Friday, July 29, 2016

கிருதவர்மனைக் கடக்க முடியாத பாண்டவர்கள்! - துரோண பர்வம் பகுதி – 113

Pandavas not able to pass over Kritavarma! | Drona-Parva-Section-113 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 29)

பதிவின் சுருக்கம் : தன் படைகளின் தோல்வியைக் கேட்டுத் துயரடைந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்; பாண்டவர்கள் அனைவரையும் தனி ஒருவனாகவே தடுத்த கிருதவர்மனின் ஆற்றல்; பீமனின் வில்லையும் கொடிமரத்தையும் வெட்டி அவனைத் தாக்கி நடுங்கச் செய்த கிருதவர்மன்; சிகண்டியின் வில்லை அறுத்து, அவனைத் தாக்கி மயக்கமடையச் செய்து களத்தைவிட்டே விரட்டியது; பாண்டவப் படை சிதறி ஓடியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "நமது படையும் தலையாயச் சிறப்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. மேன்மையானதாகவும் அது கருதப்படுகிறது. ஓ! சஞ்சயா, அறிவியலின் விதிகளின் படி சமமாக அணிவகுக்கப்பட்டுள்ள அதுவும் {படையும்} எண்ணற்றவர்களைக் கொண்டதாகவே இருக்கிறது [1]. எப்போதும் நம்மால் நன்றாக நடத்தப்படும் அது, நமக்கு அர்ப்பணிப்புள்ளதாகவே எப்போதும் இருக்கிறது. பரந்த எண்ணிக்கையின் பலம், அதற்கு ஓர் அற்புதத் தன்மையை அளிக்கிறது. முன்பே அதன் ஆற்றல் சோதிக்கப்பட்டுள்ளது.


[1] இந்தப் பகுதியின் தொடக்க ஸ்லோகங்களில் பல, கிட்டத்தட்ட பீஷ்ம பர்வம் பகுதி 76ல் உள்ளதைப் போலவே இருக்கின்றன எனவும், இங்கே சில இடங்களில் தாம் பம்பாய்ப் பதிப்பின் உரைகளையே பின்பற்றியிருப்பதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில், "நமது படை பல தலையாயச் சிறப்புகளைக் கொண்டுள்ளது; அது பல்வேறு வகைகளிலான துருப்புகளால் ஆனதாக இருக்கிறது; அதன் திறன் பெரியதாக இருக்கிறது. ஓ சஞ்சயா, படையறிவியலின் விதிகளுக்கு இணங்க அணிவகுக்கப்பட்டிருக்கும் அஃது, எண்ணிக்கையிலும் பலமாக இருக்கிறது" என்றிருக்கிறது.

படைவீரர்கள் மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிவாகவோ, பருமனாகவோ இல்லை. நன்கு வளர்க்கப்பட்ட பலமான உடற்கட்டுகளையும், சுறுசுறுப்பையும் கொண்ட அவர்கள், நோயிலிருந்து விடுபட்டவர்களாகவே இருக்கின்றனர். கவசம் பூண்டிருக்கும் அவர்கள், நன்கு ஆயுதங்களைத் தரித்திருக்கின்றனர். அனைத்து வகையான ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள், யானைகளின் முதுகுகளில் ஏறவும், இறங்கவும், முன் நகரவும், பின்நகரவும், திறனுடன் தாக்கவும், அணிவகுக்கவும், பின்வாங்கவும் திறன்மிக்கவர்களாகவே இருக்கின்றனர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நடத்துவதில் அவர்கள் அடிக்கடி சோதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், பரம்பரைக்காவோ {பிறப்பின் அடிப்படையிலோ}, உதவிசெய்வதற்காகவோ, உறவுமுறைக்காகவோ இல்லாமல் {தேர்ந்தெடுக்கப்படாமல்}, முறையாக ஆய்வு செய்யப்பட்ட {தேர்ந்தெடுக்கப்பட்ட} பிறகே ஊதியத்தால் மகிழ்விக்கப்படுகின்றனர். அவர்கள், தானாக வந்த கும்பலல்ல, ஊதியமில்லாமல் என் படைக்குள் அனுமதிக்கப்பட்டவர்களுமல்ல. நல்ல பிறப்பு கொண்டவர்களையும், மரியாதைக்குரிய மனிதர்களையும் கொண்டிருக்கும் எனது படை, நன்கு உண்டு, மனநிறைவுடனும், பணிவுடனும் இருக்கிறது. அவர்களுக்குப் போதுமான அளவுக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் அனைவரும் புகழ்பெற்றவர்களாகவும், நுண்ணறிவு மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் அவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, லோகபாலர்களுக்கு ஒப்பானவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான நமது முதன்மையான ஆலோசகர்கள் மற்றும் நியாயமான செயல்களைச் செய்யும் பிறரால் பாதுகாக்கப்படுகின்றனர். நமக்கு ஏற்புடையதைச் செய்ய முயலும் எண்ணற்ற பூமியின் ஆட்சியாளர்களும், தங்கள் படைகள் மற்றும் தொண்டர்களுடன் நமது தரப்பை அடைந்தவர்களும் அவர்களைப் பாதுகாக்கின்றனர்.

உண்மையில், நமது படையானது, அனைத்துத் திசைகளில் இருந்து பாயும் எண்ணற்ற ஆறுகளின் நீரால் நிறைந்த பரந்த பெருங்கடலுக்கு ஒப்பானதாகும். குதிரைகள், தேர்கள் நிறைந்த அது {நமது படை}, சிறகுகளற்றதாக இருப்பினும், சிறகு படைத்த காற்று வாசிகளுக்கு {பறவைகளுக்கு} ஒப்பாகவே இருக்கிறது. குமடுகளில் மதநீர் ஒழுகும் யானைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரிகிறது. எனவே, இத்தகு படையே கொல்லப்படுகிறதெனில், விதியைத் தவிர இது வேறு என்னவாக இருக்க முடியும்?

(பெருங்கடலைப் போன்ற அதற்கு) பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் ஓயாமால் பாயும் அதன் நீராகவும், குதிரைகளும், பிற விலங்குகளும் அதன் பயங்கர அலைகளாவும் ஆகின்றன. எண்ணற்ற வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள் மற்றும் வேல்கள், அதன் (அந்தப் பெருங்கடலில் செயல்படும்) துடுப்புகளாகின்றன. (போர்வீரர்களின்) கொடிமரங்கள், ஆபரணங்கள், முத்துக்கள், இரத்தினங்கள் ஆகியன அதை அலங்கரிக்கும் தாமரைகளாகின்றன. விரைந்து செல்லும் குதிரைகளும், யானைகளும், மூர்க்கத்துடன் அதைக் கலங்கடிக்கும் காற்றாகின்றன. துரோணர் அந்தப் பெருங்கடலின் அடியற்ற குகையாகவும் {ஆழமான பாதாளமாகவும்}, கிருதவர்மன் அதன் சுழலாகவும் ஆகின்றனர். ஜலசந்தன் அதன் வலிமைமிக்க முதலையாகிறான், கர்ணன் சக்தியாலும் செருக்காலும் அதைப் பெருக வைக்கும் சந்திரோதயம் ஆகிறான்.

அந்தப் பாண்டவக் காளை {அர்ஜுனன்}, பெருங்கடலைப் போலப் பரந்திருக்கும் எனது படையின் ஊடாக அதைப் பிளந்து தனது தனித்தேரில் வேகமாகச் சென்றான், யுயுதானனும் {சாத்யகியும்} அவனைப் பின்தொடர்ந்து சென்றான் எனும்போது, ஓ! சஞ்சயா, சவ்யசச்சினும் {அர்ஜுனனும்}, சாத்வத குலத்தின் அந்த முதன்மையான தேர்வீரனும் {சாத்யகியும்}, எஞ்சியிருக்கும் என் துருப்புகளைக்கூட உயிரோடு விடும் எந்த வாய்ப்பையும் நான் காணவில்லை. மிகவும் சுறுசுறுப்பான அந்த வீரர்கள் இருவரும் (முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்த படைப்பிரிவுகளைப்) பிளந்து சென்றதைக் கண்டும், காண்டீவத்தின் கணைகள் அடையும் தொலைவுக்குள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இருப்பதைப் பார்த்தும், விதியால் உந்தப்பட்ட கௌரவனால் {துரியோதனனால்} உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்நேரத்தில், அனைவரும் தீவிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} என்ன நேர்ந்தது?

ஓ! ஐயா {சஞ்சயா}, கூடியிருக்கும் குருக்களைக் காலனால் விழுங்கப்பட்டவர்களாகவே நான் கருதுகிறேன். உண்மையில், போரில் அவர்களது ஆற்றலானது, முன்பொருகாலத்தில் இருந்ததைப் போல இப்போது காணப்படவே இல்லை. கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {ஆர்ஜுனன்} ஆகிய இருவரும் காயம்படாமலே (குரு) படைக்குள் நுழைந்துவிட்டனர். ஓ! சஞ்சயா, அவர்களைத் தடுக்கவல்லவர்கள் எவனும் அந்தப் படையில் இல்லை. பெரும் தேர்வீரர்களாக இருக்கும் போராளிகள் பலரும், ஆய்வுக்குப் பிறகே எங்களால் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அவரவருக்குத் தகுந்த ஊதியத்தாலும், மற்றும் பிறர் இனிய பேச்சாலும் (எங்களால்) கௌரவிக்கப்பட்டனர். ஓ! மகனே, என் துருப்புகளில் நல்ல பதவிகளால் (அவனுக்குக் கொடுக்கப்பட்டு) கௌரவிக்கப்படாதவன் எவனும் இல்லை. ஒவ்வொருவனும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையும், அவனது சேவைகளின் தன்மைக்கேற்ற பங்கீடுகளையும் பெறுகிறான்.

என் படையில், ஓ! சஞ்சயா, போரில் திறமையற்ற எவனும் இல்லை, {அவனுக்குத்} தகுந்த ஊதியத்தை விடக் குறைவாகப் பெறுபவன் எவனும் இல்லை, அல்லது எந்த ஊதியமும் பெறாதவன் என எவனும் இல்லை. படைவீரர்கள், என் சக்திக்குத் தக்கபடி பரிசுகளாலும், கௌரவங்களாலும், ஆசனங்களாலும் எப்போதும் வணங்கப்படுகின்றனர். என் மகன்களாலும், என் உறவினர்களாலும், என் நண்பர்களாலும் இதே நடத்தையே அவர்களிடம் பின்பற்றப்படுகின்றன. எனினும், சவ்யசச்சின் {அர்ஜுனன்} வந்த உடனேயே, அவனாலும், சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} அவர்கள் வெல்லப்படுகின்றனரெனில் விதியைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அவர்களைப் பாதுகாப்பவர்களும், பாதுகாவலர்களால் பாதுகாக்கப்படுபவர்களும் அதே வழியில் பின்தொடர்ந்து செல்கின்றனர். ஜெயத்ரதனுக்கு முன்பாக அர்ஜுனன் வந்ததைக் கண்டு, மூடனான என் மகனால் {துரியோதனனால்} என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? சாத்யகியும் படைக்குள் நுழைவதைக் கண்ட துரியோதனன், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தது என எந்த நடவடிக்கையைச் சிந்தித்தான்? உண்மையில், அனைத்து ஆயுதங்களின் தீண்டலுக்கும் அப்பாற்பட்டவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் என் படைக்குள் நுழைவதைக் கண்டு, போரில் என் போர்வீரர்களால் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது?

தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணன், சிநி குலத்துக் காளை {சாத்யகி} ஆகிய இருவரும் அர்ஜுனனின் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். சாத்வதன் {சாத்யகி}, அர்ஜுனன் ஆகிய இருவரும் என் படையின் ஊடாகக் கடந்து செல்வதையும், குருக்கள் தப்பி ஓடுவதையும் பார்த்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

தங்கள் தேர்வீரர்கள் எதிரியை அடக்குவதில் நம்பிக்கை இழந்து திரும்புவதையும், களத்தில் இருந்து ஓடுவதற்கு அவர்களது இதயத்தை நிலைநிறுத்துவதையும் பார்த்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

தங்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியனவும், வீரப் போராளிகளும் களத்தைவிட்டுக் கவலையுடன் ஓடுவதால் என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடும் பெரும் யானைகள் பலவற்றையும், வீழ்ந்தவை மற்றும் விழுபவை ஆகிய பிறவற்றையும் பார்த்து என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

சாத்யகி மற்றும் பார்த்தனால் சாரதிகளை இழுந்த குதிரைகளையும், தேர்களை இழந்த போர்வீரர்களையும் கண்டு, என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தனால் {அர்ஜுனன்} பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள் கொல்லப்படுவதாலும், முறியடிக்கப்படுவதாலும் என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடுவதைக் கண்டு, வெற்றியில் நம்பிக்கையிழந்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

ஒருக்கணமும் வெல்லப்படாமல், துரோணரின் படைப்பிரிவின் ஊடாகக் கடந்து சென்ற அவ்விரு வீரர்களையும் கண்ட என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

ஓ மகனே {சஞ்சயா}, மங்கா மகிமை கொண்ட இரு வீரர்களான அந்தக் கிருஷ்ணன், தனஞ்சயன் ஆகிய இருவரும் சாத்வதனும் {சாத்யகியும்} சேர்ந்து என் படைக்குள் ஊடுருவியதைக் கேட்டு நான் மலைத்திருக்கிறேன்.

சிநிக்களில் முதன்மையான அந்தத் தேர்வீரன் {சாத்யகி}, என் படைக்குள் நுழைந்து, போஜர்களின் படைப்பிரிவைக் கடந்து சென்றதும் கௌரவர்கள் என்ன செய்தனர்? ஓ! சஞ்சயா, களத்தில் பாண்டவர்களைப் பீடித்த துரோணர் எங்கே இருந்தாரோ, அவ்விடத்தில் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. வலிமைமிக்கத் துரோணர், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், ஆயுதங்களில் சாதித்தவரும், போரில் வீழ்த்தப்பட முடியாதவரும் ஆவார். போரில் அந்தப் பெரும் வில்லாளியைப் பாஞ்சாலர்களால் எவ்வாறு துளைக்க முடிந்தது? தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பும் பாஞ்சாலர்கள், துரோணரைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரிகளாவர். வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரும் [2] அவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரியாவான். ஓ! சஞ்சயா, விவரித்துக் கூறுவதில் நீ திறமைமிக்கவனாக இருக்கிறாய். எனவே, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதற்கு அர்ஜுனன் என்ன செய்தான் என்பதைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

[2] கங்குலியில் இங்கே "Desirous of Dhananjaya's victory, the Panchalas are inveterate foes of Drona. The mighty car-warrior Drona also is an inveterate foe of theirs" என்று துரோணரின் பெயரே நேரடியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வேறொரு பதிப்பில் இவ்விடத்தில், "அந்த மகாவில்லாளியை, தனஞ்சயனுக்கு வெற்றியைத் தேடுவதில் விருப்பமுள்ளவர்களும், அதனால் துரோணரிடத்தில் பகை கொண்டவர்களுமான பாஞ்சாலர்கள் போர்க்களத்தில் எவ்வாறு எதிர்த்துப் போர் புரிந்தனர்? அவர்களிடத்தில் ஊன்றிய பகைமையுடையவரும் மகாரதரும் பாரத்வாஜகுமாரருமான அசுவத்தாமன் யுத்தத்தில் யாது செய்தார்?" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், "தனஞ்சயனின் வெற்றியை விரும்பிய பாஞ்சாலர்கள், துரோணர் மேல் தணியாச் சினம் கொண்ட எதிரிகளாவர், அதே போல வலிமைமிக்கத் தேர்வீரனான பரத்வாஜர் மகனும் {துரோணரும்} அவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் {அவர்களின்} எதிரியாவார்" என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் வரும் பரத்வாஜர் மகன் என்ன வார்த்தை அஸ்வத்தாமனுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். ஆனால், துரோணர் மன்னிக்கும் குணம் கொண்டவர் என்பதாலும், பாஞ்சாலர்களுக்கு அவரே நாட்டைக் கொடுத்தார் என்பதாலும், இங்கே கண்மூடித்தனமாகப் பாஞ்சாலர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்பதாலும், இஃது அஸ்வத்தாமனாகவே இருக்க வேண்டும்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது குற்றத்தின் விளைவாகவே இந்தத் துயரத்தை அடைந்திருக்கும் நீர், ஓ! வீரரே, அற்ப மனிதனைப் போல இத்தகு புலம்பல்களில் ஈடுபடக்கூடாது. முன்னர், விதுரருடன் சேர்த்து, உமது நலன்விரும்பிகள் பலரும், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களைக் கைவிடாதீர்" என்று உம்மிடம் சொன்னார்கள். அவர்களின் வார்த்தைகளை நீர் கருதிப் பார்க்கவில்லை {கேட்கவில்லை}. நலன் விரும்பிகளான நண்பர்களின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாத ஒரு மனிதன், பெரும் துயரத்தில் விழுந்து உம்மைப் போலவே அழுவான். முன்னர்த் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சமாதானத்தை உம்மிடம் இரந்து வேண்டினான். இவையனைத்துக்குப் பிறகும், உலகப்புகழ்பெற்ற கிருஷ்ணன் தனது வேண்டுதலை அடையவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அனைத்து உலகங்களின் பலமிக்கத் தலைவனும் {இறைவனும்}, அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்தின் உண்மையை அறிந்தவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, உமது மதிப்பற்ற தன்மையையும், பாண்டவர்களிடம் நீர் கொண்ட பொறாமையையும் உறுதி செய்து கொண்டு, பாண்டவர்களிடம் நீர் கொண்ட தீய நோக்கங்களைப் புரிந்து கொண்டு, மனக்குழப்பத்துடன் கூடிய உமது புலம்பல்களையும் கேட்டு, குருக்களுக்கு மத்தியில் போரின் தழலைச் சுடர்விட்டு எரியச் செய்தான். உமது குற்றத்தாலேயே {முற்றாக அனைத்தையும் அழிக்கும்} இந்தப் பேரழிவு உம்மை அடைந்திருக்கிறது.

ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் மேல் குற்றத்தை சுமத்துவது உமக்குத் தகாது. இந்த நிகழ்வுகளின் வளர்ச்சியில், தொடக்கத்திலோ, நடுவிலோ, முடிவிலோ உமது நல்ல தகுதிகள் {உம்முடைய நல்ல செய்கைகள் என்று} ஏதும் காணப்படவில்லை. இந்தத் தோல்வி முற்றிலும் உம்மால் ஏற்பட்டதே ஆகும். எனவே, இவ்வுலகின் உண்மையை அறியும் நீர் அமைதியை அடைந்து, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஏற்பட்டதற்கு ஒப்பான இந்தக் கடும்போர் எப்படி நடந்தது என்பதைக் கேட்பீராக.

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} உமது படைக்குள் நுழைந்ததும், பீமசேனனின் தலைமையிலான பார்த்தர்களும் உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர். எனினும், அந்தப் போரில் பாண்டவர்கள் சீற்றத்துடனும், கோபத்துடனும், தங்களைப் பின்தொடர்வோருடன் சேர்ந்து உமது படையை இப்படி எதிர்த்தபோது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் அவர்களைத் தனி ஒருவனாகவே தடுத்தான். துள்ளும் அலைகளைத் தடுக்கும் கரையைப் போலவே ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்} அந்தப் போரில் பாண்டவர்களின் துருப்புகளைத் தடுத்தான். ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பார்த்தர்களால், தனி ஒருவனான தன்னைக் கடக்க முடியாமல் செய்த அந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} ஆற்றலை அற்புதமானதாக நாங்கள் கண்டோம்.

அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், மூன்று கணைகளால் கிருதவர்மனைத் துளைத்துத் தன் சங்கை முழக்கி பாண்டவர்கள் அனைவரையும் மகிழச் செய்தான். பிறகு சகாதேவன், இருபது கணைகளாலும், நீதிமானான யுதிஷ்டிரன் ஐந்தாலும், நகுலன் நூறாலும் அந்த ஹிருதிகன் மகனைத் துளைத்தனர். திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்று கணைகளாலும், கடோத்கசன் ஏழாலும் அவனைத் துளைத்தனர். விராடன், துருபதன், துருபதன் மகன் (திருஷ்டத்யும்னன்) ஆகியோர் ஒவ்வொருவரும் அவனை ஐந்து கணைகளால் துளைத்தனர். சிகண்டி ஐந்தால் ஒரு முறையும், மீண்டும் சிரித்துக் கொண்டே இருபத்தைந்து கணைகளால் ஒரு முறையும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான்.

அப்போது கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்தான். மேலும் அந்த ஹிருதிகன் மகன் பீமனின் தேரில் இருந்து பின்னவனின் {பீமனின்} கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வீழ்த்தினான். பிறகு, பெரும் வேகம் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கிருதவர்மன்}, வில்லறுபட்ட பீமனை எழுபது கூரிய கணைகளால் கோபத்துடன் அவனது மார்பைத் தாக்கினான். வலிமைமிக்கப் பீமன், ஹிருதிகன் மகனின் {ஹார்த்திக்யனான கிருதவர்மனின்} சிறப்புமிக்கக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலை ஒன்றைப் போலத் தன் தேரில் நடுங்கினான். பீமசேனனை அந்நிலையில் கண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலைமையிலானவர்களுமான பார்த்தர்கள், ஓ! மன்னா, கிருதவர்மனின் மீது பல கணைகளை ஏவி அவனைப் பீடித்தனர். தேர்க்கூட்டங்களால் அந்தப் போர்வீரனை {கிருதவர்மனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், ஓ! ஐயா, அந்தப் போரில் வாயுத் தேவனின் மகனை {பீமனைக்} காக்க விரும்பி மகிழ்ச்சியாகத் தங்கள் கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைக்கத் தொடங்கினர்.

சுயநினைவு மீண்ட வலிமைமிக்கப் பீமசேனன், அந்தப் போரில் எஃகால் ஆனதும், தங்கப்பிடியைக் கொண்டதுமான ஓர் ஈட்டி எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து, கிருதவர்மனின் தேர் மீது பெரும் வேகத்துடன் வீசினான். சட்டை உரிந்த பாம்புக்கு ஒப்பானதும், கடுமையாகத் தெரிந்ததுமான அந்த ஈட்டி, பீமனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், அது கிருதவர்மனை நோக்கிச் சுடரொளியுடன் சென்றது. யுகநெருப்பின் காந்தியைக் கொண்ட அந்த ஈட்டி, தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, இரண்டு கணைகளால் அதை இரண்டாகத் துண்டித்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஈட்டி, இப்படித் துண்டிக்கப்பட்டதும், ஓ! மன்னா, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கல்லைப் போலப் பத்துத் திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடி கீழே பூமியில் அது விழுந்தது. தன் ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பீமன் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான்.

பிறகு மேலும் கடினமானதும், உரத்த நாணொலி கொண்டதுமான மற்றொரு வில்லை எடுத்த பீமசேனன், கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தாக்கினான். பிறகு, ஓ! மன்னா, பயங்கர வலிமை கொண்ட பீமன், ஓ! ஏகாதிபதி, உமது தீய கொள்கையின் {ஆலோசனையின்} விளைவால், ஐந்து கணைகளைக் கொண்டு கிருதவர்மனின் நடுமார்பைத் தாக்கினான். பிறகு, பீமசேனனால் அங்கங்களெங்கும் சிதைக்கப்பட்ட அந்தப் போஜ ஆட்சியாளன் {கிருதவர்மன்}, ஓ! ஐயா, மலர்களால் நிறைந்த சிவப்பு அசோகத்தை {அசோக மரத்தைப்} போல அந்தக் களத்தில் ஒளிர்ந்தான். வலிமைமிக்க வில்லாளியான அந்தக் கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, புன்னகைத்துக் கொண்டே, மூன்று கணைகளால் பீமசேனனை வலுவாகத் தாக்கிய பிறகு, போரில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் பதிலுக்கு மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பின்னவர்களில் ஒவ்வொருவரும் அவனை {கிருதவர்மனைப்} பதிலுக்கு ஏழு {ஏழு ஏழு} கணைகளால் துளைத்தனர்.

அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சாத்வத குலத்தோன் {கிருதவர்மன்}, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் புன்னகைத்துக் கொண்டே ஒரு க்ஷுரப்ரத்தினால் சிகண்டியின் வில்லை அறுத்தான். பிறகு சிகண்டி, வெட்டப்பட்ட தன் வில்லைக் கண்டு, ஒரு வாளையும், நாறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பிரகாசமான கேடயத்தையும் விரைவாக எடுத்துக் கொண்டான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெரிய கேடயத்தைச் சுழற்றிய சிகண்டி, அந்த வாளை கிருதவர்மனின் தேரை நோக்கி எறிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணை பொருத்தப்பட்ட கிருதவர்மனின் வில்லை வெட்டிய அந்தப் பெரிய வாளானது, ஆகாயத்திலிருந்து தளர்ந்து விழுந்த பிரகாசமான ஒளிக்கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. அதேவேளையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அந்தப் போரில் கிருதவர்மனைத் தங்கள் கணைகளால் விரைவாகவும் ஆழமாகவும் துளைத்தனர். பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஒடிந்த வில்லை வீசி எறிந்துவிட்டு, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவர்களில் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் துளைத்தான். அவன், சிகண்டியை முதலில் மூன்று கணைகளாலும், பிறகு ஐந்தாலும் துளைத்தான். பிறகு சிறப்புமிக்கச் சிகண்டி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகச் செல்லக் கூடியவையும், ஆமையின் நகங்களைப் போன்ற [3] தலைகளைக் கொண்டவையுமான பல கணைகளால் ஹிருதிகன் மகனைத் தடுத்தான்.

[3] கங்குலியில் ஆமையின் நகம் என்றும் மன்மதநாதத்தரின் பதிப்பில் ஆமையின் வாய் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வேறொரு பதிப்பிலும் கங்குலியைப் போலவே ஆமையின் நகம் என்றே குறிக்கப்பட்டுள்ளது.

அப்போது அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா, வலிமைமிக்கத் தேர்வீரனும், போரில் சிறப்புமிக்கப் பீஷ்மரின் வீழ்ச்சிக்குக் காரணமானவனுமான அந்த யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். உண்மையில், வீரக் கிருதவர்மன் தன் வலிமையை வெளிக்காட்டியபடி ஒரு புலியானது யானை ஒன்றை நோக்கிச் செல்வதைப் போலச் சிகண்டியை நோக்கி விரைந்தான். பிறகு, பெரும் யானைகள் இரண்டிற்கோ, சுடர்மிக்க நெருப்புகள் இரண்டிற்கோ ஒப்பானவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அந்த இருவரும் கணைகளின் மேகங்களால் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அவர்கள் தங்கள் விற்களில் சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, தங்கள் கணைகளைக் குறிபார்த்து, கதிர்களைப் பொழியும் இரு சூரியன்களைப் போல நூற்றுக்கணக்கானவற்றை {கணைகளை} ஏவினர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் எரித்து, யுக முடிவில் தோன்றும் இரு சூரியன்களைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தனர்.

கிருதவர்மன் அந்தப் போரில், வலிமைமிக்கத் தேர்வீரனான யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} எழுபத்துமூன்று கணைகளாலும், பிறகும் ஏழு கணைகளாலும் துளைத்தான். இப்படி ஆழத்துளைக்கப்பட்ட சிகண்டி, தன் வில்லையும், கணைகளையும் வீசிவிட்டு, மயக்கத்துக்கு ஆட்பட்டு, கீழே தன் தேர்த்தட்டில் வலியுடன் அமர்ந்தான். அந்த வீரன் {சிகண்டி} மயங்கியதைக் கண்ட உமது துருப்பினர், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைத்தனர். ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட சிகண்டியைக் கண்ட அவனது தேரோட்டி, விரைவாக அவனைக் களத்திற்கு வெளியே {தேரில்} சுமந்து சென்றான். சிகண்டி தன் தேர்த்தட்டில் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட பார்த்தர்கள், அந்தப் போரில் கிருதவர்மனை தேர்க்கூட்டங்களால் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.

வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தனியொருவனாகப் பார்த்தர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் தடுத்து மிக அற்புதமான சாதனையை அடைந்தான். இப்படியே பார்த்தர்களை வென்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கிருதவர்மன்}, அதன் பிறகு, சேதிகளையும், பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும், கேகயர்களையும் எனப் பெரும் ஆற்றலைக் கொண்ட அனைவரையும் வென்றான். இப்படி ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படைகள், போரில் நிதானமாக நிற்க இயலாமல் அனைத்துத் திசைகளிலும் ஓடத் தொடங்கின. பீமசேனன் தலைமையிலான பாண்டுவின் மகன்களை வென்ற ஹிருதிகன் மகன், போரில் சுடர்மிக்க நெருப்பைப் போல நின்றான். கணைத்தாரைகளால் பீடிக்கப்பட்டவர்களும், போரில் ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {கிருதவர்மனை} நேரில் சந்திக்கத் துணியவில்லை" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்