Saturday, July 30, 2016

ஜலசந்தனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 114

Satyaki killed Jalasandha! | Drona-Parva-Section-114 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 30)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களைப் பீடித்த கிருதவர்மனைக் கண்டு திரும்பி வந்த சாத்யகி கிருதவர்மனை வீழ்த்தியது; யானைப்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட ஜலசந்தன்; ஜலசந்தனின் கரங்களையும் தலையையும் வெட்டிக் கொன்ற சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிதறாத கவனத்துடன் கேட்பீராக. அந்தப்படை உயர் ஆன்ம ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} முறியடிக்கப்பட்டு, பார்த்தர்கள் வெட்கத்தால் அவமானமடைந்து, உமது துருப்புகள் மகிழ்ச்சியில் குதூகலித்த போது, அடியற்றத் துன்பக் கடலில் மூழ்கிப் பாதுகாப்பை வேண்டிக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு எவன் பாதுகாவலனாவானோ அந்த வீரனான சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பயங்கரப் போரில் உமது படையால் உண்டாக்கப்பட்ட அந்தக் கடும் ஆரவாரத்தைக் கேட்டு விரைவாகத் திரும்பி கிருதவர்மனை எதிர்த்து வந்தான்.


ஹிருதிகன் மகனான கிருதவர்மன், கோபத்தால் தூண்டப்பட்டுக் கூரிய கணை மேகங்களால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான். இதனால் சாத்யகியும் சினத்தால் தூண்டப்பட்டான். பிறகு அந்தச் சிநியின் பேரன் அம்மோதலில் ஒரு கூரிய பல்லத்தையும், நான்கு பிற கணைகளையும் கிருதவர்மனின் மீது விரைவாக ஏவினான். அந்த நான்கு கணைகள் கிருதவர்மனின் குதிரைகளைக் [1] கொன்றன. மற்றொன்று {பல்லம்} கிருதவர்மனின் வில்லை அறுத்தது. பிறகு சாத்யகி தன் எதிரியின் தேரோட்டியைத் துளைத்து, தன் எதிராளியின் படைகளைப் பீடிப்பதற்காகப் பின்னவனின் {கிருதவர்மனின்} பின்புறத்தைக் காத்தவர்களைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பகைவரின் படைப்பிரிவுகள் சிதறின. அதன்பேரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி தன் வழியே விரைவாகச் சென்றான்.

[1] துரோண பர்வம் 112ல் கிருதவர்மனின் நான்கு குதிரைகளைச் சாத்யகி கொன்றதாகவும், பிறகு சாத்யகியால் வீழ்த்தப்பட்ட கிருதவர்மன் குதிரைகளால் இழுத்துச்செல்லப்பட்டதாகவும் குறிப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதியின் அடிக்குறிப்புகள் [4] மற்றும் [5] காணவும்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்ட அந்த வீரன் {சாத்யகி} உமது துருப்புகளை என்ன செய்தான் என்பதைக் கேட்பீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் படைப்பிரிவாலான பெருங்கடலைக் கடந்து, போரில் கிருதவர்மனை வென்றதால் மகிழ்ச்சியால் நிறைந்த அந்த வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம், "அச்சமில்லாமல் மெதுவாகச் செல்வாயாக" என்றான். எனினும், தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த அந்த உமது படையைக் கண்ட சாத்யகி, மீண்டும் தன் தேரோட்டியிடம், "துரோணரின் படைக்கு இடது பக்கத்தில் நீ காண்பதும், மேகங்களைப் போன்ற கரிய நிறத்தில் தெரிவதுமான பெரிய படைப்பிரிவானது (எதிரியின்) யானைகளைக் கொண்டிருக்கிறது. ருக்மரதன் [2] அதன் தலைவனாக இருக்கிறான். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, அதிகம் இருக்கும் அந்த யானைகள் போரில் தடுப்பதற்கு மிகக் கடினமானவையாகும். துரியோதனனால் தூண்டப்பட்ட அவர்கள், தங்கள் உயிரையும் விடத் துணிந்து எனக்காகக் காத்திருக்கின்றனர். திரிகர்த்தர்களின் நாட்டைச் சேர்ந்த அந்தப் போராளிகள் அனைவரும், அரச பிறவி கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், போரில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்த வல்லவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களையுடைய சிறப்புமிக்கத் தேர்வீரர்களுமாவர். துணிச்சல்மிக்க அந்தவீரர்கள் என்னுடன் போரிடும் விருப்பத்தால் காத்திருக்கின்றனர். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, விரைவாகக் குதிரைகளைத் தூண்டி, என்னை அங்கே கொண்டு செல்வாயாக. பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே திரிகர்த்தர்களுடன் நான் போரிடுவேன்" என்றான் {சாத்யகி}.

[2] வேறொரு பதிப்பில் இது துரோணர் என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே ருக்மரதன் என்றே இருக்கிறது. சல்லியன் மகனுடைய பெயரும் ருக்மரதன்தான். ஆனால் அவன் துரோண பர்வம் பகுதி 43ல் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான். எனவே இங்கே குறிப்பிடப்படுபவன் திரிகர்த்தர்களைச் சேர்ந்த வேறொரு ருக்மரதனாக இருக்க வேண்டும்.

இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டியானவன் {முகுந்தன்}, சாத்வதனின் {சாத்யகியின்} விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து மெதுவாகச் சென்றான். கொடிமரம் பொருத்தப்பட்டதும், சூரியனின் காந்தியைக் கொண்டதுமான அந்தப் பிரகாசமான தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், சாரதிக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், குந்த {குருக்கத்தி} மலர், அல்லது நிலவு, அல்லது வெள்ளியைப் போன்று வெண்மையாக இருந்தவையுமான அந்தச் சிறந்த குதிரைகள் அவனை {சாத்யகியை} (அந்த இடத்திற்குச்) சுமந்து சென்றன. சங்கின் நிறத்திலான அந்த அற்புதக் குதிரைகளால் இழுக்கப்பட்டு அவன் போரிட முன்னேறிய போது, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், எளிதாக அனைத்தையும் துளைக்கவல்லவையும், பல்வேறு வகைகளிலான கணைகளை இறைத்தபடி தங்கள் யானைகளுடன் அவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.

கோடையின் முடிவில் மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் பெரிய மேகங்களைப் போல அந்தச் சாத்வதனும் {சாத்யகியும்}, தன் கூரிய கணைகளை ஏவியபடி அந்த யானைப் படைப்பிரிவுடன் போரிட்டான். சிநிக்களில் முதன்மையானவனால் {சாத்யகியால்} ஏவப்பட்டவையும், இடியின் தீண்டலுக்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகளால் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் தந்தங்கள் முறிந்து, உடல்கள் குருதியால் நனைந்து, தலைகளும், மத்தகங்களும் பிளக்கப்பட்டு, காதுகள், முகங்கள் மற்றும் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு, பாகர்களை இழந்து களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கின. அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள் வெட்டப்பட்டு, பாகர்கள் கொல்லப்பட்டு, கம்பளங்கள் தளர்ந்து அனைத்துத் திசைகளிலும் ஓடிச்சென்றன. அவற்றில் பல, ஓ! ஏகாதிபதி, சாத்வதனின் {சாத்யகியின்} நாராசங்கள் [3], வத்சதந்தங்கள் [4], பல்லங்கள் [5], அஞ்சலிகங்கள், க்ஷுரப்ரங்கள் [6], அர்த்தச்சந்திரக்கணைகள் [7] ஆகியவற்றால் சிதைக்கப்பட்டுத் தங்கள் உடல்களில் குருதி பாய, மலமும் சிறுநீரும் கழித்து, பலவிதமாகக் கதறி, மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்தைப் போலப் பேரொலிகளை வெளியிட்டபடியே ஓடின. அவற்றில் சில சுழன்றன, சில நொண்டின {தடுமாறின}, சில கீழே விழுந்தன, சில உற்சாகமற்று வாட்டமடைந்தன. சூரியன், அல்லது நெருப்புக்கு ஒப்பான யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த யானைப்படைப்பிரிவு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது.

[3] நாராசங்கள் - நீண்ட கணைகள்,
[4] வத்சதந்தங்கள் - கன்றின் பல் போன்ற தலை கொண்ட கணைகள்}
[5] பல்லங்கள் - அகன்ற தலை கொண்ட கணைகள்},
[6] க்ஷுரப்ரங்கள் - கத்தி போன்ற தலை கொண்ட கணைகள்}
[7] அர்த்தச்சந்திரக்கணைகள் - பிறைச்சந்திரன் போன்ற தலை கொண்ட கணைகள்}

அந்த யானைப்படைப்பிரிவு அழிக்கப்பட்ட பிறகு, வலிமைமிக்க ஜலசந்தன், நிதானமாக முயன்று, வெண்குதிரைகளால் இழுக்கப்பட்ட யுயுதானனின் தேரின் முன்பு தன் யானையை வழிநடத்திச் சென்றான். தங்க அங்கதங்கள், காது குண்டலங்கள், கிரீடம் ஆகியவற்றைச் சூடியவனும், சிவந்த சந்தனக் குழம்பை {மேனியில்} பூசியிருந்தவனும், சுடர்மிக்கத் தங்க ஆரத்தைத் தன் தலையில் சூடியிருந்தவனும், மார்புக் கவசத்தால் மார்பு மறைக்கப்பட்டவனும், தன் கழுத்தில் (பிரகாசமான) தங்க ஆரத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், பாவமற்ற ஆன்மா கொண்டவனுமான அந்த வீரன் {ஜலசந்தன்}, ஓ! மன்னா, தன் யானையின் தலையில் அமர்ந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை அசைத்துக் கொண்டு, மின்னலின் சக்தி ஊட்டப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

துள்ளும் கடலைத் தடுக்கும் கரையைப் போலச் சாத்யகி, இத்தகு சீற்றத்துடன் தன்னை அணுகிய அந்த மகதர்களின் ஆட்சியாளனுடைய {ஜலசந்தனுடைய} சிறந்த யானையைத் தடுத்தான். வலிமைமிக்க ஜலசந்தன், யுயுதானனின் சிறந்த கணைகளால் யானை தடுக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்தான். அப்போது, ஓ மன்னா, கோபமூட்டப்பட்ட அந்த ஜலசந்தன், சில கணைகளால் சிநியின் பேரனுடைய அகன்ற மார்பைப் பெரும்பலத்துடன் துளைத்தான். அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி} வில்லை வளைத்துக் கொண்டிருந்த போது, அவன் {ஜலசந்தன்} நன்கு கடினமாக்கப்பட்ட மற்றொரு கூரிய பல்லத்தால் அதை அறுத்தான். பிறகு, ஓ! பாரதரே, சிரித்துக் கொண்டே இருந்த மகதர்களின் வீர ஆட்சியாளன் {ஜலசந்தன்}, வில்லற்ற சாத்யகியை ஐந்து கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், வீரத்தையும், வலிமைமிக்கக் கரத்தையும் கொண்ட சாத்யகி, ஜலசந்தனின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டாலும், கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன.

அப்போது வலிமைமிக்க யுயுதானன் எவ்வித அச்சமுமின்றி (தான் பயன்படுத்த வேண்டிய) கணைகளைக் குறித்துச் சிந்தித்தான். மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அவன் {சாத்யகி}, ஜலசந்தனிடம், "நில், நிற்பாயாக!" என்றான். இவ்வளவே சொன்ன சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே அறுபது {60} கணகளால் அவனது {ஜலசந்தனின்} அகன்ற மார்பை ஆழத் துளைத்தான். மேலும் பெருங்கூர்மை கொண்ட மற்றொரு க்ஷுரப்ரத்தால் ஜலசந்தனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, மேலும் மூன்று கணைகளால் அவன் ஜலசந்தனையும் துளைத்தான். பிறகு ஜலசந்தன் கணை பொருத்தப்பட்ட அந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, சாத்யகியின் மீது வேல் ஒன்றை வீசினான். அந்தக் கடும்போரில் மாதவனின் {சாத்யகியின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்ற அந்தப் பயங்கர வேலானது, சீறும் பெரும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. இப்படி இடது கரத்தில் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, முப்பது கூரிய கணைகளால் ஜலசந்தனைத் தாக்கினான். பிறகு வலிமைமிக்க ஜலசந்தன் தன் கத்தியையும், காளைத் தோலாலானதும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான பெரிய கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, கத்தியைச் சிறிது நேரம் சுழற்றிய பிறகு அந்தச் சாத்வதனின் மேல் அதை வீசினான். சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} வில்லை அறுத்த அந்தக் கத்தி, நெருப்புக்கோளத்தின் பிரகாசத்துடன் கீழே பூமியில் விழுந்து கிடப்பது தெரிந்தது.

பிறகு அந்த யுயுதானன் {சாத்யகி}, எவரையும் துளைக்கவல்லதும், சாலமரத்தின் கிளையைப் போலப் பெரிதானதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு வில்லை எடுத்து வளைத்து, சினத்தால் நிறைந்து, ஜலசந்தனை ஒற்றைக் கணையால் துளைத்தான். மது குலத்தில் முதன்மையானவனான அந்தச் சாத்யகி, சிரித்துக் கொண்டே, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜலசந்தனின் கரங்களிரண்டையும் இரு க்ஷுரப்ரங்களால் அறுத்தான். அதன்பேரில், இரு பரிகங்களைப் {முள் பதித்த கதாயுதங்கள்} போலத் தெரிந்த அந்தக் கரங்கள் இரண்டும், மலையில் இருந்து விழும் ஐந்து தலை பாம்புகளைப் போல அந்த முதன்மையான யானையிலிருந்து கீழே விழுந்தன. பிறகு சாத்யகி, அழகிய பற்களைக் கொண்டதும், அழகிய காதுகுண்டலகள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் எதிராளியின் {ஜலசந்தனின்} பெரிய தலையை மூன்றாவது க்ஷுரப்ரத்தால் அறுத்தான். அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரம் மற்றும் கரங்களற்ற உடல் ஜலசந்தனின் யானையைக் குருதியில் நனைய செய்தது. 

ஓ! மன்னா, போரில் ஜலசந்தனைக் கொன்ற அந்தச் சாத்வதன் {சாத்யகி}, விரைவாக அந்த யானையின் முதுகில் இருந்த மர அமைப்பை {அம்பாரியைக்} கீழே தள்ளினான். குருதியில் குளித்த ஜலசந்தனின் யானை, தன் முதுகில் தொங்கும் அந்த விலைமதிப்புமிக்க ஆசனத்தைச் சுமந்து சென்றது. சாத்வதனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும் விலங்கு, வலியால் கடுமையாகப் பிளிறிக் கொண்டே மூர்க்கமாக ஓடி நட்புப் படைப்பிரிவுகளை நசுக்கியது. பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணிகளில் காளையால் {சாத்யகியால்} ஜலசந்தன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகளுக்குள் ஓலங்கள் எழுந்தன. உமது வீரர்கள் புறமுதுகிட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடினர். உண்மையில் எதிரியின் வெற்றியால் கவலையடைந்த அவர்கள் தங்கள் இதயங்களைத் தப்பி ஓடுவதில் நிலைநிறுத்தினர். அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை {சாத்யகியை} அணுகினார். குருக்களில் காளையர் {கௌரவர்கள்} பலர், (சினத்திலும் செருக்கிலும்) பெருகும் சிநிக்களின் காளையைக் {சாத்யகியைக்} கண்டு துரோணருடன் சேர்ந்து சீற்றத்துடன் அவனை நோக்கி விரைந்தனர். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போருக்கு ஒப்பாக, (ஒரு புறத்தில்) குருக்களையும், துரோணரையும், மற்றும் (மறுபுறத்தில்) யுயுதானனையும் கொண்ட ஒரு போர் {அங்கே} தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்