Wednesday, October 28, 2015

ஸ்வேதன் பீஷ்மர் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 048அ

The combat of Sweta and Bhishma! | Bhishma-Parva-Section-048a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : விராடனின் மகன் ஸ்வேதனுக்குத் துணையாகச் சிகண்டி; பீஷ்மர் புரிந்த பயங்கரப் போர்; போரிட்ட போர்வீரர்களின் நிலை; ஸ்வேதனைக் கண்டு அஞ்சிய கௌரவர்கள் பீஷ்மரைக் கைவிட்டது; பீஷ்மரின் தாக்குதல்; ஸ்வேதனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் மூண்ட பயங்கரப் போர்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பெரும் வில்லாளியான ஸ்வேதன் சல்லியனின் தேரை நோக்கி முன்னேறிய போது, ஓ! சஞ்சயா, கௌரவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? சந்தனுவின் மகனான பீஷ்மர் என்ன செய்தார்? இவை அனைத்தையும் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக" என்று கேட்டான்.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைத்தலைவனாக ஸ்வேதனைத் தங்கள் முன்னணியில் நிறுத்தி, துணிவு மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவர்களான க்ஷத்திரியக் காளைகள் தங்கள் பலத்தை வெளிக்காட்டினார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (ஸ்வேதனை) விடுவிக்க விரும்பி, சிகண்டியைத் தலைமையாகக் கொண்டவர்களும், உமது அரச மகனுக்கு {துரியோதனனுக்கு} தங்கள் வலிமையை வெளிக்காட்டினார்கள். போர்வீரர்களில் முதன்மையானவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டவருமான பீஷ்மரைக் கொல்ல விரும்பி அவரை நோக்கியும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சிகண்டியின் தலைமையிலான வீரர்கள்} விரைந்தனர். அதைத் தொடர்ந்து நேரிட்ட போர் பயங்கரமானதாக இருந்தது. உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையிலான அந்த அற்புதம் நிறைந்த பயங்கரப் போர் எப்படி நடந்ததோ, அவ்வாறே நான் உமக்குச் சொல்கிறேன்.


அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} பல தேர்களின் கூடுகளை வெறுமையாக்கினார். (ஏனெனில்), அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவர் {பீஷ்மர்}, (தனது) அம்புகளால், பல தலைகளை வெட்டி வீழ்த்தினார். சூரியனுக்கு நிகரான சக்தி கொண்ட அவர் {பீஷ்மர்}, சூரியனையே தனது கணைகளால் மறைத்தார். இருளை விலக்கி எழுந்த சூரியனைப் போலத் தன்னைச் சூழ்ந்திருந்த எதிரிகளை அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} அகற்றினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அவரால் {பீஷ்மரால்} அடிக்கப்பட்ட பலம் நிறைந்த, பெருவேகம் கொண்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள், எண்ணற்ற க்ஷத்திரியர்களின் உயிர்களை அந்த மோதலில் பறித்தன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் மற்றும் முள் கவசம் பூண்ட யானைகள் ஆகியவற்றின் தலைகளை, வஜ்ரத்தின் தாக்குதலால் மலைகளில் இருந்து விழுந்த சிகரங்களைப் போல விழச்செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்ற தேர்களோடு கலப்பது தெரிந்தது. ஒரு தேரை மற்றொரு தேரோடும், ஒரு குதிரையை மற்றொரு குதிரையோடும் அப்போது காண முடிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரிழந்தும், {அடிபட்டு, உயிருடன்} தொங்கிக் கொண்டும் இருந்த, (குதிரைகளின் சேணங்களில் இருந்த)  இளம் வீரர்களை, வேகமான குதிரைகள், அங்கேயும் இங்கேயும் சுமந்து திரிந்தன.

(தம் மேனியில்) வாள்களும், அம்பறாத்தூணிகளும் பொருந்தியிருக்க, (தம் உடல்களில் இருந்து) கவசங்கள் தளர்ந்திருக்க, உயிரிழந்த வீரர்களின் உடல்கள், தரையைப் படுக்கையாக்கி உறங்கிக் கொண்டிருந்தன. ஒருவருக்கு எதிராக ஒருவர் விரையும் போது, கீழே விழுந்து, மீண்டும் எழுந்து, எழுந்த பிறகு மீண்டும் விரைந்த போராளிகள் கைக்குக் கையெனப் கைகளாலேயேப் போரிட்டனர். ஒருவரால் காயப்பட்ட மற்ற பலர் போர்க்களத்தில் உருண்டு கொண்டிருந்தனர். மதம் கொண்ட யானைகள் அங்குமிங்கும் விரைந்தன. நூற்றுக்கணக்கான தேர்வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.

தேர்வீரர்கள் தங்கள் தேர்களோடு சேர்த்து அனைத்துப் புறங்களில் இருந்தும் நசுக்கப்பட்டனர். ஒருவனின் கணையால் கொல்லப்பட்ட மற்றவன், அந்தத் தேர்வீரனின் {தனது எதிரியின்} தேரிலேயே பாய்ந்து விழுந்தான். தம் தேரோட்டி கொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயரத்தில் இருந்து பாயும் காட்சியும் காணப்பட்டது. அங்கே அடர்த்தியான புழுதி எழுந்தது. அது போர்க்களத்தில் வில்லின் நாணொலியுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களை {எதிரிகளை}, போராடிக் கொண்டிருந்த எதிராளிகளுக்குச் சுட்டிக் காட்டியது. தங்கள் உடல்களில் கொண்ட அழுத்தத்தின் காரணமாகப் போராளிகள் தங்கள் எதிரிகளை ஊகித்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (எதிரி) படைப்பிரிவுகளின் நாணொலிகளால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்கள், கணைகளுடன் போரிட்டனர். "ஹிஸ்" என்று போராளிகளால் அடிக்கப்பட்ட கணைகளின் ஒலி அவர்களின் எதிரிகளால் கேட்கப்பட்டது. காதுகளையே துளைக்கும் வண்ணம், பேரிகைகளின் ஒலி பேரொலியாக இருந்தது. போர்களத்தில் ஒரு போராளி தனது ஆற்றலை வெளிப்படுத்தியபடி உச்சரித்துக் கொண்ட அவனது பெயர், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தி ஆரவாரமிக்கப் பேரொலியாக எழுந்தது, இருப்பினும் அவற்றை நம்மால் கேட்க முடியவில்லை. தனக்குப் பிறந்த மகனைத் தந்தையால் அடையாளம் காண முடியவில்லை. நேரான கணைகளின் மூலம் தேரின் சக்கரங்களில் ஒன்று உடைக்கப்பட்டோ, குதிரைகளில் ஒன்று கொல்லப்பட்டோ, தேரோட்டியுடன் கூடிய தேர்வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். இப்படியே தங்கள் தேர்களை இழந்த பல போர் வீரர்கள் ஓடிக் கொண்டிருப்பது {அங்கே பரவலாகத்} தெரிந்தது.

எதிரியைப் பீஷ்மர் தாக்கிய போது, வெட்டப்பட்டவன் கொல்லப்பட்டான், கொல்லப்படாதவன் உயிர்நிலைகளில் தாக்கப்பட்டான்; ஆனால் தாக்கப்படாதவன் என்று எவனும் இல்லை. அந்தப் பயங்கரப் போரில் குருக்களைப் படுகொலை செய்த ஸ்வேதனின் செயல் பெரிதாக இருந்தது. அவன் {ஸ்வேதன்} நூற்றுக்கணக்கான உன்னத இளவரசர்களைக் கொன்றான். அவன் {ஸ்வேதன்}, தேர்வீரர்களின் தலைகளையும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டு, வில்லுடன் கூடிய (அவர்களது) கரங்களையும் தனது கணைகளைக் கொண்டு நூற்றுக் கணக்கில் வெட்டினான். தேர்வீரர்கள், தேர்ச்சக்கரங்கள், தேரில் இருந்த பிறர், தேர்கள், சிறிய மற்றும் விலை உயர்ந்த கொடிக்கம்பங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள், தேர்க்கூட்டங்கள், மனிதர்களின் கூட்டங்கள் ஆகியவற்றை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஸ்வேதன் அழித்தான்.

ஸ்வேதனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவரைக் {பீஷ்மரைக்} கைவிட்டு, பின்னோக்கி புறமுதுகிட்டு நாம் ஓடினோம் {நமது படை ஓடியது}. அதனால்தான் (இப்போது) தங்களைக் காண்கிறோம். ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, கணைகள் தாக்கும் எல்லையைக் கடந்த குருக்கள் அனைவரும், அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கைவிட்டு, (பார்வையாளர்களாக மட்டுமே தாங்கள் இருந்தாலும்) மோதலுக்காகத் தங்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள். அந்தப் பயங்கரப் போரில், (உலகளாவிய) மகிழ்ச்சியற்ற அந்த நேரத்திலும், நமது படையில், மனிதர்களில் புலியான பீஷ்மர் மட்டுமே மேரு மலையைப் போல அசையாதிருந்து மகிழ்ச்சியாக இருந்தார். பின்பனிக் காலத்தின் {சிசிரருதுவின் - மாசி, பங்குனியின்} முடிவில் [1], சூரியன் தனது கதிர்களால் நீரை உறிஞ்சுவது போல, (எதிரிகளின்) உயிர்களைப் பறித்த பீஷ்மர், சூரியனைப் போன்ற தனது தேரின் தங்கக் கதிர்களால், அந்தச் சூரியனைப் போலவே ஒளிர்ந்தார். மேலும், அந்தப் பெரும் வில்லாளி கணை மேகங்களை அடித்து அசுரர்களைத் {???} தாக்கினார்.

[1] ருதுக்கள் மொத்தம் ஆறு ஆகும். அவையாவன : 1. வசந்த ருது, 2. கிரீஷ்ம ருது, 3. வருஷ ருது, 4. சரத் ருது, 5. ஹேமந்த ருது, 6. சிசிர ருது.

வசந்த ருது - சித்திரை, வைகாசி - இளவேனில் காலம்.
கிரீஷ்ம ருது - ஆனி, ஆடி - முதுவேனில் காலம்.
வருஷ ருது - ஆவணி, புரட்டாசி - கூதிர் காலம்.
சரத் ருது - ஐப்பசி, கார்த்திகை - கார் காலம்.
ஹேமந்த ருது - மார்கழி, தை - முன்பனிக் காலம்.
சிசிர ருது - மாசி, பங்குனி - பின்பனிக் காலம்.

அச்சம் நிறைந்த அந்த மோதலில் பீஷ்மரால் கொல்லப்படும்போது, அவ்வீரர்கள், தங்கள் படையணிகளில் இருந்து உடைந்து, விறகால் எரியும் நெருப்பிடம் இருந்து ஓடுவதைப் போல அவரிடம் {பீஷ்மரிடம்} இருந்து ஓடினர். அந்தத் தனி வீரனிடம் (ஸ்வேதனிடம்) மோதியவர்களில், எதிரிகளைக் கொல்பவரான பீஷ்மர் மட்டுமே மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் இருந்தார். துரியோதனனின் நலத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவ வீரனை {ஸ்வேதனை} துன்புறுத்த ஆரம்பித்தார். கைவிடுவதற்குக் கடினமான தனது உயிரையே துச்சமாக மதித்து, அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்தக் கடும் மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவப் படையைக் கொன்றழித்தார்.

(தார்தராஷ்டிரப்) படைப்பிரிவுகளைத் தாக்கும் படைத்தலைவனை (ஸ்வேதனைக்) கண்டவரும், தேவ விரதன் என்று அழைக்கப்பட்டவரும், உமது தந்தையுமான பீஷ்மர், அவனை {ஸ்வேதனை} நோக்கி வேகமாக விரைந்தார். அதன்பேரில், ஸ்வேதன், கணைகளால் ஆன வலையால் பீஷ்மரை மறைத்தான். பீஷ்மரும் தனது கணைகளின் தாக்குதலால் ஸ்வேதனை மறைத்தார். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலவும், மதங்கொண்ட இரண்டு பெரிய யானைகள் மோதிக் கொள்வது போலவும், ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் புலிகள் போலவும் அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விரைந்தனர். ஒருவரின் ஆயுதங்களைத் தனது ஆயுதங்களின் மூலம் கலங்கடித்த மனிதர்களில் காளைகளான பீஷ்மரும், ஸ்வேதனும், ஒருவரின் உயிரை மற்றவர் பறிக்கும் விருப்பத்துடன் ஒருவருக்கொருவர் போரிட்டனர்.

ஸ்வேதன் பாண்டவப்படையைப் பாதுகாக்கவில்லையெனில், சினத்தில் சீறும் பீஷ்மர், ஒரே நாளில் அந்தப் படை முழுவதையும் எரித்திருப்பார். ஸ்வேதனால் தடுக்கப்பட்ட தங்கள் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அதே வேளையில் உமது மகன் {துரியோதனன்} உற்சாகமிழந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், பல மன்னர்கள் சூழப் பாண்டவப் படையை எதிர்த்து தனது துருப்புகளுடன் விரைந்தான்.

இதனால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கைவிட்ட ஸ்வேதன், மரங்களை வேருடன் பிடுங்கிப் போடும் பலத்த காற்று போல வேகமாக விரைந்து உமது மகனின் {துரியோதனனின்} படையைக் கொன்றழித்தான். கோபத்தில் உணர்விழந்த அந்த விராடன் மகன் {ஸ்வேதன்}, உமது படையை நிர்மூலமாக்கியபடி முன்னேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் நிலைபெற்றிருந்த இடத்திற்கு (மீண்டும்) வந்தான். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், சுடர்மிகும் தங்கள் கணைகளோடு, பழங்காலத்தின் விருத்திரன் மற்றும் வாசவன் {இந்திரன்} போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி தங்களுக்குள் போரிட்டனர்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்