Thursday, October 20, 2016

பீமனால் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட துரியோதனன்! - துரோண பர்வம் பகுதி – 165

Duryodhana believed to be slained by Bhima! | Drona-Parva-Section-165 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : பூரியின் வில்லைச் சாத்யகியும், சாத்யகியின் வில்லைப் பூரியும் அறுத்தது; பூரியைக் கொன்ற சாத்யகி; சாத்யகியை எதிர்த்து விரைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை எதிர்த்து விரைந்த கடோத்கசன்; கடோத்கசன் அஸ்வத்தாமனுக்கிடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த கடோத்கசன்; உணர்வுகள் மீண்டு கடோத்கசனை மயக்கமடையச் செய்த அஸ்வத்தாமன்; பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையிலான மோதல்; பீமனின் விற்களை அடுத்தடுத்து வெட்டிய துரியோதனன்; பீமனால் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட துரியோதனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பூரி என்பவன், நீர் நிறைந்த தடாகத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் யானையைப் போல முன்னேறியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிநியின் பேரனை {சாத்யகியைத்} தடுத்தான்.(1) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, ஐந்து கூரிய கணைகளால் தன் எதிரியின் {பூரியின்} மார்பைத் துளைத்தான். இதனால் பின்னவனுக்கு {பூரிக்கு} குருதி வழியத் தொடங்கியது.(2) அதே போல அம்மோதலில் அந்தக் குரு போர் வீரனும் {பூரியும்}, போரில் வீழ்த்தக் கடினமான வீரனான சிநியின் பேரனைப் பத்து கணைகளால் பெரும் வேகத்துடன் அவனது மார்பில் துளைத்தான்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை முழு அளவுக்கு வளைத்த அந்த வீரர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அம்மோதலில் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட அந்த இருவீரர்களின் கணைமாரிகள், யமனுக்கோ, கதிர்களை இறைக்கும் சூரியனுக்கோ ஒப்பாக மிகப் பயங்கரமாக இருந்தன.(5)


தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தபடியே அந்தப் போரில் அவ்விருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். சிறிது நேரத்திற்கு அந்தப் போர் சமமாகவே நடந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே சிறப்புமிக்க அந்தக் குரு வீரனின் {பூரியின்} வில்லை அந்தப் போரில் அறுத்தான்.(7) அவனது வில்லை அறுத்ததும், ஒன்பது கூரிய கணைகளால் அவனது {பூரியின்} மார்பைத் துளைத்த சாத்யகி, அவனிடம் {பூரியிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(8) வலிமைமிக்கத் தன் எதிரியால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {பூரி}, விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(9) மூன்று கணைகளால் சாத்வத வீரனைத் துளைத்த பூரி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, கூரிய பல்லம் ஒன்றைக் கொண்டு தன் எதிரியின் {சாத்யகியின்} வில்லை அறுத்தான்.(10) தன் வில் அறுபட்டதும், சினத்தால் வெறிபிடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூர்க்கமான ஈட்டியொன்றை பூரியின் அகலமான மார்பின் மீது வீசினான்.(11) அந்த ஈட்டியால் துளைக்கப்பட்ட பூரி, ஆகாயத்தில் இருந்து விழும் சூரியனைப் போலக் குருதியால் நனைந்தபடியே தன் சிறந்த தேரில் இருந்து கீழே விழுந்தான்.(12)

இப்படி அவன் {பூரி} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கத்துடன் விரைந்தான்.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியிடம் “நில், நிற்பாயாக” என்று சொன்ன அவன் {அஸ்வத்தாமன்}, மேருவின் மார்பில் {சாரலில்} மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, கணை மாரிகளால் அவனை {சாத்யகியை} மறைத்தான்.(14) சிநியின் பேரனுடைய தேரை நோக்கி அவன் {அஸ்வத்தாமன்} விரைவதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கிய படியே அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, நிற்பீர், நிற்பீராக. என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப இயலாது. (அசுரன்) மஹிஷனைக் கொன்ற ஆறுமுகத்தோனை (கார்த்திகேயனைப்) போல நான் இப்போது உம்மைக் கொல்வேன்.(16) போருக்கான ஆசைகள் அனைத்தையும் நான் இன்று உமது இதயத்தில் இருந்து அகற்றுவேன்” என்றான் {கடோத்கசன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் (கடோத்கசன்), கோபத்தால் தாமிரமாகச் சிவந்த கண்களுடன்,(17) யானைகளின் இளவரசனை எதிர்த்து விரையும் சிங்கம் ஒன்றைப் போல, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சீற்றத்துடன் விரைந்தான். கடோத்கசன், தன் எதிரியின் மீது ஒரு தேருடைய அக்ஷத்தின் {அச்சின்} அளவுடைய கணைகளை ஏவி,(18) அதைக் கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தேர்வீரர்களில் காளையான அவனை {அஸ்வத்தாமனை} மறைத்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணைமழை தன்னை அடையும் முன்பே அந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற தன் கணைகளைக் கொண்டு அவற்றை விலக்கினான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைத் தண்டிப்பவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை, வேகமாகச் செல்பவையும் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் ஊடுருவ-வல்லவையுமான நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் துளைத்தான். அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் இப்படித் துளைகப்பட்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அந்தப் போர்க்களத்தில்,(19-21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் உடலில் முட்கள் விறைத்திருந்த முள்ளம்பன்றியைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.

பிறகு, பீமசேனனின் வீரமகன் {கடோத்கசன்}, சினத்தால் நிறைந்து,(22) இடியின் முழக்கத்துடன் காற்றில் “விஸ்” எனச் செல்லும் கடுங்கணைகள் பலவற்றால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைச்} சிதைத்தான். மேலும் அவன் {கடோத்கசன்}, கத்தி போன்ற தலை கொண்ட {க்ஷுரப்ரங்கள்} சிலவும், பிறை போன்ற தலை கொண்ட {அர்த்தச்சந்திர பாணங்கள்} சிலவும், நீளமாகவும், கூர்மையாகவும் {நாராசங்கள்} சிலவும், தவளை முகம் போன்ற தலை கொண்ட சிலவும், பன்றியின் காதுகளுக்கு ஒப்பான {வராஹகர்ணங்கள்} சிலவும், முள்கொண்ட {விகர்ணங்கள்} சிலவும், வேறு வகையைச் சேர்ந்த {நாளீகங்கள்} சிலவும் [1] எனப் பல்வேறு வகைகளிலான துல்லியமான கணை மாரிகளை அஸ்வத்தாமன் மீது பொழிந்தான். பெரும் மேகத் திரள்களை விலக்கும் காற்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் உணர்வுகள் கலங்காத துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையும், இடியின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், தன் மீது தொடர்ச்சியாகப் பாய்ந்தவையுமான அந்த ஒப்பற்ற ஆயுதமழையை மந்திரங்களால் தெய்வீக ஆயுதங்களின் சக்திகளை ஈர்த்திருந்த தனது பயங்கரக் கணைகளால் அழித்தான்.

[1] “நாளீகங்கள் என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பது கணைகளில் ஏதோவொரு வகை என்று தோன்றுகிறது. வேறு வல்லுனர்களைச் சார்ந்து முன்பொரு குறிப்பில், இதையே நான் துப்பாக்கிகளில் ஒருவகையாகச் சொல்லியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கரமானதும், போர்வீரர்களைப் பிரமிப்பில் நிரப்புவதுமான மற்றொரு மோதலொன்று (ஆயுதங்களே போராளிகளாக) ஆயுதங்களுக்கிடையில் ஆகாயத்தில் நடப்பதாகத் தெரிந்தது.(23-26) அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்ட ஆயுதங்களின் மோதலால் சுற்றிலும் உண்டான தீப்பொறிகளுடன்(27) கூடிய ஆகாயமானது, மாலைவேளையில் விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தால் ஒளியூட்டப்பட்டது போல அழகாகத் தெரிந்தது. அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகத் தன் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து அந்த ராட்சசனை {கடோத்கசனை} மறைத்தான்.(28) அப்போது அடர்த்தியான இருள் கொண்ட அந்த இரவில், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பாகத் துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(29)

அப்போது, சினத்தால் நிறைந்த கடோத்கசன், அந்தப் போரில், யுக நெருப்புக்கு ஒப்பான பத்து கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மார்பில் தாக்கினான். ராட்சசனால் {கடோத்கசனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காற்றால் அசைக்கப்படும் நெடிய மரம் ஒன்றைப் போல அந்தப் போரில் நடுங்கத் தொடங்கினான். தன்னைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடிக்கம்பத்தைப் பிடித்த அவன் {அஸ்வத்தாமன்} அப்படியே மயங்கிப் போனான்.(30-32) அப்போது உமது துருப்புகள் அனைத்தும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின. உண்மையில், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(33) அஸ்வத்தாமனை அந்த அவல நிலையில் கண்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் அந்தப் போரில் உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(34)

பிறகு, எதிரிகளை நொறுக்குபவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் தன் உணர்வுகள் மீண்டு, தன் இடது கையால் வில்லை வலிமையாக வளைத்து, தன் காது வரை வில்லின் நாணை இழுத்துக் கடோத்கசனைக் குறி பார்த்து, யமனுக்கு ஒப்பான பயங்கரக் கணை ஒன்றை விரைவாக ஏவினான்.(35,36) கடுமையானதும், நல்ல சிறகுகளைக் கொண்ட அந்தச் சிறந்த கணையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்து கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது.(37) போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத் துளைக்கபட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, தன் தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(38) ஹிடிம்பையின் மகன் தன் உணர்வுகளை இழந்ததைக் கண்டு அச்சமடைந்த அவனது {கடோத்கஜனது} தேரோட்டி, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} சுமந்து சென்று, அவனைக் களத்தைவிட்டே விரைவாக அகற்றினான்.(39) இப்படி அந்த மோதலில் ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசனைத் துளைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} உரக்க முழங்கினான்.(40) உமது மகன்களாலும், உமது போர்வீரர்களாலும் வழிபடப்பட்ட அஸ்வத்தாமனின் உடலானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுப்பகல் சூரியனைப் போலச் சுடர்விட்டெரிந்தது.(41)

துரோணரின் தேர் முன்பு போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனைப் பொறுத்தவரை, மன்னன் துரியோதனன், கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் தானே அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(42) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன், அவனை {துரியோதனனைப்} ஒன்பது கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். பிறகு துரியோதனன், இருபத்தைந்து கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(43) அந்தப் போர்க்களத்தில் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஆகாயத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர்.(44) அப்போது மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிறகுபடைத்த ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, “நில், நிற்பாயாக” என்றான்.(45) பிறகு பீமன், கூரிய கணைகளால் குரு மன்னனுடைய {துரியோதனனுடைய} வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்து, மேலும் நேரான தொண்ணூறு கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} துளைத்தான்.(46)

அப்போது சினத்தால் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பீமசேனனைக் கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் பீடித்தான். துரியோதனனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கலங்கடித்த பீமன், இருபத்தைந்து குறுங்கணைகளால் {க்ஷுத்ரகங்களால்} குருமன்னனை {துரியோதனனைத்} துளைத்தான்.(47,48) பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தி முகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் பீமசேனனின் வில்லை அறுத்து, பத்து கணைகளால் பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பீமசேனன், ஏழு கூரிய கணைகளால் மன்னனை வேகமாகத் துளைத்தான்.(49,50) பெரும் கரநளினத்தை வெளிக்காட்டிய துரியோதனன், அவனது அந்த வில்லையும் அறுத்தான்.(51) இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது எனப் பீமன் எடுத்த விற்களும் அதே போலவே வெட்டப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனுமான உமது மகன் {துரியோதனன்}, பீமன் ஒரு வில்லை எடுத்ததுமே அதை வெட்டினான்.

தன் விற்கள் மீண்டும் மீண்டும் வெட்டப்படுவதைக் கண்ட பீமன், முழுக்க இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற கடினமானதுமான ஈட்டி ஒன்றை அந்தப் போரில் வீசினான்.(52,53) நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, மிருத்யுவின் சகோதரிக்கு ஒப்பானதாக இருந்தது.(54) எனினும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமனின் கண்களுக்கு முன்பாகவே, பெண்ணின் குழலைப் பிரிக்கும் வகுட்டைப் போல நேரான கோடாக நெருப்பின் காந்தியுடன் தன்னை நோக்கி ஆகாயத்தினூடாக வந்து கொண்டிருந்த அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாக வெட்டினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது பீமன்,  கனமானதும், சுடர்விட்டெரிவதுமான கதாயுதம் ஒன்றைச் சுழற்றி, அதைத் துரியோதனனின் தேர் மீது பெரும் பலத்தோடு எறிந்தான். அந்தக் கனமான கதாயுதமானது, அம்மோதலில் உமது மகனின் குதிரைகள், சாரதி மற்றும் தேரையும் விரைவாக நொறுக்கியது. பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமனிடம் அச்சங்கொண்டு, மிகக் குறுகலான இடத்தில் தன்னை ஒளித்துக் கொண்டு, சிறப்புமிக்க நந்தகனின் வேறொரு தேரில் ஏறிக் கொண்டான்.(55-58) அப்போது அந்த இருண்ட இரவுக்கு மத்தியில் சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகக் கருதிய பீமன், கௌரவர்களை அறைகூவியழைத்து உரக்க சிங்க முழக்கம் செய்தான். 

உமது போர்வீரர்களும் மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(59) அவர்கள் அனைவரும், “ஓ” என்றும், “ஐயோ” என்று உரக்கக் கதறினார். அச்சமடைந்த அந்தப் போர்வீரர்களின் ஓலங்களையும், உயர் ஆன்ம பீமனின் முழக்கங்களையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுயோதனன் கொல்லப்பட்டதாகவே கருதினான்.(61,62) மேலும் பாண்டுவின் அந்த மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்து சென்றான். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், கைகேயர்கள், சேதிகள் ஆகியோரும் தங்கள் பலம் அனைத்தையும் {திரட்டிக்} கொண்டு, துரோணரைக் கொல்லும் விருப்பதால் வேகமாக முன்னேறினர்.(63) அங்கே துரோணருக்கும் எதிரிக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது. இரு தரப்பின் போராளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொன்றனர்” {என்றான் சஞ்சயன்}.(64)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 165-ல் வரும் மொத்த சுலோகங்கள்-64


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்