Tuesday, April 19, 2016

துரோணரைத் தடுத்த அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 016

Arjuna checked Drona! | Drona-Parva-Section-016 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் : கர்ணனின் மகன் விருஷசேனனுக்கும், நகுலனின் மகன் சதானீகனுக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகியின் மகன் யுகந்தரன் துரோணரால் வீழ்த்தப்பட்டது; வியாக்ரதத்தன், சிங்கசேனன் ஆகியோர் துரோணரால் கொல்லப்பட்டது; யுதிஷ்டிரனைப் பிடிக்க முயன்ற துரோணர்; அதைத் தடுத்த அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படை அதீதமாகப் பிளக்கப்பட்டதைக் கண்ட வீர விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் மாய சக்திகளை வெளிப்படுத்திக் கொண்டு தனியொருவனாகவே அதை {அந்தப் படையைப்} பாதுகாத்தான். அந்தப் போரில் விருஷசேனனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் அனைத்துத் திசைகளிலும் சென்று, மனிதர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளைத் துளைத்தன. அவனால் ஏவப்பட்ட சுடர்மிகும் பிரகாசம் கொண்ட வலிமைமிக்கக் கணைகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் சூரியக் கதிர்களைப் போல ஆயிரக்கணக்கில் சென்றன. அவற்றால் பீடிக்கப்பட்டு நசுக்கப்பட்ட தேர்வீரர்கள் மற்றும் குதிரை வீரர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் முறிந்த மரங்களைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தனர்.


வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை அப்போரில் ஆயிரக்கணக்கில் வீழ்த்தினான். களத்தில் அச்சமற்ற வகையில் திரியும் அந்தத் தனி வீரனைக் கண்ட (பாண்டவப் படையின்) மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். நகுலனின் மகனான சதானீகன் விருஷசேனனை நோக்கி விரைந்து, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனைத் {விருஷசேனனைத்} துளைத்தான்.

எனினும், கர்ணனின் மகன் {விருஷசேனன்}, அவனது {சதானீகனின்} வில்லை வெட்டி, அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அதன்பேரில், திரௌபதியின் பிற மகன்கள், தங்கள் சகோதரனை மீட்க விரும்பி அவனை {சதானீகனை} நோக்கி விரைந்தனர். விரைவில் அவர்கள் தங்கள் கணை மழையால் கர்ணனின் மகனை {விருஷசேனனை} மறைத்தனர். (கர்ணனின் மகனை) இப்படித் தாக்கும் அவர்களை எதிர்த்து, துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்) தலைமையிலான தேர் வீரர்கள் பலர் விரைந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு வகைகளிலான கணைகளைக் கொண்டு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்களை விரைவில் மறைத்தனர். அதன் பேரில், பாண்டவர்கள், தங்கள் மகன்களின் மீது கொண்ட பாசத்தால், அப்படித் தாக்குபவர்களை விரைவாக எதிர்கொண்டனர்.

பிறகு, உமது துருப்புகளுக்கும், பாண்டவர்களின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது; மிகக் கடுமையானதாகவும், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இப்படியே, வீரர்களான கௌரவர்களும், பாண்டவர்களும், சினத்தால் தூண்டப்பட்டு (மூர்க்கமாக) ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, பழைய குற்றங்களுக்காக ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பகையுடன் போரிட்டனர். (அவர்களைத் தூண்டும்) கோபத்தின் விளைவாக அளவற்ற சக்தியுடன் தென்பட்ட அந்த வீரர்களின் உடல்கள், வானத்தில் போரிடும் கருடனுக்கும், (வலிமைமிக்க) நாகங்களுக்கும் ஒப்பானவையாக இருந்தன.

பீமன், கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்யகி ஆகியோரைக் கொண்ட அந்தப் போர்க்களம், யுக முடிவில் அனைத்தையும் அழிக்க உதிக்கும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வலிமைமிக்க எதிரிகளுடன் போரில் ஈடுபடும் வலிமைமிக்க மனிதர்களுக்கு இடையில் நடப்பதும், அனைவரும் மிகக் கடுமையாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதுமான அந்தப் போர், பழங்காலத்தில் தானவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக இருந்தது. பிறகு, பொங்கும் கடலைப் போன்ற உரத்த முழக்கங்களுடன் கூடிய யுதிஷ்டிரனின் படை, உமது படையின் பெரும் தேர்வீரர்கள் தப்பி ஓடியதால், உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினர். (கௌரவப்) படை உடைந்ததையும், எதிரியால் அதீதமாகச் சிதைக்கப்பட்டதையும் கண்ட துரோணர், “வீரர்களே, நீங்கள் ஓட வேண்டாம்” என்றார் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்த வரிக்குப் பிறகும் சில விவரங்கள் இருக்கின்றன, அது பின்வருமாறு: “துரோணருக்குக் கோபம் மேலிட்டது. அம்பறாத்தூணியில் இருந்து அம்பை எடுத்து வில்லின் நாணை உருவித் துடைத்துப் பெரிதான அம்பையும் வில்லையும் கையில் கொண்டு தேரோட்டியைப் பார்த்துப் பின்வருமாறு சொன்னார், “தேரோட்டியே! பிரகாசமான வெள்ளைக்குடை கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. துரியோதனனின் இந்தப் படை பலவாறு பிளக்கப்படுகிறது. நான் யுதிஷ்டிரனைத் தடுத்து இந்தப் படையை நிலைநிறுத்துவேன். 

ஐயா, போரில் கணை மழையைப் பொழியும் என்னைப் பாண்டவர்களும், சோமகர்களோடு கூடிய மத்ஸ்ய மன்னர்கள் அனைவரும், பாஞ்சால மன்னர்களும் எதிர்க்க சக்தியற்றவர்களாவர். அர்ஜுனனோ என்னிடம் இருந்து பெரும் ஆயுதங்களைப் பெற்றிருக்கிறான். ஐயா, பீமனாவதும், சாத்யகியாவது என்னை எதிர்க்கவல்லவர்களல்ல. பீபத்சுவோ என்னால் வில்லாளிகளுள் சிறந்த நிலைமையைப் பெற்றான். பார்ஷதனான திருஷ்டத்யும்னனும் என் ஆயுதங்களை அறிந்திருக்கிறான். ஐயா, வெற்றியை விரும்புபவன் உயிரைக் காத்துக் கொள்ள இது சமயமன்று. சொர்க்கத்தை முன்னிட்டுக் கொண்டு புகழக்காகவும், வெற்றிக்காவும் செல்வாயாக” என்றார். 

இவ்வாறு தூண்டப்பட்ட தேரோட்டி உடனே அஸ்வஹ்ருதயமெனும் மந்திரத்தைக் கொண்டு குதிரைகளை மந்திரித்து வரூதத்தோடு கூடியதும், காந்தி பொருந்தியதும் மிக்கப் பிரகாசமுள்ளதுமான தேரில் துரோணரைக் கொண்டு சென்றான். அந்தத் துரோணாச்சாரியரைக் கரூசர்களும், மத்ஸ்ய நாட்டு மன்னர்களும், சாத்வர்களோடு கூடிய சேதி நாட்டு மன்னர்களும், பாஞ்சாலர்களோடு கூடிய பாண்டவர்களும் ஒன்று சேர்ந்து சூழ்ந்து கொண்டனர்”

பிறகு, சிவப்புக் குதிரைகளை உடைய அவர் (துரோணர்), கோபத்தால் தூண்டப்பட்டு, நான்கு {4} தந்தங்களைக் கொண்ட (கடும்) யானையொன்றைப் போலப் பாண்டவப் படைக்குள் ஊடுருவி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரன், கங்க இறகுகள் கொண்ட கூரான கணைகள் பலவற்றால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்; எனினும், துரோணர், யுதிஷ்டிரனின் வில்லை வெட்டி, அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரனின் தேர் சக்கரங்களைப் பாதுகாத்தப் பாஞ்சாலர்களின் புகழ்பெற்ற இளவரசன் குமாரன், அப்படி முன்னேறி வரும் துரோணரைப் பொங்கும் கடலை வரவேற்கும் கரையைப் போல வரவேற்றான். பிராமணர்களில் காளையான அந்தத் துரோணர் குமாரனால் தடுக்கப்பட்டதைக் கண்டு, “நன்று, நன்று!” என்ற கூக்குரலுடன் கூடிய சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன.

பிறகு அந்தப் பெரும் போரில் சினத்தால் தூண்டப்பட்ட குமாரன், ஒரு கணையால் துரோணரை மார்பில் துளைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தான். வலிமைமிக்கவனும், பெரும் கர நளினம் கொண்டவனும், களைப்பை வென்றவனுமான குமாரன் இப்படியே போரில் துரோணரைத் தடுத்து, பல்லாயிரக்கணக்கான கணைகளால் அவரைத் துளைத்தான். பிறகு அந்த மனிதர்களில் காளை (துரோணர்), யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவனும், அறம்சார்ந்த நோன்புகளை நோற்பவனும், மந்திரங்களிலும், ஆயுதங்களிலும் சாதித்தவனுமான அந்த வீரன் குமாரனைக் கொன்றார் [2].

[2] வேறொரு பதிப்பில் துரோணர் குமாரனைக் கொன்றதாகக் குறிப்பில்லை நன்றாக அடித்ததாகவே இருக்கிறது.

பிறகு (பாண்டவப்) படைக்கு மத்தியில் ஊடுருவி, அனைத்துப் பக்கங்களிலும் திரிந்த மனிதர்களில் காளையான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} உமது துருப்புகளைப் பாதுகாப்பவரானார். சிகண்டியைப் பனிரெண்டு {12} கணைகளாலும், உத்தமௌஜசை இருபதாலும் {20}, நகுலனை ஐந்தாலும் {5}, சகாதேவனை ஏழாலும் {7}, யுதிஷ்டிரனை பனிரெண்டாலும் {12}, திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஒவ்வொருவரையும் மூன்றாலும் {3}, சாத்யகியை ஐந்தாலும் {5}, மத்ஸ்யர்களின் ஆட்சியாளனை பத்து {10} கணைகளாலும் துளைத்து, அந்தப் போரில் மொத்த படையையும் கலங்கடித்து, (பாண்டவ) வீரர்களில் முதன்மையானோரை எதிர்த்து ஒருவர் பின் ஒருவராக விரைந்தார். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பி அவனை எதிர்த்து முன்னேறினார்.

அப்போது {சாத்யகியின் மகன்} யுகந்தரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புயலால் கலங்கடிக்கப்பட்டு ஆத்திரத்தோடு கூடிய கடலுக்கு ஒப்பாகச் சினத்தால் நிறைந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தடுத்தான். எனினும், நேரான கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் துளைத்த அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஒரு பல்லத்தினால் யுகந்தரனை அவனது தேர்த்தட்டிலிருந்து விழச் செய்தார்.

பிறகு, விராடன், துருபதன், கைகேய இளவரசர்கள், சாத்யகி, சிபி, பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், வீரமான சிங்கசேனன் ஆகியோரும் இன்னும் பிறரும், யுதிஷ்டிரனை மீட்க விரும்பி, எண்ணிலா கணைகளை இறைத்து, துரோணரின் வழியில் இடையூறு செய்த படி அனைத்துப் பக்கங்களிலும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், கூர்முனை கொண்டு ஐம்பது {50} கணைகளால் துரோணரைத் துளைத்ததால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் பெருங்கூச்சலிட்டன. சிங்கசேனனும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரை விரைவாகத் துளைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்து மகிழ்ச்சியால் முழக்கமிட்டான்; பிறகு தன் கண்களை அகல விரித்த துரோணர், தன் வில்லின் நாணைத் தேய்த்து, தன் உள்ளங்கைகளைத் தட்டி பேரொலியை உண்டாக்கி பின்னவனை {சிங்கசேனனை} எதிர்த்து விரைந்தார். பிறகு, தன் ஆற்றலை வெளிப்படுத்திய பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, இரண்டு பல்லங்களால் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிங்கசேனன் மற்றும் வியாக்ரதத்தன் ஆகிய இருவரின் தலைகளை அவர்களது உடல்களிலிருந்து துண்டித்தார்.

தன் கணைமாரிகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரையும் பீடித்த அவர் {துரோணர்}, அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலவே யுதிஷ்டிரனின் தேருக்கு முன்பாக நின்றார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முறையான நோன்புகளைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அருகில் இப்படி நின்ற போது, “மன்னர் கொல்லப்பட்டார்” என்ற அளவுக்கு யுதிஷ்டிரனின் படை வீரர்களுக்கு மத்தியில் ஆரவாரம் கேட்கப்பட்டது. அங்கே இருந்த வீரர்கள் அனைவரும், துரோணரின் ஆற்றலைக் கண்டு, “இன்று திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்} வெற்றி மகுடம் சூட்டப்படுவான். இந்தக் கணமே யுதிஷ்டிரனைப் பிடிக்கும் துரோணர், மகிழ்ச்சியால் நிறைந்து நம்மிடமும் துரியோதனனின் முன்னிலைக்கும் வரப் போகிறார்” என்றனர்.

உமது வீரர்கள் இத்தகு பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குந்தியின் மகன் (அர்ஜுனன்), தன் தேரின் சடசடப்பொலியால் (ஆகாயத்தை) நிறைத்தபடி விரைவாக அங்கே வந்தான். அப்படி அவன் {அர்ஜுனன்} வந்த போதே, அவன் செய்த படுகொலைகளால் குருதியெனும் நீருள்ளதும், தேர்களெனும் சுழல்களுள்ளதும், துணிவுமிக்க வீரர்களின் எலும்புகள் மற்றும் உடல்கள் நிறைந்ததும், இறந்தோரின் ஆவிகள் வசிக்கும் இடத்திற்கு உயிரினங்களைச் சுமந்து செல்வதுமான ஒரு நதியை அங்கே உண்டாக்கினான். குருக்களை முறியடித்த படி அங்கே வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கணைகளின் மாரிகளெனும் நுரை கொண்டதும், ஈட்டிகள் மற்றும் பிற ஆயுதங்களின் வடிவிலான மீன்களால் நிறைந்ததுமான அந்த நதியை வேகமாகக் கடந்தான். அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்}, அடர்த்தியான கணைகளின் வலையால் துரோணரின் படைப்பிரிவுகளை மறைத்து (துரோணரைப் பின் தொடர்வோரின்) உணர்வுகளைக் குழப்பியபடி திடீரென அங்கே வந்தான்.

இடைவிடாமல் வில்லின் நாணில் தன் கணைகளைப் பொருத்தி, விரைவாக அவற்றை ஏவிய குந்தியின் புகழ்பெற்ற மகனின் {அர்ஜுனனின்} இந்தச் செயல்கள் இரண்டுக்கும் இடையில் காலங்கழிதல் எதையும் எவனால் காண முடியவில்லை. அடர்த்தியான கணைகளின் திரள் ஒன்றாகவே அனைத்தும் தெரிந்ததால், அதற்கு மேலும் (நான்கு முக்கிய) திசைகளுக்கோ, மேலுள்ள ஆகாயத்துக்கோ, பூமிக்கோ எந்த வேறு பாட்டையும் காண முடியவில்லை. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அடர்த்தியான இருளை உண்டாக்கியபோது, அந்தப் போரில் எதையும் காண முடியவில்லை. சரியாக அப்போதே, புழுதி மேகத்தால் சூழப்பட்ட சூரியனும் மறைந்தான். அதற்கு மேலும், நண்பனுக்கும் எதிரிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண முடியவில்லை.

பிறகு, துரோணரும், துரியோதனனும் தங்கள் துருப்புகளைப் பின் வாங்கச் செய்தனர். எதிரி அச்சங்கொண்டதையும், தொடர்ந்து போரிட விரும்பாததையும் உறுதி செய்து கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, மெதுவாகத் தன் துருப்புகளைப் பின்வாங்கச் செய்தான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், பாஞ்சாலர்களும் சூரியனைப் புகழும் முனிவர்களைப் போலத் தங்கள் இனிய உரைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

இப்படித் தன் எதிரிகளை வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தோழனான கேசவனுடன் {கிருஷ்ணனுடன்}, மொத்த படைக்கும் பின்னே தன் பாசறைக்கு ஓயச் சென்றான். இந்திரநீலங்கள், பத்மராகங்கள், தங்கம், வெள்ளி, வைரங்கள், பவழங்கள், படிகங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய தேரில் நின்ற அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆகாயத்தில் உள்ள சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

பதினோராம் நாள் போர் முற்றும்

துரோணாபிஷேக பர்வம் முற்றும்


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்