Monday, March 30, 2015

பீமனை நினைத்தால் என் இதயம் நடுங்குகிறது? - உத்யோக பர்வம் பகுதி 51

My heart trembleth to remember Bhima? | Udyoga Parva - Section 51 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 10) {யானசந்தி பர்வம் - 4}
பதிவின் சுருக்கம் : பீமனைக் குறித்த தனது அச்சத்தைத் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் தெரிவிப்பது; பீமனின் தோற்றத்தையும் குணத்தையும் சொல்வது; சிறு வயதிலிருந்தே பீமன் துரியோதனனிடம் கொண்ட பகையைச் சொல்வது; இந்த ஆபத்து நேர்ந்ததற்கான காரணங்களைச் சொல்லி வருந்துவது; பீமன் தனது மகன்கள் அனைவரையும் கொல்வான் எனச் சொன்னது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “உன்னால் பெயர் சொல்லப்பட்ட அனைவரும் உண்மையில் பெரும் வீரர்களே. ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்தாலும் கூடத் தனியனான பீமன் ஒருவனுக்குத்தான் சமமாக இருப்பார்கள்.


ஓ! குழந்தாய் {சஞ்சயா}, வெஞ்சினம் கொண்ட பீமனிடம் நான் கொண்ட அச்சம், கோபமுற்றிருக்கும் புலியிடம் கொழுத்த மான் கொண்டதைப் போன்று மிகப் பெரியது. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, சிங்கத்தைக் கண்டு அஞ்சும் பிறவகை விலங்கைப் போல விருகோதரனுக்கு {பீமனுக்கு} அஞ்சி, ஆழமான வெப்பப் பெருமூச்சுகளைவிட்டபடி எனது இரவுகள் அனைத்தையும் தூக்கமின்றிக் கடத்தி வருகிறேன்.

வலிய கரங்களும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான சக்தியும் கொண்டவனுமான அவனைப் {பீமனைப்} போரில் தாக்குப்பிடிக்க {எதிர்கொள்ளக்} கூடிய ஒருவனைக்கூட நான் இந்த மொத்தப் படையிலும் காணவில்லை.

வெஞ்சினம் கொண்டவனும், தீர்மானமான பகைமை கொண்டவனும், கோபவெறி கொண்டவனும், சாய்ந்த பார்வைகளை வீசுபவனும், இடிபோன்ற குரலில் பேசுபவனுமான அந்தக் குந்தி மற்றும் பாண்டுவின் மகன் {பீமன்} விளையாட்டுக்குக் கூடச் சிரிக்க மாட்டான்.

பெரும் மூர்க்கமும், பெரும் துணிவும், நீண்ட கரங்களும், பெரும் வலிமையும் கொண்ட அவன் {பீமன்}, போர்க்களத்தில், எனது மூட மகன்களில் ஒருவனைக் கூட உயிரோடு விட மாட்டான். உண்மையில், போர்க்களத்தில் தன் கதாயுதத்தைச் சுழற்றும் குருக்களில் காளையான அந்த விருகோதரன் {பீமன்}, கைகளால் கதாயுதம் கொண்ட இரண்டாவது யமனைப் போல, கனத்த ஆபத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் எனது மகன்கள் அனைவரையும் கொன்றுவிடுவான்.
கதை+ ஆயுதம் = கதாயுதம்
அந்தணச் சாபம் போல உயர்த்திப் பிடிக்கப்பட்டதும், எஃகால் செய்யப்பட்டதும், எட்டுப் பக்கங்களைக் கொண்டதுமான அவனது பயங்கரக் கதாயுதத்தை இப்போதும் நான் {மனதால்} காண்கிறேன்.

மான்மந்தைக்கு {மான்கூட்டத்திற்கு} மத்தியில் பெரும் வலிமை கொண்ட ஒரு சிங்கத்தைப் போல, எனது துருப்புகளுக்கு மத்தியில் பீமன் உலா வருவான். (அவனது சகோதரர்களுக்கு மத்தியில்) அவன் {பீமன்} மட்டுமே எப்போதும் என் மகன்கள் மீது தனது பலத்தைக் கொடூரமாகக் காட்டியிருக்கிறான். பெருவேட்கையுடன் {பெரும் பசியுடன்} உணவை உண்பவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான அவன் {பீமன்}, குழந்தைப் பருவம் முதலே என் பிள்ளைகளிடம் பகைமையுடன் நடந்து வருகிறான்.

குழந்தைப் பருவத்திலேயே கூட, அவனுடன் {பீமனுடன்} (விளையாட்டாக) சண்டையிடுகையில், துரியோதனனும் எனது பிற மகன்களும் யானை போன்ற அந்தப் பீமனால் எப்போதும் தரையில் அடிக்கப்பட்டார்களாகையால் (அதை நினைத்துப் பார்க்கையில்) எனது இதயம் நடுங்குகிறது. ஐயோ, அவனது {பீமனது} வலிமையால் எனது மகன்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டார்களே, பயங்கர ஆற்றல் கொண்ட அந்தப் பீமனே இந்த முறிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறான்.

கோப வெறி கொண்டவனான பீமன், படையின் முன்னணியில் நின்று போரிட்டு, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களாலான எனது மொத்த படையையும் விழுங்குவதை இப்போதுகூட நான் {மனதால்} காண்கிறேன். ஆயுதங்களில் துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான அவனது {பீமனின்} வேகம் காற்றின் வேகத்துக்கு நிகரானது. கோபத்தில் மகேஸ்வரனைப் {சிவனைப்} போன்றவனும், போரில் வெஞ்சினமும், பயங்கரமும் கொண்டவனுமான அந்த வீரனைக் {பீமனைக்} கொல்ல, ஓ! சஞ்சயா, இங்கே எவனிருக்கிறான்?

இத்தகு சக்தியைக் கொண்டவனும், பகைவர்களைக் கொல்பவனுமான அவனால் {பீமனால்}, அப்போதே எனது மகன்கள் கொல்லப்படவில்லை என்பதையே நான் பெரிய ஆதாயமாக நினைக்கிறேன். முற்காலத்திலேயே, பயங்கர வலிமை கொண்ட ராட்சசர்களையும், யக்ஷர்களையும் கொன்ற அந்தப் போர் வீரனின் {பீமனின்} மூர்க்கத்தனத்தைப் போரில் எந்த மனிதனால் தாக்குப்பிடிக்க முடியும்?

ஓ! சஞ்சயா, அவனது {பீமனது} குழந்தைப்பருவத்திலேயே கூட அவன் {பீமன்} எப்போதும் எனது முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இப்போது எனது தீய மகன்களால் காயப்படுத்தப்பட்டதால், அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, எனது கட்டுப்பாட்டுக்குள் எப்படி இருப்பான்? கொடூரமும், மிகுந்த வெஞ்சினமும் கொண்ட அவன் {பீமன்} உடைந்து போனாலும் போவான், வளைய மாட்டான். {அழியத் துணிவான், வணங்க மாட்டான்}. சாய்ந்த பார்வையும், சுருங்கிய புருவமும் கொண்ட அவன் {பீமன்}, அமைதியடையும்படி, அவனை {பீமனை} எப்படி இணங்கச் செய்ய முடியும்?

வீரமும், ஒப்பற்ற வலிமையும், சிவந்த நிறமும், தெளிவில்லாத உச்சரிப்புகள் கொண்ட பேச்சும், தேன் நிறக் கண்களும், பனைமரம் போன்ற உயரமும் கொண்டவனும், அர்ஜுனனைவிடக் கட்டை விரலளவு உயர்ந்தவனுமான அந்தப் பாண்டுவின் இரண்டாவது மகன் {பீமன்}, வேகத்தில் குதிரைகளையும், பலத்தில் யானைகளையும் விஞ்சுபவனாவான். உருவம், வலிமை ஆகியவற்றைப் பொறுத்தவரை, அவன் {பீமன்} குழந்தைப் பருவத்திலேயே இப்படித்தான் இருந்தான் என்பதை வியாசரின் உதடுகளால் முற்காலத்திலேயே நான் கேட்டிருக்கிறேன்.

பயங்கரமானவனும், கொடூர வலிமை கொண்டவனுமான அவன் {பீமன்}, கோபம் கொண்டால், போரில் தனது இரும்பு கதாயுதத்தைக் கொண்டு, தேர்களையும், யானைகளையும், மனிதர்களையும், குதிரைகளையும் அழித்துப் போடுவான். எப்போதும் வெஞ்சினத்துடனும், மூர்க்கத்துடனும் இருக்கும் அடிப்பவர்களில் முதன்மையான அவனது {பீமனது} விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்ட வகையில், முன்பே அவன் {பீமன்} என்னால் அவமதிக்கப்பட்டிருக்கிறான்.

நேரானதும், எஃகால் ஆனதும், தடித்ததும், அழகிய பக்கங்களைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நூறுபேரைக் கொல்லவல்லதும், எதிரியின் மீது வீசப்படும் போது பயங்கர ஒலியை உண்டாக்குவதுமான அவனது {பீமனது} கதாயுத்தை, ஐயோ, எனது மகன்கள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

ஓ! குழந்தாய் {சஞ்சயா}, உண்மையில் கரைகளற்றதும், அளவிலா ஆழமுடையதும் அம்புகளின் பாய்ச்சல் போல வேகமான நீரோட்டங்கள் நிறைந்ததுமான பீமன் எனும் அணுகமுடியாத கடலை, எந்தப் படகும் இன்றி, ஐயோ, எனது முட்டாள் மகன்கள், கடக்க விரும்புகிறார்களே. உண்மையில் முட்டாள்களாக இருந்து கொண்டு, தங்கள் அறிவைக் குறித்துத் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கும் எனது பிள்ளைகள், ஐயோ, என்னதான் நான் கதறினாலும் எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்களே. தேனை மட்டுமே காணும் அவர்கள் தங்கள் முன்னால் இருக்கும் பயங்கரமான வீழ்ச்சியைக் {பெரும் பள்ளத்தைக்} காணாதிருக்கிறார்களே.

மனித உருவத்தில் இருக்கும் மரணத்துடன் {காலனுடன்_பீமனுடன்} போரிட விரைவோர், சிங்கத்தின் பார்வைக்குள் இருக்கும் விலங்குகளைப் போல, தெய்வத்தால் நிச்சயமாக அழிக்கப்படுவார்கள். முழுதாக நாலு முழ நீளமும், ஆறு பக்கங்கங்கள் கொண்டதும், பெரும் வலிமை மற்றும் மரணத்தீண்டலைக் கொண்டதுமான தனது கதாயுதத்தைப் பொறியில் இருந்த அவன் {பீமன்} வீசினால், ஓ! குழந்தாய் {சஞ்சயா}, அதன் தூண்டுவிசையை எனது மகன்கள் எவ்வாறு தாங்குவார்கள்?

தனது கதாயுதத்தைச் சுழற்றி, அதைக் கொண்டு (பகையணியின்) யானைகளின் தலைகளை உடைத்து, தனது நாவால் வாயின் ஓரங்களை நக்கிக் கொண்டு, நீண்ட மூச்சுகளை இழுத்து விட்டபடி, வலிமைமிக்க யானைகளை எதிர்த்து அவன் {பீமன்} விரைந்து ஓடும்போதும், தன்னை எதிர்த்து வலிமையுடன் விரைந்து வரும் அந்த மதங்கொண்ட விலங்குகளின் பிளிறல்களுக்கு எதிர் கர்ஜனை செய்து கொண்டு, அவன் {பீமன்} விரைந்து வரும்போது, தேர்க்கூட்டங்களின் நெருக்கத்தில் வந்து போர்வீரர்களில் தலைமையானவர்களின் மீது சரியான குறியை வைத்துக் கொல்லும்போதும், சுடர்மிகும் நெருப்பென இருக்கும் அவனிடம் {பீமனிடம்} இருந்து, எனது அணியில் எந்த மனிதன் தப்புவான்?

எனது படைகளை நசுக்கி, அவற்றினூடே பாதையை அமைத்துக் கொள்ளும் அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பீமன்}, நடனம் செய்து கொண்டே, யுகத்தின் முடிவில் ஏற்படப்போகும் உலகளாவிய அழிவைக் காட்சிப்படுத்துவான். மதங்கொண்ட யானை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்களை நசுக்குவதைப் போல, போர்க்களத்தில், விருகோதரன் {பீமன்}, எனது மகன்களின் படையணிகளுக்குள் மூர்க்கமாக ஊடுருவுவான்.

தங்கள் தேர்கள், தேரோட்டிகள், குதிரைகள், கொடிக் கம்பங்கள் ஆகிவற்றை என் போர்வீரர்களை இழக்கச் செய்தும், தேர்மீதும், யானைகளின் முதுகின் மீதும் இருந்து போரிடும் வீரர்கள் அனைவரையும் துன்புறுத்தியும், ஓ! சஞ்சயா, தன் கரைகளில் நிற்கும் பல்வேறு மரங்களைப் பிடுங்கிச் செல்லும் வேகமான நீரூற்றுடைய கங்கையைப் போல, எனது மகன்களின் துருப்புகளைப் போர்க்களத்தில் அந்த மனிதர்களில் புலி {பீமன்} நொறுக்குவான். ஓ! சஞ்சயா, எனது மகன்களும், அவர்களது தொண்டர்களும் மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள மன்னர்களும் என அனைவரும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பாதிப்படைந்து, பல்வேறு திசைகளுக்குப் பறந்தோடுவார்கள். ஓ! சஞ்சயா, முற்காலத்தில் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உதவியைக் கொண்டு, வீரம் மிகுந்த மன்னனான ஜராசந்தனின் அந்தப்புரத்திற்குள்ளேயே நுழைந்து, பூமாதேவியைத் தனது கட்டுக்குள் முழுதும் கொண்டு வந்து, அந்த **மகதத்தின் தலைவனை, அந்தப் பலமிக்க ஜராசந்தனை வீழ்த்தியது இந்தப் பீமனே. பீஷ்மரின் ஆற்றலின் விளைவாகக் கௌரவர்களும், தங்கள் கொள்கையின் {தந்திரத்தின்} விளைவாக அந்தகர்களும் விருஷ்ணிகளும், நற்பேறின் காரணமாக மட்டுமே அவனால் {ஜராசந்தனால்} வீழ்த்தப்படாமல் இருந்தனர். அப்படிப்பட்ட மன்னனை {ஜராசந்தனை}, எந்த ஆயுதங்களுமின்றி, தனது கரங்களின் வலிமையை மட்டுமே கொண்டு பாண்டுவின் வீர மகன் {பீமன்} கொன்றதைக் காட்டிலும் வேறு என்ன அற்புதம் இருக்க முடியும்?

வலிமையான கரங்களைக் கொண்ட பாண்டுவின் வீர மகன் {பீமன்}, எந்த ஆயுதமும் இன்றி, அப்படிப்பட்ட மன்னனை {ஜராசந்தனை} அணுகி, நொடிப் பொழுதில் அவனைக் கொன்றதைவிட வேறு எது அற்புதம் மிகுந்ததாக இருக்க முடியும்?

**மேலும் விபரங்களுக்கு  சபாபர்வத்தில் வரும் கீழ்கண்ட பகுதிகளைப் பார்க்க:
♦ ராஜசூய ஆரம்ப பர்வம் 
14அ ஜராசந்தன் எனும் பெரும் தடை!
14ஆ ஊரைவிட்டு ஓடிய கிருஷ்ணன்
15 எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்!
16 அர்ஜுனன் கொடுத்த ஊக்கம்!
17 ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன்!
18 சுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை!
19 ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை!

♦ ஜராசந்த வத பர்வம் 
20 எதிரிகளை அழிக்க கிளம்பிய மூன்று வீரர்கள்!
21 ஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன்!
22 "அடப்பாவி! நீயா அப்பாவி?" என்றான் கிருஷ்ணன்
23 பதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன்
24 ஜராசந்தனை இரண்டாக ஒடித்த பீமன்



ஆண்டாண்டுகாலமாகத் திரட்டப்பட்ட நஞ்சைக் கொண்டிருக்கும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போல, ஓ! சஞ்சயா, போர்க்களத்தில், தனது கோபமெனும் நஞ்சை எனது மகன்கள் மீது பீமன் உமிழ்வான்! தேவர்களில் முதன்மையானவனான பெரும் இந்திரன், தனது வஜ்ரத்தைக் கொண்டு தானவர்களை அடித்தது போல, தனது கரங்களில் கதாயுதத்தைக் கொண்டிருக்கும் பீமசேனன், எனது மகன்கள் அனைவரையும் கொல்வான்!

எதிர்க்கப்படவோ தடுக்கப்படவோ முடியாதவனும், கடும் உத்வேகமும் சக்திகளும் கொண்டனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, என் மகன்கள் மீது விழுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன். கதாயுதமோ வில்லோ இல்லாமல், தேரோ, கவசமோ இல்லாமல், தனது வெறும் கரங்களைக் கொண்டே போரிடும் இவனது {பீமனின்} எதிரில் எந்த மனிதனால் நிற்க முடியும்?

புத்திசாலியான பீமனின் சக்தியை, பீஷ்மர், இருபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், சரத்வானின் மகனான கிருபர் ஆகியோர் என்னைப் போலவே அறிந்திருக்கின்றனர். உன்னதமானோரின் {ஆரியர்களின்} பயிற்சியை {நடத்தையை} அறிந்த இந்த மனிதர்களில் காளைகள் {இந்த மூவரும்}, போர்க்களத்தில் மரணத்தை விரும்பி, நமது படையின் முன்னணியில் தங்கள் நிலையை அமைத்துக் கொள்வார்கள்.

போர்க்களத்தில் பாண்டவர்களின் வெற்றியை {மனதால்} கண்டாலும், நான் எனது மகன்களை இன்னும் தடுக்காமல் இருக்கும்படியால், எல்லா இடங்களிலும், குறிப்பாக ஆண்களின் வழக்கில் விதி சக்தி வாய்ந்தது என்றே ஆகிறது. எனது இந்த வலிமைமிக்க வில்லாளிகள் {பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகிய மூவரும்}, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பழங்காலத்துப் பாதையில் நடக்க விரும்பி, உலகப்புகழை கவனத்தில் கொண்டு, போர்க்களத்தில் தங்கள் உயிர்களையே கூட விடுவார்கள்.

ஓ! குழந்தாய் {சஞ்சயா}, எனது மகன்கள் எப்படிப் பீஷ்மருக்குப் பேரன்களும், துரோணருக்கும், கிருபருக்கும் சீடர்களும் ஆவார்களோ, அதே போலப் பாண்டவர்களும் இருப்பதால், அவர்கள் அனைவரும் {என் மகன்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும்} இந்த வலிமைமிக்க வில்லாளிகளுக்கு ஒன்றே. ஓ! சஞ்சயா, நாம் இந்த மூன்று மதிப்பிற்குரியவர்களுக்கும் செய்யும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறிய சேவைகளால், தாங்கள் கொண்டுள்ள உன்னத மனநிலையின் காரணமாக அதை {அவற்றுக்குப் பதிலுதவிகளை} அவர்கள் நிச்சயம் திருப்பித் தருவார்கள்.

ஆயுதங்களை எடுத்து, க்ஷத்திரிய பயிற்சிகளை {நடத்தைகளை} மேற்கொள்ள விரும்பும் க்ஷத்திரியர்களுக்குப் போர்க்களத்தில் மரணம் என்பது உண்மையில் நன்மை, தகுதி {புண்ணியம்} ஆகிய இரண்டையும் தரும் என்று சொல்லப்படுகிறது.

எனினும், பாண்டவர்களுக்கு எதிராகப் போரிடப்போகும் அனைவருக்காகவும் நான் அழுகிறேன். முன்பே விதுரனால் முன்னறிவோடு காணப்பட்ட அந்தப் பெரும் ஆபத்து இப்போது வந்திருக்கிறது. ஓ! சஞ்சயா, அறிவால் துயரைக் களைய முடியாது என்றே தெரிகிறது; மறுபுறம், துயர் மேலிடும்போது அஃது அறிவை விலக்குகிறது.

உலகக் கவலைகள் அனைத்திலும் இருந்து விடுதலை பெற்றவர்களும், அண்டத்தின் அனைத்து விவகாரங்களில் இருந்து தனியே நின்று அதைக் காண்பவர்களுமான முனிவர்களே கூட, செழிப்பினாலும், வறுமையினாலும் பாதிக்கப்படும்போது, மகன்கள், அரசு, மனைவிகள், பேரர்கள், உறவினர்கள் போன்ற ஆயிரம் காரியங்கள் மீது எனது பற்றை {பாசத்தை} வைத்திருக்கும் நான் வருந்துவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

இதுபோன்ற ஒரு பயங்கரமான ஆபத்தில் சிக்கப்போகும் எனக்கு, என்ன நன்மை காத்திருக்க முடியும்? ஒவ்வொரு சூழ்நிலையையும் நினைத்துப் பார்க்கையில், நான் குருக்களின் அழிவையே உறுதியாகக் காண்கிறேன். பகடை ஆட்டமே, குருக்களின் இந்தப் பெரும் ஆபத்துக்குக் காரணமாகத் தெரிகிறது.

ஐயோ, செல்வத்தில் விருப்பமுள்ள மூடன் துரியோதனனின் மயக்கத்தால் செய்யப்பட்ட பாவம் இஃது; அனைத்தையும் கொண்டு வருவதும் எப்போதும் விரைந்து வருதுமான காலத்தின் விரும்பத்தகாத விளைவே இது {காலத்தின் விபரீதம் இது} என நான் நம்புகிறேன். காலச்சக்கரத்தில் கட்டுண்டிருக்கும் அதன் விளிம்பைப் {சக்கரத்தின் ஓரங்களைப்} போல, நானும் அதில் இருந்த தப்ப இயலாதவனாக இருக்கிறேன்.

ஓ! சஞ்சயா, எனக்குச் சொல். நான் எங்கே செல்வேன்? நான் என்ன செய்வேன்? நான் அதை எப்படிச் செய்வேன்?

இந்த மூடக் கௌரவர்கள் அனைவரும் அழியப் போகிறார்கள். அவர்களுக்கான காலம் வந்துவிட்டது. எனது நூறு மகன்களும் கொல்லப்படும்போது, பெண்களின் புலம்பலை {அழுகுரலை} ஆதரவற்ற நிலையில் நான் கேட்க வேண்டியிருக்கும். ஓ!, எனக்கு மரணம் எப்படி ஏற்படும்?

கோடை காலத்தில் நெருப்பு, காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த புற்களை எரிப்பதைப் போல, கையில் கதாயுதம் கொண்ட பீமன், அர்ஜுனனுடன் சேர்ந்து, எனது பக்கத்தில் உள்ள அனைவரையும் கொல்வான்!

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்