Tuesday, April 23, 2019

மீன்களும் மீனவரும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 51

The fishes and the fishermen! | Anusasana-Parva-Section-51 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 51)


பதிவின் சுருக்கம் : சியவனருக்கான விலையைச் சொன்ன நஹுஷன்; பசுவின் பெருமை; மீனவர்களிடம் இருந்து பசுவைப் பெற்றுக் கொண்ட சியவனர்; சொர்த்தையடைந்த மீன்களும், மீனவர்களும்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன் நஹுஷன், சியவனர் அடைந்த நிலையைக் கேட்டு தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதரின் துணையுடன் அந்த இடத்திற்கு விரைவாகச் சென்றான்.(1) முறையாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட அந்த மன்னன் தன் கரங்களைக் கூப்பிக் குவிந்த கவனத்துடன் உயர் ஆன்ம சியவனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.(2) அப்போது மன்னனின் புரோகிதர், ஓ! ஏகாதிபதி, வாய்மை நோன்பு நோற்றவரும், உயர் ஆன்மா கொண்டவரும், (காந்தியிலும், சக்தியிலும்) தேவர்களுக்கே ஒப்பானவருமான அந்த முனிவரை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(3)


நஹுஷன் {சியவனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, "உமக்கு ஏற்புடையவகையில் நான் செய்ய வேண்டிய செயலென்ன? ஓ! புனிதமானவரே, செய்வதற்குக் கடினமான செயலாக இருந்தாலும், உமது ஆணையின் பேரில் என்னால் நிறைவேற்ற முடியாத செயலேதும் கிடையாது" என்றான்.(4)

சியவனர், "மீன் பிடித்து வாழும் இம்மனிதர்கள் தங்கள் உழைப்பால் முற்றிலும் களைப்படைந்திருக்கின்றனர். இந்த மீன்களுடன் சேர்த்து எனக்குமான விலையை நீ இவர்களுக்குக் கொடுப்பாயாக" என்றார்.(5)

நஹுஷன், "இந்தப் புனிதமானவர் ஆணையிட்டபடியே இவரை விலைக்கு வாங்க என் புரோகிதர் இந்த நிஷாதர்களிடம் ஓராயிரம் நாணயங்களை {ஓராயிரம் பொன்னை} விலையாகக் கொடுக்கட்டும்" என்றான்.(6)

சியவனர், "ஓராயிரம் நாணயங்கள் {ஓராயிரம் பொன்} என் விலையாக முடியாது. கேள்வி உன் விவேகத்தைச் சார்ந்தது. அஃது என்னவாக இருக்க வேண்டும் என்பதை உன் புத்தியில் தீர்மானித்து ஒரு நல்ல விலையைக் கொடுப்பாயாக[1]" என்றார்.(7)

[1] கும்பகோணம் பதிப்பில், "தன் விலையைத் தான் சொல்லலாகாது. அதை உலகம் சிலாகிக்காது. எனக்கு ஆத்மஸ்துதியைச் செய்யவும் இஷ்டமில்லை. ஆதலால், ஆயிரம் பொன்னுக்குத் தகுதியுள்ளவனல்லேனென்பதை மட்டும் நான் சொல்வேன்அல்லது, நீ என்ன நினைக்கிறாய்? எனக்குச் சரியான விலையைக் கொடு; உன் புத்தியினால் நிச்சயம் செய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! மன்னா, ஆயிரம் நாணயங்களைவிட நான் மதிப்புமிக்கவன். நீ என்ன நினைக்கிறாய்? என்ன விலை கொடுப்பது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க உன் புத்தியைப் பயன்படுத்துவாயாக" என்றிருக்கிறது.

நஹுஷன், "ஓ! கல்விமானான பிராமணரே, இந்த நிஷாதர்களிடம் நூறாயிரம் நாணயங்கள் கொடுக்கப்படட்டும். ஓ! புனிதமானவரே, இஃது உமது விலையாகுமா? அல்லது வேறு வகையில் நினைக்கிறீரா?" என்று கேட்டான்.(8)

சியவனர், "ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, நூறாயிரம் நாணயங்களால் என்னை விலைக்கு வாங்கக் கூடாது. இவர்களுக்குச் சரியான விலையைக் கொடுப்பாயாக. நீ உன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பாயாக" என்றார்.(9)

நஹுஷன், " இந்த நிஷாதர்களிடம் ஒரு கோடி நாணயங்களை என் புரோகிதர் கொடுக்கட்டும். இதுவும் உமது விலையாகாது என்றால், மேலும் அதிகம் அவர்களுக்குக் கொடுக்கப்படட்டும்" என்றான்.(10)

சியவனர், "ஓ! மன்னா, ஒரு கோடி நாணயங்களாலோ, அதற்கு மேலோ கொடுத்து விலைக்கு வாங்க நான் தகுந்தவனன்று. எது முறையானதோ, சரியானதோ அந்த விலை இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நீ பிராமணர்களுடன் ஆலோசிப்பாயாக" என்றார்.(11)

நஹுஷன், "என் நாட்டில் பாதி, அல்லது மொத்த நாடும் இந்த நிஷாதர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அஃது உமது விலையாகலாம் என நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே, நீர் என்ன நினைக்கிறீர்?" என்று கேட்டான்.(12)

சியவனர், "ஓ! மன்னா, நான் உன்னுடைய நாட்டில் பாதியையோ, முழு நாட்டையோ விலையாகக் கொள்ளத் தகுந்தவனல்ல. இந்த மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்த சரியான விலை கொடுக்கப்பட வேண்டும். நீ முனிவர்களுடன் ஆலோசிப்பாயாக" என்றார்".(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பெரும் முனிவரின் இந்தச் சொற்களைக் கேட்டு நஹுஷன் பெரும் துன்பத்தால் பீடிக்கப்பட்டான். அவன் தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதருடன் சேர்ந்து இக்காரியம் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.(14) அப்போது அங்கே, கனி மற்றும் கிழங்குகளை உண்டு காட்டில் வாழ்பவரும், ஒரு பசுவுக்குப் பிறந்தவருமான ஒரு தவசியானவர் மன்னன் நஹுஷனிடம் வந்தார்.(15)

ஓ! மன்னா, அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் அந்த ஏகாதிபதியிடம், "நான் விரைவில் உன்னை நிறைவடையச் செய்கிறேன். இம்முனிவரும் நிறைவடைவார்.(16) கேலிக்காகக் கூட நான் பொய் பேசியவனல்ல, எனும் போது வேறு சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? நான் சொல்வதை நீ தயங்காமல் செய்ய வேண்டும்" என்றார்.(17)

நஹுஷன், "ஓ! சிறப்புமிக்கவரே, பிருகு குலத்தைச் சேர்ந்த இந்தப் பெரும் முனிவருக்கான விலை என்ன என்பதைச் சொல்வீராக. இந்தப் பயங்கர நிலையில் இருந்து என்னையும், என் நாட்டையும், என் குலத்தையும் காப்பீராக.(18) புனிதரான சியவனர் கோபமடைந்தால் மூவுலகங்களை அழித்துவிடுவார் எனும்போது, தவங்களில்லாதவனும், கர வலிமையை மட்டுமே சார்ந்திருப்பவனும், வேறொன்றுமில்லாதவனுமான என்னைக் குறித்துச் சொல்ல வேண்டுமா?(19) ஓ! பெரும் முனிவரே, எங்கள் அமைச்சர்கள் மற்றும் எங்கள் புரோகிதருடன் சேர்த்து அடியற்ற கடலில் வீழ்ந்து விட்ட எங்களுக்குத் தெப்பமாவீராக. இந்த முனிவருக்கான விலை என்ன என்பதைத் தீர்மானிப்பீராக" என்று கேட்டான்".(20)

பீஷ்மர், "பசுவுக்குப் பிறந்தவரும், பெருஞ்சக்தியுடன் கூடியவருமான அந்தத் தவசி நஹுஷனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த ஏகாதிபதியையும், அவனது அமைச்சர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இவ்வாறு பேசினார்:(28) "ஓ! மன்னா, பிராமணர்கள் நான்கு வகையினரில் முதன்மையானவர்களாவர். எனினும் அவர்களுக்கு விலையேதும் நிர்ணயிக்க முடியாது. பசுக்களும் மதிப்பில்லாதவையே. எனவே, ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முனிவரின் விலையாக நீ ஒரு பசுவைக் கருதுவாயாக" என்றார்.(22)

ஓ! மன்னா, அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நஹுஷன், தன் புரோகிதர் மற்றும் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) கடும் நோன்புகளைக் கொண்டவரும், பிருகுவின் மகனுமான சியவனரின் முன்பு சென்ற அவன், ஓ! ஏகாதிபதி, தன்னால் இயன்றதில் சிறந்த முறையில் அவரை நிறைவடையச் செய்யும் வகையில் அவரிடம் இவ்வாறு பேசினான்.(24)

நஹுஷன், "ஓ! மறுபிறப்பாள முனிவரே, எழுவீராக, ஓ! பிருகுவின் மகனே, எழுவீராக, ஒரு பசுவை உமக்கான விலையாகக் கொண்டு நீர் விலைக்கு வாங்கப்பட்டீர். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே. இதுவே உமது விலை என நான் நினைக்கிறேன்" என்றான்.(25)

சியவனர், "சரி, ஓ! மன்னர்களின் மன்னா, இதோ எழப் போகிறேன். ஓ! பாவமற்றவனே, நீ முறையாகவே என்னை விலைக்கு வாங்கியிருக்கிறாய். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, பசுவுக்கு நிகராக வேறு எந்தச் செல்வத்தையும் நான் காணவில்லை.(26) பசுவைக் குறித்துப் பேசுவது, அவற்றைக் குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்பது, பசுக்களைக் கொடையளிப்பது, பசுக்களைப் பார்ப்பது ஆகியவை மிக மெச்சத்தகுந்தவையும், உயர்மங்கலமானவையும், பாவம் போக்குபவையுமான செயல்களாகும்.(27) பசுக்களே செழிப்பின் வேராக எப்போதும் இருக்கின்றன. பசுக்களில் குற்றமேதும் கிடையாது. ஹவிஸ்-ன் வடிவில் தேவர்களுக்குச் சிறந்த உணவை எப்போதும் அளிப்பவை பசுக்களே.(28) ஸ்வாஹா மற்றும் வஷட் என்ற புனித மந்திரங்கள் எப்போதும் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. அவையே வேள்வியின் வாயாக இருக்கின்றன.(29) அவை பலத்தைக் கொடுக்கக் கூடிய சிறந்த அமுதத்தை விளைவிக்கின்றன. அனைத்து உலகங்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளும் அவை அமுதத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகின்றன(30). உண்மையில் பசுக்கள், உயர்ந்த சக்தியாகவும், அனைத்த உயிரினங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவையாகவும் கருதப்படுகின்றன.(31) எந்த நாட்டில் பசுக்கள், தங்கள் உரிமையாளர்களால் நிறுவப்பட்டு, அச்சமில்லாமல் அழகில் ஒளிர்கின்றனவோ, அந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.(32) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் படிக்கட்டுக்களாகப் பசுக்களே இருக்கின்றன. பசுக்கள் சொர்க்கத்திலேயே புகழப்படுகின்றன. பசுக்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் கொடுக்க வல்லவர்களும், அனைத்தையும் கொடுக்கவல்லவர்களுமான தேவிகளாக இருக்கின்றன. இவ்வளவு உயர்வானவையாகவும், மேன்மையானவையாகவும் இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது" என்றார்".(33)

பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பசுக்களின் மகிமை மற்றும் மேன்மை குறித்து நானும் இதையே உனக்குச் சொல்கிறேன். பசுக்கள் தொடர்புடைய புண்ணியங்களில் ஒரு பகுதியைச் சொல்வதற்கு மட்டுமே நான் தகுந்தவன் ஆவேன். இக்காரியம் குறித்து முழுமையும் சொல்லும் தகுதி எனக்கில்லை.(34)

நிஷாதர்கள், "ஓ! தவசியே, நீர் எங்களைக் கண்டீர், எங்களிடம் பேசவும் செய்தீர். நல்லோருடன் நட்பு கொள்வது ஏழே சொற்களை மட்டுமே சார்ந்ததாகும் எனச் சொல்லப்படுகிறது.(35) சுடர்மிக்க வேள்வி நெருப்பு, அதன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகள் அனைத்தையும் உண்ணும். அற ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட நீர், மனிதர்களுக்கு மத்தியில் சுடர்மிக்க நெருப்பின் சக்தியுடன் இருக்கிறீர்.(36) ஓ! பெரும் கல்விமானே, நாங்கள் உம்மை அமைதிப்படுத்துகிறோம். நாங்கள் உம்மிடம் சரண் அடைகிறோம். எங்களுக்கு அருள் செய்ய, எங்களிடம் இருந்து இந்தப் பசுவை எடுத்துக் கொள்வீராக" என்றனர்.(37)

சியவனர், "வறியவர், அல்லது துயரில் வீழ்ந்த ஒருவரின் கண், ஒரு தவசியின் கண், அல்லது கடும் நஞ்சுமிக்க ஒரு பாம்பின் கண் ஆகியன, காற்றின் உதவியுடன் சுடர்விடுவதும், வைக்கோல் பொதியை எரிப்பதுமான நெருப்பைப் போல ஒரு மனிதனை அவனது வேர்வரை எரித்துவிடும் சக்தி கொண்டவையாகும்.(38) நீங்கள் எனக்கு அளிக்க விரும்பும் பசுவை நான் ஏற்றுக் கொள்கிறேன். மீனவர்களே, ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் விடுபட்டு, உங்கள் வலைகளில் பிடிபட்டிருக்கும் இந்த மீன்களுடன் சேர்த்து, எந்தத் தாமதமும் இல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்வீர்களாக" என்றார்".(39)

பீஷ்மர் தொடர்ந்தார், "இதன்பிறகு, தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெரும் முனிவருடைய சக்தியின் விளைவால், அவர் சொன்ன அந்தச் சொற்களின் மதிப்பால், அந்த மீனவர்களும், அந்த மீன்களும், சொர்க்கத்திற்குச் சென்றனர்.(40) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னன் நஹுஷன், மீனவர்களும் அந்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(41) பிறகு பசுவிடம் பிறந்த முனிவரும், பிருகு குல சியவனரும் என அந்த இரு முனிவர்களும் மன்னன் நஹுஷனுக்குப் பல வரங்களை அளித்து அவனை மகிழ்வித்தனர்.(42)

அப்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பெரும் சக்தியைக் கொண்டவனும், பூமி அனைத்தின் தலைவனுமான மன்னன் நஹுஷன் மகிழ்ச்சியால் நிறைந்து, "போதும்" என்று சொன்னான்.(43) தேவர்களின் தலைவனான இரண்டாம் இந்திரனைப் போல இருந்த அவன், தன்னறத்தை உறுதி செய்ய அந்த வரங்களை ஏற்றுக் கொண்டான். முனிவர்கள் வரமளித்ததும் மகிழ்ச்சியால் நிறந்த அம்மன்னன் அவ்விருவரையும் பெரும் மதிப்புடன் வழிபட்டான்.(44) சியவனரைப் பொறுத்தவரையில், அவரது நோன்பு முடிந்ததால் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். பசுவில் பிறந்தவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான முனிவரும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(45) ஓ! ஏகாதிபதி, நிஷாதர்கள் அனைவரும், அவர்கள் பிடித்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்ந்தன. மன்னன் நஹுஷனும், மதிப்புமிக்க வரங்களை அடைந்து தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(46) ஓ! மகனே, இவ்வாறே நீ கேட்ட அனைத்தையும் குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டன். ஓ! யுதிஷ்டிரா, பிறரைப் பார்ப்பதாலும், அவர்களுடன் வாழ்வதாலும் உண்டாகும் பாசத்தையும், பசுக்களின் உயர்ந்த அருளையும், உண்மை அறத்தை உறுதி செய்வது போன்ற காரியங்களைக் குறித்து நான் உன்னுடன் உரையாடினேன். ஓ! வீரா, உன் நெஞ்சில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக" {என்றார் பீஷ்மர்}.(47,48)

அநுசாஸனபர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 48

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்