Sunday, July 31, 2016

கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 115

Satyaki defeated Kritavarma! | Drona-Parva-Section-115 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 31)

பதிவின் சுருக்கம் : சாத்யகியைத் தாக்கிய கௌரவ வீரர்கள்; அனைவரையும் பதிலுக்குத் துளைத்த சாத்யகி; துரியோதனனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; துரியோதனனின் வில்லை இருமுறை வெட்டி, கொடிமரத்தையும் வெட்டி, குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்று அவனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கிருதவர்மனை வீழ்த்தி முன்னேறிச் சென்ற சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதில் சிறந்த அந்த வீரர்கள் அனைவரும் கணைகளின் மேகங்களைக் கவனமாக ஏவியபடியே யுயுதானனுடன் {சாத்யகியுடன்} மோதினர். துரோணர், பெரும் கூர்மை கொண்ட எழுபத்தேழு {77} கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினார். துர்மர்ஷணன் பனிரெண்டாலும் {12}, துஸ்ஸஹன் [1] பத்து {10} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} தாக்கினர். விகர்ணனும், கங்க {பறவையின்} இறகுகளைக் கொண்ட முப்பது {30} கூரிய கணைகளால் அவனது {சாத்யகியின்} இடப்பக்கத்திலும், நடுமார்பிலும் துளைத்தான். துர்முகன் பத்து {10} கணைகளாலும், துச்சாசனன் எட்டாலும் {8}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன் இரண்டு {2} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} துளைத்தனர். அந்தப் போரில், ஓ! மன்னா, துரியோதனனும், பிற வீரர்கள் பலரும் அந்த வலிமைமிக்க வில்லாளியை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் துளைத்தனர்.

[1] கங்குலியின் பதிப்பில், இது துச்சாசனன் என்றே இருக்கிறது. ஆனால், அடுத்தும் துச்சாசனன் பெயர் மீண்டும் வருவதால், இது துஸ்ஸஹனாகவே இருக்க வேண்டும். வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்தில் துஸ்ஸஹன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்டாலும், அந்த விருஷ்ணி குலத்து யுயுதானன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தனது நேரான கணைகளால் துளைத்தான். உண்மையில் அவன் {சாத்யகி}, பரத்வாஜர் மகனை {துரோணரை} மூன்று கணைகளாலும், துஸ்ஸஹனை [2] ஒன்பதாலும், விகர்ணனை இருபத்தைந்தாலும், சித்திரசேனனை ஏழாலும், துர்மர்ஷணனை பனிரெண்டாலும், விவிம்சதியை எட்டாலும், சத்தியவிரதனை ஒன்பதாலும், விஜயனைப் பத்துக் கணைகளாலும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான ருக்மாங்கதனையும் துளைத்த சாத்யகி, தன் வில்லை அசைத்துக் கொண்டே உமது மகனை (துரியோதனனை) எதிர்த்து வேகமாகச் சென்றான். யுயுதானன், மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மொத்த உலகிலும் உள்ள தேர்வீரர்களில் பெரியவனான அந்த மன்னனை {துரியோதனனைத்} தன் கணைகளால் ஆழத் துளைத்தான். பிறகு அவ்விருவருக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.

[2] கங்குலியில் மீண்டும் இங்கே துச்சாசனன் என்றே இருக்கிறது. வேறு இரு பதிப்புகளிலும் துஸ்ஸஹன் என்றே இருக்கிறது. கங்குலி இங்கே பிழை செய்திருக்க வேண்டும் என்று கருதி மேலே துஸ்ஸஹன் என்றே திருத்தியிருக்கிறேன்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களில் {இருவரில்} ஒவ்வொருவனும் அந்தப் போரில் எண்ணற்ற கணைகளைக் குறி பார்த்தும், கூரிய கணைகளை ஏவியும், மற்றவனை மறைத்தனர். குரு மன்னனால் {துரியோதனனால்} துளைக்கப்பட்ட சாத்யகி, சந்தன மரம் ஒன்று பாலைச் சுரப்பது போல, தன் மேனியெங்கும் குருதி பெருகியோட மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உமது மகனும் {துரியோதனனும்}, அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} கணைமேகங்களால் துளைக்கப்பட்டு, தங்கத்தால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, (வேள்வியில்) நிறுவப்பட்ட ஒரு வேள்விக் கம்பை {யூபஸ்தம்பத்தைப்} போலவே அழகாகத் தெரிந்தான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மாதவன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே குரு மன்னனின் {துரியோதனனின்} வில்லை ஒரு க்ஷுரப்ரத்தினால் வெட்டினான். அதன் பிறகு அவன் {சாத்யகி}, வில்லற்ற அம்மன்னனை எண்ணற்ற கணைகளால் துளைத்தான். பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த எதிரியின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மன்னனால் {துரியோதனனால்}, எதிரியின் இந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது துரியோதனன், தங்கப் பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, சாத்யகியை ஒரு நூறு கணைகளால் வேகமாகத் துளைத்தான். வில்தரித்த உமது வலிமைமிக்க மகனால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட யுயுதானன், கோபத்தால் தூண்டப்பட்டு உமது மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.

மன்னன் {துரியோதனன்} இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், பெரும் பலத்துடன் அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடியே சாத்யகியை மறைத்தனர். அந்த வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களின் கூட்டத்தால் யுயுதானன் {சாத்யகி} இப்படி மூழ்கடிக்கப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்துகணைகளாலும், மீண்டுமொருமுறை ஏழு கணைகளாலும் அவன் {சாத்யகி} துளைத்தான். அவன், எட்டு வேகமானக் கணைகளால் துரியோதனனைத் துளைத்த பிறகு, சிரித்துக் கொண்டே, எதிரிகள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பின்னவனின் {துரியோதனனின்} வில்லை அறுத்தான். மேலும் சில கணைகளால் அவன் {சாத்யகி}, ஆபரணங்களோடு கூடிய யானையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு, நான்கு கணைகளால் துரியோதனனின் குதிரைகள் நான்கையும் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்த சாத்யகி, மன்னனின் தேரோட்டியையும் ஒரு க்ஷுரப்ரத்தால் வீழ்த்தினான். யுயுதானன், இன்பத்தில் நிறைந்த அதேவேளையில், உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல கணைகளைக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான குரு மன்னனை {துரியோதனனைத்} துளைத்தான். பிறகு, ஓ! மன்னா, உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போரில் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} அந்தச் சிறந்த கணைகளால் இப்படித் தாக்கப்பட்ட போது திடீரெனத் தப்பி ஓடினான். அம்மன்னன் {துரியோதனன்}, வில்தரித்த சித்திரசேனனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான். போரில் சாத்யகியால் இப்படித் தாக்கப்பட்டு, ராகுவால் விழுங்கப்படும்போது ஆகாயத்தில் சிறுக்கும் சோமனை {சந்திரனை} போன்ற நிலையை அடைந்த மன்னனைக் கண்டு குரு படையின் அனைத்துப் பகுதிகளிலும் துயரக் குரல்கள் எழுந்தன.

அந்த ஆரவாரத்தைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், பலமிக்க மாதவன் {சாத்யகி} போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான். கிருதவர்மன், தன் வில்லை அசைத்துக் கொண்டும், தன் குதிரைகளைத் தூண்டிக் கொண்டும், தன் தேரோட்டியை, "வேகமாகச் செல்வாயாக, வேகமாகச் செல்வாயாக" என்று சொல்லி தூண்டிக் கொண்டும் சென்றான். வாயை அகல விரித்த யமனைப் போலத் தன்னை நோக்கி விரையும் கிருதவர்மனைக் கண்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, "கணைகளைத் தரித்திருக்கும் அந்தக் கிருதவர்மன், என்னை நோக்கியே தன் தேரில் வேகமாக விரைந்து வருகிறான்" என்றான் [3]. பிறகு, மிக வேகமாகத் தூண்டப்பட்ட தன் குதிரைகளுடன் முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த தன் தேரில் சென்ற சாத்யகி, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்தப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} வந்தான்.

[3] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு: "இந்தக் கிருதவர்மன் அம்புகளுடன் கூடியவனாகத் தேருடன் விரைவாக வருகிறான். வில்லாளிகள் அனைவரிலும் சிறந்த அந்தக் கிருதவர்மனை நோக்கித் தேருடன் எதிர்த்துச் செல்வாயாக. சூதா, மிகச் சிறந்த தேரைத் தேருடன் விரைவாக எதிர்த்துச் செல்வாயாக. எதிரிகளை அடக்குபவனான அந்த விருஷ்ணி வீரனைப் போரில் கொல்லப்போகிறேன்" என்று சாத்யகி தன் தேரோட்டியிடம் சொன்னதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அதோ வீரக் கிருதவர்மன் என்னை எதிர்த்துத் தன் தேரில் விரைந்து வருகிறான். வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையான அவனிடம் மோத உன் தேரை அவனுக்கு எதிரில் செலுத்துவாயாக" என்று இருக்கிறது.

அப்போது, மனிதர்களில் புலிகளும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், நெருப்புக்குக்கு ஒப்பானவர்களுமான அவ்விருவரும், பெரும் சுறுசுறுப்பைக்கொண்ட இரு புலிகளைப் போல ஒருவரோடொருவர் மோதினர். கிருதவர்மன், சிநியின் பேரனை {சாத்யகியைக்} கூர் தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான இருபத்தாறு கணைகளாலும், பின்னவனின் தேரோட்டியை {முகுந்தனை} ஐந்து கணைகளாலும் துளைத்தான். போரில் திறம்வாய்ந்தவனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சிறந்தவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பழக்கப்பட்டவையுமான சாத்யகியின் நான்கு குதிரைகளையும் வலிமைமிக்க நான்கு கணைகளால் துளைத்தான்.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிடி கொண்ட தன் உறுதியான வில்லை அசைத்துக் கொண்டு, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் யுயுதானனைத் தடுத்தான். அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, தனஞ்சயனைக் காணவிரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் கிருதவர்மன் மீது எட்டுக் கணைகளை ஏவினான். எதிரிகளை எரிப்பவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அவன் {கிருதவர்மன்}. வலிமைமிக்க அந்த எதிரியால் {சாத்யகியால்} ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலையொன்றைப் போல நடுங்கத் தொடங்கினான். இதன்பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, அறுபத்துமூன்று கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும், ஏழால் அவனது தேரோட்டியையும் விரைவாகத் துளைத்தான். பிறகு சாத்யகி, யமதண்டத்திற்கோ, கோபம் கொண்ட பாம்புக்கோ ஒப்பானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான மற்றொரு கணையைக் குறிபார்த்துக் கிருதவர்மனைத் துளைத்தான். அந்தப் பயங்கரக் கணையானது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிரியின் பிரகாசமான கவசத்தைத் துளைத்து ஊடுருவி, இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது.

சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, அந்தப் போரில் குருதியில் குளித்த கிருதவர்மன், கணையோடு கூடிய தன் வில்லை எறிந்துவிட்டுத் தன் தேரிலேயே விழுந்தான். அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சிங்கப் பல் வீரன் {கிருதவர்மன்}, சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு, முழங்காலால் மண்டியிட்டு கீழே தன் தேர்த்தட்டில் விழுந்தான். சாத்யகி, பழங்காலத்தின் ஆயிரங்கை அர்ஜுனனுக்கோ {கார்த்தவீரியார்ஜுனனுக்கோ}, அளவிலா வல்லமை கொண்ட பெருங்கடலுக்கோ ஒப்பான அந்தக் கிருதவர்மனைத் தடுத்துவிட்டு முன்னேறிச் சென்றான்.

வாள்கள், ஈட்டிகள், விற்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் ஆகியவற்றால் நிறைந்த கிருதவர்மனின் படைப்பிரிவைக் கடந்து, நூற்றுக்கணக்கிலான முதன்மையான க்ஷத்திரியர்களின் குருதி சிந்திய விளைவால் பயங்கரமாக இருந்த அந்தக் களத்தைவிட்டு வெளியேறிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, அசுரவியூகத்தினூடாகச் செல்லும் விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே முன்னேறிச் சென்றான். அதேவேளையில், வலிமைமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு பெரிய வில்லை எடுத்துப் போரில் பாண்டவர்களைத் தடுத்துக் கொண்டு, தான் இருந்த இடத்திலேயே நின்று கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்