Monday, November 21, 2016

துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 186

Drona killed Drupada and Virata! | Drona-Parva-Section-186 | Mahabharata In Tamil

(துரோணவத பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : முழு ஆற்றலையும் பயன்படுத்தும்படி அர்ஜுனனைத் தூண்டிய பீமன்; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; துரோணர் போர்க்களத்தின் வடக்குத் திசைக்குச் செல்வது; துருபதனின் மூன்று பேரர்களைக் கொன்ற துரோணர்; துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்; துரோணரை அன்றே கொல்லச் சபதம் ஏற்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் கடுமையாகத் தாக்கிய பாஞ்சாலர்கள்; திருஷ்டத்யும்னனிடம் கோபத்துடன் பேசிய பீமசேனன்; துரோணரின் படைப்பிரிவைத் தாக்கிய பீமனும், திருஷ்டத்யும்னனும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவின் நான்கில் மூன்று {முக்கால்} பாகம் கழிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது. இரு தரப்பினரும் மகிழ்ச்சி கிளர்ந்தெழுந்தவர்களாக இருந்தனர்.(1) விரைவில், சந்திரனின் காந்தியைக் குறைத்து, ஆகாயத்தைத் தாமிர வண்ணம் ஏற்கச் செய்தபடியே சூரியனின் தேரோட்டியான அருணன் தோன்றினான்.(2) வட்டமான தங்கத் தட்டுக்கு ஒப்பான சூரியனின் செங்கதிர்களால் கிழக்கு சிவப்பானது. பிறகு குரு மற்றும் பாண்டவப் படைகளின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் சுமக்கப்பட்டும் வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து கீழே இறங்கி, சூரியனை நோக்கிக் குவிந்த கரங்களுடன் நின்று (நாளின் முதல்) சந்திப்பொழுதுக்கான தங்கள் வேண்டுதல்களைத் தெரிவித்தனர்[1].(4) இரண்டாகப் பகுக்கப்பட்ட குருபடையானது, துரோணருடனும், அவருக்கு முன்பு நின்ற துரியோதனனுடனும், சோமகர்கள், பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்றது.(5)


[1] வேறொரு பதிப்பில், “கௌரவப் பாண்டவ ஸேனா வீரர்களனைவரும் தேர்களையும், குதிரைகளையும், மனுஷ்யவாகனங்களையும் விட்டு விட்டுச் சூரியனுக்கு எதிராக நின்று கொண்டு கைகளைக் குவித்து, ஸந்தியோபாஸ்தி செய்து ஜபம் செய்தார்கள்” என்றிருக்கிறது.

குரு படையானது இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “உன் எதிரிகளை உனக்கு இடப்பக்கமாகக் கொண்டு, (துரோணரால் தலைமை தாங்கப்பட்ட) இந்தப் படைப்பிரிவை உனக்கு வலப்பக்கத்தில் கொள்வாயாக” {என்றான்}.(6) குருக்களைக் குறித்த மாதவனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அந்த இரு வலிமைமிக்க வில்லாளிகளின் இடது பக்கமாக நகர்ந்து சென்றான்[2].(7) கிருஷ்ணனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பீமசேனன், போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8) பீமசேனன், “ஓ! அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, ஓ! பீபத்சு, இந்த என் வார்த்தைகளைக் கேட்பாயாக. எந்த நோக்கத்திற்காக க்ஷத்திரியப் பெண்கள் மகன்களை ஈன்றெடுக்கிறார்களோ, அதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது.(9) இத்தகு நேரத்தில் நீ செழிப்பை வெல்ல முயலவில்லையெனில், மெய்யான பாதகனைப் போலவே அற்பமாகச் செயல்பட்டவனாவாய்.(10) உன் ஆற்றலை வெளிப்படுத்தி, உண்மைக்கும் {சத்தியத்திற்கும்}, செழிப்புக்கும், அறத்திற்கும், புகழுக்கும் நீ பட்டிருக்கும் கடனைச் செலுத்துவாயாக. ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, இந்தப் படைப்பிரிவை உனது வலப்பக்கத்தில் கொண்டு பிளப்பாயாக” என்றான்.(11)

[2] வேறொரு பதிப்பில் மேற்கண்ட 6 மற்றும் 7ம் சுலோகங்களின் பொருள், “கௌரவச் சேனை இரண்டாக வகுக்கப்பட்டதைக் கண்டு மாதவர் அர்ஜுனனைப் பார்த்து, “ஸவ்யஸாசியே, பகைவர்களான இந்தக் கௌரவர்களை இடப்பக்கத்தில் விட்டுச் செல்” என்று சொன்னார். தனஞ்சயன் மாதவரை நோக்கி, “அப்படியே செய்யும்” என்று அனுமதி கொடுத்து, மகாவில்லாளிகளான துரோணர், கர்ணன் இவ்விருவரையும் இடமாகச் சுற்றி வந்தான்” என்றிருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப் பீமனாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, துரோணரையும், கர்ணனையும் விஞ்சி சுற்றிலும் இருந்த எதிரிகளைத் தடுக்கத் தொடங்கினான்.(12) (குருக்கள் மத்தியில் உள்ள) க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தினாலும், காட்டுத்தீயைப் போலத் தன் எதிரிகளில் முதன்மையானோரை எரித்தபடியே முன்னேறி வந்து கொண்டிருந்த அர்ஜுனனைத் தாக்குப்பிடிப்பதில் தவறினார்கள். அப்போது, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர்,(13,14) குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கணைமாரியால் மறைத்தனர். அவ்வீரர்கள் அனைவரின் ஆயுதங்களைக் கலங்கடித்தவனும், ஆயுதங்களில் நன்கு திறன் பெற்றவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பதிலுக்குத்) தன் கணைகளால் அவர்களை மறைத்தான். தன் ஆயுதங்களைக் கொண்டு அவர்களின் ஆயுதங்களைக் குறி பார்த்தவனும், (அவை யாவையும் இப்படிக் கலங்கடித்தவனும்), பெரும் கரநளினம் கொண்டவனும், தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான அர்ஜுனன்,(15,16) பத்துக் கூர்முனைக் கணைகளால் அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.

அப்போது ஆகாயமானது புழுதியால் மறைக்கப்பட்டது. அடர்த்தியான கணைமாரி பொழிந்தது. இருள் சூழ்ந்தது, உரத்த பயங்கர ஆரவாரமும் எழுந்தது. இப்படிப்பட்ட நிலை இருக்கையில், ஆகாயத்தையோ, பூமியையோ, திசைகளின் புள்ளிகளையோ அதற்கு மேலும் பார்க்க முடியவில்லை.(17,18) புழுதியால் மலைப்படைந்த துருப்புகள் அனைத்தும் குருடாகின. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியாலோ, நம்மாலோ, ஒருவரையொருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(19) இக்காரணத்தால் அந்த மன்னர்கள் ஊகத்தையும், அவர்கள் உச்சரித்த பெயர்களையும் வழிகாட்டியாகக் கொண்டு போரிடத் தொடங்கினர். தங்கள் தேர்களை இழந்த தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதி, ஒழுங்குகள் அனைத்தையும் இழந்து, குழம்பிய திரளாக மாறினர். தங்கள் குதிரைகளும், சாரதிகளும் கொல்லப்பட்ட அவர்களில் பலர், செயலின்மையை அடைந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொண்டு மிகவும் அச்சத்திலிருப்பவர்களாகத் தெரிந்தனர். உயிரையிழந்த சாரதிகளோடு கூடிய கொல்லப்பட்ட குதிரைகள், மலைச்சாரல்களில் படர்ந்து கிடப்பன போலக் கொல்லப்பட்ட யானைகளின் மீது கிடப்பது காணப்பட்டது.

அப்போது துரோணர், அந்தப் போரில் வடக்கு நோக்கி நகர்ந்து அங்கேயே தன் நிலையை ஏற்று, புகையற்ற நெருப்புக்கு ஒப்பாகக் காணப்பட்டார். அந்தப் போரில் அவர் வடக்கு நோக்கி நகர்ந்ததைக் கண்ட பாண்டவத் துருப்புகள்,(20-24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கின. உண்மையில், பிரகாசமானவரும், அழகானவரும், சக்தியால் சுடர்விடுபவருமான துரோணரைக் கண்டு அஞ்சிய எதிரிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒளியிழந்து களத்தில் நடுங்கத் தொடங்கினர். எதிரிப் படையைப் போருக்கு அழைக்கையில், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த அவரைக் கண்ட எதிரிகள்(25,26) வாசவனை {இந்திரனை} வெல்வதில் நம்பிக்கையற்ற தானவர்களைப் போல அவரை வெல்வதில் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களில் சிலர் முற்றாக உற்சாகமிழந்தனர், சக்தி கொண்ட சிலர் கோபத்தால் தூண்டப்பட்டனர்.(27) சிலர் ஆச்சரியத்தால் நிறைந்தனர், சிலரோ (அந்த அறைகூவலை) பொறுத்துக் கொள்ள முடியாதவர்களானார்கள். சில மன்னர்கள் தங்கள் கைகளைப் பிசைந்தனர்,(28) சினத்தால் புலனுணர்வை இழந்த சிலரோ தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களைச் சுழற்றினர், சிலரோ தங்கள் கரங்களை {தோள்களைத்} தேய்த்துக் கொண்டனர்.(29) பெரும் சக்தியும், முழுதும் கட்டுப்பட்ட ஆன்மாவும் கொண்ட சிலர் துரோணரை எதிர்த்து விரைந்தனர். குறிப்பாகத் துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வலியால் துன்புற்றாலும், போரில் மோதுவதைத் தொடர்ந்தனர்.

அப்போது அந்தப் போரில், களத்தில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவரும், வெல்லப்பட முடியாத போர்வீரரருமான துரோணரை எதிர்த்து, துருபதனும், விராடனும் முன்னேறினர். பிறகு ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் மூன்று பேரர்களும்,(31,32) வலிமைமிக்க வில்லாளிகளான சேதிகளும், அம்மோதலில் துரோணரை எதிர்த்து முன்னேறினர். துரோணர், மூன்று கூரிய கணைகளைக் கொண்டு துருபதனின் மூன்று பேரர்களுடைய உயிரை எடுத்தார். அந்த இளவரசர்களும் உயிரை இழந்து பூமியில் விழுந்தனர். அடுத்ததாக அந்தப் போரில் சேதிகள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களையும் துரோணர் வென்றார்.(33,34) பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மத்ஸ்யர்கள் அனைவரையும் வென்றார். அப்போது கோபத்தால் நிறைந்த துருபதனும், விராடனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மீது கணைமாரியை ஏவினர். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்தக் கணைமாரியைக் கலங்கடித்து,(35,36) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தார்.

துரோணரால் மறைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், சினத்தால் வெறிகொண்டு, அந்தப் போர்க்களத்தில் தங்கள் கணைகளால் அவரைத் துளைக்கத் தொடங்கினர். பிறகு துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து, பழிதீர்க்க விரும்பி,(37,38) அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள்} இரண்டைக் கொண்டு, தன் எதிராளிகள் இருவரின் விற்களையும் வெட்டினார். அப்போது கோபத்தால் நிறைந்த விராடன், அம்மோதலில் துரோணரைக் கொல்ல விரும்பி, பத்து வேல்களையும் {தோமரங்களையும்}, பத்து கணைகளையும் ஏவினான். கோபத்தில் இருந்த துருபதனும், இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான ஒரு பயங்கர ஈட்டியை துரோணரின் தேர்மீது வீசினான். பெரும் எண்ணிக்கையிலானவையும், கூரியவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகள் {பல்லங்கள்} பலவற்றால் (விராடனின்) அந்தப் பத்து வேல்களை வெட்டிய துரோணர்,(39-41) தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த (துருபதனின்) அந்த ஈட்டியைக் குறிப்பிட்ட சில கணைகளைக் கொண்டு வெட்டினார். பிறகு எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு,(42) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் யமனுலகு அனுப்பினார்.

விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் வீழ்ந்து, கைகேயர்கள்,(43) சேதிகள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் கொல்லப்பட்டு, துருபதனின் பேரர்களான அந்த மூன்று வீரர்களும் வீழ்ந்ததும்,(44) துரோணரின் அந்தச் சாதனைகளைக் கண்ட உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், சினத்தாலும், துயரால் நிறைந்து, தேர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில் இப்படிச் சொல்லி உறுதியேற்றான்.(45) அவன் {திருஷ்டத்யும்னன்}, “துரோணர் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்பித்தாலோ, என்னை வீழ்த்துவதில் அவர் வென்றாலோ, என் அறச் செயல்கள் அனைத்தின் தகுதிகளையும், என் க்ஷத்திரிய மற்றும் பிரம்ம சக்திகளையும் நான் இழப்பேனாக” என்றான்[3].(46) வில்லாளிகள் அனைவருக்கு மத்தியிலும் இந்தச் சபதத்தைச் செய்தவனும், பகைவர்களைக் கொல்லும் வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் சொந்தப் படையால் ஆதரிக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்து முன்னேறினான்.(47). பிறகு ஒரு பக்கத்தில் இருந்து பாஞ்சாலர்களும், மறு பக்கத்தில் இருந்து அர்ஜுனனும் துரோணரைத் தாக்கத் தொடங்கினர். (அங்கிருந்த) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரும்,(48) துரியோதனனுடன் பிறந்த அவனது தம்பிகளும் தங்கள் தேர்வுக்கேற்ப போரில் துரோணரைப் பாதுகாக்கத் தொடங்கினர். இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் போரில் இப்படித் துரோணர் பாதுகாக்கப்பட்டபோது,(49) மிகத் தீவிரமாகப் போராடினாலும் பாஞ்சாலர்களால் அவரைப் {துரோணரைப்} பார்க்கக்கூட முடியவில்லை.

[3] “நான் இதை மிகச் சாதாரணமாக உரைத்திருக்கிறேன். இந்தச் சபதத்தின் வடிவம் இதுதான், ’எவனிடம் இருந்து துரோணர் இன்று உயிருடன் தப்புவாரா, எவனை இன்று துரோணர் வெல்வாரோ, அவன் இவ்விவற்றையெல்லாம் இழந்து போகட்டும்’ என்பதாம்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “எவனிடத்தில் இருந்து இப்பொழுது துரோணர் விடப்படுவரோ, அல்லது எவனைத் துரோணர் அவமதிப்பரோ அவன் இஷ்டா பூர்த்தங்களுடைய பலனில் இருந்தும், க்ஷத்திரியதேஜஸினின்றும், பிராம்மண்யத்தினின்றும் நசிந்து போகக்கடவன் என்று சபதம் செய்தான்” என்றிருக்கிறது. இங்கே இஷ்டம் என்பது யாகம் ஹோமம் முதலானவை என்றும், பூர்த்தம் என்பது நிலம் தோட்டம் முதலானவை என்றும் விளக்கப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “எவனிடம் இருந்து துரோணர் தப்புவாரோ, எவனைப் போரில் வீழ்த்துவாரோ அந்த மனிதன் இஷ்டம், பூர்த்தம், க்ஷத்ரம், பிராம்மண்யம் ஆகியவற்றில் உள்ள தன் தகுதிகளை {புண்ணியங்களை} இழந்து போகட்டும்” என்றிருக்கிறது.

அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனிடம் மிகவும் கோபமடைந்த அந்தப் பாண்டுவின் மகன் பீமசேனன், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனை இந்தக் கடும் வார்த்தைகளால் துளைத்தான்.(50) பீமசேனன், “க்ஷத்திரியன் என்று கருதப்படுபவனும், துருபதன் குலத்தில் பிறந்தவனும், ஆயுதங்களின் அறிவைக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான எந்த மனிதன்தான் தன் எதிரே நிலைகொண்டிருக்கும் தன் எதிரியை இப்படிப் பார்த்துக் கொண்டே இருப்பான்?(51) தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்டவனும், மன்னர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சபதத்தை ஏற்றவனுமான எந்த மனிதன்தான் இப்படித் தன் எதிரியை அலட்சியம் செய்வான்?(52) தன் சக்தியால் பெருகும் நெருப்பைப் போல அதோ துரோணர் நின்று கொண்டிருக்கிறார். உண்மையில், வில்லையும் கணைகளையும் எரிபொருளாக {விறகாகக்} கொண்ட அவர் க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கிறார்.(53) விரைவில் அவர் பாண்டவப் படையை அழித்துவிடுவார். (பார்வையாளனாக மட்டும்) நீ நின்று கொண்டே, என் அருஞ்செயலைப் பார்ப்பாயாக. துரோணரை எதிர்த்து நானே செல்வேன்” என்றான் {பீமன்}.(54)

இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, துரோணரின் படைப்பிரிவுக்குள் ஊடுருவி, தன் வில்லை முழுதாக வளைத்து, கணைகளை ஏவி, அந்தப் படையைப் பீடித்து, முறியடிக்கத் தொடங்கினான்.(55) பிறகு பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும், அந்தப் பெரும்படைக்குள் ஊடுருவி துரோணருடன் போரில் ஈடுபட்டான். அந்தப் போர் மூர்க்கமடைந்தது.(56) அந்த நாளின் சூரிய உதயத்தின் போது நடந்த இந்த மோதலானது, இதுவரை நாம் பார்க்காத அளவுக்கு, கேள்விப்படாத அளவுக்குக் கடுமையானதாக இருந்தது.(57) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தன. உடல்கொண்ட உயிரினங்கள் உயிரை இழந்து களமெங்கும் சிதறிக் கிடந்தன.(58) களத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்ற சிலர், வழியிலேயே பிறரால் தாக்கப்பட்டனர். சிலர் தப்பி ஓடும்போது, அவர்களது முதுகுகளும் சிலரின் விலாப்புறங்களும் தாக்கப்பட்டன.(59) இயல்பான அம்மோதல் இப்படிக் கடுமையாகவே தொடர்ந்தது. எனினும், விரைவில் காலைச் சூரியன் உதித்தான் [4]” {என்றான் சஞ்சயன்}.(60)

[4] வேறொரு பதிப்பில், “க்ஷணத்திற்குள் சூரியன் சந்தியாகாலத்தை அடைந்தான்” என்றிருக்கிறது.
--------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 186-ல் உள்ள சுலோகங்கள்: 60

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்