Monday, December 01, 2014

சுசர்மனின் ஏமாற்றம்! விராட பர்வம் பகுதி 33

The discomfiture of Susarma!
Virata Parva - Section 33 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 8)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : போரில் திரிகார்த்தனின் கை ஓங்கியது; திரிகார்த்தன் விராடனை சிறைபிடித்தது; யுதிஷ்டிரன் விராடனை விடுவிக்கச் சொல்லி பீமனுக்கு உத்தரவிட்டது; பீமன் விராடனை மீட்டது; யுதிஷ்டிரன் சுசர்மனை விடுவிக்கச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த உலகமே புழுதியாலும், இரவின் இருளாலும் சூழப்பட்டிருந்தபோது, அவ்விரு அணிகளையும் சேர்ந்த போர்வீரர்கள், படையணிகளை உடைக்காமல், சிறிது நேரம் [1] {போர் செய்யாமல்} நிறுத்தினர். பிறகு, இருளை அகற்றியபடி, இரவை ஒளியூட்டியபடி, க்ஷத்திரிய வீரர்களின் இதயங்கள் மகிழ்வுறும்படி சந்திரன் உதித்தான். அனைத்தும் கண்களுக்குப் புலப்பட்டன. போர் மீண்டும் தொடங்கியது. போராளிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுத்திப் பார்க்காதவாறு அது {அந்தப் போர்} அப்படியே உக்கிரமாய் நடந்தது.

[1] “இங்கே சொல்லப்பட்ட மூலச்சொல், 48 நிமிடங்களுக்கு நிகரான “முகூர்த்தம்” {Muhurtha} என்ற சொல்லாகும். ‘ஏழாவது தேய்பிறை நாளில் {கிருஷ்ணபக்ஷ சப்தமி திதி நாளில்}, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 14 தண்ட காலம் {dandas} வரை, சந்திரன் உதிக்காது’ என்று மிகக் கூர்மையான அறிவுடன் நீலகண்டர் சுட்டிக் காட்டுகிறார். ஒரு தண்டம் என்பது 24 நிமிடங்களைக் கொண்டது. எனவே {இங்கே குறிப்பிடப்படும்} முகூர்த்தம் என்பது சரியாக 48 நிமிடங்களாக இருக்காது. ஆனால் சிறிது நேரம் என்பதே சரியாக இருக்கும்” என்கிறார் கங்குலி.

பிறகு, தனது தம்பியோடு இருந்த திரிகார்த்தர்களின் தலைவனான சுசர்மன், தனது அனைத்து தேர்களின் துணையோடு மத்ஸ்ய மன்னனை {விராடனை} நோக்கி விரைந்தான். தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய அந்த க்ஷத்திரியர்களில் காளையரான (அரச) சகோதரர்கள் {சுசர்மனும் அவனது தம்பியும்}, தங்கள் கைகளில் கதாயுதத்துடன், எதிரியின் {விராடனின்} தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர். கதாயுதங்கள், வாட்கள், குறுவாள்கள், போர்க்கோடரிகள், கூரிய முனைகளும் கடினமும் கொண்ட பராசங்கள் ஆகியவற்றைக் கொண்டு அந்தப் பகைக்கூட்டத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

திரிகார்த்தர்களின் தலைவனான மன்னன் சுசர்மன், தனது சக்தியால் மத்ஸ்யர்களின் முழுப் படையையும் ஒடுக்கி வீழ்த்தியபடி, பெரும் சக்தி கொண்ட விராடனை நோக்கி அவசரமாக விரைந்தான். அந்த இரு சகோதரர்களும் {சுசர்மனும் அவனது தம்பியும்}, விராடனின் இரு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும், பின்புறம் இருந்து அவனைப் {விராடனைப்} பாதுகாத்த படைவீரர்களையும் தனித்தனியாக வெட்டிப் போட்டனர். {அந்த நேரத்தில்} அவன் {விராடன்} தேரை இழந்திருந்தபோது, அவனை {விராடனை} உயிருடன் சிறைபிடித்தனர். பிறகு, பாதுகாப்பற்ற ஒரு காரிகையைத் துன்புறுத்தும் ஒரு காமாந்தகன் போல, அவனைத் {விராடனைத்} துன்புறுத்திய சுசர்மன், விராடனைத் தனது தேரில் ஏற்றி, களத்தை விட்டு விரைந்து சென்றான்.

பலமிக்க விராடன், தேரை இழந்து சிறைபிடிக்கப்பட்டதும், திரிகார்த்தர்களால் முற்றிலும் அலைக்கழிக்கப்பட்ட மத்ஸ்யர்கள், அச்சத்தால் எல்லாப்புறங்களிலும் சிதறி ஓடினர். பீதியுற்ற அவர்களைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், எதிரிகளை அடக்குபவனான பலமிக்கக் கரங்கள் கொண்ட பீமனிடம், “மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களால் தூக்கிச் செல்லப்படுகிறான். ஓ! பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {பீமா}, வலுமிக்க எதிரியிடம் {சுசர்மனிடம்} அவன் {விராடன்} வீழாதவாறு அவனைக் காப்பாற்று. நமது விருப்பங்கள் ஈடேறி, விராடனின் நகரில் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததால், ஓ! பீமசேனா, (அம்மன்னனை {விராடனை} விடுவித்து) அந்தக் கடனை அடைப்பதே உனக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “உமது கட்டளையின் பேரில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அவனை {விராடனை} விடுவிப்பேன். எனது கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி, எதிரியிடம் போரிட்டு, (இன்று) நான் செய்யப்போகும் சாதனையைக் குறித்துக் கொள்ளும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது தம்பிகளுடன் ஒரு புறம் ஒதுங்கி இருந்து, எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகப் பாரும். கதாயுதம் போன்ற பெரும் அடிமரம் கொண்ட இந்தப் பலமிக்க மரத்தை வேரோடு பிடுங்கி, நான் எதிரியை முறிப்பேன்” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதம் கொண்ட யானைப் போல அந்த மரத்தின் மீது கண்களைச் செலுத்திய பீமனைக் கண்ட நீதிமானான வீரமிக்க மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பியிடம் {பீமனிடம்}, “ஓ! பீமா, இத்தகு மூர்க்கமான செயலைச் செய்யாதே. அந்த மரம் அங்கேயே நிற்கட்டும். நீ அந்த மரத்தைக் கொண்டு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட முறையில் இத்தகு சாதனைகளை அடையக்கூடாது. நீ அப்படிச் செய்தால், ஓ! பாரதா {பீமா}, “இவன் பீமன்” என்று மக்கள் உன்னை அடையாளம் காண்பார்கள். எனவே, மனித ஆயுதங்களான, (கணைகளுடன் கூடிய) வில்லையோ, வேலையோ, வாளையோ, போர்க்கோடரியையோ எடுத்துக் கொள். ஓ! பீமா, சில மனித ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன்னை அடையாளம் காணும் வழிகளை யாருக்கும் அளிக்காமல், மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக. பெரும் பலம் கொண்ட இரட்டையர்கள் உனது சக்கரங்களைப் பாதுகாப்பார்கள். ஒன்றுகூடிப் போரிட்டு, ஓ! குழந்தாய் {பீமா}, மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட பெரும் வேகம் கொண்ட பலமிக்கப் பீமன், ஒரு சிறந்த வில்லை விரைவாக எடுத்துக் கொண்டு, மழை நிறைந்த மேகம் பொழிவது போல, அதிலிருந்து {அந்த வில்லில் இருந்து} கணைமழையை விரைவாகப் பொழிந்தான். பிறகு பீமன் பயங்கரச் செயல்கள் புரியும் சுசர்மனை நோக்கிச் சினத்துடன் விரைந்து, “ஓ! நல்ல மன்னா!” என்று அழைத்து, விராடனுக்கு உறுதி கூறிக் கொண்டே [2], திரிகார்த்தர்களின் தலைவனிடம் {சுசர்மனிடம்}, “நில்! நில்!” என்றான். “நில்! நில்! இந்த மோதலில் நடக்கும் இந்தப் பலமிக்கச் சாதனையைச் சாட்சியாகப் பார்” என்று சொல்லித் தனக்குப் பின்னால் யமனைப் போல இருக்கும் பீமனைக் கண்ட வீரர்களில் காளையான சுசர்மன், (அச்சூழ்நிலையைத்) தீவிரமாகக் கருதிப்பார்த்து, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது சகோதரர்களுடன் மீண்டும் திரும்பினான்.

[2] இந்த இடத்தில் வரும் மூலச் சொல் சாம விக்ஷ்யைனம் {Sama Vishyainam} ஆகும். சிறைபட்டிருக்கும் விராடனுக்கு உறுதி கூறும் வகையில் “சாம” {Sama} என்ற சொல்லைப் பீமன் பேசியதாக நீலகண்டர் சொல்கிறார். விக்ஷ்யா என்பதற்கு “உறுதி கூறுதல்”, அல்லது, “பார்வையால் ஆறுதல் அளித்தல்” என்பதே சரியாக இருக்கும்” என்கிறார் கங்குலி

கண்மூடித் திறப்பதற்குள், தன்னை எதிர்த்து வந்த தேர்களைப் பீமன் அழித்தான். விரைவில் மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தேர்களும், யானைகளும், குதிரைகளும், குதிரை வீரர்களும், துணிச்சலும் கடுமையும் கொண்ட வில்லாளிகளும் விராடனின் கண் முன்பாகவே பீமனால் வீழ்த்தப்பட்டனர். கையில் கதாயுதம் கொண்ட சிறப்புமிக்கப் பீமனால் பகையணியின் காலாட்படையும் படுகொலைக்கு ஆளாகத் தொடங்கியது. அந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டு, போரில் கட்டுக்கடங்காத சுசர்மன் தனக்குள்ளாகவே, “இவனது பலமிக்கப் படைக்கு மத்தியில் என் தம்பி ஏற்கனவே பலியாகிவிட்டான் என்றே தெரிகிறது. எனது படை அழிவடையப் போகிறதா?” என்று நினைத்துக் கொண்டான் {சுசர்மன்}.

பிறகு, தனது வில்லின் நாணை காது வரை இழுத்த சுசர்மன் உடலைத் திருப்பி, கூரிய கணைகள் கொண்டு தொடர்ச்சியாக அடிக்க ஆரம்பித்தான். பாண்டவர்கள் தங்கள் தேரில் வருவதைக் கண்ட மத்ஸ்ய வீரர்களைக் கொண்ட பெரும்படை, தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்தி, திரிகார்த்த படைவீரர்களைக் கலங்கடிக்கும் சிறந்த ஆயுதங்களை அடித்தார்கள். மிகுதியாக எரிச்சலடைந்திருந்த விராடனின் மகனும், மிகப்பெரும் பயத்தால் வீரத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான். குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் (எதிரிகளில்) ஆயிரம் {1000} பேரைக் கொன்றான். பீமன் ஏழாயிரம் {7000} பேருக்கு யமனின் வசிப்பிடத்தைக் காட்டினான். நகுலன் தனது கணைகள் கொண்டு எழுநூறு {700} பேரை (அவர்கள் கடைசிக் கணக்கை முடித்து) அனுப்பினான். யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட பலமிக்கச் சகாதேவன் துணிவுமிக்க முன்னூறு {300} வீரர்களைக் கொன்றான்.

இவ்வளவு எண்ணிக்கையில் {எதிரிகளைக்} கொன்ற பலமிக்க வீரனான யுதிஷ்டிரன் ஆயுதங்களை உயர்த்தியபடி சுசர்மனை எதிர்த்து விரைந்தான். தேர் வீரர்களில் முதன்மையான சுசர்மனை நோக்கி விரைவாகச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், அவனைத் தனது கணைகளால் சரமாரியாகத் தாக்கினான். பெரும் கோபம் கொண்ட சுசர்மனும் யுதிஷ்டிரனை ஒன்பது கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் நான்கு கணைகளாலும் துளைத்தான். பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, விரைவான அசைவுகள் கொண்ட குந்தியின் மகன் பீமன், சுசர்மனை அணுகி அவனது குதிரைகளை நசுக்கினான். {சுசர்மனுடைய தேரின்} பின்புறத்தைக் காத்த வீரர்களைக் கொன்ற அவன் {பீமன்}, தனது எதிரியின் தேரோட்டியை தரையில் இழுத்துச் சென்றான்.

{விராடனின்} தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பதில் புகழ்பெற்றவனும் துணிவுமிக்கவனுமான மதிராக்ஷன், தேரோட்டியில்லாமல் திரிகார்த்த மன்னனின் தேர் இருப்பதைக் கண்டு அவனது {பீமனின்} துணைக்கு வந்தான். அதன்பேரில், சுசர்மனின் தேரில் இருந்து குதித்து, பின்னவனின் {சுசர்மனின்} கதாயுதத்தை அடைந்த பலமிக்க விராடன், அவனைப் {மதிராக்ஷனைப்} பின்தொடர்ந்து ஓடினான். முதிர்ந்தவனாக இருந்தாலும், கையில் கதாயுதத்துடன் களத்தில் நகர்ந்த அவனைப் {விராடனைப்} பார்ப்பதற்கு, மிளிர்வு கொண்ட இளைஞனைப் போலத் தெரிந்தது. சுசர்மன் ஓடுவதைக் கண்ட பீமன் அவனிடம் {சுசர்மனிடம்}, “நில். ஓ இளவரசே! இப்படி நீ ஓடுவது உனக்குத் தகாது! இந்த உனது பராக்கிரமத்தைக் கொண்டு, மந்தையை நீ எப்படிப் பலவந்தமாகக் கைப்பற்ற முடியும்? உனது தொண்டர்களையெல்லாம் கைவிட்டு, எதிரிகள் மத்தியில் நீ தாழ்வடையலாமா?” என்று கேட்டான் {பீமன்}.

பிருதையின் மகனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எண்ணிலடங்கா தேர்களுக்குத் தலைவனுமான பலமிக்கச் சுசர்மன் பீமனிடம், “நில்! நில்!” என்று சொல்லித் திடீரெனத் திரும்பி அவனை நோக்கி விரைந்து வந்தான். பிறகு பாண்டுவின் மகனான பீமன், தன்னால் மட்டுமே ஆகக்கூடிய வகையில் தனது தேரில் இருந்து குதித்து, சுசர்மனின் உயிரை எடுக்க விரும்பி, அலட்சியமாக முன்னேறி வந்தான். திரிகார்த்த மன்னனைப் பிடிக்க விரும்பி அவனை நோக்கி முன்னேறிய பலமிக்கப் பீமசேனன், சிறு மானைப் பிடிக்க விரைந்து வரும் சிங்கம் போல அவசரமாக விரைந்து வந்தான். அப்படி அவசரமாக முன்னேறி வந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன், கோபத்தில் சுசர்மனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி, கீழே எறிந்து தரையில் மோதச் செய்தான். துயரத்தால் அவன் {சுசர்மன்} அழுது கிடந்த போது, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன் அவனது தலையில் எட்டி உதைத்தான். பிறகு தனது {பீமனின்} முட்டியை அவனது {சுசர்மனின்} மார்பில் வைத்து {அழுத்தி}, அவனைக் கடுமையாக அடித்தான். அந்த உதைகளால் மிகவும் துன்பப்பட்ட திரிகார்த்த மன்னன் {சுசர்மன்} உணர்வற்றுப் போனான்.

தேரை இழந்த திரிகார்த்தர்களின் மன்னன் {சுசர்மன்} இப்படிப் பிடிப்பட்டதும், மொத்த திரிகார்த்தப்படையும் பீதியடைந்து எல்லாத் திக்குகளிலும் ஓடின. நோன்பு நோற்றலும், பணிவும் கொண்ட பாண்டுவின் வலிமைமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி சுசர்மனை வீழ்த்தி, பசுக்களையும், அனைத்து வகைச் செல்வங்களையும் மீட்டு, விராடனின் துயரை அகற்றி, அந்த ஏகாதிபதியின் {விராடனின்} முன்பு ஒன்றாகக் கூடி நின்றனர்.

பிறகு பீமசேனன், “தீய செயல்களைச் செய்யும் இந்த இழிந்தவன் என்னிடம் இருந்து உயிரோடு தப்பத் தகாதவன். ஆனால், என்ன செய்ய? மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் கருணை கொண்டவராக இருக்கிறாரே!” என்று சொன்னான். பிறகு தூசு படிந்த தரையில் உணர்வற்றுக் கிடந்த சுசர்மனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அவனை இறுகக் கட்டிய பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, அவனைத் தனது தேரில் ஏற்றி, களத்திற்கு மத்தியில் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமன் சுசர்மனை அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்} காட்டினான். பீதியடைந்திருக்கும் சுசர்மனைக் கண்ட மனிதர்களில் புலியான மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே போர்க்களத்தின் ரத்தினமான பீமனிடம், “மனிதர்களில் இழிந்த இவன் விடுதலை பெறட்டும்” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட பீமன், பலமிக்கச் சுசர்மனிடம், “ஓ! பாதகா {சுசர்மா}, நீ வாழ விரும்பினால், எனது இந்தச் சொற்களைக் கேள். அனைத்துச் சபைகளிலும், மனிதர்களின் கூடுகைகளிலும் “நான் ஓர் அடிமை” என்று நீ சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனக்கு உயிரை அளிப்பேன். தோற்றவர்களுக்கு, நிச்சயமாக இதுவே விதியாகிறது” என்றான். அதன் பேரில் மூத்த சகோதரன் {யுதிஷ்டிரன்}, பீமனிடம் பாசமாக, “நீ எம்மை அதிகாரம் கொண்டவராகக் கருதினால், இந்தப் பொல்லாதவனை விடுவித்துவிடு. இவன் ஏற்கனவே மன்னன் விராடனின் அடிமையாகிவிட்டான்” என்றான். பிறகு சுசர்மனை நோக்கித் திரும்பிய அவன் {யுதிஷ்டிரன்}, “நீ விடுதலையடைந்தாய். சுதந்திர மனிதனாக நீ செல்லலாம். இனியும் இவ்வழியில் செயல்படாதே” என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}. 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்