Citizens followed the Pandavas | Vana Parva - Section 1 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
நாட்டை விட்டு சென்ற பாண்டவர்களைத் தொடர்ந்து குடிமக்களும் செல்லுதல்; யுதிஷ்டிரன் அவர்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அனுப்புதல்; பாண்டவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அந்த இரவைக் கழித்தல்; அந்தணர்கள் அங்கு வந்து அவர்களை ஆதரித்தல்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும்,
சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்}
சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை
தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}
ஜனமேஜயன் சொன்னான், "ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவரே {வைசம்பாயணரே}, பகடையில் திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் அவர்களது ஆலோசகர்களால் ஏமாற்றுகரமாக வீழ்த்தப்பட்டு, அந்தத் தீயவர்களால் கடுமையான விரோதம் ஏற்பட்டு, அவர்களால் கடும் மொழிகள் பேசப்பட்ட எனது மூதாதையர்களான குரு இளவரசர்கள், அந்த பிருதையின் {குந்தியின்} மகன்கள் (அதன்பிறகு) என்ன செய்தார்கள்? வீரத்தில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவர்களான, பிருதையின் {குந்தியின்} மகன்கள், செல்வாக்கு இழந்து, திடீரெனத் துன்பத்தில் மூழ்கிக் காட்டில் தங்கள் நாட்களை எப்படிக் கடத்தினர்? கடும் துயரத்தில் மூழ்கி இருந்த அந்த இளவரசர்களின் சுவடுகளைத் தொடர்ந்து சென்றவர்கள் யார்? அந்த உயர்ந்த ஆன்மாக்கள் எப்படி தங்களைத் தாங்கிக் கொண்டார்கள்? தங்கள் வாழ்வாதாரத்தை எங்கே அடைந்தார்கள்? ஓ சிறப்புமிக்க தவசியே {வைசம்பாயணரே}, அந்தணர்களில் முதன்மையானவரே, எதிரிகளைக் கொல்பவர்களான அந்த வீரர்களின் பனிரெண்டு {12} வருடங்கள் கானகத்தில் எப்படி கழிந்தது? வலியைத் தாங்கவொண்ணாதவளும், பெண்களில் சிறந்தவளும், கணவர்களுக்கு தன்னை அர்ப்பணித்தவளும், அடக்கமும் அறமும் கொண்டவளும், எப்போதும் உண்மையே பேசுபவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, அந்த வலிநிறைந்த கானக வாழ்வை எப்படித் தாங்கிக் கொண்டாள்? ஓ தவ வாழ்வை செல்வமாகக் கொண்டவரே, ஓ அந்தணரே, இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்லும். பெரும் வீரமும், காந்தியும் கொண்ட அந்த வீரர்களின் வரலாற்றை நீர் உரைப்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில் எனது ஆவல் அதிகமாக இருக்கிறது" என்றான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி பகடையில் திருதராஷ்டிரன் மகன்களாலும் அவர்களது ஆலோசகர்களாலும் வீழ்த்தப்பட்டு, தூபமிடப்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினர். அந்த நகரத்தின் வர்தமனா வாயில் வழியே ஆயுதம் தாங்கிய பாண்டவர்கள் திரௌபதியுடன் வடதிசை நோக்கி சென்றனர். இந்திரசேனனும் {பாண்டவர்களின் தேரோட்டி} மற்றவர்களும், தங்கள் பதினான்கு பணியாட்களுடனும், தங்கள் மனைவியருடனும் தங்கள் வேகமான ரதங்களில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் வெளியேறியதை அறிந்த குடிமக்கள் துயரம் கொண்டு பீஷ்மரையும், விதுரனையும், துரோணரையும், கௌதமரையும் {கிருபரையும்} நிந்திக்கத் தொடங்கினர். அவர்கள் {குடிமக்கள்} ஒருவரை ஒருவர் சந்தித்து அச்சமற்ற வகையில் இப்படிப் பேசிக் கொண்டனர்.
"ஐயோ, சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரால் ஆதரிக்கப்படும் தீய துரியோதனன் நாட்டை விரும்பியதால், நம்முடன் சேர்ந்து, நமது குடும்பங்களும், நமது வீடுகளும் போயிற்று. பாவிகளால் ஆதரிக்கப்படுபவனும், பாவம் நிறைந்தவனுமான இந்தப் பாவி {துரியோயதனன்) நாட்டை விரும்பியதால் நமது குடும்பங்கள், நமது (மூதாதையர்கள்) பொருள்கள், நமது அறம், பொருள் அனைத்தும் போயிற்று. இவர்கள் {பாண்டவர்கள்} இல்லாத இடத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்கும்? பெரியவர்கள் அனைவரையும் அவமதிக்கும் துரியோதனன், நன்னடத்தையைத் துறந்து, தன் ரத்தச் சொந்தங்களுடன் சண்டையிடுகிறான். பேராசையும், காரியவாதமும் கொண்ட அந்த வீணன் இயற்கையிலேயே கொடுமைக்காரனாகவும் இருக்கிறான். துரியோதனன் பூமிக்கு அதிபதியாக இருந்தால், இந்த மொத்த பூமியும் அழியும். ஆகையால், நாம், கருணை கொண்டவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களுடன் உடனே செல்வோம். அவர்கள், தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், எப்போதும் எதிரிகளை வெல்பவர்களும், அடக்கமும் புகழும் கொண்டவர்களுமாவர். நற்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களுமாவர். ஆகையால் அவர்களுடனே செல்வோம்." என்றனர்.
வைசம்பாயனர் சொன்னார், "இதைச் சொல்லிக் கொண்ட குடிமக்கள், பாண்டவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களைச் சந்தித்து, கரம் குவித்து, குந்தி மற்றும் மாத்ரியின் மகன்களான அவர்களிடம்,
"அருளப்பட்டிருப்பீராக. எங்களைத் துயரில் விட்டு விட்டு நீங்கள் எங்கே செல்வீர்கள்? நீங்கள் எங்கல்லாம் செல்வீர்களோ அங்கெல்லாம் நாங்களும் உங்களைத் தொடர்வோம்! கடும் எதிரிகளால் வஞ்சகமாக நீங்கள் வீழ்த்தப்பட்டீர்கள் என்பதை அறிந்ததும் நாங்கள் துயரை அடைந்தோம். அன்பான குடிமக்களான எங்களையும், உங்கள் நலனை விரும்பி அர்ப்பணிப்புடன் இருக்கும் நண்பர்களையும், நீங்கள் விரும்பியவாறு செயல்கள் செய்தவர்களையும் நீங்கள் கைவிடுவது உங்களுக்குத் தகாது. குரு மன்னனின் {துரியோதனனின்} ஆளுகைக்குள் இருந்து உறுதியான அழிவைச் சந்திக்க நாங்கள் விரும்பவில்லை. மனிதர்களில் காளைகளே, நன்மையிலும் தீமையிலும் சம்பந்தம் வைப்பதால் உண்டாகும் நல்லவற்றையும் தீயவற்றையும் குறித்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். துணி, நீர், நிலம், எள் விதைகள் ஆகியவை மலர்களின் சம்பந்தத்தால் நறுமணம் வீசுவதைப் போல, குணங்களும் தாம் சேரும் பொருளைக் கொண்ட ஒரு தயாரிப்பே ஆகும். முட்டாள்களுடனான சேர்க்கை, மாயையால் சூழ்ச்சியில் சிக்கும் மனதையே உருவாக்கும். நல்லவர்கள் மற்றும் ஞானமுள்ளவர்களுடனான தினசரி சேர்க்கை அறப்பயிற்சிக்கு வழிவகுக்கும். ஆகையால், பேறு பெற விரும்புபவர்கள், ஞானமுள்ளோர், முதியோர், நேர்மையானோர், சுத்தமான நடத்தையுள்ளோர், தவத்தகுதி உடையோர் ஆகியோருடனே பழக வேண்டும். (வேதங்களில்) அறிவு, நற்பிறப்பு, செயல்கள் ஆகிய மூன்றைக் கொண்டவர்களுக்காக ஒருவர் காத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுடன் பழகுவது, சாத்திரங்களை (சாத்திரக் கல்வியை விட) விட மேன்மையானது. அறச்செயல்கள் அற்றவரும், அறச்செயல்கள் செய்து நேர்மையாக இருப்பவர்களுடன் பழகுவதால், அதே அறத்தகுதியை அடைந்துவிட முடியும். பாவிகளுடன் பழகுவதால் நாமும் பாவியாகவே ஆவோம். நேர்மையற்றவர்களைத் தொடுவதாலோ, பார்ப்பதாலோ, பேசுவதாலோ அல்லது எந்த சம்பந்தம் கொண்டாலும், நமது அறத்தை அழித்துக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அந்த மனிதன், புனிதமான மனதை அடையவே முடியாது. அடிப்படைகளுடன் சம்பந்தப்படுவதால் புரிதல் ஏற்படுகிறது, அதேபோல பாகுபாடு உடையவர்களுடன் சம்பந்தப்படுவதால் பாகுபாடே ஏற்படும். அதே வேளையில் நல்லவர்களுடனான சேர்க்கை அதிக நன்மையையே கொடுக்கும். அறத்தகுதிகளுக்கு ஊற்றுக்கண்ணாக, மக்களால் கருதப்படுவையும், நன்னடத்தை உள்ளவர்களால் ஏற்கப்படுபவையும், வேதங்களால் கொண்டாடப்படுபவையும், உலகத்தில் பேசப்படுபவையுமான அத்தனை குணங்களும், உலக செல்வங்களும், புலன்நுகர் இன்பங்களும் உங்களில் தனித்தனியாகவும் மொத்தமாகவும் இருக்கிறது. ஆகையால், இவ்வளவு குணங்களையும் கொண்டிருக்கும் உங்களுக்கு மத்தியில், எங்கள் நன்மையைக் கருதியே நாங்கள் வாழ விரும்புகிறோம்" என்றனர்.
யுதிஷ்டிரன், "நாங்கள் அருளப்பட்டவர்களே, அந்தணர்களைத் தலைமையாக கொண்டிருக்கும் மக்களாகிய நீங்கள், எங்கள் மீது பாசத்துடனும், கருணையுடனும் இருப்பதால், இல்லாத தகுதிகளைக் கொண்டு எங்களைப் புகழ்கிறீர்கள். இருப்பினும், எனது தம்பிகளுடன் கூடிய நான், உங்களை ஒன்று செய்யச் சொல்வேன். எங்களிடம் கொண்ட பாசத்தாலும், எங்கள் மீது கொண்ட கருணையாலும் நிலைமாறி நீங்கள் நடக்காதீர்கள்! எங்கள் பாட்டானாகிய பீஷ்மர், மன்னர் (திருதராஷ்டிரன்), விதுரர், எங்கள் தாய் {குந்தி} மற்றும் என் நலம் விரும்பிகள் அனைவரும் ஹஸ்தினாபுர நகரத்திலேயே இருக்கிறார்கள். ஆகையால், எங்கள் நல்வாழ்வை நீங்கள் விரும்பினால், துயரத்தாலும் வலிகளாலும் கூடியிருக்கும் அவர்களை (அன்புடனும் அக்கறையுடனும் காத்துப்) பேணுவீராக. எங்கள் பிரிவால் துயருற்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே! திரும்பிச் செல்லுங்கள். உங்களையே சாட்சிகளாக நம்பி நாங்கள் விட்டுச் செல்லும் எங்கள் உறவினர்கள் மீது உங்கள் இதயங்கள் மென்மையாக இருக்கட்டும். நீங்கள் இப்படிச் செய்தால், நான் விரும்பியதைச் செய்தவர்கள் ஆவீர்கள். இதுவே நீங்கள் எனக்குக் காட்டும் மரியாதையாகும்", என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "நீதிமானான யுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட மக்கள் ""ஐயோ, ஓ மன்னா!" என்று பெரிதாக ஒப்பாரி வைத்தனர். துக்கத்தில் மூழ்கிய அவர்கள், பிருதையின் {குந்தியின்} மகன்களுடைய அறச் செயல்களை நினைவு கூர்ந்து, விருப்பமில்லாமலேயே பாண்டவர்களை விட்டு அகன்றனர்.
குடிமக்கள் தொடர்வது நின்றதும், பாண்டவர்கள் தங்கள் ரதங்களில் ஏறி கங்கைக் கரையில் உள்ள பிரமாணா என்று அழைக்கப்பட்ட பெரும் ஆல மரத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த நாளின் முடிவில் அந்த ஆல மரத்தை அடைந்த பாண்டுவின் வீர மகன்கள், புனித நீரைத் தொட்டு தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இரவை அங்கேயே கழித்தனர். பெரும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} நீரை மட்டுமே உண்டு அந்த இரவைக் கழித்தனர். வேள்வி செய்பவர்களும், வேள்வி செய்யாதவர்களும் என இரு பிரிவைச் சேர்ந்த குறிப்பிட்ட அந்தணர்களும், பாண்டவர்கள் மீதிருந்த பாசத்தால் அவர்களையே தொடர்ந்து சென்று அவர்களுடன் அன்றைய இரவைக் கழித்தனர். பிரம்மத்தை உச்சரிக்கும் அந்த அந்தணர்களால் சூழப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களுக்கு மத்தியில் பிரகாசமாக இருந்தான். அந்த மாலைப் பொழுதை அழகாகவும், கடுமையானதாகவும் ஆக்க புனித நெருப்பை மூட்டிய அந்தணர்கள் வேதங்களை உச்சரித்தனர். அந்த அந்தணர்களில் முதன்மையானவர்கள், குருக்களின் சிறந்த மன்னனை {யுதிஷ்டிரனை} ஆதரித்து அங்கேயே இருந்தனர்.
![]() |
![]() |
![]() |