Wednesday, April 06, 2016

கிருஷ்ணன் பெருமை சொன்ன திருதராஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 011

The greatness of Krishna listed by Dhritarashtra! | Drona-Parva-Section-011 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் வரலாற்றை நினைவுகூர்ந்த திருதராஷ்டிரன் தன் மகன்களின் நிலையை எண்ணி வருந்தியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோவிந்தன் {கிருஷ்ணன்} வேறு எந்த மனிதனாலும் சாதிக்க முடியாத அருஞ்செயல்களைச் செய்தான், அந்த வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகச் செயல்களைக் கேட்பாயாக.

ஓ! சஞ்சயா, மாட்டிடையன் (நந்தன்) குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, சிறுவனாக இருந்தபோதே தன் கரங்களின் வலிமையை மூவுலகங்களும் அறியச் செய்தான்.

பலத்தில் (தெய்வீக குதிரையான) உச்சைஸ்வனுக்கு இணையானவனும், காற்றின் வேகத்தைக் கொண்டவனும், யமுனையின் (கரைகளில் உள்ள) காடுகளில் வாழ்ந்தவனுமான ஹயராஜனைக் [1] கொன்றான்.

[1] ஹயராஜன் என்பான் உண்மையில் குதிரைகளின் இளவரசனாவான். கேசி என்றும் அழைக்கப்பட்ட அவன் குதிரையின் வடிவில் இருந்த அசுரனாவான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

பசுக்களுக்குக் காலனாக எழுந்தவனும், பயங்கரச் செயல்கள் புரிபவனும், காளையின் வடிவில் இருந்தவனுமான தானவனைத் {ரிஷபனைத்} தன் வெறும் கைகள் இரண்டால் தன் குழந்தைப் பருவத்திலேயே கொன்றான்.


தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பிரலம்பன், ஜம்பன், பீடன் மற்றும் தேவர்களுக்குப் பயங்கரனாக இருந்த முரண் ஆகிய வலிமைமிக்க அசுரர்களையும் கொன்றான்.

அதுபோலவே ஜராசந்தனால் பாதுகாக்கப்பட்ட பயங்கர சக்தி கொண்ட கம்சனும், அவனது தொண்டர்களும், தன்னாற்றலின் துணையை மட்டுமே [2] கொண்ட கிருஷ்ணனால் போரில் கொல்லப்பட்டனர்.

[2] எந்த ஆயுதங்களும் இல்லாமல் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

போரில் பெரும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவனும், ஒரு முழு அக்ஷௌஹிணியின் தலைவனும், போஜர்களின் மன்னனும், கம்சனின் இரண்டாவது தம்பியும், சூரசேனர்களின் மன்னனுமான சுநாமன், எதிரிகளைக் கொல்பவனும், பலதேவனைத் தனக்கு அடுத்தவனாகக் கொண்டவனுமான அந்தக் கிருஷ்ணனால் அவனுடைய துருப்புகளுடன் சேர்த்துப் போரில் எரிக்கப்பட்டான்.

பெரும் கோபம் கொண்ட இருபிறப்பாள முனிவர் {துர்வாசர்}, {கிருஷ்ணனின்} (ஆராதனையில் மனம் நிறைந்து) அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வரங்களை அளித்தார்.

தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், பெரும் துணிச்சல் மிக்கவனுமான கிருஷ்ணன், ஒரு சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, காந்தாரர்கள் மன்னனின் மகளைக் கவர்ந்தான். கோபம் கொண்ட அந்த மன்னர்களை, ஏதோ அவர்கள் பிறப்பால் குதிரைகளைப் போல அவன் {கிருஷ்ணன்}, தன் திருமணத் தேரில் பூட்டிச் சாட்டையால் காயப்படுத்தினான்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வேறொருவனை {பீமனைக்} கருவியாகப் பயன்படுத்தி ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனான ஜராசந்தனைக் கொல்லச் செய்தான் [3].

[3] மகதர்களின் பலமிக்க மன்னனும், கிருஷ்ணனின் உறுதியான எதிரியுமான ஜராசந்தன், கிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் பீமனால் கொல்லப்பட்டான் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

வலிமைமிக்கக் கிருஷ்ணன், மன்னர்களின் தலைவனான சேதிகளின் வீர மன்னனையும் {சிசுபாலனையும்}, ஏதோ ஒரு விலங்கை {கொல்வதைப்} போல, ஆர்க்கியம் சம்பந்தமாகப் பின்னவன் சச்சரவை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் கொன்றான்.

தன் ஆற்றலை வெளிப்படுத்திய மாதவன் {கிருஷ்ணன்} ஆகாயத்தில் இருந்ததும், சால்வனால் காக்கப்பட்டதும், நாட முடியாததுமான “சௌபம்” என்று அழைக்கப்பட்ட தைத்திய நகரத்தைக் கடலுக்குள் வீசினான்.

அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், காசிகள், கோசலர்கள், வாத்சியர்கள், கார்க்யர்கள், பௌண்டரர்கள் ஆகிய இவர்களை அனைவரையும் அவன் {கிருஷ்ணன்} போரில் வீழ்த்தினான்.

அவந்திகள், தெற்கத்தியர்கள், மலைவாசிகள், தசேரகர்கள், காஸ்மீரர்கள், ஔரஷிகர்கள், பிசாசர்கள், சமுத்கலர்கள், காம்போஜர்கள், வாடதானர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஓ! சஞ்சயா, திர்கர்த்தர்கள், மாலவர்கள், வீழ்த்துவதற்குக் கடினமான தரதர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்த வந்த கசர்கள், சகர்கள், தொண்டர்களுடன் கூடிய யவனர்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தாமரைக் கண்ணனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டனர்.

பழங்காலத்தில் அனைத்து வகை நீர்வாழ் உயிரினங்களாலும் சூழப்பட்ட கடலில் புகுந்து நீரின் ஆழத்திற்குள் இருந்த வருணனையும் போரில் வென்றான்.

அந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாதாளத்தின் ஆழங்களில் வாழ்ந்த பஞ்சஜன்யனைப் (பஞ்சஜன்யன் என்ற பெயர் கொண்ட தானவனைப்} போரில் கொன்று பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக சங்கை அடைந்தான்.

வலிமைமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து காண்டவ வனத்தில் அக்னியை மனம் நிறையச் செய்து, வெல்லப்படமுடியாத நெருப்பாயுதத்தையும் {ஆக்னேயாஸ்திரத்தையும்}, (சுதர்சனம் என்றழைக்கப்படும்} சக்கரத்தையும் பெற்றான்.

வீரனான கிருஷ்ணன், கருடன் மீதேறிச் சென்று அமராவதியை (அமராவதிவாசிகளை} அச்சுறுத்தி மகேந்திரனிடம் இருந்து {இந்திரனின் அரண்மனையில் இருந்து} பாரிஜாதத்தை {பாரிஜாதம் என்றழைக்கப்பட்ட தெய்வீக மலரைக்} [4] கொண்டு வந்தான். கிருஷ்ணனின் ஆற்றலை அறிந்த சக்ரன் {இந்திரன்} அச்செயலை அமைதியாகப் பொறுத்தான்.

[4] அமராவதியில் இருந்து பூமிக்குப் பாரிஜாதத்தை மறுநடவு செய்தான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் “பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்தான்” என்றிருக்கிறது.

மன்னர்களில், கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டாத எவரும் இருப்பதாக நாம் கேட்டதில்லை.

ஓ! சஞ்சயா, என் சபையில் அந்தக் கமலக்கண்ணன் செய்த அற்புதமான செயலை அவனைத் தவிர இவ்வுலகத்தில் வேறு எவன் செய்யத்தகுந்தவன்?

அர்ப்பணிப்பால் {பக்தியால்} சரணமடைந்த நான், கிருஷ்ணனை ஈசுவரனாகக் கண்ட காரணத்தினால், (அந்த அருஞ்செயலைக் குறித்த) அனைத்தும் என்னால் நன்கு அறியப்பட்டது. ஓ! சஞ்சயா, அதைச் சாட்சியாக என் கண்களால் கண்ட என்னால், பெரும் சக்தியும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்ட ரிஷிகேசனுடைய (முடிவற்ற) சாதனைகளின் எல்லையைக் காண இயலவில்லை.

கதன், சாம்பன், பிரத்யும்னன், விதூரதன், [5] சாருதேஷ்ணன், சாரணன், உல்முகன், நிசடன், வீரனான ஜில்லிபப்ரு, பிருது, விபிருது, சமீகன், அரிமேஜயன் ஆகிய இவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களான இன்னும் பிற வலிமைமிக்க விருஷ்ணி வீரர்களும், விருஷ்ணி வீரனான அந்த உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} அழைக்கப்படும்போது, பாண்டவப் படையில் தங்கள் நிலைகளை எடுத்துப் போர்க்களத்தில் நிற்பார்கள். பிறகு (என் தரப்பில்) அனைத்தும் பெரும் ஆபத்துக்குள்ளாகும். இதுவே என் எண்ணம்.

[5] வேறொரு பதிப்பில் இங்கே அகாவஹன், அனிருத்தன், என்று கூடுதல் பெயர்களும் இருக்கின்றன.

ஜனார்த்தனன் எங்கே இருக்கிறானோ, அங்கே பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், கைலாச சிகரத்திற்கு ஒப்பானவனும், காட்டு மலர்களாலான மாலைகளை அணிந்தவனும், கலப்பையை ஆயுதமாகத் தரித்தவனுமான வீர ராமன் {பலராமன்} இருப்பான்.

ஓ! சஞ்சயா, அனைவருக்கும் தந்தை அந்த வாசுதேவன் என மறுபிறப்பாளர்கள் எவனைச் சொல்கிறார்களோ, அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களுக்காகப் போரிடுவானா? ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பாண்டவர்களுக்காக அவன் கவசம் தரித்தானெனில், அவனது எதிராளியாக இருக்க நம்மில் ஒருவரும் இல்லை.

கௌரவர்கள், பாண்டவர்களை வீழ்த்த நேர்ந்தால், அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, பின்னவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} தன் வலிமைமிக்க ஆயுதத்தை எடுப்பான். அந்த மனிதர்களில் புலி, அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்}, போரில் மன்னர்கள் அனைவரையும், கௌரவர்களையும் கொன்று குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} முழு உலகத்தையும் கொடுப்பான். ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அதன் போராளியாகவும் கொண்ட தேரை, வேறு எந்தத் தேரால் போரில் எதிர்க்க முடியும்? எவ்வழியிலும் குருக்களால் {கௌரவர்களால்} வெற்றியை அடைய முடியாது. எனவே, அந்தப் போர் எவ்வாறு நடைபெற்றது என்பது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.

அர்ஜுனன், கேசவனின் {கிருஷ்ணனின்} உயிராவான், மேலும் கிருஷ்ணனே எப்போதும் வெற்றியாவான், கிருஷ்ணனிலேயே எப்போதும் புகழும் இருக்கிறது. அனைத்து உலகங்களிலும் பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்படமுடியாதவனாவான். கேசவனிலேயே முடிவில்லாத புண்ணியங்கள் அதிகமாக இருக்கிறது. மூடனான துரியோதனன் விதியின் காரணமாகக் கிருஷ்ணனை, அந்தக் கேசவனை அறியாததால், தன் முன்னே காலனின் பாசத்தை {சுருக்குக் கயிற்றைக்} கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஐயோ, தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான அர்ஜுனனையும் துரியோதனன் அறியவில்லை.

இந்த உயர் ஆன்மாக்கள் புராதனத் தேவர்களாவர். அவர்களே நரனும், நாராயணனுமாவர். உண்மையில் அவர்கள் ஒரே ஆன்மாவைக் கொண்டவர்களாகயிருப்பினும், பூமியில் அவர்கள் தனித்தனி வடிவம் கொண்டவர்களாக மனிதர்களால் காணப்படுகிறார்கள். உலகம் பரந்த புகழைக் கொண்ட இந்த வெல்லப்பட முடியாத இணை நினைத்தால், தங்கள் மனத்தாலேயே இந்தப் படையை அழித்துவிட முடியும். அவர்கள் கொண்ட மனிதநேயத்தின் விளைவாலேயே அவர்கள் அதை {அழிவை} விரும்பவில்லை [6].

[6] தேவர்களாக இருப்பினும் அவர்கள் தங்கள் பிறப்பை மனிதர்களாகக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர்கள் மனிதர்களின் வழிகளிலேயே தங்கள் நோக்கங்களை அடைவார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இந்தப் படையை அழிக்க விரும்பாமல் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

பீஷ்மரின் மரணம் மற்றும், உயர் ஆன்ம துரோணரின் கொலை ஆகியன யுகமே மாறிவிட்டதைப் போல உணர்வுகளைப் புரட்டுகின்றன. உண்மையில், பிரம்மச்சரியத்தாலோ, வேதங்களின் கல்வியாலோ, (அறச்) சடங்குகளாலோ, ஆயுதங்களாலோ எவனாலும் மரணத்தைத் தவிர்க்க இயலாது. போரில் வெல்லப்பட முடியாதவர்களும், உலகங்கள் அனைத்திலும் மதிக்கப்படுபவர்களும், ஆயுதங்களை அறிந்த வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் கேட்டும், ஓ! சஞ்சயா, நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்?

பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்தின் விளைவாக, ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனின் எந்தச் செழிப்பைக் கண்டு நாங்கள் பொறாமை கொண்டோமோ, அதையே இனிமேல் நாங்கள் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். உண்மையில், என் செயல்களின் விளைவாலேயே குருக்களுக்கு இந்த அழிவு நேர்ந்திருக்கிறது. ஓ! சூதா {சஞ்சயா}, அழிவடையக் கனிந்திருக்கும் இவர்களைக் கொல்ல புல்லும் இடியாக மாறும் [7]. எந்த யுதிஷ்டிரனின் கோபத்தால் பீஷ்மரும், துரோணரும் வீழ்ந்தனரோ அந்த யுதிஷ்டிரன் அடையப்போகும் உலகம் முடிவிலான செழிப்பைக் கொண்டது. அவனது {யுதிஷ்டிரனது} மனநிலையின் விளைவாலேயே நல்லோர் யுதிஷ்டிரனின் தரப்பை அடைந்து என் மகனுக்கு {துரியோதனனுக்குப்} பகையாகினர்.

[7] காலத்தினால் பக்குவம் செய்யப்பட்ட மனிதர்களைக் கொல்லும் விஷயத்தில் புல்லும் கூட வஜ்ராயுதம் போல ஆகிறது.

அனைத்தையும் அழிக்க வந்த குரூரமான அந்தக் காலத்தை {யாராலும்} வெற்றி கொள்ள முடியாது. புத்திமான்களால் ஒருவிதமாகக் கணக்கிடப்பட்ட காரியங்களும் கூட, விதியால் வேறு விதமாக நிகழ்கின்றன. இதுவே என் எண்ணம். எனவே, தவிர்க்க முடியாததும், மிகக் கடுமையான சோக நினைவைத் தரக்கூடியதும், (நம்மால்) கடக்க முடியாததுமான இந்தப் பயங்கரப் பேரிடர் நிகழ்ந்த போது நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்