Saturday, January 04, 2020

அடையாளங்காட்டிய சஞ்சயன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 25

Pointed out by Sanjaya! | Asramavasika-Parva-Section-25 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 25)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் முதலியோரைக் காட்டி அவர்களுடைய பெயர்களையும் சொல்லி அவர்களைத் தவசிகளுக்கு அறிமுகம் செய்த சஞ்சயன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான தன் தம்பிகள் அனைவருடன் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்} தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்தில் அமர்ந்தான்.(1) அங்கே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களுமான தவசிகள் பலர் பரந்த மார்பைக் கொண்டவர்களும், குருகுலத் தலைவர்களுமான பாண்டவர்களைக் காணும் விருப்பத்தில் அவனைச் சுற்றி அமர்ந்தனர்.(2)


அவர்கள், "இவர்களில் யுதிஷ்டிரன் யார்? பீமனும், அர்ஜுனனும் யார் யார்? இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} யார்? பெரும்புகழைக் கொண்ட திரௌபதி யார்?" என்று கேட்டனர்.(3)

அப்போது சூதன் சஞ்சயன், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலாகப் பாண்டவர்கள், திரௌபதி, குரு குடும்பத்துப் பெண்கள் பிறர் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.(4)

சஞ்சயன், "பசும்பொன்னைப் போன்ற நல்ல நிறம் கொண்டவனும், முழுதும் வளர்ந்த ஒரு சிங்கத்தைப் போலத் தெரியும் உடலைக் கொண்டவனும், மீன் போன்ற நீண்ட மூக்கைக் கொண்டவனும், அகலமான பெரிய தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான இவனே குரு மன்னனாவான் {யுதிஷ்டிரனாவான்}.(5) மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடை கொண்டவனும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறம் கொண்டவனும், அகன்ற பெரிய உடல்வடிவம் கொண்டவனும், நீண்டு பருத்திருக்கும் கைகளைக் கொண்டவனுமான இவன் விருகோதரனாவான் {பீமனாவான்}. இவனை நன்றாகப் பாருங்கள்.(6) இவனுக்கு அருகில் அமர்ந்திருப்பவனும், கரிய நிறம் மற்றும் இளமை வடிவத்துடன் கூடியவனும், யானை மந்தையின் தலைவனுக்கு ஒப்பானவனும், சிங்கத்தைப் போன்ற உயர்ந்த தோள்களுடையவனும், விளையாடிக் கொண்டிருக்கும் யானையைப் போல நடப்பவனும், தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான இவன் அர்ஜுனன் என்று அழைக்கப்படும் வீரனாவான்.(7) குந்தியின் அருகில் அமர்ந்திருக்கும் முதன்மையான மனிதர்களான இவர்கள் இருவரும் விஷ்ணுவுக்கும், மஹேந்திரனுக்கும் ஒப்பான இரட்டையர்களாவர்.(8)

கருங்குவளை_மலர் நீலோத்பலம்Monochoria Vaginalis_
தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவளும், வாழ்வின் நடு வயதை நெருங்கியவளாகத் தெரிபவளும், நீலோத்பலத்துக்கு {கருங்குவளை மலருக்கு} ஒப்பான நிறம் கொண்டவளும், சொர்க்கத்தின் தேவியைப் போலத் தெரிபவளுமான இந்தப் பெண்மணி, செழிப்பின் தேவியுடைய {லக்ஷ்மியின்} உடல்வடிவமாகத் திகழும் கிருஷ்ணை {திரௌபதி} ஆவாள்.(9) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவளுக்கு அருகில் அமர்ந்திருப்பவளும், பசும்பொன் நிறத்தவளும், வேறு பெண்களுக்கு மத்தியில் சந்திரக் கதிர்களின் உடல்வடிவமாகத் தெரிபவளுமான இவள் ஒப்பற்ற வீரனான சக்கரபாணியின் {கிருஷ்ணனின்} தங்கையாவாள் {சுபத்திரையாவாள்}.(10) பசும்பொன் நிறத்தில் இருக்கும் மற்றொருத்தி, பாம்புத் தலைவனின் மகளும், அர்ஜுனனின் மனைவியுமாவாள் {உலூபியாவாள்}. பசும்பொன், அல்லது மதுக {இலுப்பை} மலர்களின் நிறத்தைக் கொண்டிருக்கும் இவள்[1] இளவரசி சித்ராங்கதையாவாள்.(11)

நீலோத்பல மலர்க்கூட்டத்தின் நிறத்தைக் கொண்ட இவள், கிருஷ்ணனை எப்போதும் அறைகூவி அழைக்கும் வழக்கத்தைக் கொண்டவனும், படைத்தலைவனுமான ஏகாதிபதியின் {சல்லியன் / திருஷ்டத்யும்னன் / சிசுபாலனின்} தங்கையாவாள். இவள் விருகோதரனின் {பீமனின்} முதன்மையான மனைவியாவாள்[2].(12)

[1] கும்பகோணம் பதிப்பில், "இவளுக்குப் பக்கத்தில் நிற்பவளும், ஸுவர்ணத்திற்கொப்பான மேனியுள்ளவளும், வடிவத்துடன் கூடின பார்வதி போன்றவளும், ஸத்யம் தவறாதவளுமான இவள், சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவரும், ஒப்பற்றவருமான வாசுதேவருடைய ஸஹோதரி. ஸுவர்ணம் போலச் சுத்தமான மஞ்சள் நிறமுள்ளவளான இவள் நாகராஜனுடைய புத்திரியும், அர்ஜுனனுடைய மனைவியுமான உலூபிகை. புதிய இலுப்பைப் புஷ்பங்களுக்கொப்பான நிறமுள்ள இவள் ராஜகுமாரியான சித்ராங்கதை” என்றிருக்கிறது. புதிய இலுப்பை புஷ்பம் என்பதன் அடிக்குறிப்பில், "'ஸமமான ஜாதியில் பிறந்தவளும், புதிய இலுப்பைப் புஷ்பங்களை அணிந்தவளும்' என்பது பழைய உரை" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "செழுமையான நீலோத்பல மாலைக்கொப்பான நிறமுள்ள இவள் மன்னர்களுடைய படைகளுக்குத் தலைவனும், எப்பொழுதும் அர்ஜுனடனுக்கு மேற்போக முயல்பவனும், அரசனுமான திருதஷ்டத்யும்னனுடைய தங்க; பீமசேனனுடைய முக்ய மனைவி" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், ""பஸ்பர்த்த க்ருஷ்ணேந ஸதா ந்ருபோ ய:" என்பது மூலம். 'கிருஷ்ணனோடு எப்போதும் ஸ்பர்த்தையுள்ள சல்யன்' என்று நீலகண்ட வ்யாக்யானம் கூறுகிறது. 'கிருஷ்ணேந' என்பறத்கு 'அர்ஜுனனோடு' என்று பொருள் கொண்டு, 'அர்ஜுனனோடு எப்போதும் ஸ்பர்த்தையுள்ள திருஷ்டத்யும்னன்' என்று லக்ஷாபரண வ்யாக்யானம் கூறுகிறது. இங்கே லக்ஷாபரண வ்யாக்யானத்தின் கருத்தே கொள்ளப்பட்டது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு படைக்குத் தலைவனாக ஒரு செழிப்புமிக்க மன்னன் இருந்தான். அந்த மன்னன் எப்போதும் கிருஷ்ணனை அறைகூவி அழைத்துக் கொண்டிருப்பான். நீலோத்பலம் போன்ற நிறம் கொண்ட இவள் அவனுடைய சகோதரியாவாள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கிருஷ்ணனை அறைகூவியழைக்கும் மன்னன் சிசுபாலனாவான். பீமன் சிசுபாலனின் தங்கையை மணந்தான் என்று சொல்லும் மிக அரிதான இடம் இஃது. ஒருவன் திரௌபதியை {முக்ய மனைவியாகப்} புறக்கணித்தாலும் இவள் நிச்சயம் பீமனின் முக்கிய மனைவியல்ல" என்றிருக்கிறது. சிசுபாலனின் மகளான கரேணுமதியை நகுலன் மணந்திருக்கிறான் என்பதைக் கருத்தில் கொண்டால், பீமன் சிசுபாலனின் தங்கையை மணந்திருக்க மாட்டான் என்று ஊகிக்கலாம். இவள், அர்ஜுனனைப் பகைப்பதற்காகவே யாகத்தீயில் பெறப்பட்டவனான திருஷ்டத்யும்னனின் மகளாகவோ, கிருஷ்ணனை எப்போதும் பகைத்தவனான சல்லியனின் மகளாகவோ இருக்க வேண்டும்.

சம்பக மலர்க்கூட்டத்தின் {சம்பக மலர்மாலையின் மஞ்சள்} நிறத்தைக் கொண்ட இவள் ஜராசந்தன் என்ற பெயரில் அறியப்பட்ட மகதமன்னனின் மகளாவாள். இவள் மத்ராவதியின் இளைய மகனுடைய {சகாதேவனின்} மனைவியாவாள்.(13)

நீலோத்பல மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவளும், இதோ பூமியில் அமர்ந்திருப்பவளும், தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட வழிகளைக் கொண்டவளுமான இவள் மத்ராவதியின் மூத்த மகனுடைய {நகுலனின்} மனைவியாவாள் {சிசுபாலனின் மகள் கரேணுமதியாவாள்}.(14) புடம்போட்ட தங்கத்தைப்போன்ற நல்ல நிறம் கொண்டவளும், மடியில் பிள்ளையுடன் அமர்ந்திருப்பவளுமான இந்தப் பெண்மணி மன்னன் விராடனின் மகளாவாள் {உத்தரையாவாள்}. இவள், தேரற்றவனாக இருந்தபோது தேரில் இருந்து போரிட்ட போர்வீரர்களாலும் துரோணராலும் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவியாவாள்[3].(15)

[3] "தேரில் இருக்கும்ஒருவன் பூமியில் நிற்பவனை ஒருபோதும் தாக்கக்கூடாது என்பதால் இது நியாயமற்ற போரின் தன்மையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வகிடற்ற தலைமுடி கொண்டவர்களும், வெள்ளுடை உடுத்தியவர்களுமான இவர்கள் கொல்லப்பட்ட திருதராஷ்டிர மகன்களின் {மனைவிகளான} விதவைகளாவர். இந்த முதிய மன்னனின் மருமகள்களும், இவருடைய நூறு மகன்களின் மனைவிமாருமான இவர்கள், தற்போது வீரப் பகைவர்களால் கொல்லப்பட்ட கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்தவர்களாக இருக்கிறார்கள்.(16) நான் இவர்களை முன்னுரிமை வரிசையின்படி சுட்டிக்காட்டினேன். பிராமணர்களிடம் இவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் விளைவால், இவர்களது புத்தியும், இதயமும் அனைத்து வகைக் கபடங்களும் அற்றவையாக இருக்கின்றன. தூய ஆன்மாவைக் கொண்ட இந்தக் கௌரவக் குடும்பத்து இளவரசிகள் அனைவரும் உங்கள் கேள்விக்கான பதிலாக என்னால் சுட்டிக்காட்டப்பட்டனர்" என்றான் {சஞ்சயன்}".(17)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறே குரு குலத்தைச் சேர்ந்தவனும், வயதால் முதிர்ந்தவனுமான அந்த மன்னன், மனிதர்களில் தேவர்களான தன் மகன்களைச் சந்தித்து, தவசிகள் அனைவரும் சென்ற பிறகு அவர்களுடைய நலத்தை விசாரித்தான்.(18) பாண்டவர்களுடன் வந்த போர்வீரர்கள், அந்த ஆசிரமத்தை விட்டகன்று, தங்கள் தேர்களில் இருந்தும், தாங்கள் செலுத்திய விலங்குகளில் இருந்தும் இறங்கி சற்றுத் தொலைவில் அமர்ந்தனர். உண்மையில், பெண்கள், முதியவர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட அந்தக் கூட்டமனைத்தும் அமர்ந்த பிறகு, அவர்களிடம் பேசிய முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, வழக்கமான மென் விசாரிப்புகளைச் செய்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(19)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்