Friday, May 12, 2017

துரியோதனனுக்கு அஸ்வத்தாமன் கூறிய அறிவுரை! - கர்ண பர்வம் பகுதி – 88

The Advise of Aswatthama to Duryodhana ! | Karna-Parva-Section-88 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது; எதிரிகளை வீழ்த்திக் கர்ணனைத் துளைத்த அர்ஜுனன்; அர்ஜுனன் மீதி பொழிந்த மலர்மாரி; பாண்டவர்களிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு துரியோதனனை அறிவுறுத்திய அஸ்வத்தாமன்; இணங்க மறுத்த துரியோதனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் ஆகாயத்தில், தேவர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் கூட்டங்களாக இருந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், அரச முனிகள் ஆகியோரும் அற்புத இறகுகளைக் கொண்ட பறவைகள்[1] ஆகியனவும் அற்புதமான வடிவை ஏற்றன.(1) மனிதர்கள் யாவரும், வானத்தில் அற்புதத்தன்மையுடன் நின்றிருந்த அவர்களையும், இசைக்கருவிகள், பாடல்கள், புகழ் துதிகள், சிரிப்பு, ஆடல்களையும், மற்றும் பல்வேறு வகைகளினான இன்பமான ஒலிகளை எதிரொலித்திருக்கும் வானத்தையும் கண்டனர்.(2)

அப்போது மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவ மற்றும் பாண்டவப் போர்வீரர்கள், இசைக் கருவிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்களாலும், சிங்க முழக்கங்களாலும் பூமியையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கும்படி போராரவாரம் செய்து தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(3) மனிதர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் நிறைந்ததும், கதாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள், குத்துவாள்கள் ஆகியவற்றின் பாய்ச்சலின் விளைவாகப் போராளிகளால் தாங்கிக் கொள்ள முடியாததும், வீரர்களால் நிறைந்ததும், உயிரற்ற உடல்களால் நிறைந்ததுமான போர்க்களமானது, குருதியால் சிவப்பாகி மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.(4) உண்மையில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகியோருக்கிடையிலான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாக இருந்தது. தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் கடுமையான, பயங்கரமான போர் தொடங்கிய பிறகு, சிறந்த கவசம் தரித்திருந்த அவ்விரு வீரர்களில் ஒவ்வொருவரும், திசைகளின் பத்து புள்ளிகளையும், தன்னை எதிர்த்த படையையும் நேரான, கூரிய கணைகளால் மறைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏவப்பட்ட கணைகளால் அங்கே உண்டான இருளின் காரணமாக, உமது போர்வீரர்களையோ, எதிரிகளையோ அதற்கு மேலும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.(5,6)

[1] கருடனும், அவனது சந்ததியினரும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஆகாயத்தில் பரவியிருக்கும் ஒளிக்கதிர்கள், சூரியனையோ, சந்திரனையோ நோக்கிக் குவிவதைப் போல, அச்சமடைந்த போர்வீரர்கள் அனைவரும் கர்ணன், அல்லது அர்ஜுனனின் பாதுகாப்பை நாடினார்கள். பிறகு அந்த வீரர்கள் இருவரும், கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதைப் போலத் தன் ஆயுதத்தால் மற்றவனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கச் செய்து,(7) மேங்களால் உண்டானதும், ஆகாயத்தை மறைத்திருந்ததுமான இருளை விலக்கி எழும் சூரியனையோ, சந்திரனையோ போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர். தன் துருப்புக்கு உற்சாகமூட்டிய அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, “தப்பி ஓடாதீர்கள்” என்று சொன்னதால், களத்தைவிட்டு அகலாமல் இருந்த எதிரி மற்றும் உமது போர்வீரர்கள்,(8) வாசவனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் சுற்றி நிற்கும் தேவர்களையும், அசுரர்களையும் போல, அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சூழ்ந்து நின்றனர். அப்போது அந்த இரு படைகளும், மனிதர்களில் சிறந்த அவ்விருவரையும், பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளாலும், சிங்கமுழக்கங்களாலும் வரவேற்றதால்,(9) சுற்றித் திரண்டு முழங்கும் மேகங்களால் வரவேற்கப்படும் சூரியனையும், சந்திரனையும் போல அந்த மனிதர்களில் காளைகள் இருவரும் அழகாகத் தெரிந்தனர்[2]. முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட வில்லைத் தரித்து, (சூரிய, அல்லது சந்திர) ஒளிவட்டத்துடன் கூடியவர்களாகத் தெரிந்த அவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் கதிர்களாக அமைந்த ஆயிரக்கணக்கான கணைகளை அந்தப் போரில் ஏவி,(10) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரிக்கும் வகையில், யுக முடிவில் எழும் தாங்கிக் கொள்ளப்பட முடியாத இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களாகத் தெரிந்தார்கள்.


[2] “9ம் ஸ்லோகத்தின் இரண்டாவது வரி வங்க உரைகளில் தவறாகவும், பொருளற்றதாகவும் இருப்பதால், நான் பம்பாய் உரைகளையே இங்குப் பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில், “ம்ருதங்கங்கள், பேரிகைகள், பணவங்கள், ஆனகங்கள் இவைகளுடைய சத்தங்களாலும், வாகஙனங்கள், சங்கங்கள் இவற்றின் சத்தங்களாலும் ஒலியுள்ளதாகச் செய்யப்பட்ட அந்த யுத்தரங்கத்தில் (சத்துருக்களால் பொறுக்க முடியாதவர்களும், புருஷஸ்ரேஷ்டர்களுமான அவ்விரு வீரர்களும், ஸூரியசந்திரர்கள் போல ஸிம்மநாதங்களோடு விளங்கினார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “பேரிகைகள், சிறுபேரிகள், பணவங்கள் ஆகியவை ஒலிக்கப்பட்டன. சங்குகள் முழக்கப்பட்டன. இவை சிங்க முழக்கங்களாடு ஒன்றுகலந்தன. மனிதர்களில் மேன்மையான அவ்விருவரும், மேகத்திரள்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனையும், சூரியனைப் போலப் பிரகாசித்தனர்” என்றிருக்கிறது.

வெல்லப்பட முடியாதவர்களும், எதிரிகளை அழிக்கவல்லவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்களில் அடுத்தவரிடம் தன் திறனை வெளிக்காட்டியவர்களும்,(11) போர்வீரர்களுமான கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அவ்விருவரும், இந்திரனையும், அசுரன் ஜம்பனையும் போல, அந்தப் போரில் ஒருவரிடமொருவர் அச்சமில்லாமல் நெருங்கினர். அப்போது வலிமைமைமிக்க ஆயுதங்களை இருப்புக்கு அழைத்த அந்த உறுதிமிக்க வில்லாளிகள் இருவரும், தங்கள் பயங்கரக் கணைகளால்,(12) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லத் தொடங்கி, தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மீண்டும் அந்த மனிதர்களில் முதன்மையானவர்களாக இருவராலும் பீடிக்கப்பட்டவையும், யானைகள், காலாள்கள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களை உள்ளடக்கியவையுமான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் துருப்புகள், காட்டில் சிங்கத்தால் தாக்கப்பட்ட சிறுவிலங்குகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.

அப்போது, துரியோதனன், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, சுபலனின் மகன் {சகுனி}, கிருபர் மற்றும் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்},(13,14) ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களும், பெரும் வலியை உண்டாக்கவல்ல கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, கேசவனையும் {கிருஷ்ணனையும்} தாக்கினர். எனினும், தனஞ்சயன், அதே நேரத்தில், தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களின் விற்களையும், அம்பறாத்தூணிகளையும், குதிரைகளையும், யானைகளையும், சாரதிகளோடு கூடிய தேர்களையும் வெட்டி, சிறந்த கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் சிதைத்து, பனிரெண்டு கணைகளால் சூதன் மகனையும் {கர்ணனையும்} துளைத்தான். அப்போது நூறு யானைகளும், நூறு தேர்களும், எண்ணற்ற சகர்கள், துகாரர்கள் மற்றும் யவன குதிரைவீரர்களும், காம்போஜர்களின் முதன்மையான போராளிகள் சிலருடன் சேர்ந்து, அர்ஜுனனைக் கொல்ல விரும்பி, அவனை எதிர்த்து வேகமாக விரைந்தனர். தன் கையில் இருந்த கணைகள் மற்றும் கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்}, எதிரிகளின் சிறந்த ஆயுதங்களையும், அவர்களது தலைகளையும்,(15-17), குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களையும் வெட்டி வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் தன்னோடு மோதிய எதிரிகளையும் வீழ்த்தினான். அப்போது ஆகாயத்தில், சிறந்த தேவர்களால் இசைக்கப்பட்ட தெய்வீக பேரிகைகள் {தங்கள் ஒலிகளால்} வெடித்தன. இவை அர்ஜுனனின் துதிகளோடு கலந்தன.(18) மென்மையான தென்றலால் வீசப்பட்டதும், நறுமணமிக்கதுமான மலர் மாரி அங்கே (அர்ஜுனனின் தலை மீது) பொழிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சம்பவத்தைக் கண்ட தேவர்களும், மனிதர்களும், அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(19) ஒரே கருத்தைக் கொண்டவர்களாகையால், உமது மகனும் {துரியோதனனும்}, சூதன் மகனும் {கர்ணனும்} மட்டுமே ஆச்சரியத்தையோ, வலியையோ {துன்பத்தையோ} உணரவில்லை.

அப்போது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனின் கரங்களைப் பற்றிக் கொண்டு[3], தணிவான தொனியைப் பின்பற்றி உமது மகனிடம்,(20) “ஓ! துரியோதனா, நிறைவடைவாயாக. பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. இங்கே சச்சரவுக்கான எந்தத் தேவையும் இல்லை. போருக்கு ஐயோ {போரை நிந்திக்க வேண்டும்}. வலிமைமிக்க ஆயுதங்களான பிரம்ம ஆயுதத்தை அறிந்த ஆசான் {துரோணர்} கொல்லப்பட்டுவிட்டார். பீஷ்மரின் தலைமையிலானவர்களும், மனிர்களில் காளைகளுமான பிறரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(21) என்னைப் பொறுத்தவரையும், என் தாய்மாமனை {கிருபரைப்} பொறுத்தவரையும் நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள். பாண்டுவின் மகன்களோடு (அரசைப் பகிர்ந்து கொண்டு) எப்போதும் அரசாள்வாயாக. நான் தடுத்தால் தனஞ்சயன் விலகிவிடுவான். ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} பகைமையை விரும்பவில்லை.(22) யுதிஷ்டிரன் உயிரினங்கள் அனைத்தின் நன்மையிலும் எப்போதும் ஈடுபடுகிறான். விருகோதரன் {பீமன்} அவனுக்குக் கீழ்ப்படிந்தவனே ஆவான். அதே போலவே இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} கீழ்ப்படிந்தவர்களே. உனக்கும், பார்த்தர்களுக்கும் இடையில் அமைதி உண்டாக்கப்பட்டால், அந்த உன் விருப்பத்தின் மூலமே, அனைத்து உயிரினங்களும் நன்மையை அடைந்தன என்பது போலவும் தெரியும்.(23) இன்னும் உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லட்டும். துருப்புகள், தங்கள் பகைமையில் இருந்து விலகட்டும். ஓ! மன்னா {துரியோதனா} என் வார்த்தைகளை நீ கேட்கவில்லையென்றால், எதிரிகளால் போரில் நீ துன்பத்தில் எரிய வேண்டியிருக்கும்.(24) கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் தனி ஒருவனாக எவற்றை அடைந்தான் என்பதை நீயும் கண்டாய், இந்த அண்டமும் நன்றாகக் கண்டது. {அசுரன்} பலனைக் கொன்றவனாலேயே {இந்திரனாலேயே} கூட இதைப்போன்றதொரு காரியத்தைச் சாதிக்க முடியாது. அதே போல, யமனாலோ, பிரசேதகர்களாலோ, யக்ஷர்களின் புகழ்பெற்ற மன்னனாலோ {குபேரனாலோ} கூடச் சாதிக்க முடியாது.(25)

[3] “அப்போது கரங்களைத் தீண்டுவது வழக்கமில்லையாகையால், கரம் கரேனா Karam Karena என்பது போன்ற வார்த்தைகள், “தன் கரங்களையே பிசைந்து கொள்வது” என்ற பொருளைத் தரும் என நான் நினைக்கிறேன். இது கிட்டத்தட்ட வேதனையைக் குறிப்பிடும் ஒரே தன்மையுடன் கூடிய வெளிப்பாடாகும். அஸ்வத்தாமன் அந்தப் பேரழிவைக் கண்டு துன்புற்றான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “துரோணபுத்திரர் உமது புத்திரனுடைய கையைத் தம் கையினால் உறுதியாகப் பிடித்து” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கின்றன.

தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சாதனைகளைப் பொறுத்தவரை, அஃது இதைவிட மிக மேம்பட்டதாகும். நான் என்ன சொன்னாலும், அவன் ஒருபோதும் அதை மீற மாட்டான். அவன் உன்னை எப்போதும் பின்தொடர்வான். ஓ! மன்னா {துரியோதனா}, அண்டத்தின் நன்மைக்காக நீ நிறைவடைவாயாக.(26) நீ எப்போதும் என்னை மதிக்கிறாய். நானும் உன்னிடம் பெரும் நட்பைக் கொண்டுள்ளேன். இதன் காரணமாகவே, நான் உனக்கு இதைச் சொல்கிறேன். அமைதியை நீ ஏற்றால், கர்ணனையும் கூட நான் விலங்கச் செய்வேன்.(27) நுணுக்கமாகக் கண்டறியும் மனிதர்கள், இயல்பாகவே நண்பர்களாகுபவர்கள், மனவேற்றுமை நீக்கப்பட்டு {நல்ல வார்த்தைகளால்} உண்டாகுபவர்கள், செல்வத்தின் மூலம் உண்டாகுபவர்கள், இறுதியாகப் பலத்தை வெளிப்படுத்தி அடக்கி {நண்பர்களாகக்} கொள்ளப்படுபவர்கள் என நால்வகை நண்பர்களைக் குறித்துச் சொல்கிறார்கள்.[4] பாண்டுவின் மகன்களைப் பொறுத்தவரை இந்த அனைத்தும் உன்னிடம் இருக்கின்றன.(28) ஓ! வீரா, பாண்டவர்களோ, இயல்பாகவே உன் நண்பர்களாவர். {நல்ல வார்த்தைகளால்} மனவேற்றுமை நீக்கப்பட்டு மீண்டும் உறுதியாக அவர்களை நண்பர்களாக அடைவாயாக. நீ நிறைவு கொண்டால், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, அவர்களும் நண்பர்களாக ஏற்பார்கள், எனவே அவ்வழியிலேயே செயல்படுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(29)

[4] வேறொரு பதிப்பில், “கற்றறிந்தவர்கள், ஸ்னேகம் இயற்கையாக உண்டாகக் கூடியதென்றும், அவ்வாறே நல்ல வார்த்தையினால் தேடத்தக்கதென்றும், தனத்தினால் தேடத்தக்கதென்றும், பிரதாபத்தினால் நேரக்கூடியதென்றும் நான்குவிதமாகச் சொல்கின்றார்கள்” என்றிருக்கிறது.

தன் நண்பனின் {அஸ்வத்தாமனின்} மூலம் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் சிறிது நேரம் சிந்தித்தான். நீண்ட பெருமூச்சுகளை விட்ட அவன், உற்சாகமற்ற இதயத்துடன், “ஓ! நண்பரே {அஸ்வத்தாமரே}, நீர் சொன்னவாறே இஃது இருக்கிறது. எனினும், நான் உமக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளையும் கேட்பீராக.(30) தீய இதயம் கொண்ட விருகோதரன் {பீமன்}, ஒரு புலியைப் போலத் துச்சாசனனைக் கொன்று, தன் இதயத்தில் இன்னும் நீடித்திருக்கும் வார்த்தைகளைச் சொன்னான். நீரும் அதைக் கேட்டீர். பிறகு, எவ்வாறு அமைதி ஏற்பட முடியும்?(31) மேலும், புயலின் வேகமானது, வலிமைமிக்க மேரு மலைகளில் மோதி பலவீனமடைவதைப் போலவே, அர்ஜுனனால், போரில் கர்ணனைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் பலவந்தமான பகைமை கொண்ட (நான் அவர்களுக்கு இழைத்த) பல செயல்களை நினைத்துப் பார்த்து, பிருதையின் {குந்தியின்} மகன்களும் என்னிடம் சிறு நம்பிக்கையும் கொள்ள மாட்டார்கள்.(32) ஓ! மங்காப் புகழ் கொண்ட ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, “போரில் இருந்து விலகுவாயாக” என்று இப்போது கர்ணனிடம் சொல்வதும் உமக்குத் தகாது. பல்குனன் {அர்ஜுனன்} இன்று மிகவும் களைத்துப் போய் இருக்கிறான். கர்ணன் விரைவில் அவனைக் கொல்வான்” என்றான் {துரியோதனன்}.(33) பணிவோடு கூடிய இந்த வார்த்தைகளை ஆசான் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} மீண்டும் மீண்டும் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, தன் துருப்புகளை அழைத்து, “கணைகளைத் தரித்துக் கொண்டு, இந்த எதிரிகளை எதிர்த்து விரைந்து, அவர்களைக் கொல்வீராக. ஏன் செயலற்று நிற்கிறீர்கள்?” என்று ஆணையிட்டான் {துரியோதனன்}.”(34)
-------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -88ல் உள்ள சுலோகங்கள் : 34


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்