Wednesday, July 08, 2015

புறக்கணிக்கப்பட்ட ருக்மி! - உத்யோக பர்வம் பகுதி 159

Rukmi rejected by the two sides! | Udyoga Parva - Section 159 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 88) {சைனியநிர்யாண பர்வம் - 9}

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களின் முகாமுக்குள் ருக்மி வருவது; ருக்மியின் முன் கதை சுருக்கம்; மூன்று பெரும் விற்களான காண்டீவம், சாரங்கம் மற்றும் விஜயம் ஆகியவற்றின் வர்ணனையும் அவற்றை உடையவர்கள் குறித்த செய்தியும்; ருக்மி அர்ஜுனனிடம் தனது உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்வது; அர்ஜுனன் அவனைப் புறக்கணிப்பது; ருக்மி துரியோதனனிடம் அதே கோரிக்கையுடன் சென்றது; துரியோதனனும் ருக்மியைப் புறக்கணித்தது; போரில் இருந்து விலகிய ருக்மி...

கிருஷ்ணன் ருக்மிணியை கடத்தி வந்த போது பின்தொடர்ந்த அண்ணன் ருக்மி
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் அங்கே பாண்டவப் பாசறைக்குள், பீஷ்மகனின் மகனும், உண்மைநிறைந்த தீர்மானத்தைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ருக்மி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவன் வந்தான். வேறு பெயரில் ஹிரண்யரோமன் என்றும் அழைக்கப்பட்டவனான உயர் ஆன்ம பீஷ்மகன் {ருக்மியின் தந்தை} இந்திரனுக்கு நண்பனாக இருந்தான். போஜர்களின் வழித்தோன்றல்களில் பெரும் சிறப்புமிக்கவனாகவும், தென்னாடு முழுமைக்கும் ஆட்சியாளனாகவும் {தக்ஷிணதேசத்தாருக்குப் பதியுமாக} அவன் {பீஷ்மகன்} இருந்தான்.


கந்தமாதன மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனும், துரோணன் {துருமன்} என்ற பெயரில் அறியப்பட்டவனுமான கிம்புருஷர்களில் சிங்கம் போன்றவனுக்குச் {துருமனுக்கு} ருக்மி சீடனாக இருந்தான். அவன் {ருக்மி}, தனது ஆசானிடம் {துருமனிடம்} நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலை முழுமையாகக் கற்றான். வலிய கரங்களைக் கொண்ட அந்தப் போர்வீரன் {ருக்மி}, காண்டீவம் மற்றும் (கிருஷ்ணனால் தரிக்கப்படும்) சாரங்கத்திற்கு இணையான சக்தி கொண்டதும், பெரும் இந்திரனுக்குச் {மகேந்திரனுக்குச்} சொந்தமானதும், தெய்வீகத் தொழில்நுட்பம் வாய்ந்ததுமான விஜயம் என்ற பெயரைக் கொண்டதுமான வில்லை {துருமனிடமிருந்து} அடைந்தான்.

வருணனுடைய காண்டீவம், இந்திரனுடைய விஜயம் என்று அழைக்கபட்ட வில், பெரும் சக்தி கொண்டதான விஷ்ணுவின் தெய்வீகமான வில் {சாரங்கம்} ஆகிய மூன்றும் சொர்க்கவாசிகளுக்குச் சொந்தமான தெய்வீக விற்களாக இருந்தன. பகை வீரர்களின் இதங்களில் பயத்தை உண்டாக்கும் இந்தக் கடைசி வில் (சாரங்கம்) கிருஷ்ணனால் தரிக்கப்பட்டது. காண்டவத்தை எரித்த நிகழ்வின் போது அக்னியிடம் இருந்து காண்டீவம் என்று அழைக்கப்பட்ட வில்லை இந்திரனின் மகன் (அர்ஜுனன்) பெற்றான். அதே வேளையில், விஜயம் என்ற வில்லைப் பெரும் சக்தி கொண்ட ருக்மி, {கிம்புருஷனான} துரோணனிடம் {துருமனிடம்} இருந்து பெற்றான்.

முரனின் சுருக்குகளை {பாசங்களை} கலங்கடித்து, அந்த அசுரனைத் {முரனைத்} தனது ஆற்றலால் கொன்றவனும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனை வீழ்த்தியவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பதினாறாயிரம் {16,000} பெண்களையும், பல்வேறு வகையான ரத்தினங்கள் மற்றும் கற்களையும், (அதிதியின்) மணிக்குண்டலங்களை மீட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட அந்த அற்புதமான வில்லையும் அடைந்தான்.

மேகங்களின் கர்ஜனைக்கு நிகரான நாணொலி கொண்ட விஜயம் என்ற வில்லை அடைந்த ருக்மி, அச்சத்தால் முழு அண்டத்தையும் கலங்கடித்தபடி பாண்டவர்களிடம் வந்தான். தனது கரங்களின் வலிமையில் செருக்கு கொண்டவனான அந்த ருக்மி, முன்னதாக {முன்பு ஒரு காலத்தில்}, தனது தங்கை ருக்மிணி புத்திமானான வாசுதேவனால் {கிருஷ்ணனால்} கடத்தப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொல்லாமல் திரும்புவதில்லை" என்ற உறுதிமொழியை நோற்று அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றான்.

அழகான கவசங்களைத் தரித்து, பல்வேறு வகையான ஆயுதங்களையும் தரித்து, பெருகியோடும் கங்கையின் நீரோட்டத்தைப் போலப் பாய்வதும், (அணிவகுத்துச் செல்லும்போது) பூமியின் ஒரு மிகப்பெரிய பகுதியை ஆக்கிரமிப்பதுமான நால்வகைப் படைகளின் துணையுடன் வந்தவனும், ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {ருக்மி}, விருஷ்ணி குலத்தோனான வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்தான்.

குருசேத்திரம், இந்திரபிரஸ்தம், உபப்லாவ்யம், 
விராடபுரி, குண்டினம், போஜகடம்
ஓ! மன்னா {ஜனமேஜயா}, தவத்துறவுகளால் அடையத்தக்க அனைத்துக்கும் தலைவனான அந்த விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} வந்த ருக்மி, அவனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டு அவமானம் அடைந்தான். அதன் காரணமாக அவன் {ருக்மி}, (தனது நகரான) குண்டினத்திற்குத் [1] {Kundina} திரும்பவில்லை. பகை வீரர்களைக் கொல்பவனான அவன் {ருக்மி} கிருஷ்ணனால் எந்த இடத்தில் வீழ்த்தப்பட்டானோ, அதே இடத்தில் போஜகடம் {Bojakata} என்ற பெயரில் ஓர் அற்புத நகரத்தைக் கட்டினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் படைகளுடனும், யானைகள் மற்றும் குதிரைகளுடனும் நிரம்பியிருக்ககும் அந்த நகரம், உலகத்தில் அந்தப் பெயராலேயே {போஜகடம் என்ற பெயராலேயே} பரந்து அறியப்பட்டது.

[1] நளனின் தலைநகரம் இதே குண்டினபுரம்தான். நளனின் நாடு நிடத {நைஷாத} நாடு என்று அழைக்கப்பட்டதாக வன பர்வத்தின் நளோபாக்யான பர்வத்தில் நாம் ஏற்கனவே கண்டோம். இங்கே அதே குண்டினத்தைத் தலைநகரமாகக் கொண்ட ருக்மியின் நாடு போஜர்களின் நாடாகச் சொல்லப்படுகிறது.

கவசம் பூண்டு, விற்கள், கையுறைகள், வாட்கள், அம்பறாத்தூணிகள் ஆகியவற்றைத் தரித்திருந்த அந்தப் பெரும் சக்தி கொண்ட வீரன் {ருக்மி}, ஓர் அக்ஷௌஹிணி படையுடன் {உபப்லாவ்யத்தில் இருந்த} பாண்டவ முகாமுக்குள் விரைவாக நுழைந்தான். சூரியனைப் போன்று நிலையான சுடரொளியுடன் இருந்த அந்தப் {பாண்டவப்} பெரும்படைக்குள் நுழைந்த ருக்மி, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்கத்தக்கதைச் செய்ய விரும்பிய பாண்டவர்களிடம் தன்னை அறியச் செய்து கொண்டான். சில எட்டுகள் முன் வந்த மன்னன் யுதிஷ்டிரன், அவனுக்கு {ருக்மிக்குத்} தனது வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். முறையாக வழிபடப்பட்டு, பாண்டவர்களால் புகழப்பட்ட ருக்மி, பிறகு, தனது பதில் வணக்கத்தைத் தெரிவித்து, தனது துருப்புகளுடன் சிறிது நேரம் ஓய்ந்திருந்தான்.

*பிறகு, அவன் {ருக்மி}, கூடியிருந்த வீரர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகனான அர்ஜுனனிடம், "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். நான் உனக்குத் தரும் உதவியை, உனது எதிரிகளால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆற்றலில் எனக்கு நிகரான எந்த மனிதனும் இவ்வுலகில் கிடையாது. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உனது எதிரிகளில் யாரை நீ எனக்கு ஒதுக்குகிறாயோ அவர்களை நான் கொல்வேன். துரோணர், கிருபர், பீஷ்மர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்களில் ஒருவரை நான் கொல்வேன். அல்லது, பூமியின் மன்னர்களான இவர்கள் அனைவரும் ஒரு புறம் நிற்கட்டும். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான் {ருக்மி}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் முன்னிலையிலும், (கூடியிருந்த) ஏகாதிபதிகளும், (முகாமில்) இருந்த அனைவரும் கேட்கும்படியும் இதைச் சொன்னான். பிறகு, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் மீது தனது கண்களைச் செலுத்திய குந்தியின் புத்திசாலி மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, புன்னகைத்தவாறே, நட்பு கலந்த குரலில், "குரு {கௌரவக்} குலத்தில் பிறந்து, அதிலும் குறிப்பாகப் பாண்டுவின் மகனாகப் பிறந்து, எனது ஆசான் என்று துரோணரின் பெயரைச் சொல்லிக் கொண்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாக வைத்துக் கொண்டு, அதையெல்லாம் விடக் காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லையும் கொண்டிருக்கும் நான், அஞ்சுகிறேன் என்று எப்படிச் சொல்வேன்?

ஓ! வீரா {ருக்மியே}, கால்நடைகளைக் கணக்கெடுத்த நிகழ்வில் {கோஷ யாத்ரையின் போது} பலமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்டபோது, எனக்கு உதவி செய்ய எவன் இருந்தான்?

காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்று சேர்ந்து பெரும் எண்ணிக்கையில் வந்த தேவர்களுடனும், தானவர்களுடனும் பயங்கர மோதல் ஏற்பட்டு, நான் அவர்களுடன் போரிடுகையில், எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

மேலும், நிவாதகவசர்களுடனும், காலகேயர்கள் என்று அழைக்கப்பட்ட பிற தானவர்களுடனும் நான் போரிட்டபோது, எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

மேலும், விராட நகரத்தில், எண்ணற்ற குருக்களுடன் நான் போரிட்ட போது, அந்தப் போரில் எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

போரின் நிமித்தமாக ருத்ரன், சக்ரன் {இந்திரன்}, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன், வருணன், பாவகன் {அக்னி}, கிருபர், துரோணர், மாதவன் {கிருஷ்ணன்} ஆகியோருக்கு எனது மரியாதைகளைச் செலுத்துபவன் நான்.

ஓ! மனிதர்களில் புலியே {ருக்மியே}, ஏந்துவதற்குக் கடினமானதும், பெரும் சக்தி கொண்டதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான தெய்வீக வில்லைத் தரித்துக் கொண்டு, வற்றாத அம்புகள் மற்றும் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவன், புகழனைத்தையும் திருடிவிடக்கூடிய {இழந்துவிடக்கூடிய} "நான் அஞ்சுகிறேன்" என்ற வார்த்தைகளை வஜ்ரத்தைத் தாங்கியிருக்கும் இந்திரனிடம் கூட எப்படிச் சொல்வான்?

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் அஞ்சவில்லை, உனது உதவிக்கான எந்தத் தேவையும் எனக்கில்லை. எனவே, செல். அல்லது தங்கு. உனக்கு விருப்பமானதையோ, தகுந்ததையோ செய்துகொள்வாயாக {எதை வேண்டுமானாலும் செய்து கொள்}" என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ருக்மி, கடல் போன்று பரந்திருந்த தனது படையுடன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனிடம் சென்றான் {ருக்மி}. அங்கே சென்ற மன்னன் ருக்மி, துரியோதனனிடமும் இந்த வார்த்தைகளேயே திரும்பச் சொன்னான். தனது வீரத்தில் செருக்குக் கொண்ட அம்மன்னனும் {துரியோதனனும்}, அதே வழியில் {அர்ஜுனனைப் போலவே} அவனை {ருக்மியை} நிராகரித்தான்.

இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருஷ்ணி குலத்து ரோகிணியின் மகன் (ராமன் {பலராமன்}), மன்னன் ருக்மி ஆகிய இருவரும் போரில் இருந்து விலகினர். ராமன் {பலராமன்} தீர்த்த யாத்திரைக்குப் புறப்படவும், பீஷ்மகனின் மகன் ருக்மி இப்படி விலகவும் செய்த பிறகு, மீண்டும் ஒருமுறை பாண்டுவின் மகன்கள் ஒருவருக்குள் ஒருவர் ஆலோசிக்க அமர்ந்தனர். எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் நிறைந்ததும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் தலைமை தாங்கப்பட்டதுமான அந்தச் சபை, சிறிய ஒளி பொருட்ளாலும் {கோள்களாலும்}, அவற்றுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனாலும் அலங்கரிக்கப்பட்ட வானம் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது." 
*********************************************************************************
*ருக்மிணியின் அண்ணன் ருக்மி அர்ஜுனனிடம், "! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான் {ருக்மி}. இத்தகு வார்த்தைகளால் அர்ஜுனன் ருக்மியை நிராகரித்தான். துரியோதனனும், அதே வழியில் அர்ஜுனனைப் போலவே ருக்மியை நிராகரித்தான்...

திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அமைச்சியல்/ அதிகாரம்: சொல்வன்மை/ குறள்: 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் 
பொருளும் அதனினூஉங்கு இல்.
தமிழில் விளக்கவுரை - சாலமன் பாப்பையா உரை: எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.


திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அரசியல்/ அதிகாரம்: குற்றங்கடிதல்/ குறள்: 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க 
நன்றி பயவா வினை.
தமிழில் விளக்கவுரை - சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்