Friday, September 19, 2014

கண்ணன் செயல்கள் - சூழ்ச்சிகளா? தர்மமா?

"தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?" என்று தமிழ்வள்ளுவர் முழுமஹாபாரத விவாதமேடையில் கேட்ட கேள்வி மூலம் பல ஆய்வுகள் நமக்குப் பதிலாகக் கிடைக்கின்றன.  இது சம்பந்தமாக முன்பு வந்த உரையாடல்களை ஏற்கனேவே நமது வலைப்பூவின் முகப்பில் வெளியிட்டிருக்கிறேன்.

இப்போது தாமரை என்பவர் புது கோணத்தில் இந்தக் கேள்விக்கான பதில்களைத் தந்திருக்கிறார்.  விளக்கங்கள் அருமையாக இருந்தன. அவற்றை அனைவரும் அறிவதற்காக முகப்பில் இடுகிறேன்.


இனி நண்பர் தாமரையின் பதில்கள்........................................


ஒரு நிகழ்ச்சியை தனிப்படுத்திப் பார்த்து தர்ம அதர்மங்களை நிர்ணயிக்க முடியாது.

1. பீஷ்மர் வதம்.
-------------------------


சிகண்டியுடன் அனைவருமே போரிடுகின்றனர். பீஷ்மரைத் தவிர. சிகண்டி பீஷ்மரைக் கொல்வேன் எனச் சபதமிட்டு இருக்கும் ஒருவன். அப்படி இருக்க அவனுடன் போரிட இயலாது என்பது பீஷ்மரின் தர்மம் என்றால், அவர் நிராயுதபாணியாக மரணிப்பதே தர்மமாகும் அல்லவா?

சந்திரவம்சத்தின் இரண்டாவது ஆள், புதன். அவர் ஆண்தன்மையும், பெண்தன்மையும் கலந்தவர்.

அடுத்து வைவஸ்வத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன். ஆக சந்திர குலத்தின் ஆதியே முழுஆண் / முழுப்பெண் வமிசமல்ல. அப்படி இருக்க சிகண்டியுடன் போரிடமாட்டேன் எனப் பீஷ்மர் எப்படிச் சொல்ல இயலும்?

கண்ணன் என்ன செய்திருக்கலாம்? அர்ச்சுனனை, பீஷ்மரைக் காக்க யாரும் வராதபடிக்கு பீஷ்மர் சிகண்டியைத் தனிப்படுத்தச் சொல்லியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், பீஷ்மரின் அங்கங்கள் சிகண்டியின் வாளால் துண்டிக்கப்பட்டு அவர் முண்டமாகக் கிடத்தப்பட்டிருக்கலாம்.

சிகண்டியின் எதிரே ஆயுதங்களைத் துறக்கும் பீஷ்மர், அதன் பிறகு ஆயுதம் ஏந்தும் உரிமையைத் தர்மப்படி இழக்கிறார். போரில் ஆணாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகண்டியை எதிர்த்துப் போராடததால், அவன் அறைகூவலை ஏற்காததால், அவர் வேறு எவருடனும் போரிடக் கூடாது.

இப்படிப்பட்டக் கேவலமெல்லாம் பீஷ்மருக்கு சேரவிடாமல், அர்ச்சுனன் அம்புகள் அவரை அம்புப்படுக்கையில் படுக்க வைத்தது, அவருக்கு கிருஷ்ணன் அளித்த மரியாதை ஆகும். அதை அர்ச்சுனனின் வீரம் என்று சொல்ல இயலாதுதான். ஆனால் அதர்மம் எனச் சொல்லக்கூடாது.

குருஷேத்திர யுத்தத்தை விட மிகப் பெரிய யுத்தம் பீஷ்மரின் மனதில் நடந்தது என்பதே உண்மை.

பீஷ்மரை பொறுத்தவரை அவர் அஸ்தினாபுரத்து அரசன் உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் . அந்த ஒரே காரணத்தினால் அவர் துரியோதனனுக்காக போரிட்டார்.

பீஷ்மரின் மரண இரகசியம் ஒன்றும் அவ்வளவு இரகசியமல்ல. சிகண்டிக்குத் தெரிந்ததுதான். கண்ணனுக்குத் தெரிந்ததுதான்.  சிகண்டி போருக்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் துரோணர் அசுவத்தாமன், கிருபர், சல்லியன், துச்சாதனன், துரியோதனன், பகதத்தன், கிருதவர்மன், பூரிசிரவசு, விகர்ணன், சுசர்மன இப்படி துரியோதனின் படையில் இருந்த எவரும் அர்ச்சுனன் பீஷ்மரை நெருங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். தர்மனைச் சிறைபிடிக்க அர்ச்சுனனை விலக்கியது போல் பீஷ்மரின் மரணமான சிகண்டியையும், துரோணரின் மரணமான த்விட்டத்வீமனையும் குறிவைத்து யுத்தம் நடத்த ஆரம்பித்திருக்கலாம். அதனை துரியோதனன் செய்யவில்லை.

தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.

கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.

9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக   நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை,  நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார்.  அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுயவாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..

இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது.  தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.

துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார். போரில் மட்டும்தான் தர்மன் எதிரி, பாசறையில் பேரன்தான். அவனுக்கு எதையும் செய்யும் உரிமை பீஷ்மருக்கு உண்டு.

ஆனால் சிகண்டி அர்ச்சுனன் தேரில் உடன் வரவேண்டும் என பீஷ்மர் சொல்லவில்லை. அது கிருஷ்ணனின் திட்டம். சிகண்டியை அஸ்வத்தாமனோ, துரோணரோ, கிருபரோ சல்லியனோ மடக்கி விடாமல் இருக்க செய்த திட்டம் அது.

பீஷ்மரின் தெளிவுதான் அவரை விஷ்ணு சகஸ்ர நாமம் எழுத வைத்தது.

பீஷ்மர் கிருஷ்ணனை மரியாதையான இறப்பைக் கொடு எனக் கேட்டார். அந்த இறப்பினைக் கிருஷ்ணன் அளித்தார்.

இது பீஷ்மர் விரும்பிய மரணம் என்பதால் இதை அதர்மத்தில் சேர்க்கவே இயலாது.


துரோண வதம்
------------------------
--

துரோணர் ஒரு அந்தணர். அந்த அந்தணர் தன் புத்திரப்பாசத்தினால் தன் நெறி மாறுகிறார். பாஞ்சால மன்னனிடம் அவமானப்பட்ட பிராம்மணர் தன் நெறிமறந்து அஸ்தினாபுரத்திற்கு அடிமையாகிறார். தன் நெறியை கோபத்தினால் விட்டார். அதற்குக் காரணம் அவரது புத்திரபாசம்.

அந்தணரான அவர், அரசனுக்கு அடிமையானார். துருபதனை வெல்ல வேண்டும் என்றால் அவரே போரிட்டிருக்கலாம். அப்போது அவர் போரிடவில்லை. அப்போது ஆயுதம் ஏந்தாதது என்ன தர்மம்? தன் ஷத்ரிய மாணவர்களைக் கொண்டு துருபதனை வென்று பாதி நாட்டைப் பறித்து அவனை அவமானப்படுத்தினார். அதற்காக தன்னையே விற்று விட்டார். அன்று தன் பாசத்துக்காக துருபதனுக்கெதிராக வில் உயர்த்தி இருந்தால் அவர் இவ்வளவு பெரிய சங்கடத்தில் மாட்டி இருக்க மாட்டார். ஆனால் தன் மானத்துக்காக ஏந்தாத அஸ்திரங்களை எதற்காக ஏந்தினார்? தன் மகனுக்காகச் செய்யாத போரை பின்னர் தன் மகனுக்காகவே செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

அவருடைய மரணத்தையும் கண்ணனே திட்டமிடுகிறான்.

அந்த நொடியில் எது தர்மம் என யோசிப்பவன் சாதாரண மனிதன். ஆனால் கண்ணன் அப்படியல்ல. அவன் எது தர்மம் என விளக்கப் பிறந்தவன்.

பிள்ளைப் பாசத்தினால் பிராம்மணத்துவம் விட்டார் துரோணர். இது அவர் பரசுராமருக்குச் செய்யும் துரோகமல்லவா? பரசுராமர் தன்னுடைய ஆயுதங்களை துரோணருக்குத் தானமளித்தார். அந்த ஆயுதங்களை ஷத்ரியர்களைக் காக்க அவர் உபயோகிக்கலாமா?

பிள்ளைப் பாசத்தினாலேயே துரோணரின் பாவங்கள் தொடங்குகின்றன. தொடர்கின்றன. அந்தப் பிள்ளைப் பாசமே அவருக்கு எமனாய் அமைவதுதானே தர்மம்? அதைத்தான் கண்ணன் செய்கிறான்.

துரோணர் எந்த ஒரு மன்னனிடம் சென்றும் பிச்சை கேட்டு தன் மகனை வளர்த்திருக்கலாம். துருபதனிடம் சென்று நட்பைக் காட்டிதான் பசு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தானமாக அளிக்க வேண்டிய கல்வியைத்  தன்மானம் காக்க விற்றார். இவருக்கு முன் கல்வியை யாரும் விற்றதாக நான் அறிந்ததில்லை. அஸ்வத்தாமனை அரசகுமாரர்களுக்கு இணையாக வளர்க்க ஆசைப்பட்டார்.

பிள்ளைக்காக துருபதனைப் பகைத்து, தன் பிராம்மணத்துவத்தை விட்டு, அடிமையாகி, அதர்மத்தின் பக்கம் நின்றவர்... அதர்மங்கள் தன் கண்ணெதிரே நடந்தபோது கையாலாகதவராக நின்றவர்.

அதுதான் கண்ணனின் தர்மம். பிள்ளைக்காகச் செய்தவர் பிள்ளையின் பெயர் சொல்லியே மாய்க்கப்பட்டார்.

கீதையை ஆழமாகப் படித்து உணர்ந்து கொண்டபின் யுத்த அதர்மங்களை ஆராய்ந்தால் அதில் கண்ணனின் தர்மங்கள் புரியும்.

மற்ற எந்த வகை மரணமும், தர்மத்தை நிலை நாட்டி இருக்காது.


கர்ண வதம்
-------------------
-

கர்ணனின் கவச குண்டலப் பாதுகாப்பால் கர்ணன் தன்னுடைய எல்லாப் போரையுமே வென்றிருக்க வேண்டும். ஆனால் வென்றானா என்பது முதல் கேள்வி. கந்தர்வர்களுடன் தோற்றான், துருபதனிடம் தோற்றான், அர்ச்சுனனிடம் தோற்றான். இதெல்லாம் கவசம் அவன் உடலில் இருந்த காலத்தில்தான்.

ஆக வெற்றி தோல்வி கவசத்தில் இல்லை. குருஷேத்திரப் போருக்கும் அதற்கு முன் நடந்த போர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் குருஷேத்திரப் போர், நீண்ட யுத்தம். மரணிக்கும் வரைப் போராடும் யுத்தமாகும்.

கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தி இருக்கலாம். உலகின் மிக உயர்ந்த மூன்று அஸ்திரங்கள் பிரம்மாஸ்திரம் - நாராயணாஸ்திரம் - பாசுபதாஸ்திரம். அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல வேண்டும் என வெறியுடன் இருந்திருந்தால் பாசுபதாஸ்திரம் உபயோகித்துச் சாய்த்திருக்கலாம். அபிமன்யூ இறந்தவுடனே பாசுபதாஸ்திரம் உபயோகித்திருக்கலாம். ஆனால் அவன் கண்ணனிடம் அவன் தன்னை முற்றிலும் ஒப்படைத்திருந்தான். கண்ணன் சொன்னதை மட்டுமே செய்தான். அதனால் கண்ணனின் தர்மமே அவன் தர்மம் ஆகியது.

கண்ணனே, கர்ணனுக்கான மரணத் திட்டத்தை வகுக்கிறான்.

கர்ணன் செய்த தவறுகள் அத்தனையும் அவன் வீழ்ச்சியில் பங்கெடுக்கின்றன. அதுதான் தர்மம்.

பரசுராமரின் சாபம், பிராம்மண சாபம், பூமாதேவியின் சாபம் இவை அனைத்தும் பலிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை கண்ணன் தலையில் அல்லவா உள்ளது. அவையெல்லாம் உண்டாக்கினான்.

பீஷ்மருக்கு ஞானம் வழங்கி அவர் ஆசையை  நிறைவேற்றினான். துரோணருக்கு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல பிள்ளைப்பாசத்தால் சாகவைத்தான்.

கர்ணனுக்கு?

கர்ணன் என்ன செய்ய ஆசைப்பட்டான்? அர்ச்சுனனை விடத் தான் சிறந்த வில்லாளி என நிரூபிக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதனால்தான் தன் திறமை முழுக்க வெளிப்படும் வரை அவன் சக்தி ஆயுதத்தை உபயோகிக்கவில்லை.  ஆனால் கண்ணன் கடோத்கஜன் மூலம் அதை பறித்துவிட்டார்.

கர்ணனின் ஆசையை நிறைவேற்றவே அவன் ஆயுதம் ஏந்தாக் காலத்தில் அவனைக் கொல்ல உத்தரவிட்டார். அர்ச்சுனனை பாசுபதாஸ்திரம் உபயோகி எனச் சொல்லி இருந்தால் கர்ணனால் என்ன செய்திருக்க முடியும்? கர்ணன் மிகப் பெரிய வில்லாளி என இன்று பேச எதாவது உங்களிடம் மிச்சமிருக்குமா?

பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் அது அதர்மம். ஆனால் இப்படித்தான் சாகவேண்டும் என்பதைத் தர்மம்தான் தீர்மானிக்கிறது.

ஐந்து வீடுகள் கொடுக்க விரும்பாமல்தான் இத்தனைப் பெரிய வீரர்களைப் பலியிட்டான் என துரியோதனனின் மேல் கோபமே வரவில்லை அல்லவா?

கர்ணனுக்கு மாவீரன் என்ற பட்டத்தைக் கண்ணனே அளித்திருக்கிறான். அவன் அதற்காகத்தான் போரிட்டான். அதை அளிக்க இதை விட உன்னதமான வழி இல்லை.


பூரிசிரவசு
----------
--------

தன் உதவிக்கு வருபவர்களைக் காப்பது ஒரு போர்வீரனின் கடமை.  சாத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்தவன். பூரிசிரவசு மயங்கிக் கிடக்கும் சாத்யகியை கொல்லப் போகிறான். அவனைக் காப்பது அர்ச்சுனனின் கடமை ஆகிறது. அதனால் அம்பை விடுகிறான் அர்ச்சுனன். இது நேரடியாகவே தர்மம்தான். எத்தனையோ முறை துரியோதனன், கர்ணன், துரோணர் போன்றோரே மற்றவர்களினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

பகதத்தன் சிகையை அவிழ்த்தது
-------------------------------------------------------


இதுவும் நேரடி யுத்த தர்மமே.. இது தர்மமில்லையெனில் ஒருவனின் ஆயுதத்தை அழித்தவுடன் அவனைக் கொல்லவே இயலாது. அப்புறம் எல்லோரையும் மல்யுத்தம் புரிந்துக் கழுத்தை நெறித்துதான்  கொல்ல வேண்டும். அர்ச்சுனனின் நாணைக் கர்ணன் எத்தனையோ முறை அறுத்தாலும் அடுத்த அம்பு தொடுப்பதற்குள் நாணேற்றி அம்பு விடுவான் அர்ச்சுனன். சாரதி, கொடி, இரதம், குதிரை, யானை இப்படி அனைத்தும் போரில் நொறுக்கப்படும். பகதத்தன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட போது அவன் முடி அவன் கண்ணை ஒரு வினாடி மூடுவது யுத்த நியதியின் பாற்பட்டதே ஆகும்.

பீமன் துரியோதனின் தொடையுடைத்தது
--------------------------------------------------------------------


இதை கண்ணன் வாயிலாக வியாசரே விளக்கி இருக்கிறார். எப்பொழுது துரியோதனன் போர்களத்தை விட்டு அகன்றானோ அப்போதே அவன் தோற்றுவிட்டான். அதற்கு மேல் நடந்தது அறத்தின் வேலை மட்டுமே. ஒரு பெண்ணை இராஜசபையில் துகிலுரித்து தன் மடியில் அமரச் சொன்னதிற்கு தண்டனை.

தன்னுடைய அனைத்து உறுப்புகளையும் வைரம்பாய்ச்சி இரும்பாக்கிக் கொள்ள முடிந்த துரியனால் தன் தொடையை வைரம் பாய்ச்சிக் கொள்ள இயலாததான் காரணம் அதுதான்.


இதற்கு முன்னரான நிகழ்வைக் கூர்ந்து கவனியுங்கள்.

துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.

அவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான்.

நடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.

பீமன் - துரியோதனனுடன் மல்யுத்தம் செய்திருக்கலாம். அதில் தொடையை முறித்திருக்கலாம். அது பீமனின் வெற்றியாக இருந்திருக்கும். ஆனால் அது தர்மத்தின் வெற்றியாக இருந்திருக்குமா?

கண்ணன் பீமனைப் பார்த்து துரியோதனனைப் பார்த்து மல்யுத்ததிற்கு அழை எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. துரியோதனின் பலமான கதையுத்ததிற்கு பீமன் அழைக்கிறான்.

துரியோதனின் பலம் கதையுத்தம். அதிலும் அவனின் பலவீனமானத் தொடைகள் வெளிப்படாதது அதில்தான். அதனால்தான் அவன் அந்த யுத்தத்திற்கு உடன்படுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தர்மத்தின் மீதான கடமை மற்றும் உரிமை உண்டு.

ஒவ்வொரு முறை தர்மத்தின் மீதான கடமையை மீறும்பொழுதும் தர்மத்தின் மீதான உரிமையை இழக்கிறான்.

துரியோதனன் தர்மத்தின் மீது தன் உரிமையை இழந்துவிடுகிறான்.

பீமனைத் தட்டிக் கேட்கும் உரிமையை அனைவருமே இழந்து நிற்கிறார்கள். பலராமன், கிருபர், த்ருதராஷ்டிரன், காந்தாரி, வியாசர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் உட்பட யாருக்குமே உரிமையில்லை.

பீமனா -- அர்ச்சுனனா --- தர்மமா?

தர்மம்தான் மகாபாரத யுத்தத்தின் போக்கையும், அதன் ஒவ்வொரு விளைவுக்கும் காரணமாக அமைகிறது.

தர்மத்தின் இந்த ஆளுமையை ஏற்றுக் கொண்டதால் பாண்டவர்கள் உயர்கிறார்கள்.

கண்ணன் மட்டுமே இந்த தர்ம சூட்சமத்தை அறிந்தவர்.

மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றது பாண்டவர்களோ அல்லது வேறு யாருமோ அல்ல.

தர்மம் வென்றது. தர்மம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

பாண்டவர்கள் எல்லாவற்றையும் அவர்களின் சுயதர்மப்படி செய்து வென்றிருந்தால் தர்மத்தைப் பற்றி யோசிக்காமல் அவர்களின் புகழை மட்டுமே பாடிக் கொண்டிருப்போம்.

எது தர்மம் என்ற கேள்வியே பிறந்திருக்காது. தர்மத்தின் சூட்சுமம் புரிந்திருக்காது. தெளிவுகள் கிடைக்காது.

அதனால்...

அனைத்து வீரம் பலம் சாகசம் இவை எல்லாவற்றையும் விட

தர்மமே உயர்ந்தது என அறிவோமாக. என்னுடைய தர்மம் எனப் பார்க்காமல் பொதுதர்மத்தை அறிந்து செய்வோமாக. அதர்மங்கள் தங்கள் வலையில்  நம்மை வீழ்த்தாமல் பார்த்துக் கொள்வோமாக.

அப்புறம்.. அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் என்ற நாயகன் பட வசனத்தை விட்டுவிட்டு அதர்மம் செய்யக் கூசுவோமாக.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே! 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்