Tuesday, July 02, 2019

பரமரகசியங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 126

Great Mysteries! | Anusasana-Parva-Section-126 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 126)


பதிவின் சுருக்கம் : ஸ்ரீ ஹரியை நிறைவடையச் செய்யும் செயல்கள்; ஏழைகளும் வேள்வி செய்த பலன்களை அடைய செய்ய வேண்டிய செயல்கள்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பித்ருக்கள் பேசுவதை நிறுத்தியதும், தேவர்களின் தலைவனான இந்திரன், பலமிக்க ஹரியிடம், "ஓ! தலைவா, எந்தச் செயல்களின் மூலம் நீ நிறைவடைகிறாய். உண்மையில், மனிதர்கள் உன்னை நிறைவடையச் செய்வதில் எவ்வாறு வெல்கிறார்கள்" என்று கேட்டான்.(1)


விஷ்ணு {இந்திரனிடம்}, "பிராமணர்களை இழிவு செய்வது, நான் பெரிதும் வெறுக்கும் ஒன்றாகும். பிராமணர்களை வழிபட்டால் என்னை வழிபட்டதாகவே நான் கருதுகிறேன். இதில் ஐயமில்லை.(2) மேன்மையான பிராமணர்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுடன் உணவு அளித்த பிறகு, அவர்கள் மதிப்புடன் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் (மாலை வேளையில்) தன் {என்} பாதத்தை வணங்க வேண்டும். இவ்வழியில் செயல்படுபவர்கள், (பசுவில் இருந்து முதலில் விழும்) பசுஞ்சாணத்தில் தெரியும் சுழியை {என்னுடைய சக்கராயுதத்தை} வணங்கி அவற்றுக்குக் காணிக்கை அளிப்பவர்கள் ஆகிய மனிதர்களிடம் நான் நிறைவடைகிறேன்[1].(3) குள்ள வடிவில் இருக்கும் ஒரு பிராமணனைக் காண்பவர்கள், அல்லது கரையில் இருந்து சிறிதளவு மண்ணைத் தலையில் சுமந்து நீரில் இருந்து எழும் பன்றியைக் காண்பவர்கள் ஒருபோதும் எந்தத் தீமையையும் சந்திக்கமாட்டார்கள். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். ஒவ்வொரு நாளும், அஸ்வதம் {அரசமரம்}, கோரோசனை என்றழைக்கப்படும் பண்டம், பசு ஆகியவற்றை வழிபடும் மனிதன்,(5) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். இவற்றுக்குள் இருந்து, இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாட்டை என் சொந்த வடிவில் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(6) இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாடு எனக்கே அழிக்கப்பட்ட வழிபாடாகும். இஃது உலகம் தொடங்கிய காலம் முதல் இருக்கிறது. வேறு வகை வழிபாட்டை நான் ஏற்பதில்லை என்பதால் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் வீணாகவே அவ்வழியில் என்னை வழிபடுகிறார்கள். உண்மையில், வேறு வகையில் என்னை வழிபடுவது என்னை நிறைவடையச் செய்வதில்லை" என்றான் {விஷ்ணு}.(7)

[1] "மாலை வேளையில் ஒருவன் தன் பாதத்தையே வணங்க வேண்டும். இவ்வழக்கம் நிச்சயம் வங்கத்தில் இப்போது நடைபெறுவதில்லை. பசுவில் இருந்து முதலில் விழும் சாணத்தில் நிச்சயம் சுழிகள் காணப்படும்; ஆனால் அவற்றுக்குக் காணிக்கையளிக்கும் நடைமுறை சுத்தமாக நடைபெறுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் முற்றிலும் வேறு வகையில், "தினந்தோறும் போஜனத்திற்குப் பிறகு பிராம்மணஸ்ரேஷ்டர்களையும், என்னுடைய பாதங்களையும் வந்தனம் செய்து என் சக்ராயுதத்திற்குப் பூஜை செய்பவரான மனிதர் விஷயத்தில் நான் அனுக்கிரகம் வைக்கிறேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அத்மந: என்பது மூலம். தன் காலை என்பது பழையவுரை. ஸந்தியாகாலத்தில், தன் காலையே வணங்குதல் சிஷ்டாசாரமாயிருந்தது என்றும் அதனால் விளங்குகிறது" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் உள்ளதே சரியான உரை என்பதைப் பின்வரப் போகும் 10-ம் ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.

இந்திரன் {விஷ்ணுவிடம்}, "பசுஞ்சாணத்தில் உள்ள சுழிகளையும், பாதத்தையும், பன்றியையும், குள்ள பிராமணனையும், நிலத்தில் இருந்து உயர்த்தப்பட்ட மண்ணையும் நீ ஏன் மெச்சுகிறாய்?(8) நீயே அனைத்து உயிரினங்களையும் படைத்தாய், நீயே அவற்றை அழிக்கவும் செய்கிறாய். அழியக்கூடிய அல்லது நிலையற்ற பொருட்கள் அனைத்தின் நித்திய இயற்கையாக நீயே இருக்கிறாய்" என்றான்".(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்திரனின் இச்சொற்களைக் கேட்ட விஷ்ணு, சற்றே புன்னகைத்து, "என்னுடைய சக்கரத்தின் மூலம் தான் தைத்தியர்கள் கொல்லப்பட்டனர். என் பாதங்கள் இரண்டினால் இவ்வுலகம் மறைக்கப்பட்டது.(10) பன்றியின் வடிவத்தை ஏற்றே நான் ஹிரண்யாக்ஷனைக் கொன்றேன். குள்ளனின் வடிவை ஏற்றே நான் (அசுர) மன்னன் பலியை வென்றேன்.(11) இவற்றை வழிபடும் உயர் ஆன்ம மனிதர்கள் என்னை நிறைவடையச் செய்கின்றனர். உண்மையில், என்னை இவ்வடிவங்களில் வழிபடுபவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை.(12) ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும் ஒரு பிராமணர் தன் வீட்டுக்கு வருவதைக் கண்டு, பிராமணனுக்கு உரிமையுள்ள தன் உணவின் முதல் பகுதியை அவனுக்குக் கொடுத்து, அதன் பிறகு எஞ்சியிருப்பதை உண்பவர் அமுதத்தை உண்டதாகக் கருதப்படுகிறான்.(13) காலை சந்தி வேளையைத் துதித்து, சூரியனை நோக்கிய முகத்துடன் நின்று கொண்டிருப்பவன், தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனை அறுவடை செய்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(14) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, ஒரு பெரும்புதிரை நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். நான் உங்களுக்கு வேறென்ன சொல்ல வேண்டும்? உங்கள் ஐயங்களை எனக்குச் சொல்வீராக" என்றான் {விஷ்ணு}.(15)

பலதேவன், "மனிதர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் மற்றொரு பெரும்புதிரைக் கேட்பாயாக. இதை அறியாத அறிவற்ற மக்களே பிற உயிரினங்களின் கரங்களில் பெருந்துன்பத்தைச் சந்திக்கிறார்கள்.(16) விடிவதற்கு முன்பு எழுந்து, பசு, நெய், தயிர், கடுகு, தினை ஆகியவற்றைத் தீண்டும் மனிதன், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள், சிராத்தம் செய்யும்போது, முன்பும் பின்பும் அனைத்து உயிரினங்களையும், தூய்மையற்ற அனைத்தையும் எப்போதும் தவிர்க்கிறார்கள்" என்றான்[2].(18)

[2] "இரண்டாம் வரி புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தவத்தைத் தனமாகவுடையவர்கள் அசுத்தத்தையும், அவற்றின் வழியாக வரும் முன்னும் பின்னுமுள்ள எல்லாப் பூதங்களையும் விலக்கி விடுகின்றனர்" என்றிருக்கிறது.

தேவர்கள், "ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்து, அதை நீரால் நிறைத்து, கிழக்கு நோக்கி உண்ணா நோன்பையோ, ஒரு குறிப்பிட்ட நோன்பையோ நோற்கும் மனிதனிடம்,(19) தேவர்கள் அனைவரும் நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் வெற்றியால் மகுடம் சூட்ட வைக்கின்றனர். வேறு வழியில் உண்ணா நோன்பையோ, வேறு எந்த நோன்பையோ நோற்கும் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் எதையும் ஈட்டுவதில்லை[3].(20) உண்ணா நோன்புகள் நோற்பது குறித்தும், தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதும் குறித்தும் தீர்மானங்களைச் சொல்லும்போது தாமிரப்பாத்திரமே பயன்படுத்த உகந்ததாகும். தேவர்களுக்குக் காணிக்கை அளிக்கும் காரியத்தில், பிச்சை (இடும் அல்லது ஏற்கும்) காரியத்தில், அர்க்கியத்திற்குத் தேவையான உட்பொருட்களை அளிப்பதில், பித்ருக்களுக்கு எள்ளுடன் கலந்த நீரைக் காணிக்கையளிக்கும் காரியத்தில்,(21) தாமிரப்பாத்திரங்களே பயன்படுத்தப்பட வேண்டும்[4]. வேறு வகையில் இச்செயல்களைச் செய்வதன் மூலம் சிறிதளவே பலன் கிட்டும். தேவர்கள் எவ்வாறு நிறைவடைகிறார்கள் என்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிர்கள் இவையே" என்றனர் {தேவர்கள்}.(22)

[3] கும்பகோணம் பதிப்பில், "ஜலம் நிரம்பின அத்திமரப் பாத்திரத்தையெடுத்துக் கொண்டு வடக்கு முகமாகவிருந்து ஸங்கல்பத்துடன் எந்த உபவாஸம் ஆரம்பித்தாலும் அவனிடத்தில் தேவதைகள் திருப்தியடைவார்; நினைத்த பலன் கைகூடும். அலப் புத்தியுள்ள மனிதர்கள் தான் வேறு கர்மங்களை வீணாகச் செய்கின்றனர்" என்றிருக்கிறது.

[4] கும்பகோணம் பதிப்பில், "உபவாஸத்திற்கும், பலி கொடுப்பதற்கும் தாம்ரபாத்திரம் சிறந்தது. பலியையும், பிக்ஷையையும், அர்க்கியத்தையும், பித்ருக்களுக்கு எள்ளையுந் தண்ணீரையும் தாம்ர பாத்திரத்தினால் கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறது.

தர்மன், "மன்னனிடம் பணி செய்பவனாகவோ, {காலத்தைத் தெரிவிக்கும்} மணி அடிப்பவனாகவோ, வழிபாடுகள், அல்லது சிராத்தங்களில் உடனுதவி கடமைகளைக் கவனிப்பவனாகவோ {பரிசாரகனாகவோ}, பசு வளர்ப்பவனாகவோ {ஆ மேய்ப்பவனாகவோ}, வணிகம் செய்பவனாகவோ {வர்த்தகனாகவோ}, ஏதோ ஒரு கலையைத் தொழிலாகச் செய்பவனாகவோ, நடிகனாகவோ, நண்பர்களுடன் சச்சரவு செய்பவனாகவோ, வேத கல்வி இல்லாதவனாகவோ, ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்டவனாகவோ இருக்கும் பிராமணனுக்குத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ செய்யப்படும் சடங்குகள் அனைத்திலும் அளிக்கப்படும் காணிக்கைகளை ஒரு போதும் கொடுக்கக்கூடாது.(23,24) சிராத்தம் செய்பவன் அத்தகைய காணிக்கைகளை இத்தகைய பிராமணனுக்கு அளித்தால் அவன் தன் குலத்தைப் பெருகச் செய்யாமல் செழிப்பில் இருந்து வீழ்ச்சியடைகிறான். மேலும் அவன் செய்யும் அத்தகைய செயலால் பித்ருக்களை நிறைவடையச் செய்வதிலும் தவறுகிறான்.(25) எந்த வீட்டில் இருந்து ஒரு விருந்தினன் நிறைவடையாமல் திரும்புகிறானோ, அந்த வீட்டில் இருந்து பித்ருக்கள், தேவர்கள், புனித நெருப்புகள் ஆகியோர் அனைவரும் ஒரு விருந்தினர் இவ்வாறு நடத்தப்பட்டதன் விளைவால் ஏமாற்றம் அடைந்து வெளியேறுகின்றனர்.(26) தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினரிடம் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தாத மனிதன், பெண்களையும், பசுக்களையும் கொன்றவர்கள், நன்மை செய்தவர்களிடம் நன்றி மறந்தவர்கள், பிராமணக் கொலை செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கைகளைக் களங்கப்படுத்தியவர்கள் ஆகியோருக்கு இணையான பாவம் நிறைந்தவனாகக் கருதப்படுகிறான்" என்றான்.(27)

அக்னி, "குவிந்த கவனத்துடன் கேளுங்கள். பசுவையோ, உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ மிதிப்பதற்காகக் காலை உயர்த்தும் தீய புத்தி கொண்ட மனிதன் அடையும் கெடுபலன்களைச் சொல்லப் போகிறேன். அத்தகைய மனிதனின் புகழ்க்கேடு உலகம் முழுவதும் பரவி, சொர்க்கத்தின் எல்லைகளையே தொடுகிறது. அவனுடைய பித்ருக்கள் அச்சத்தால் நிறைகிறார்கள். அவன் காரியத்தில் தேவர்களும் பெரிதும் நிறைவற்றவர்களாகிறார்கள். பெரும் சக்தியுடன் கூடிய நெருப்பு, அவனால் ஊற்றப்படும் ஆகுதிகளை ஏற்க மறுக்கும்.(28-30) நூறு பிறவிகள் அவன் நரகில் கிடந்து அழுகுவான். அவன் ஒருபோதும் எக்காலத்திலும் மீட்கப்படுவதில்லை.(31) எனவே, தன் நன்மையை விரும்பி நம்பிக்கையோடு இருக்கும் ஒருவன், ஒரு பசுவையோ, உயர்ந்த சக்தியுடன் கூடிய பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ தன் காலால் ஒருபோதும் தீண்டக்கூடாது. இவையே இவை மூன்றுக்கு எதிராகக் கால்களை உயர்த்துபவன் அடையும் கெடுபலன்களென நான் அறிவிக்கிறேன்" என்றான்.(32,33)

விஷ்வாமித்திரர், "அறம் தொடர்பாகப் பொதுவாக மனிதர்களுக்கு மத்தியில் அறியப்படாத உயர்ந்த புதிரைக் கேட்பீராக. இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை {பாயஸான்னத்தைப்} பித்ருக்களுக்குக் கொடுப்பதற்கு,(34) பாத்ரபத {புரட்டாசி} மாத {கிருஷ்ண பக்ஷ / தேய்பிறை} மக நட்சத்திரத்தின், நடுப்பகலில் தெற்குத் திசை நோக்கி ஒரு யானையினால் உடலால் உண்டான நிழலில் {கஜசாயையில்} அமர்ந்து காணிக்கையளிப்பவன்,(35) பெரும் பலன்கள் அடைகிறான். அந்தப் பலன்கள் என்னென்ன என்பதைக் கேட்பீராக[5]. இத்தகைய சூழ்நிலைகளில் பித்ருக்களுக்கு இத்தகைய காணிக்கையளிக்கும் மனிதன், அடுத்தடுத்து பதிமூன்று வருடங்களில் ஒவ்வொரு வருடமும் பெரும் சிராத்தத்தைச் செய்தவனாகக் கருதப்படுவான்" என்றார்.(36)

[5] "யானையின் உடலால உண்டான நிழல் என்பது, சிராத்தத்திற்கான மிகச் சிறந்த நேரத்தைக் குறிப்பதாகும். அத்தகைய சிராத்தத்தைச் செய்யும் மனிதன் பதிமூன்று வருடங்கள் சிராத்தம் செய்த பலன்களை அடைகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் கஜ சாயை என்பதன் அடிக்குறிப்பில், "மஹளய பக்ஷத்தில் மகநக்ஷத்ரத்துடன் கூடிய த்ரயோதசியும், அதே பக்ஷத்தில் ஹஸ்த நக்ஷத்திரம் சேர்ந்த அமாவாஸையும், சந்திரசூர்யக்ரஹண புண்ய காலமும், அமாவாஸை அபரான்ன காலத்தில் நிழல் கிழக்கே திரும்பியிருக்கும் காலமும், அமாவாஸையில் தன்னிழல் இரண்டு மடங்கு கிழக்கே திரும்பியிருக்கும் காலமும் கஜசாயை என்பர்" என்றிருக்கிறது.

பசுக்கள், "எந்த மனிதன், "ஓ! வாகுலையே {அனைத்தும் நிறைந்தவளே}, ஓ! சமங்கையே {பருத்த அங்கங்களைக் கொண்டவளே}, ஓ! எங்கும் அச்சமற்றவளே, ஓ! எப்போதும் பொறுமையாகவும், மங்கலம் நிரம்பியும் இருப்பவளே {நலமாயிருப்பவளே}, ஓ! நட்பே, ஓ! எண் போல் பெருகுபவளே, பழங்காலத்தில் பிரம்ம லோகத்தில் வஜ்ரதாரியான இந்திரனின் வேள்வியில் கன்றுடன் இருந்தவள் நீயே. ஆகாயத்திலும், அக்னியின் பாதையிலும் உன் நிலையைக் கொண்டவள் நீயே. தேவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள நாரதருடன் சேர்ந்து சர்வம்ஸஹை {ஸர்வஸஹை / அனைத்தையும் பொறுப்பவள்} என்று உன்னை அழைத்துத் துதிக்கின்றனர்" என்ற இந்த மந்திரங்களைச் சொல்லி ஒரு பசுவைத் துதிப்பானோ, அவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய மனிதன், புரந்தரனின் உலகை அடைகிறான். அதையும் தவிர அவன், பசுக்கள் மற்றும் சந்திரமாஸுடன் {சந்திரனுடன்} தொடர்புடைய பலன்களையும் அடைகிறான்.(37-39) அத்தகைய மனிதன், தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும், தான் கொண்ட ஒவ்வொரு அச்சத்தில் இருந்தும், ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் விடுபடுகிறான். இறுதியாக அவன் ஆயிரங்கண் இந்திரனின் மகிழ்ச்சி மிக்க உலகத்தில் வசிப்பிடத்தை அடைகிறான்" என்றன".(40)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதன்பிறகு உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான ஏழு முனிவர்கள், வசிஷ்டரைத் தங்கள் தலைமையில் கொண்டு எழுந்து தாமரையில் பிறந்த பிரம்மனை வலம்வந்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி அவனைச் சூழ்ந்து நின்றனர்.(41) பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் அவர்களுடைய பேச்சாளராகி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் நன்மையைத் தருவதும், குறிப்பாகப் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் நன்மையைத் தருவதுமான இந்தக் கேள்வியைக் கேட்டனர்.(42)

{வசிஷ்டரின் தலைமையிலான சப்தரிஷிகள்}, "அறவொழுக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், இவ்வுலக நன்மைகள் இல்லாதவர்களான மனிதர்கள் எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் வேள்விகள் தொடர்பான பலன்களை அடைவதில் வெல்கிறார்கள்?" என்று கேட்டனர்.(43) அவர்களது இந்தக் கேள்வியைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன் பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.(44)

பிரம்மன், "உயர்வாக அருளப்பட்டவர்களே, இது சிறப்பான கேள்வியாகும். இது மங்கலமானதும், உயர்ந்ததும், புதிர் நிறைந்ததுமாகும். நீங்கள் முன்வைக்கும் கேள்வியானது நுட்பமானதும், மனித குலத்திற்குப் பெரும் நன்மை நிறைந்ததும் ஆகும்.(45) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நான் அனைத்தையும் விரிவாக உங்களுக்குச் சொல்கிறேன். (வறுமையின் மூலம் வேள்விகளைச் செய்ய இயலாதவர்களாக இருப்பினும்) வேள்விகளுக்கான பலன்களை மனிதர்கள் எவ்வாறு அடைகிறார்கள் என்பதைச் சொல்கிறேன் கவனமாகக் கேட்பீராக.(46) பௌச {தை} மாதத்தின் வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வானத்தையே கூரையாகக் கொண்டு {மேலே மூடாத இடத்தில்}, ஒற்றையாடை உடுத்தி,(47) நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும், நிலவின் கதிர்களைப் பருகும் {நிலவின் ஒளியில் படுத்து உறங்கும்} ஒருவன், பெரும் வேள்விகள் செய்த பலன்களை அடைகிறான்.(48) மறுபிறப்பாளர்களில் முதன்மையாவர்களே, அனைத்துக் காரியங்களின் நுட்பமான உண்மைகளில் உட்பார்வை கொண்டவர்களே, உங்கள் கேள்விக்கான பதிலாக நான் பெரும்புதிரை {பெரும் ரகசியத்தை} அறிவித்திருக்கிறேன்" என்றான் {பிரம்மன்}.(49)

அநுசாஸனபர்வம் பகுதி – 126ல் உள்ள சுலோகங்கள் : 49

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்