Saturday, January 19, 2019

ஜாம்பவதியும் கிருஷ்ணனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 14அ

Jamvavati! | Anusasana-Parva-Section-14a | Mahabharata In Tamill

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் வரம் கேட்ட ஜாம்பவதி; இமயம் சென்ற கிருஷ்ணன்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! கங்கையாற்றின் மைந்தரே, அண்டத்தின் தலைவனுடைய பெயர்கள் அனைத்தையும் நீர் கேட்டிருக்கிறீர். ஓ! பாட்டா, ஓ! பலமிக்கவரே, ஈசன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனின் பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக.(1) அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவருக்கும் சிறப்புமிக்க ஆசானும், சங்கரன் என்றழைக்கப்படுபவனும், புலப்படாத தோற்றத்தைக் கொண்டவனும், பப்ரு அல்லது பரந்தவன் {பெரியவன்} என்றும் அழைக்கப்படுபவனுடைய பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக. அந்த மஹாதேவனின் பலத்தையும் எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனின் குணங்களை உரைக்க நான் சக்தியுள்ளவன் அல்லன். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவனாய் இருந்தாலும் எங்கும் காணப்படாதவனாக அவன் இருக்கிறான்.(3) பிரம்மன், விஷ்ணு மற்றும் இந்திரனைப் படைத்தவனும் அவனே {ஈசனே}, அவர்களுடைய ஆசானும் அவனே. பிரம்மன் முதலான தேவர்கள் முதல் பிசாசங்கள் வரை அனைவராலும் துதிக்கப்பட்டு வழிபடப்படுபவன் அவனே.(4) பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் கடந்தவன் அவனே. யோகத்தை அறிந்தவர்களும், கேள்வி சம்பந்தப்பட்ட காரியங்களில் ஞானத்தைக் கொண்டவர்களுமான முனிவர்கள் சிந்திப்பதும், நினைப்பதும் அவனையே.(5) அழிவற்றவனான பரப்பிரம்மம் அவனே. இருப்பு மற்றும் இல்லாமை என்ற இரண்டாகவும் இருப்பவன் அவனே. பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் தன் சக்தியின் மூலம் கலங்கடித்து, அவற்றிலிருந்து உயிரினங்களின் அண்டத்தலைவனான பிரம்மனைப் படைத்தவன் அவனே.(6)

உயர்ந்த நுண்ணறிவுடன் கூடிய அந்தத் தேவ தேவனுடைய குணங்களைச் சொல்லத் தகுந்தவன் எவன்? மனிதன், (தாயின் கருவறையில்) கருவை அடைதல், பிறவி, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு உட்பட்டவனாவான்.(7) அவ்வாறிருக்கையில் பவனைப் புரிந்து கொள்ள என்னைப் போன்ற மனிதனால் முடியுமா? ஓ! மகனே, சங்கு, சக்கரம் கதாயுதம் ஆகியவற்றைத் தாக்கும் நாராயணனால் மட்டுமே மஹாதேவனைப் புரிந்து கொள்ள முடியும்.(8) அவனே ஞானவான். அனைத்துப் பொருட்களின் குணங்களில் முதன்மையானவன் அவனே. அண்டத்தில் நீக்கமற நிறைந்திருப்பதால் விஷ்ணு அவனே. தடுக்கப்பட முடியாதவன் அவனே. ஆன்மப் பார்வையுடன் கூடிய உயர்ந்த சக்தியைக் கொண்டவன் அவனே. அனைத்துப் பொருட்களையும் யோகக் கண்களால் காண்பவன் அவனே.(9) ஓ! பாரதா, பதரி ஆசிரமத்தில் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சிறப்புமிக்க ருத்திரனை நிறைவு செய்ததன் விளைவால் இந்த உயரான்மக் கிருஷ்ணன் மொத்த அண்டத்தையும் {தன்னால்} நிறைப்பதில் வென்றான்.(10)

ஓ! மன்னர்களின் மன்னா, செல்வம் என்ற பெயரில் உள்ள பொருட்கள் அனைத்தையும் விட உலகளாவிய அளவில் ஏற்கப்படும் தன்மையை தெய்வீகப் பார்வை கொண்ட மஹேஸ்வரனின் மூலமே இந்த வாசுதேவன் அடைந்தான்[1].(11) இந்த மாதவன், முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கடுந்தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், வரமளிப்பவனும், அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆசானுமான அந்தச் சிவனை நிறைவு செய்வதில் இறுதியாக வென்றான்.(12) ஒவ்வொரு யுகத்திலும் உயர் ஆன்மக் கிருஷ்ணனின் பெரும் அர்ப்பணிப்பால் மஹாதேவன் நிறைவடைகிறான்.(13) சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனான ஹரி, ஒரு மகனை அடைவதற்காகப் பதரி ஆசிரமத்தில் தவங்களைச் செய்த போது, அண்டத்தின் மூலக் காரணனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மஹாதேவனின் பலம் என்ன என்பதைத் தன் கண்களாலேயே கண்டான்[2].(14) ஓ! பாரதா, மஹாதேவனைவிட மேன்மையானவன் எவனையும் நான் காணவில்லை. மேலும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்காமல் அந்தத் தேவ தேவனின் பெயர்களை முழுமையாக விளக்கிச் சொல்ல கிருஷ்ணன் மட்டுமே தகுந்தவனாவான்.(15) யது குலத்தைச் சேர்ந்த இந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} மட்டுமே சிறப்புமிக்கச் சிவனின் குணங்களைச் சொல்லத் தகுந்தவனாவான். ஓ! மன்னா, உண்மையில், அந்தப் பரமதேவனின் பலத்தை முழுமையாகச் சொல்ல அவனால் மட்டுமே சொல்ல முடியும்" என்றார் {பீஷ்மர்}".(16)

[1] "செல்வம் எப்போதும் அனைத்து மனிதர்களாலும் ஏற்கப்படத்தக்கதாக இருக்கிறது. இந்த வாசுதேவன் செல்வத்தை விட அதிகம் ஏற்கத்தகுந்தவன். செல்வத்தை விட அதிகம் ஏற்கத்தக்கதும், அண்டமனைத்தாலும் ஏற்கத்தக்கதுமான இந்தக் குணம், மஹாதேவனின் உதவியாலேயே அடையப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "ஒரு மகனை அடைவதற்காக மஹாதேவனை நிறைவு செய்யும் கிருஷ்ணனின் தவங்கள் இங்கே மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மஹாதேவனின் வரம் மூலம் அடையப்பட்ட மகன், கிருஷ்ணனுக்குப் பிடித்த மனைவியான ருக்மிணியிடம் அவனுக்குப் பிறந்த பிரத்யும்னன் ஆவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "குருக்களின் பாட்டனான சிறப்புமிக்கப் பீஷ்மர் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி, பவனின் பெருமையைச் சொல்லும் பின் வரும் வார்த்தைகளை வாசுதேவனிடம் சொன்னார்.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசான் நீயே. சிறப்புமிக்கவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால் விஷ்ணு நீயே. யுதிஷ்டிரனால் என்னிடம் கேட்கப்பட்டவனும், அண்ட வடிவிலானவனுமான சிவன் தொடர்புடைய காரியங்களைக் குறித்துச் சொல்வதே உனக்குத் தகும்.(18) பழங்காலத்தில் பிரம்மனிடம் இருந்து உதித்த முனிவர் தண்டின் {தண்டி}, பிரம்ம லோகத்தில், பிரம்மனின் முன்னிலையில் வைத்து மஹாதேவனின் ஆயிரம் பெயர்களைச் சொன்னார்.(19) தவத்தைச் செல்வமாகக் கொண்டவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான இந்த முனிவர்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் தீவில் பிறந்த கிருஷ்ணரும்{வியாசரும்} கேட்கும் வகையில் இந்தச் சபையின் முன்னிலையில் அந்த ஆயிரம் பெயர்களையும் நீ சொல்வாயாக.(20) மாற்றமில்லாதவனும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக, மகிழ்ச்சியாக இருப்பவனும், ஹோத்ரியும், அண்டத்தின் பாதுகாவலனும், அண்டத்தின் படைப்பாளனும், முண்டின் {முடிகளற்றவன்} மற்றும் கபர்த்தின் {சடாமுடிதரித்தவன்} என்று அழைக்கப்படுபவனின் உயர்ந்த அருள்நிலையைக் குறித்துச் சொல்வாயாக" என்றார் {பீஷ்மர்}.(21)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, "பெரும்பாட்டனான பிரம்மனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருக்கும் பெரும் முனிவர்களும் கூட, மஹாதேவனின் செயற்போக்குகளையும், அவற்றின் விபரங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளத் தக்கவர்களல்லர்.(22) மக்களில் அறவோர் அனைவரும் அடையப்போகும் கதி அவனேயாவான். நுண்பார்வை கொண்ட ஆதித்யர்களே கூட அவனது வசிப்பிடத்தைக் காணத் தகுந்தவர்களல்லர். அவ்வாறிருக்கையில், சாதாரண ஒரு மனிதனால் எவ்வாறு அவனைப் புரிந்து கொள்ள முடியும்?(23) எனவே, வேள்விகள் மற்றும் நோன்புகள் அனைத்தின் தலைவனாகக் கருதப்படுபவனும், அசுரர்களைக் கொல்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனின் குணங்களில் சிலவற்றை மட்டுமே உண்மையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்" என்றான்".(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சிறப்புமிக்க வாசுதேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, நீரைத் தீண்டி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் நுண்ணறிவையுடைய உயர் ஆன்ம மஹாதேவனின் குணங்களைக் குறித்துச் சொல்லத் தொடங்கினான்.(25)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, "பிராமணர்களில் முதன்மையானவர்களே, ஓ!ஐயா யுதிஷ்டிரரே, ஓ! ஆற்றின் மைந்தரே {பீஷ்மரே}, கபர்த்தினுக்கு {கபர்த்திக்கு [மஹாதேவனுக்கு]} உரிய பெயர்களைக் கேட்பீராக.(26) காணக்கிடைக்காத (அந்தப் பெருந்தேவனை) {எனது மகன்} சாம்பனுக்காகப் பழங்காலத்தில் கண்டேன். உண்மையில் அந்த நாட்களில் தியான யோகத்தின் விளைவால் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, என்னால் காணப்பட்டான்[3].(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், ருக்மிணியின் மகனுமான பிரத்யும்னன், பழங்காலத்தில் அசுரன் சம்பரனைக் கொன்ற காலத்திலிருந்து பனிரெண்டு வருடங்கள் கடந்ததும், என் மனைவியான ஜாம்பவதி என்னிடம் பேசினாள்.(28)

[3] "கிருஷ்ணன், தகுதி மிக்க ஒரு மகனை அடைவதற்காக மஹாதேவனை நிறைவு செய்யும் நோக்கில் இமயச் சாரலில் கடுந்தவங்களைச் செய்தான் என்று சொல்லப்படுகிறது. இங்கேயும், பின்வரப்போகும் ஸ்லோகங்களிலும் காணப்படுவதைப் போல மஹாதேவனின் வரத்தால் அடையப்பட்ட மகன் சாம்பனே. எனினும், வேறு பல இடங்களில் இது ருக்மிணியிடம் பெறப்பட்ட பிரத்யும்னன் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் மகன்களை அடைவதற்காக இருமுறை மஹாதேவனைத் துதித்தான் என்று கொண்டால் இந்த முரண் நீங்கிவிடும்" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். 31, 32 ஸ்லோகங்களில் கங்குலி சொல்வது சரியாகத்தெரிகறது.

உண்மையில் ஓ! யுதிஷ்டிரரே, ருக்மிணிக்கு பிறந்தவர்களான பிரத்யும்னன், சாருதேஷ்ணன் மற்றும் பிற மகன்களைக் கண்ட ஜாம்பவதி, தானும் ஒரு மகனைப் பெற விரும்பி என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்,(29) "ஓ! மங்கா மகிமை கொண்டவரே, வீரம், மிக ஏற்புடைய குணங்கள், பாவமற்ற ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனாகவும் உள்ள உம்மைப் போன்ற ஒரு மகனை எனக்கு அருள்வீராக. ஓ!, இந்த என் வேண்டுதலை எத்தாமதமுமின்றி அருள்வீராக.(30) மூவுலகங்களிலும் உம்மால் அடையப்பட முடியாது எதுவும் இல்லை. ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நீர் விரும்பினால் வேறு உலகங்களையே கூட உண்டாக்க முடியும். பனிரெண்டு வருட நோன்பை நோற்று, உம்மைத் தூய்மை செய்து கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் தலைவனை (மஹாதேவனைத்) துதித்து, ருக்மிணியின் மகன்களைப் பெற்றீர்.(31,32) சாருதேஷ்ணன், ஸுசாரூ, சாருவேசன், யசோதரன், சாருஸ்ரவன், சாருயசஸ், பிரத்யும்னன், சம்பு என்ற மகன்களை அவள் {ருக்மிணி} உம்மிடம் இருந்து பெற்றாள்.(33) ஓ! மதுசூதனா {மதுவெனும் அரக்கனைக் கொன்றவரே}, ருக்மிணி பெற்றிருக்கும் பேராற்றல் வாய்ந்த மகன்களைப் போல எனக்கும் ஒரு மகனை அருள்வீராக" என்று கேட்டாள்.(34)

அந்த இளவரசியால் இவ்வாறு கேட்கப்பட்டதும், நான் அந்தக் கொடியிடையாளிடம் {ஜாம்பவதியிடம்}, "ஓ! ராணி, (உன்னை விட்டுச் சிலகாலம் பிரிந்து செல்ல) உன் அனுமதி எனக்கு வேண்டும். நிச்சயம் நான் உனதாணைக்குக் கீழ்ப்படிவேன்" என்றேன்.(35)

அவள் என்னிடம், "செல்வீராக, வெற்றியும், செழிப்பும் எப்போதும் உமக்குத் துணை புரியட்டும். பிரம்மன், சிவன், கசியபர், ஆறுகள், மனத்தை ஆளும் தேவர்கள்,(36) மண், இலையுதிர் மூலிகைகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளைச் சுமப்பதாகக் கருதப்படும் சந்தங்கள் {த்ரேதாக்னிகள் மற்றும் வேதங்கள்}, முனிவர்கள், பூமி, பெருங்கடல்கள், வேள்விக் கொடைகள், சாமங்களின் {இசையில் உள்ள} ஏற்றத்தாழ்வுகளை நிறைவு செய்யச் சொல்லப்படும் அசைகள், ரிக்ஷங்கள் {நட்சத்திரங்கள்}, பித்ருக்கள்,(37) ஓ! யாதவரே, கோள்கள், தேவர்களின் மனைவிகள் {தேவிகள்}, தேவகன்னிகள், தேவர்களின் தாய்மார், பெரும் யுகங்கள் {மன்வந்தரங்கள்}[4], பசுக்கள், சந்திரமாஸ் {சந்திரன்}, சாவித்ரி {சூரியன்}, அக்னி {விஷ்ணு},(38) காயத்ரி, வேத அறிவு {பிரம்ம வித்தை}, பருவ காலங்கள் {ருதுக்கள்}, ஆண்டுகள், க்ஷணங்கள் {கணங்கள்}, லவங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள்,(39) என்ற அனைத்தாலும் பாதுகாக்கப்படுவீராக. நீரெங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பீராக. ஓ! பாவமற்றவரே உமது வழியில் உம்மை ஆபத்து அணுகாதிருக்கட்டும், விழிப்புணர்வின்மை உமதாக வேண்டாம் {ஜாக்ரதையாக இருப்பீராக}" என்று மறுமொழி கூறினாள்.(40)

[4] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "எழுபத்தோரு தேவ யுகங்கள்" என்றிருக்கிறது.

இவ்வாறு குரங்குகளின் இளவரசனுடைய மகளால் {ஜாம்பவதியால்} ஆசி கூறப்பட்ட {மங்களசாஸனம் செய்யப்பெற்ற} நான் நல்வாழ்த்து கூறி அவளிமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். மனிதர்களில் முதன்மையானவரான என் தந்தை {வசுதேவர்}, தாய் {தேவகி}, மன்னன் மற்றும் ஆஹுகர் ஆகியோரிடம்(41) சென்று வித்யாதரர்களின் இளவரசனுடைய மகள் {ஜாம்பவதி}[5] பெருந்துன்பத்துடன் என்னிடம் சொன்ன வார்த்தைகளைத் தெரிவித்தேன். கவலை நிறைந்த இதயத்துடன் அவர்களிமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு கதன் மற்றும் பெரும் வலிமை கொண்ட ராமர் {பலராமர்} ஆகியோரிடம் சென்றேன்.(42) அவர்கள் இருவரும் உற்சாகம் நிறைந்தவர்களாக, "எத்தடையுமின்றி உன் தவங்கள் பெருகட்டும்" என்று என்னிடம் சொன்னார்கள்.(43) அவர்கள் அனைவரிடமும் அனுமதிபெற்றுக் கொண்ட நான் கருடனை நினைத்தேன். உடனே என்னிடம் வந்த அவன் (என் ஆணையின் பேரில்) என்னை இமயத்துக்குச் சுமந்து சென்றான். இமயத்தை அடைந்ததும் நான் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினேன்.(44) அந்த முதன்மையான மலையில் நான் அற்புதக் காட்சிகள் பலவற்றைக் கண்டேன். தவம் பயில்வதற்கு ஏற்புடையதும், அற்புதமானதும், சிறந்ததுமான ஓர் ஆசிரமத்தைக் கண்டேன்.(45)

[5] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவளை வித்யாதரராஜன் மகள் என்று சொன்னது ஜாம்பவான் தேவ அம்சம் என்னும் அபிப்பிராயத்தினால்" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 14அ வில் உள்ள சுலோகங்கள் : 45

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்