Tuesday, October 11, 2016

துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 158ஆ

Aswatthama prevented Duryodhana! | Drona-Parva-Section-158b | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : கர்ணனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று அவனையும் வில்லற்றவனாக்கிய அர்ஜுனன்; கிருபரின் தேரில் தஞ்சமடைந்த கர்ணன்; கர்ணனை வென்ற அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் உயிரைக் காக்க அஸ்வத்தாமனைத் தூண்டிய கிருபர்; அர்ஜுனனுடன் மோதுவதிலிருந்து துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கொல்ல அஸ்வத்தாமனைத் தூண்டிய துரியோதனன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, யுக முடிவின்போது தோன்றும் அந்தகனைப் போலத் தெரிந்தவனும், வெறியால் தூண்டப்பட்டவனுமான பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட பிறகு, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் அடுத்து என்ன செய்தான்?(48) உண்மையில், வலிமைமிக்கத் தேர்வீரனும், வைகர்த்தனன் மகனுமான கர்ணன் எப்போதும் பார்த்தனை {அர்ஜுனனை} அறைகூவி அழைப்பவனாக இருக்கிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, பயங்கரமான பீபத்சுவை {அர்ஜுனனை} வெல்லத்தக்கவன் என்று எப்போதும் தன்னைச் சொல்லிக் கொள்கிறான். ஓ! சூதா, எப்போதும் தனக்குக் கொடிய எதிரியாக இருப்பவனை {அர்ஜுனனை} இப்படித் திடீரெனச் சந்தித்தபோது, அந்தப் போர்வீரன் {கர்ணன்} என்ன செய்தான்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(49,50)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “எதிரி யானையை நோக்கி வரும் மற்றொரு யானையைப் போலத் தன்னை நோக்கி வரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட கர்ணன், அச்சமில்லாமல் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான்.(51) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, இப்படிப் பெரும் வேகத்தோடு வரும் கர்ணனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான கணைகளின் மழையால் விரைவாக மறைத்தான். கர்ணனும் தன் கணைகளால் விஜயனை {அர்ஜுனனை} மறைத்தான்.(52) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீண்டும் கணை மேகங்களால் கர்ணனை மறைத்தான். அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான்.(53) கர்ணனின் கர நளினத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எதிரிகளை அழிப்பவனான அவன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையுமான நேரான முப்பது கணைகளைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். பெரும் வலிமையையும், சக்தியையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, மற்றொரு நீண்ட கணையால் அவனது {கர்ணனின்} இடக்கரத்தின் மணிக்கட்டையும் துளைத்தான். அப்போது, பெரும் பலத்துடன் இப்படித் துளைக்கப்பட்ட அந்தக் கரத்தில் இருந்து கர்ணனின் வில் விழுந்தது.(54-56) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த வில்லை எடுத்துக் கொண்ட வலிமைமிக்கக் கர்ணன், மீண்டும் பல்குனனை {அர்ஜுனனைக்} கணை மேகங்களால் மறைத்து பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தினான்.(57) அப்போது சிரித்தபடியே தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்தக் கணை மாரியைத் தன் கணைகளால் கலங்கடித்தான். ஒருவரையொருவர் அணுகிய பெரும் வில்லாளிகளான அவர்கள் இருவரும், ஒருவர் செய்த சாதனைகளுக்கு மற்றவர் எதிர்வினையாற்ற விரும்பி, தொடர்ந்து ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்தனர்.(59) கர்ணன் மற்றும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகியோருக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரானது, பருவகாலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு காட்டு யானைகளுக்கு இடையில் நடக்கும் போரைப் போல மிக அற்புதமானதாக இருந்தது.(60)

அப்போது, வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு, விரைவாகப் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(61) மேலும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பிவைத்தான். பிறகும் அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்}, கர்ணனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(62) பாண்டு மற்றும் பிருதையின் மகனான அவன் {அர்ஜுனன்}, வில்லற்றவனாக, குதிரையற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த கர்ணனை நான்கு கணைகளால் துளைத்தான்.(63) மனிதர்களில் காளையான அந்தக் கர்ணன், அக்கணைகளால் பீடிக்கப்பட்டு, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துக் கிருபருடைய தேரில் ஏறிக் கொண்டான்.(64)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} வெல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(65) அவர்கள் ஓடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன் அவர்களைத் தடுத்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(66) “வீரர்களே, ஓடாதீர். க்ஷத்திரியர்களில் காளையரே போரில் நிலைப்பீராக. போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நானே இப்போது செல்லப் போகிறேன்.(67) கூடியிருக்கும் பாஞ்சாலர்களோடு சேர்த்துப் பார்த்தனை {அர்ஜுனனை} நானே கொல்லப் போகிறேன். காண்டீவதாரியோடு {அர்ஜுனனோடு} இன்று நான் போரிடும்போது,(68) யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பான என் ஆற்றலைப் பார்த்தர்கள் காணப் போகின்றனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்திற்கு ஒப்பாக ஏவப்படும் என் ஆயிரக்கணக்கான கணைகளை இன்று பார்த்தர்கள் காண்பார்கள். கோடை காலத்தின் முடிவில் மேகங்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போன்ற அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடி, கையில் வில்லுடன் இருக்கும் என்னைப் போராளிகள் காணப் போகின்றனர். நான் இன்று பார்த்தனை {அர்ஜுனனை}, என் நேரான கணைகளால் வெல்லப் போகிறேன்.(69-71) வீரர்களே, பல்குனன் {அர்ஜுனன்} மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை விட்டு விட்டுப் போரில் நிலைப்பீராக. மகரங்களின் வசிப்பிடமான கடலால், தன் கரைகளை மீற முடியாதததைப் போல, என் ஆற்றலுடன் மோதப் போகும் பல்குனனால் {அர்ஜுனனால்} அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது” என்றான் {துரியோதனன்}.(72) இப்படிச் சொன்ன மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் படையால் சூழப்பட்டு, பல்குனனை {அர்ஜுனனை} நோக்கிச் சினத்துடன் சென்றான்.

இப்படிச் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனனைக் கண்ட சரத்வான் மகன் {கிருபர்},(73,74). அஸ்வத்தாமனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “அதோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனன், கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து,(75) சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரைய விரும்பும் பூச்சி ஒன்றைப் போல, பல்குனனுடன் போரிட விரும்பி செல்கிறான். மன்னர்களில் முதன்மையான இவன் {துரியோதனன்}, நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} இந்தப் போரில் தன் உயிரை விடுவதற்கு முன் (மோதலுக்கு விரைவதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக. பார்த்தனின் கணைகள் செல்லும் தொலைவுக்குள் இல்லாதவரை மட்டுமே துணிவுமிக்க குரு மன்னனால் {துரியோதனனால்} இந்தப் போரில் உயிருடன் இருக்க முடியும். சற்று முன்பே சட்டையுரித்த பாம்புகளுக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} பயங்கரக் கணைகளால் சாம்பலாக எரிக்கப்படுவதற்கு முன் மன்னன் {துரியோதனன்} தடுக்கப்பட வேண்டும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, நாம் இங்கே இருக்கும்போது, தனக்கெனப் போரிட எவரும் இல்லாதவனைப் போல மன்னனே {துரியோதனனே} போரிடச் செல்வது பெரிதும் முறையற்றதாகத் தெரிகிறது. புலியோடு மோதும் யானையைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுடன் (அர்ஜுனனுடன்} போரில் ஈடுபட்டால், இந்தக் குரு வழித்தோன்றலின் {துரியோதனனின்} உயிரானது பெரும் ஆபத்துக்குள்ளாகும்.” என்றார் {கிருபர்}.

தன் தாய்மாமனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(76-81) துரியோதனனிடம் விரைந்து சென்று அவனிடம் இந்த வார்த்தகளைச் சொன்னான்: “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, நான் உயிரோடு இருக்கையில், உனது நன்மையை எப்போதும் விரும்புபவனான என்னை அலட்சியம் செய்துவிட்டு, போரில் நீ ஈடுபடுவது உனக்குத் தகாது. பார்த்தனை வெல்வது குறித்து நீ கவலைப்படத் தேவையில்லை. பார்த்தனை {அர்ஜுனனை} நான் தடுப்பேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, இங்கேயே நிற்பாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(82,83)

துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான், “ஆசான் (துரோணர்), பாண்டுவின் மகன்களைத் தமது மகன்களைப் போலவே எப்போதும் பாதுகாக்கிறார். நீரும் என் எதிரிகளான அவர்களிடம் எப்போதும் தலையிடுவதில்லை.(84) அல்லது, என் தீப்பேற்றால் கூடப் போரில் உமது ஆற்றல் எப்போதும் கடுமைடையாது இருந்திருக்கலாம். யுதிஷ்டிரன், அல்லது திரௌபதி மீது உமக்குள்ள பாசமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையான காரணத்தை அறியாதவனாக நான் இருக்கிறேன்.(85) என்னை மகிழ்விக்க விரும்பிய என் நண்பர்கள் அனைவரும் வெல்லப்பட்டுத் துயரில் மூழ்குவதால், பேராசை கொண்டவனான எனக்கு ஐயோ {என்னை நிந்திக்க வேண்டும்}.(86) ஓ! கௌதமர் மகளின் {கிருபியின்} மகனே {அஸ்வத்தாமரே}, ஆயுதங்களை அறிந்தவர்களுள் முதன்மையானவரும், போரில் மகேஸ்வரனுக்கு ஒப்பானவருமான உம்மைத் தவிர, எதிரியை அழிக்கத்தகுந்த போர்வீரன் வேறு எவன் இருக்கிறான்?(87) ஓ! அஸ்வத்தாமரே, என்னிடம் மகிழ்ச்சி {கருணை} கொண்டு, என் எதிரிகளை அழிப்பீராக. உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் நிற்க தேவர்களோ, தானவர்களோ கூடத் தகுந்தவர்களல்லர்.(88)

ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோருடன் சேர்த்துக் கொல்வீராக. எஞ்சியோரைப் பொறுத்தவரை, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள் அவர்களைக் கொல்வோம்.(89) ஓ! பிராமணரே, பெரும் புகழைக் கொண்ட சோமகர்களும், பாஞ்சாலர்களும் காட்டு நெருப்பைப் போல அதோ என் துருப்புகளுக்கு மத்தியில் திரிகின்றனர்.(90) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டால், கைகேயர்கள் நம் அனைவரையும் அழித்துவிடுவார்கள் என்பதால் அவர்களையும் {கைகேயர்களையும்} தடுப்பீராக.(91) ஓ! அஸ்வத்தாமரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, வேகமாக அங்கே செல்வீராக. அந்த அருஞ்செயலை இப்போது நிறைவேற்றுவீரோ, பிறகு நிறைவேற்றுவீரோ, ஓ! ஐயா, அஃது உம்மால் நிறைவேற்றப்பட வேண்டும்.(92) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பாஞ்சாலர்களின் அழிவுக்காகவே பிறந்தவர் நீர். உமது ஆற்றலை வெளிப்படுத்தி, இவ்வுலகைப் பாஞ்சாலர்களற்றதாகச் செய்யப் போகிறீர்.(93) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மரியாதைக்குரியவர்கள் இப்படியே {உம்மைக் குறித்துச்} சொல்லியிருக்கின்றனர். அவர்கள் சொன்னபடியே அஃது ஆகட்டும். எனவே, ஓ! மனிதர்களில் புலியே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களை, அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வீராக.(94)

வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களே கூட, உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் வந்தால் நிலைக்க முடியாது எனும்போது, பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் குறித்து என்ன சொல்வது? இந்த எனது வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.(95) ஓ! வீரரே {அஸ்வத்தாமரே}, சோமகர்களுடன் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள், போரில் உமக்கு ஈடாக மாட்டார்கள் என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(96) செல்வீர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, செல்வீராக. எந்தத் தாமதமும் வேண்டாம். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பிளந்து ஓடும் நமது படையைப் பாரும்.(97) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {அஸ்வத்தாமரே}, தெய்வீக சக்தியின் துணையுடன் கூடிய நீர் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் பீடிக்கத் தகுந்தவராவீர்” என்றான் {துரியோதனன்}.(98)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 158ஆ-வில் வரும் மொத்த சுலோகங்கள்-51 (47லிருந்து 98)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்