Saturday, July 20, 2013

பீமன் ஹிடிம்பன் மோதல்! - ஆதிபர்வம் பகுதி 155

The fight between Hidimva and Bhima! | Adi Parva - Section 155 | Mahabharata In Tamil

(ஹிடிம்ப வத பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : ஹிடிம்பை செய்த தாமதத்தினால் அங்கேயே வந்து நின்ற ஹிடிம்பன்; ஹிடிம்பனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த சொற்போரும், கோரமான மற்போரும்...

வைசம்பாயனர் சொன்னார், "ராட்சசத் தலைவன் ஹிடிம்பன், தனது தங்கை வெகு நேரமாகியும் திரும்பாதது கண்டு, மரத்திலிருந்து கீழிறங்கி, பாண்டவர்களிருக்கும் இடத்திற்கு விரைவாக முன்னேறி வந்தான்.(1) சிவந்த கண்களுடன், பலம்வாய்ந்த கரங்களுடன், கரங்களும் தலைமயிரும் நட்டுக் கொண்டு நிற்க, திறந்த பெரிய வாயுடனும், கருமேகக் கூட்டங்கள் போன்ற உடலுடனும், கூரிய மற்றும் நீண்ட பற்களுடனும் காண்பதற்கு மிகப் பயங்கரமாக இருந்தான்.(2) கடும் முகம் கொண்ட தனது தமையன் மரத்திலிருந்து இறங்கியதைக் கண்ட ஹிடிம்பை மிகுந்த அச்சம் கொண்டு, பீமனிடம்,(3) "அந்த நரமாமிசம் உண்ணும் தீயவன், இங்கே கோபத்தோடு வருகிறான். நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீரும் உமது சகோதரர்களும் நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.(4) ஓ பெரும் வீரம் கொண்டவரே! ராட்சச சக்திகளைக் கொண்ட நான், விரும்பிய இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தி படைத்தவள். நீர் எனது இடுப்பில் ஏறிக்கொள்வீராக. நான் உம்மை வானத்தினூடே தூக்கிச் செல்கிறேன்.(5) ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, சுகமாகத் தூங்கும் இவர்களையும் {உமது சகோதரர்களையும்} உமது தாயையும் விழிப்படையச் செய்வீராக. நான் இவர்கள் அனைவரையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்து செல்வேன்" என்றாள்.(6)

பீமன், "ஓ அழகான இடையுடையவளே, எதற்கும் அஞ்சாதே. நான் இங்கிருக்கும் வரை, எந்த ராட்சசனாலும் இவர்களைக் காயப்படுத்திவிடமுடியாது என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். ஓ கொடியிடையாளே, நான் இவனை உன் கண்ணெதிரிலேயே கொல்வேன்.(7) ஓ மருட்சியுடையவளே, ராட்சசர்களில் இழிந்த இவன், எனக்கு எதிரியாக இருக்கத் தகுதியற்றவன். ஏன் அனைத்து ராட்சசர்களும் ஒன்று சேர்ந்து வந்தாலும், அவர்களாலும் எனது கரங்களின் பலத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாது.(8) எனது பலம் நிறைந்த கரங்களைப் பார், ஒவ்வொன்றும் யானையின் துதிக்கையைப் போன்று இருக்கின்றன. இரும்பு கதாயுதத்தைப் போன்ற இந்த எனது தொடைகளையும், அகலமான வைரம் பாய்ந்த மார்பையும் பார்.(9) ஓ அழகானவளே, நீ இன்று இந்திரனுக்கு ஒப்பான எனது ஆற்றலைக் காண்பாய். ஓ அழகான இடை கொண்டவளே, என்னை மனிதன் என்று நினைத்து வெறுக்காதே[1]" என்றான்.(10)

[1] கும்பகோணம் பதிப்பில், "என்னை மனிதனாக நினைத்து இப்போது குறைவாகப் பேசாதே" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "என்னை மனிதனாக நினைத்துப் பலவீனனாகக் கருதாதே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீ என்னைப் பலவீனமாக நினைக்காதே" என்றிருக்கிறது. கங்குலியில் உள்ளதைப் போல "வெறுக்காதே" என்று எந்தப் பதிப்பிலும் இல்லை.

ஹிடிம்பை, "ஓ மனிதர்களில் புலியே, ஓ தெய்வீக அழகு வாய்ந்தவரே, நிச்சயமாக நான் உம்மை அவமதிக்கவில்லை. ஆனால் மனிதர்களிடம் அந்த ராட்சசன் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் கண்டிருக்கிறேன்" என்று பதிலுரைத்தாள்".(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அப்போது, ஓ பாரதா {ஜனமேஜயா}, மனித மாமிசம் உண்பவனான அந்தக் கோபம் மிகுந்த ராட்சசன், தான் வரும் வழியிலேயே பீமனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே வந்தான்.(12) முகம் முழு மதியைப் போன்றும், தலையில் பூச்சூடியும், புருவங்களும், நாசியும், கண்களும், மயிர்சுருளும் உள்ள அழகான பெண் போலத் தனது தங்கை மானுட வடிவில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது நகங்களும், மேனியும் நுண்மையான நிறத்துடன் இருந்தது. அனைத்து வகை ஆபரணங்களும் பூண்டு நன்றாக ஒளி ஊடுருவும் ஆடை அணிந்திருந்தாள்.(14) அவள் அழகான பெண்ணுருக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த மனித ஊனுண்ணி, அவள் உடலுறவு கொள்ள விரும்புகிறாள் என ஐயுற்று மிகுந்த கோபத்துக்குள்ளானான்.(15)

ஓ குரு குலத்தவரில் சிறந்தவனே {ஜனமேஜயா}, தனது தங்கையிடம் கோபம் கொண்டு, கண்களை அகல விரித்து அவளிடம்,(16) "நான் பசியோடிருக்கும்போது, எனது பாதையில் தடையை ஏற்படுத்திய உணர்வற்ற ஜென்மம் எது? ச்சீ... ச்சீ... ஓ ஹிடிம்பையே என் கோபத்தில் உனக்கு அச்சமில்லையா?(17) கற்பற்ற பெண்ணே! நீ இப்போது உடலுறவில் விருப்பம் கொண்டு எனக்குத் தீங்கிழைக்க நினைக்கிறாய். நமது முன்னோர்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களின் நற்பெயரையும் மரியாதையையும் நீ துறக்கத் தயாராயிருக்கிறாய்.(18) யாருடன் சேர்ந்து எனக்கு நீ தீங்கிழைக்க நினைக்கிறாயோ, அவனுடன் சேர்த்து உன்னையும் இப்போதே கொல்கிறேன் பார்"(19) என்று தனது தங்கையிடம் இப்படிச் சொன்ன ஹிடிம்பன், கோபத்தால் கண்கள் சிவக்கப் பற்களுடன் பற்கள் அழுத்தி, அவளை அங்கேயே கொல்ல அவளிடம் ஓடினான்.(20) இப்படி அவனது தங்கையிடம் விரைபவனைக் கண்டவனும், தாக்குபவர்களின் முதன்மையானவனும், பெரும் சக்தி படைத்தவனுமான அந்தப் பீமன், "நில். நிற்பாயாக" என்று சொல்லிக் கண்டித்தான்".(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "தனது தங்கையிடம் கோபமாக உள்ள ராட்சசனைக் கண்ட பீமன், (ஏளனமாகச்) சிரித்துக் கொண்டே, அவனிடம்,(22) "ஓ ஹிடிம்பா, சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை எழுப்ப உனக்கு என்ன தேவையிருக்கிறது? ஓ மனித மாமிசம் உண்ணும் தீயவனே, நேரந்தாழ்த்தாமல் முதலில் நீ என்னை அணுகுவாயாக.(23) என்னை முதலில் தாக்கு, பெண்ணைக் கொல்வது உனக்குத் தகாது. குறிப்பாக அவள் பாவம் செய்யாமல், பாவத்திற்கு ஆளாகியிருக்கும்போது அது தகவே தகாது.(24)  என்னுடன் உறவு கொள்ள விரும்பிய அவளது செயலுக்கு அவள் பொறுப்பில்லை. எல்லா உயிரினுள்ளும் உறைந்திருக்கும் காமதேவனால் அவள் உந்தப்பட்டாள்.(25) நீ தீய பாவி, ராட்சசர்களில் மிகவும் மோசமானவன். உன் தங்கை உனது உத்தரவின் பேரிலேயே இங்கு வந்தாள். அப்படி வந்த அவள் என்னைக் கண்டு, என்னை விரும்பினாள். அதனால் இந்த மருட்சியுடையவள் உனக்கு என்ன தீங்கு செய்தாள். இங்குக் காமதேவனே குற்றம் புரிந்திருக்கிறான். இக்குற்றத்திற்கு நீ அவளைத் தாக்குவது உனக்குத் தகாது.(26,27)

ஓ தீய பாவியே, நான் இங்கிருக்கும் போது, ஒரு பெண்ணை உன்னால் கொல்ல முடியாது. ஓ நரமாமிசம் உண்பவனே, என்னிடம் வந்து நேருக்கு நேர் ஒற்றைக்கு ஒற்றையாக மோதுவாயாக.(28) தனி ஆளாக நான் உன்னை யமனுலகு அனுப்புகிறேன். ஓ ராட்சசா, இன்று உனது தலை, யானையினால் மிதிக்கப்பட்டு நசுங்குவது போல எனது பலத்தால் நசுங்கிச் சுக்குநூறாகப் போகிறது.(29) இப்போரில் இன்று என்னால் நீ கொல்லப்பட்ட பிறகு, தரையில் கிடக்கும் உனது உறுப்புகளை மீனுண்ணும் நாரைகளும், பருந்துகளும், நரிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிய்த்துண்ணட்டும். ஒரு நொடியில் இன்று நான் இந்தக் கானகத்தை ராட்சசர்கள் அற்ற கானகமாக மாற்றுகிறேன் பார். மனிதர்களை உண்டு நீ வெகுகாலமாக இக்கானகத்தை ஆண்டுவருகிறாய்! (30,31)  நீ பெரும் மலையைப் போல இருந்தாலும், பெரும் யானையைத் தொடர்ந்து இழுக்கும் சிம்மம் அதைக் கொல்வதைப் போல, ஓ ராட்சசர்களில் இழிந்தவனே, உன்னை நான் கொல்வதை இன்று உனது தங்கை காணப் போகிறாள்.(32) உன்னைக் கொன்று, மனிதர்கள் அச்சமற்று உலவ ஏற்றதாக இக்கானகத்தை மாற்றப்போகிறேன்" என்றான்.(33)

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹிடிம்பன், "ஓ மனிதா, இந்த உனது வீண் இரைச்சலுக்கும், தற்பெருமைக்கும் என்ன அவசியம் இருக்கிறது? முதலில் நீ சொன்னதைச் செய், அதன்பிறகு தற்பெருமை பேசுவாயாக. எனவே, தாமதிக்காதே.(34) நீ ஆற்றல் நிரம்பிய பலவான் என்று உன்னை நினைக்கிறாய். எனவே, என்னுடன் மோதிய பிறகு, உனது {உண்மையான} பலத்தைப் பற்றி நீ அறிந்து கொள்வாயாக.(35) அதுவரை, நான் இவர்களைக் (உனது சகோதரர்களைக்) கொல்ல மாட்டேன். அவர்கள் சுகமாக உறங்கட்டும். ஆனால் முதலில், தீய பேச்சு பேசும் முட்டாளான உன்னை நான் கொல்வேன்.(37) உனது ரத்தத்தைக் குடித்த பிறகு, இவர்கள் அனைவரையும் கொல்வேன். இறுதியாக எனக்குத் தீங்கிழைத்த இவளையும் (எனது தங்கையைக்) கொல்வேன்" என்றான்".(38)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொன்ன அந்த மனித ஊனுண்ணி, எதிரிகளைத் தண்டிக்கும் பீமனை நோக்கித் தனது கரங்களைக் கோபமாக நீட்டினான்.(38) பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், தன்னை நோக்கி ஓடி வந்த ராட்சசனின் கரங்களைப் பெரும்பலத்துடன் விளையாட்டாகப் பற்றினான்.(39) பிறகு, பெரும் வன்முறையுடன் அந்த ராட்சசனையும் பற்றி, ஒரு சிங்கமானது, சிறிய மிருகத்தை இழுத்துச் செல்வதைப் போல அவனை முப்பத்திரண்டு முழம் தொலைவிற்கு இழுத்துச் சென்றான்.(40)

பீமனுடைய பலத்தின் நிறையை உணர்ந்த அந்த ராட்சசன், பெரும் கோபம் கொண்டு, அந்தப் பாண்டவனை அணைத்துக் கட்டிக் கொண்டு, பெரும் கூச்சல் போட்டான்.(41) இக்கூச்சலால், சுகமாக உறங்கும் தனது சகோதரர்கள் எழுந்துவிடாமல் இருக்க, பீமன் அந்த ராட்சசனை இன்னும் அதிகத் தூரத்திற்கு இழுத்துச் சென்றான்.(42) கட்டியணைத்துக் கொண்டும், ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டும் பெரும் பலத்துடன் ஹிடிம்பனும், பீமசேனனும் தங்கள் பேராற்றலை வெளிப்படுத்தினர்.(43) முழுவதும் வளர்ந்த இரு மதம்பிடித்த பெரும் யானைகள் கோபத்துடன் மோதிக் கொள்வதைப் போல, அவர்கள் மரங்களை ஒடித்தும், தரையில் முளைத்திருந்த செடிகொடிகளைப் பிடுங்கியும் சண்டையிட்டனர்.(44) இவ்வொலியால் அந்த மனிதர்களில் புலியானவர்கள் (உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்கள்) தங்கள் தாயுடன் எழுந்திருந்து, ஹிடும்பை தங்களெதிரில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(45)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்