Siva's extra three faces due to Thilottama! | Adi Parva - Section 213 | Mahabharata In Tamil
(ராஜ்யலாப பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : சுந்தனும், உபசுந்தனும் புரியும் தீயச் செயல்களை தேவர்களும், முனிவர்களும் பிரம்மனிடம் சொல்லி முறையிடுவது; பிரம்மன் விசுவகர்மாவை அழைத்து அசுரச் சகோதரர்களின் அழிவுக்காக அழகான ஒரு பெண்ணை படைக்கச் சொன்னது; படைக்கப்பட்ட அப்பெண்ணைப் பார்த்து தேவர்களும், இந்திரனும், சிவனும் மயங்கியது...
![]() |
ராஜா ரவிவர்மாவின் திலோத்தமை ஓவியம் |
சோகம் நிறைந்த இதயங்களுடன் தேவர்களும் மற்ற முனிவர்களும் பிரம்மனை அணுகிய போது மேற்குறிப்பிட்ட அனைத்து முனிவர்களும் பெருந்தகப்பனோடு {பிரம்மனோடு} அமர்ந்திருந்தார்கள்.(6) அப்படி வந்த அவர்கள் {முனிவர்கள்} சுந்தன் மற்றும் உபசுந்தனின் செயல்களைப் பற்றிக் கூறினர். அவர்கள் {முனிவர்கள்} அசுரச் சகோதரர்களின் {சுந்தன், உபசுந்தனின்} செயல்களை, அஃது எப்படி நிறைவேற்றப்பட்டது, எந்த வரிசையில் செய்யப்பட்டது போன்றவற்றை முழுவதுமாக எடுத்துக் கூறினர்.(7,8) அனைத்து தேவர்களும், பெரு முனிவர்களும் இந்தக் காரியத்தைக் குறித்து அதிக அழுத்தத்துடன் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} சொல்லினர். அந்தப் பெருந்தகப்பன் அவர்கள் சொன்ன அனைத்தையும் விவரமாகக் கேட்டு, சிறிது நேரம் யோசித்துவிட்டு, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தன் மனத்தில் தீர்மானித்தான். அந்த அசுரச் சகோதரர்களுக்கு {சுந்தனுக்கும், உபசுந்தனுக்கும்} அழிவை ஏற்படுத்த ஒரு தீர்மானம் செய்து, விஸ்வகர்மனை {தேவலோக தச்சன்} அழைத்தார்.(9,10)
விஸ்வகர்மனைத் தன் முன் கண்ட பெரும் ஆன்மத் தகுதி கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்} அவனிடம் {விஸ்வகர்மனிடம்}, "அனைத்து இதயங்களையும் கொள்ளை கொள்ளும் தகுதி கொண்ட ஒரு மங்கையைப் படைப்பாயாக {உற்பத்தி செய்வாயாக}" என்றான்.(11)
பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, அவரது உத்தரவை மரியாதையுடன் பெற்றுக் கொண்ட அண்டத்தின் பெரும் தச்சன் {விஸ்வகர்மா}, மிகுந்த கவனத்துடன் ஒரு மங்கையைப் படைத்தான்.(12) விஸ்வகிரீதன் முதலில் மூன்று உலகங்களிலும் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்களின் அனைத்து அழகு குணங்களையும் தொகுத்துத் திரட்டினான்.(13) பிறகு அவன் அந்த மங்கையின் மேனியில் அவற்றைச் சேர்த்துப் படைத்தான். நிச்சயமாக, அந்தத் தெய்வீக மங்கை, பெரும் ரத்தினக் குவியல்களால் படைக்கப்பட்டாள்.(14) விஸ்வகர்மனால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த மங்கை, மூவுலகில் உள்ள பெண்களிலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதிருந்தாள்.(15)
பார்வையாளர்கள் பார்த்து திகைப்படையாத ஒரு சிறு பகுதியேனும் அவளது உடலில் இல்லாதிருந்தது.(16) இயல்புக்கு மிக்கத் தனது அழகால், தெய்வீக ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருந்து அனைத்து உயிர்களின் இதயங்களையும், கண்களையும் கொள்ளை கொண்டாள்.(17) அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால், பெருந்தகப்பன் {பிரம்மன்} அவளுக்குத் திலோத்தமை என்ற பெயரைச் சூட்டினான்.(18) அதற்கு உயிர் கொடுத்து, அதன் வாழ்க்கை துவங்கிய போது, அந்த மங்கை {திலோத்தமை} பிரம்மனிடம் தலை வணங்கி, கரங்கள் கூப்பி, "படைக்கப்பட்ட அனைத்துப் பொருளுக்கும் தலைவா {பிரம்மா}, நான் என்ன பணியைச் சாதிக்க வேண்டும்? நான் எதற்காகப் படைக்கப் பட்டேன்?" என்று கேட்டாள்.(19)
அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "ஓ திலோத்தமா, அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தனிடம் செல்வாயாக. ஓ இனிமையானவளே, உனது கொள்ளை கொள்ளும் அழகால் அவர்களை மயக்குவாயாக.(20) ஓ மங்கையே, அங்கே சென்று, அந்த அசுரச் சகோதரர்களின் {சுந்தன், உபசுந்தனின்} பார்வை உன் மீது பட்டவுடன், உனது அழகு என்ற செல்வத்தை அடைய எண்ணம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும்படி நீ நடந்து கொள்வாயாக" என்றான் {பிரம்மன்}.(21)
நாரதர் தொடர்ந்தார், "அந்த மங்கை {திலோத்தமை}, பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தேவர்கள் சூழ்ந்த அந்தச் சபையைச் சுற்றி நடந்தாள்.(22) அந்தச் சிறப்பு மிகுந்த பிரம்மன் அப்போது தனது முகத்தைக் கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார். மகாதேவனும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருந்தான். மற்றத் தேவர்கள் அனைவரும் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார்கள். மற்ற முனிவர்கள் அனைவரும் எல்லாத் திசைகளையும் பார்த்து அமர்ந்திருந்தார்கள்.(23) தேவர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையை வலம் வந்த அந்தத் திலோத்தமையை, இந்திரனும், அந்தச் சிறப்புமிக்க ஸ்தாணுவும் (மகாதேவனும் {சிவனும்}) மட்டும்தான் அமைதியை இழக்காமல் உறுதியுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.(24)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRd59Hj9y9ujwmxEOrWLAPPL2Y53AW_6K3Qhhe3RPmCyt-DIIySe3Vl9BIO14hJ2u6yjR_92xCB5SErFzUPvw8UvFT1waBTOWA4pTcwmuyDaaQvZJR-0tJwZC3GIyw5H9U2Uqh3jy5ly0/s320/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.jpg)
இப்படியே பெரும் தேவன் ஸ்தாணுவுக்கு {சிவனுக்கு} நான்கு முகங்களும், பலனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} ஆயிரம் கண்களும் உண்டாயிற்று.(28) இதன் நிமித்தமாக அனைத்துத் தேவர்களும் முனிவர்களும், தங்களை வலம் வந்த திலோத்தமை சென்ற திசைகளில் எல்லாம் தங்கள் முகத்தைத் திருப்பினர்.(29) தெய்வீகமான பெரும்பாட்டனைத் {பிரம்மனைத்} தவிர அங்கிருந்த சிறப்பு வாய்ந்த அனைவரின் பார்வையும் {திருஷ்டியும்} திலோத்தமையின் உடல் மீது விழுந்தது.(30) திலோத்தமை (அசுரர் நகரத்திற்குப்) புறப்பட்டதும், அவளது அழகு எனும் செல்வத்தின் மீது இருந்த மதிப்பால் அனைவரும் அந்தப் பணி நிறைவேறியதாகவே நினைத்தனர்.(31) அப்படி அந்தத் திலோத்தமை சென்றதும், அண்டத்தின் முதல் காரணமான அந்தப் பெரும் தலைவன் {பிரம்மன்} தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி வைத்தான்”.(32)
![]() |
ஆங்கிலத்தில் | In English | ![]() |