலரால் சூழப்பட்டிருந்தான்.

பிறகு யுதிஷ்டிரன், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத மனித சக்திக்கு மீறிய வியூகத்தைக் கண்டு பிருஷதன் மகனிடம் {யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம்}, “ஓ! தலைவா, ஓ! புறாக்களைப் போன்ற வெண்ணிற குதிரைகளைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, அந்தப் பிராமணரால் {துரோணரால்} நான் சிறைபடாதிருக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வாயாக” என்றான்.

திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, துரோணர் எவ்வளவுதான் முயன்றாலும் நீர் அவர் வசத்தை அடைய மாட்டீர். நான் உயிரோடுள்ளவரை, ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் எந்தக் கவலையையும் உணர்வது தகாது. எந்தச் சூழ்நிலையிலும் போரில் என்னைத் துரோணரால் வீழ்த்த இயலாது” என்றான் {திருஷ்டத்யும்னன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “புறாக்களின் நிறத்திலான குதிரைகளையுடைய வலிமைமிக்கத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தன் கணைகளை இறைத்தபடி துரோணரை நோக்கி விரைந்தான். தனக்கு முன்பு திருஷ்டத்யும்னன் வடிவில் நின்ற அந்தத் தீய சகுனத்தைக் கண்ட துரோணர் மகிழ்ச்சியற்றவரானார் [3].

[3] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும் இருக்கிறது. அது பின்வருமாறு, “தமக்கு விருப்பமில்லாத தோற்றமுள்ளவனும், போரில் முன் நிற்பவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டு, துரோணர் ஒரு கணத்திற்குள் அதிகச் சந்தோஷமற்ற மனத்தையுடைவரானார். ஓ! பெரும் மன்னா, அந்தத் திருஷ்டத்யும்னன் துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்தவன். அவனிடத்திலிருந்து மரணத்தை அடைய வேண்டியவராயிருப்பதால் துரோணர் மதிமயங்கினார்; அந்தப் போர்க்களத்தில் அந்தப் படையை எதிரில் பார்ப்பதற்குச் சிறிது சக்தியற்றவரானார். பிறகு, அவர் போர்க்களத்தில் திருஷ்டத்யும்னனை விட்டுவிட்டுத் துருபதனுடைய படையின் மீது கூர்மையான அம்புகளை இறைத்துக் கொண்டு சீக்கிரமாகச் சென்றார். அந்தப் பிராமணர் துரோணர் துருபதனுடைய பெரிய படையைப் பிளந்தார்” என்று இருக்கிறது. அதற்குப் பிறகு பின்னுள்ளதைப் போலவே தொடர்கிறது.

எதிரிகளை நசுக்குபவனான உமது மகன் துர்முகன் இதைக் கண்டு, துரோணருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, திருஷ்டத்யும்னனைத் தடுக்கத் தொடங்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்}, உமது மகன் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. அப்போது பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கணைகளின் மழையால் துர்முகனை விரைவாக மறைத்து அடர்த்தியான கணை மழையால் பரத்வாஜரின் மகனையும் {துரோணரையும்} தடுத்தான். துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துர்முகன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி வேகமாக விரைந்து பல்வேறு விதங்களிலான கணைகளின் மழையால் அவனைக் குழப்பினான்.

பாஞ்சால இளவரசனும் {திருஷ்டத்யும்னனும்}, குருகுலத்தில் முதன்மையானவனும் {துர்முகனும்} போரிட்டுக் கொண்டிருக்கையில், துரோணர், யுதிஷ்டிரனுடைய படையின் பல பகுதிகளை எரித்தார். காற்றினால் மேகங்களின் திரள் பல்வேறு திசைகளில் சிதறிப் போவதைப் போலவே, யுதிஷ்டிரனின் படையும் துரோணரால் களத்தின் பல பகுதிகளுக்குச் சிதறடிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் ஒரு இயல்பான மோதலைப் போலத் தெரிந்தது.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருக்கும் எந்தக் கருணையும் காட்டாத மதங்கொண்ட இரு மனிதர்களுக்கு இடையிலான மோதலாக அது மாறியது. அதற்கு மேலும் போராளிகளால் தங்கள் மனிதர்களுக்கும், எதிரிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை. அனுமானங்கள் மற்றும் குறிச்சொற்களால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்களால் அந்தப் போர் தொடர்ந்து நடந்தது. அவர்களின் {அந்த வீரர்களின்} தலைப்பாகைகள், கழுத்தணிகள் மற்றும் பிற ஆபரணங்களில் உள்ள ரத்தினங்கள் {சூடாரத்தினங்கள்}, கவசங்கள் ஆகியவற்றில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுந்து விளையாடுவதாகத் தெரிந்தது. படபடக்கும் கொடிகளுடன் கூடிய தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன கொக்குகளுடன் கூடிய மேகங்களின் திரள்களுக்கு ஒப்பானவையாக அந்தப் போரில் தெரிந்தன.

மனிதர்கள் மனிதர்களைக் கொன்றனர், கடும் உலோகம் கொண்ட குதிரைகள் குதிரைகளைக் கொன்றன, தேர்வீரர்கள் தேர்வீரர்களைக் கொன்றனர், யானைகள் யானைகளையே கொன்றன.

விரைவில், உயர்ந்த கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகளுக்கும் , (அவற்றை நோக்கி விரையும்) வலிமையான எதிராளிகளுக்கும் {யானைகளுக்கும்} இடையில் பயங்கரமானதும், கடுமையானதுமான மோதல் நடந்தது. அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் உடல்களோடு எதிராளிகளின் உடலைத் தேய்த்தது, (தங்கள் தந்தங்களால்) ஒன்றை மற்றொன்று கிழித்தது, எண்ணற்ற தந்தங்கள் {பிற} தந்தங்களோடு உராய்ந்தது ஆகிய அனைத்தின் விளைவால் புகையுடன் கூடிய நெருப்பு உண்டாயிற்று. (தங்கள் முதுகில் இருந்த) கொடிமரங்கள் வெட்டப்பட்ட அந்த யானைகள், அவற்றின் தந்தங்களில் உண்டான நெருப்புகளின் விளைவால், ஆகாயத்தில் மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன.

(பகை யானைகளால்) இழுக்கப்படுபவை, முழங்குபவை, கீழே விழுபவை ஆகிய யானைகளால் விரவிக் கிடந்த பூமியானது, மேகங்களால் நிறைந்த கூதிர்கால வானத்தைப் போல அழகாகத் தெரிந்தது. கணைகள் மற்றும் வேல்களின் மழையால் கொல்லப்படும்போது அந்த யானைகளின் முழக்கம், மழைக்காலத்தின் மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாக ஒலித்தன. வேல்கள் மற்றும் கணைகளால் காயம் அடைந்த பெரும் யானைகள் சில பீதியடைந்திருந்தன.

அந்த உயிரினங்களில் சில பெரும் அலறலோடு களத்தை விட்டு ஓடின. பிற யானைகளின் தந்தங்களால் தாக்கப்பட்ட சில, யுக முடிவில் அனைத்தையும் அழிக்கும் மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாகத் துன்பத்தில் அலறின. பெரும் எதிராளிகளிடம் புறமுதுகிட்ட சில, கூரிய அங்குசங்கள் மூலம் தூண்டப்பட்டு மீண்டும் களத்திற்குத் திரும்பின. பகையணிகளை நசுக்கிய அவை தங்கள் வழியில் வந்த எவரையும் கொல்லத் தொடங்கின. யானைப்பாகர்களின் கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்ட {மற்ற} யானைப்பாகர்கள், தங்கள் கரங்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் அங்குசங்கள் நழுவத் தங்கள் விலங்குகளின் முதுகுகளில் இருந்து கீழே விழுந்தனர்.

தங்கள் முதுகில் பாகர்கள் இல்லாத பல யானைகள் பெரும் திரள்களில் இருந்து பிரிந்த மேகங்களைப் போல அங்கேயும் இங்கேயும் திரிந்து ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்தன. பெரும் யானைகள் சில தங்கள் முதுகில் கொல்லப்பட்ட அல்லது வீழ்த்தப்பட்ட வீரர்களை, அல்லது ஆயுதங்களை நழுவவிட்டோரைச் சுமந்து கொண்டு தனியாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன [4]. அந்தப் படுகொலைகளுக்கு மத்தியில், தாக்கப்பட்டோ, வேல்கள், வாள்கள் அல்லது போர்க்கோடரிகளால் தாக்கப்படும்போதோ துன்பப் பேரொலிகளை வெளியிட்டபடியே அந்தப் பயங்கரப் படுகொலையில் சில யானைகள் வீழ்ந்தன.

[4] Ekacharas என்று இங்கே சொல்லப்படுவது "தங்கள் வகையைச் சேர்ந்த யானைகளைப் பார்க்கப் பொறுக்காமல், அதாவது தனியாகத் திரிவது" என்று நீலகண்டரால் விளக்கப்படுகிறது. வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் இந்த வார்த்தை காண்டாமிருகத்தைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்கின்றனர் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மலைகளைப் போன்ற பெரும் உடல்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் திடீரெனச் சுற்றிலும் விழுவதால் தாக்கப்பட்ட பூமியானது நடுங்கிக் கொண்டே ஒலிகளை வெளியிட்டது. பாகன்களோடு சேர்த்துக் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் முதுகுகளில் கொடிமரங்களுடன் கிடந்த போது, பூமியானது மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. நீண்ட கணைகளால் {நாராசங்களால்} தாக்கப்பட்ட சில யானைகள் கொக்குகளைப் போல அலறியபடியும், நண்பர்கள் மற்றும் எதிரிகளைத் தங்கள் நடையால் நசுக்கிக் கொன்றபடியும் அனைத்துத் திசைகளிலும் ஓடின.

யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரின் எண்ணற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தமும் சதையும் சேர்ந்த சேறானது. சக்கரங்களுடன் கூடிய தேர்களும், சக்கரங்களற்ற பலவும், யானைகளின் தந்த முனைகளால் நசுக்கப்பட்டு, அவற்றில் {அந்தத் தேர்களில்} இருந்த வீரர்களோடு சேர்த்து அவற்றால் {அந்த யானைகளால்} தூக்கி வீசப்பட்டன. வீரர்களை இழந்த தேர்கள் காணப்பட்டன. ஓட்டுநர்கள் இல்லாத குதிரைகளும், யானைகளும் காயங்களால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன.

எந்த வேறுபாடும் காணமுடியாத அளவுக்கு அங்கே நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்ததால் அங்கே தந்தை தனது மகனைக் கொன்றான், மகன் தனது தந்தையைக் கொன்றான். கணுக்கால் ஆழம் கொண்ட இரத்தச் சேற்றில் மூழ்கிய மனிதர்கள், சுடர்மிகும் காட்டுத்தீயால் விழுங்கப்பட்ட அடிப்பாகங்களைக் கொண்ட உயர்ந்த மரங்களைப் போலத் தெரிந்தனர். ஆடைகள், கவசங்கள், குடைகள், கொடிமரங்கள் ஆகியவை குருதியால் நனைந்திருந்தன. களத்தில் இருந்த அனைத்தும் இரத்தம் கலந்தவையாகவே தெரிந்தன. பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட குதிரைகள், தேர்கள், மனிதர்கள் ஆகியவை தேர்ச்சக்கரங்கள் உருள்வதால் மீண்டும் மீண்டும் துண்டுகளாக வெட்டப்பட்டன.

யானைகளை ஓடையாகக் கொண்டதும், கொல்லப்பட்ட மனிதர்களை மிதக்கும் பாசிகளாகக் கொண்டதும், தேர்களைச் சுழல்களாகக் கொண்டதுமான அந்தத் துருப்புகள் எனும் கடல் மிகக் கடுமையானதாகவும் பயங்கரமானதாவும் தெரிந்தது. குதிரைகள், யானைகள் என்ற பெரிய மரக்கலங்களைக் கொண்ட வீரர்கள், தங்கள் செல்வமாக வெற்றியை விரும்பி, அந்தக் கடலில் குதித்து, மூழ்குவதற்குப் பதிலாக, தங்கள் எதிரிகளின் உணர்வுகளை இழக்கச் செய்தனர். தனிப்பட்ட அடையாளங்களைக் {கொடிகளைக்} கொண்ட அந்த வீரர்கள் அனைவரும், கணை மழைகளால் மறைக்கப்பட்ட போது, அவர்களில் எவரும் தங்கள் அடையாளங்களை {கொடிகளை} இழந்தாலும் உற்சாகத்தை இழக்கவில்லை.

அந்தப் பயங்கரப் போரில் தனது எதிரிகளின் அறிவைக் குழப்பிய துரோணர் (இறுதியாக) யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்