Showing posts with label ஆஸ்ரமவாஸ பர்வம். Show all posts
Showing posts with label ஆஸ்ரமவாஸ பர்வம். Show all posts

Sunday, January 05, 2020

வியாசரின் உறுதிமொழி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28

The promise of Vyasa! | Asramavasika-Parva-Section-28 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 28)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் நலம் விசாரித்த வியாசர்; விதுரனின் உண்மை வடிவம் முதலியவற்றைக் கூறியது; மற்ற முனிவர்களால் செய்ய முடியாத திருதராஷ்டிரனுடைய விருப்பத்தைச் செய்வதாக உறுதிமொழி அளித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்ததும், சத்தியவதியின் மைந்தனான வியாசர்,(1) "ஓ! வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, உன்னால் தவங்கள் செய்ய முடிந்ததா? ஓ! மன்னா, காட்டில் வசிப்பதில் உன் மனம் நிறைவடைகிறதா?(2) போரில் உன் மகன்கள் கொல்லப்பட்டதில் பிறந்த உன் துயரம் உன் இதயத்தில் இருந்து மறைந்ததா? ஓ! பாவமற்றவனே, உன் கருத்துகள் அனைத்தும் இப்போது தெளிவடைந்துள்ளனவா?(3) உன் இதயத்தை உறுதியாகச் செய்து கொண்டு காட்டு வாழ்வுக்கான விதிமுறைகளை நீ பின்பற்றுகிறாயா? என் மருமகளான காந்தாரி, துயரில் மூழ்கத் தன்னை அனுமதித்துக் கொள்கிறாளா?(4) அவள் பெரும் ஞானம் கொண்டவளாவாள். புத்தியுள்ள அந்த ராணி {காந்தாரி}, அறம், பொருள் ஆகிய இரண்டையும் புரிந்து கொண்டவளாவாள். செழிப்பு மற்றும் வறுமை ஆகிய இரண்டுக்கும் தொடர்புடைய உண்மைகளை அவள் நன்கறிந்தவளாவாள். அவள் இன்னும் வருந்துகிறாளா?(5)

வியாசரின் வருகை! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 27

The arrival of Vyasa! | Asramavasika-Parva-Section-27 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 27)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெரும் முனிவர்களின் ஆசிரமங்களைப் பார்த்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரன் இருந்த ஆசிரமத்திற்கு வந்த சதயூபனும், வியாசரும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, அறம்சார்ந்தவர்களான அந்தத்தவசிகளின் ஆசிரமத்தில், மங்கல நட்சத்திரக்கூட்டத்தின் சிறப்பியல்பைக் கொண்ட அந்த இரவை இவ்வாறே அவர்கள் கழித்தனர்.(1) அப்போது அங்கே நிகழ்ந்த உரையாடல் அறநெறி மற்றும் செல்வம் குறித்த பல சிந்தனைகளைக் கொண்டதாக இருந்தது. ஸ்ருதிகளில் இருந்து பல்வேறு குறிப்புகளையும், இனிமை நிறைந்த சொற்களையும் கொண்டதாக அஃது இருந்தது.(2) ஓ! மன்னா, பாண்டவர்கள் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளைவிட்டு, வெறும் தரையில் தங்கள் தாயின் அருகில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(3)

Saturday, January 04, 2020

விதுரப்பிரவேசம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 26

Enter Vidura! | Asramavasika-Parva-Section-26 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 26)


பதிவின் சுருக்கம் : ஒருவரையொருவர் நலம் விசாரித்த திருதராஷ்டிரனும், யுதிஷ்டிரனும்; கூட்டத்தைக் கண்டு விதுரன் விலகிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரன்; விரைந்து சென்ற யுதிஷ்டிரனுக்குள் யோகத்தால் பிரவேசித்த விதுரன்; இந்த அதிசயத்தைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன யுதிஷ்டிரன்...


திருதராஷ்டிரன், "ஓ! யுதிஷ்டிரா, நீ உன் தம்பிகளுடனும், நகர மற்றும் மாகாணவாசிகளுடனும் அமைதியாகவும், இன்பமாகவும் இருக்கிறாயா?(1) உன்னைச் சார்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? உன் அமைச்சர்கள், பணியாட்கள், பெரியோர், ஆசான்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?(2) உன் ஆட்சிப்பகுதிகளில் வாழ்வோர் அச்சமின்றி இருக்கிறார்களா? மனிதர்களின் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பழைமையானதும், மரபுசார்ந்ததுமான ஒழுக்கத்தை நீ பின்பற்றுகிறாயா?(3) நீதி மற்றும் நேர்மையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் நீ உன் கருவூலத்தை நிரப்புகிறாயா? பகைவர்கள், நடுநிலையாளர்கள், கூட்டாளிகள் ஆகியோரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறாயா?(4)

அடையாளங்காட்டிய சஞ்சயன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 25

Pointed out by Sanjaya! | Asramavasika-Parva-Section-25 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 25)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் முதலியோரைக் காட்டி அவர்களுடைய பெயர்களையும் சொல்லி அவர்களைத் தவசிகளுக்கு அறிமுகம் செய்த சஞ்சயன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான தன் தம்பிகள் அனைவருடன் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்} தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்தில் அமர்ந்தான்.(1) அங்கே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களுமான தவசிகள் பலர் பரந்த மார்பைக் கொண்டவர்களும், குருகுலத் தலைவர்களுமான பாண்டவர்களைக் காணும் விருப்பத்தில் அவனைச் சுற்றி அமர்ந்தனர்.(2)

அன்னையைக் கண்ட சகாதேவன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 24

Sahadeva beheld his mother! | Asramavasika-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : சதயூபாஸ்ரமத்தை அடைந்த பாண்டவர்கள்; அங்கே திருதராஷ்டிரனைக் காணாமை; யமுனைக்குச் சென்றிருந்த அவர்களைக் கண்ட பாண்டவர்கள்; தாயைக் கண்டு அழுத சகாதேவன்; ஆசிரமம் திரும்பிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தொலைவிலேயே தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய பாண்டவர்கள், மன்னனின் ஆசிரமத்திற்குப் பணிவுடன் கால்நடையாக நடந்து சென்றார்கள்.(1) போராளிகள் அனைவரும், நாட்டின் குடிமக்கள் மற்றும் குரு தலைவர்களின் மனைவிமார் அனைவரும், கால்நடையாகவே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(2) பிறகு பாண்டவர்கள், மான்கூட்டங்கள் நிறைந்ததும், வாழைமரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான திருதராஷ்டிரனின் புனித ஆசிரமத்தை அடைந்தனர்.(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் பலர், ஆவலால் நிறைந்தவர்களாக, அந்த ஆசிரமத்திற்கு வந்திருக்கும் பாண்டவர்களைக் காண அங்கே வந்தனர்.(4)

யுயுத்சுவின் பாதுகாப்பில் ஹஸ்தினாபுரம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 23

Hastinapur protected by Yuyutsu! | Asramavasika-Parva-Section-23 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 23)


பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தைப் பாதுகாக்க யுயுத்சுவும், தௌமியரும்; திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றும் விதுரனைக் காணப் புறப்பட்ட பாண்டவக்கூட்டம் சென்ற வகை; காட்டுக்குள் நுழைந்து சதயூபனின் ஆசிரமத்தைத் தொலைவிலேயே அவர்கள் கண்டது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனன் தலைமையிலானவர்களும், அண்டத்தைக் காப்பவர்களுக்கு {லோகபாலர்களுக்கு} ஒப்பானவர்களுமான வீரர்களால் பாதுகாக்கப்பட்டவையுமான தன் துருப்புகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான்.(1) உடனடியாக, குதிரைகளை ஆயத்தம் செய்து அணிவகுக்கச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குதிரை வீரர்களுக்கு மத்தியில், "ஆயத்தமாவீர், ஆயத்தமாவீர்" என்ற சொற்கள் அடங்கிய பேராரவாரம் எழுந்தது.(2) சிலர் பல்லக்குகளிலும் {யானங்களிலும்}, சிலர் வாகனங்களிலும், சிலர் பெருவேகம் கொண்ட குதிரைகளிலும், சிலர் சுடர்மிக்க நெருப்பின் காந்தியுடன் கூடியவையும் தங்கத்தாலமைந்தவையுமான தேர்களிலும் சென்றனர்.(3) சிலர் பெரும் யானைகளிலும், ஓ! மன்னா, சிலர் ஒட்டகங்களிலும் சென்றனர். சிலர் புலிநகங்களோடு கூடிய போராளி வகையினுக்குரிய முறையில் கால்நடையாகவே சென்றனர்[1].(4)

சகாதேவன் புலம்பல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22

The lamentation of Sahadeva! | Asramavasika-Parva-Section-22 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 22)


பதிவின் சுருக்கம் : குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீரப் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)

Friday, January 03, 2020

பாண்டவர்கள் துயரம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 21

Despair of Pandavas! | Asramavasika-Parva-Section-21 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 21)


பதிவின் சுருக்கம் : குந்தியின் பிரிவினாலும், அபிமன்யுவின் மரணத்தினால் உண்டான துக்கத்தினாலும் பாண்டவர்கள் தங்கள் வேலைகளை நன்கு பாராமலிருந்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்} காட்டுக்குள் ஓய்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் தங்கள் தாயின் {குந்தியின்} நிமித்தம் துன்பத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் உற்சாகமற்றவர்களானார்கள்.(1) ஹஸ்தினாபுரக் குடிமக்களும் ஆழ்ந்த கவலையில் இருந்தனர். பிராமணர்கள் எப்போதும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} குறித்துப் பேசினர்.(2)

குபேரலோகம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 20

The region of Kuvera! | Asramavasika-Parva-Section-20 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 20)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனைக் காண வந்த நாரதர்; அந்த வனம் ராஜரிஷிகளுக்கு ஸ்வர்க்கம் தந்ததையும், அவர்களுக்கும் அது ஸித்தியைத் தரும் என்பதையும், திருதராஷ்டிரன் அடையப்போகும் கதியையும் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தவசிகளில் முதன்மையான நாரதர், பர்வதர் மற்றும் கடுந்தவங்களைக் கொண்ட தேவலர் ஆகியோர் மன்னன் திருதராஷ்டிரனைக் காண அங்கே வந்தனர்.(1) சீடர்களுடன் கூடியவரும், தீவில் பிறந்தவருமான வியாசரும், பெரும் ஞானம் கொண்டவர்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான பிறரும், முதிர்ந்த வயதையும், பெரும் புண்ணியங்களையும் கொண்ட அரச முனி சதயூபனும் அங்கே வந்தனர்.(2) ஓ! மன்னா, குந்தி அவர்களை உரிய சடங்குகளுடன் வழிபட்டாள். அந்தத் தவசிகள் அனைவரும் தங்களுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டில் பெரும் நிறைவை அடைந்தனர்.(3) அந்தப் பெரும் முனிவர்கள், உயர் ஆன்மா கொண்ட திருதராஷ்டிரனிடம் அறம் மற்றும் நீதி குறித்து உரையாடி அவனை மகிழ்வித்தனர்.(4) அவர்களுடைய உரையாடலின் முடிவில் தெய்வீக முனிவரான நாரதர், அனைத்துப் பொருட்களையும் நேரடியாகக் கண்களில் கண்டு, பின்வரும் சொற்களைச் சொன்னார்.(5)

Thursday, January 02, 2020

சதயூபாஸ்ரமம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 19

The retreat of Satayupa! | Asramavasika-Parva-Section-19 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 20)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனும், விதுரனும் குருக்ஷேத்திரம் சென்று சதயூபனுடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றது; வியாசரின் முன்னிலையில் வானப்ரஸ்தாஸ்மரத்திற்கு தீக்ஷை பெற்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரனின் ஆலோசனையைப் பின்பற்றி மன்னன் {திருதராஷ்டிரன்}, புனிதமானதும், அறவோருக்காக ஒதுக்கப்பட்டதுமான பாகீரதியின் கரைகளில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(1) அங்கே காடுகளில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் பலரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைக் காண அங்கே வந்தனர்.(2) அவன் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, தன் சொற்களின் மூலம் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான். சீடர்களுடன் கூடிய பிராமணர்களை முறையாக வழிபட்ட அவன், பிறகு அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினான்.(3)

குந்தியைத் தடுத்த திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18

Dhritarashtra dissuades Kunti! | Asramavasika-Parva-Section-18 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 18)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)

குந்தியின் சமாதானம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17

Consolation of Kunti! | Asramavasika-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்குச் சமாதானம் கூறிய குந்தி...


குந்தி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ சொல்வது உண்மைதான். மன்னர்களே, நீங்கள் உற்சாகமற்றிருந்தபோது, அவ்வாறே நான் உங்கள் அனைவரையும் தூண்டினேன்.(1) பகடையாட்டத்தில் உங்கள் நாடு உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்டும், நீங்கள் மகிழ்ச்சியை இழந்ததைக் கண்டும், உங்கள் உற்றார் உறவினரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களாக உங்களைக் கண்டும், துணிவையும், உயர்ந்த எண்ணங்களையும் நான் உங்கள் மனத்தில் செலுத்தினேன்.(2) மனிதர்களில் முதன்மையானவர்களே, பாண்டுவின் மகன்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும், அவர்கள் புகழை இழந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நான் உங்களுக்கு ஊக்கமளித்தேன்.(3)

Monday, December 30, 2019

பின்தொடர்ந்த குந்தி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 16

Kunti followed! | Asramavasika-Parva-Section-16 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் காட்டுக்குப் புறப்படும்போது, விதுரனும், சஞ்சயனும் உடன் புறப்பட்டது, யுதிஷ்டிரனும், பீமனும் தடுத்தும் குந்தியும் அவர்களுடன் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, அந்த நேரத்தில் பூமியிலோ, மாளிகைகளின் மாடியிலோ {உப்பரிகைகளிலோ} நின்று கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் செய்த முழக்கம் பெரிதாக இருந்தது.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, கைகளைக் கூப்பி, பலவீனத்தால் நடுங்கி, இரு பாலினத்தாராலும் நிறைந்திருந்த முக்கிய வீதியின் {ராஜமார்க்கத்தின்} வழியே சிரமத்துடன் நடந்து சென்றான்.(2) யானையின் பெயரால் அழைக்கப்பட்ட {ஹஸ்தினாபுரம்} நகரத்தின் முக்கிய வாயில் வழியே வெளியேறி, மக்கள் கூட்டத்தினரிடம் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொன்னான்.(3) மன்னனுடன் {திருதராஷ்டிரனுடன்} செல்வதில் விதுரன் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். கவல்கணன் மகனும், திருதராஷ்டிரனின் முதல் அமைச்சருமான சூதன் சஞ்சயனும் அதே இதயம் கொண்டவனாகவே இருந்தான்![1].(4)

Sunday, December 29, 2019

திருதராஷ்டிரன் புறப்பாடு! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 15

The departure of Dhritarashtra! | Asramavasika-Parva-Section-15 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 15)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் காந்தாரியின் தோளையும், காந்தாரி குந்தியின் தோளையும் பற்றிக் கொண்டு காடு நோக்கிப் புறப்பட்டது; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காடுகளுக்குத் தான் புறப்பட வேண்டிய நேரத்தைத் தீர்மானித்த அம்பிகையின் அரச மகன் திருதராஷ்டிரன், வீரர்களான பாண்டவர்களை அழைத்தான்.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி, காந்தாரியுடன் சேர்ந்து அந்த இளவரசர்களை அழைத்தான். கார்த்திகை மாதத்தின் முழுநிலவு நாளான அன்று வேதங்கள் அறிந்த பிராமணர்களைச் சிறு சடங்குகளைச் செய்ய வைத்த அவன்,(2) தான் தினமும் வழிபடும் நெருப்பை எடுத்து வரச் செய்தான். தன் வழக்கமான ஆடைகளைக் கைவிட்டு மான்தோலையும், மரவுரியையும் அணிந்து கொண்டு, தன் மருமகள்கள் துணையுடன் அந்த மாளிகையைவிட்டுப் புறப்பட்டான்.(3)

தானயஜ்ஞம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 14

Gift sacrifice! | Asramavasika-Parva-Section-14 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 14)


பதிவின் சுருக்கம் : சிராத்தம் செய்து, உணவு மற்றும் பானத்தால் பிராமணர்களை நிறைவடையச் செய்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரன் கேட்டதைவிடப் பத்து மடங்கு கொடுத்த யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி, இவ்வாறு விதுரனால் சொல்லப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் மற்றும் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்}  செயல்களால் உயர்வான நிறைவையடைந்தான்.(1) பீஷ்மருக்காகவும், தன் மகன்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், உரிய சோதனைகளுக்குப் பிறகு தகுந்த பிராமணர்களை அழைத்து, மேன்மையான முனிவர்களையும் அழைத்து,(2) பெரும் அளவிலான உணவையும், பானத்தையும் தயாரிக்கச் செய்து, தேர்கள், வாகனங்கள், துணிமணிகள், தங்கம், ஆபரணங்கள், ரத்தினங்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், விரிப்புகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களைத் திரட்டி,(3) கிராமங்கள், வயல்கள் மற்றும் பிறவகைச் செல்வங்களைத் தயாராக வைத்துக் கொண்டு, யானைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் ஆகியவற்றையும், பெண்களில் சிறந்த அழகிய கன்னிகைகளையும்,(4) இறந்து போனோரின் பெயர்களைச் சொல்லி அவர்களின் முன்னேற்றத்திற்காக அந்த மன்னர்களில் முதன்மையானவன் {திருதராஷ்டிரன்} கொடையளித்தான். துரோணர், பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகர்,(5) மன்னன் துரியோதனன் மற்றும் தன்னுடைய வேறு மகன்கள் ஒவ்வொருவரின் பெயரையும், ஜெயத்ரதன் முதலிய தன் நலன்விரும்பிகள் அனைவரின் பெயர்களையும் சொல்லி உரிய முறையில் அந்தக் கொடைகள் அளிக்கப்பட்டன.(6)

Saturday, December 28, 2019

நிறைவடைந்த திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 13

Dhritarashtra satisfied! | Asramavasika-Parva-Section-13 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 13)


பதிவின் சுருக்கம் : பொருள் கொடுப்பதற்கு யுதிஷ்டிரன் சம்மதித்ததைத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்த விதுரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இவ்வாறு மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான விதுரன், திருதராஷ்டிரனிடம் சென்று, சிறந்த பொருள்ள இந்தச் சொற்களை அவனிடம் சொன்னான்.(1) {விதுரன்}, "முதலில் நான் மன்னன் யுதிஷ்டிரனிடம் உமது செய்தியைச் சொன்னேன். உமது சொற்களைக் குறித்துச் சிந்தித்து, அவற்றை உயர்வாக மெச்சினான்.(2) பெருஞ்சக்தி கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, தன் மாளிகைகள், தன் உயிர் மூச்சு உட்பட அவற்றிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் உமது வசம் வைத்திருக்கிறான்.(3) ஓ! அரச முனியே {திருதராஷ்டிரரே}, உமது மகனான மன்னன் யுதிஷ்டிரனும், தன் நாட்டையும், உயிர் மூச்சையும், செல்வத்தையும், தனக்குரிய அனைத்தையும் உமக்குக் கொடுக்க முன் வருகிறான்.(4)

யுதிஷ்டிரனின் ஒப்புதல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 12

The acquiesce of Yudhishthira ! | Asramavasika-Parva-Section-12 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 12)


பதிவின் சுருக்கம் : சிராதத்தத்துக்குப் பொருள் கொடுக்க மறுத்த பீமன்; தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுமாறு திருதராஷ்டிரனுக்குச சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரன்...


அர்ஜுனன், "ஓ! பீமரே, நீர் என் அண்ணனாகவும், எனக்குப் பெரியவராகவும், ஆசானாகவும் இருக்கிறீர். நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகம் சொல்லத் துணியேன். அரசமுனியான திருதராஷ்டிரர் அனைத்து வகையிலும் நம் மதிப்புக்குத் தகுந்தவர்.(1) நல்லோரும், பொதுவான மட்டத்திற்கு மேலே புகழடைந்தவர்களும், நல்லதைக் குறிக்கும் வேறுபாடுகளை உடைக்காதவர்களும், தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மட்டுமே நினைப்பதில்லை, தாங்கள் அடைந்த நன்மைகளையும் நினைப்பர்" என்றான்.(2)

பீமனின் கோபம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11

The wrath of Bhima! | Asramavasika-Parva-Section-11 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் முதலியோருக்குச் சிராத்தஞ்செய்யப் பொருள் வேண்டிய திருதராஷ்டிரன்; கொடுக்க மறுத்த பீமன்; அர்ஜுனன் கொடுக்க வேண்டும் என்று சொன்னது; அர்ஜுனனை மெச்சிய யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் கோபமாகப் பேசிய பீமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த இரவு கடந்ததும், அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு விதுரனை அனுப்பினான்.(1) பெருஞ்சக்தி கொண்டவனும், நுண்ணறிவு பெற்ற மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான விதுரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு வந்து, மனிதர்களில் முதன்மையானவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த மன்னனிடம், இந்தச் சொற்களில்,(2) "மன்னர் திருதராஷ்டிரர், காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய தொடக்கச் சடங்குகளைச் செய்ய வேண்டும். ஓ! மன்னா, கார்த்திகை மாதம் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் அவர் {திருதராஷ்டிரர்} காட்டுக்குப் புறப்பட இருக்கிறார்[1].(3) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அவர் உன்னிடம் இருந்து சிறிது செல்வத்தை வேண்டுகிறார். உயர் ஆன்ம கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, துரோணர், சோமதத்தன், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பாஹ்லீகர், கொல்லப்பட்ட அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் நலன்விரும்பிகள், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளனுக்கும் {ஜெயத்ரதனுக்கும்} சிராத்தம் செய்ய விரும்புகிறார்" என்றான்.(5)

Friday, December 27, 2019

குடிமக்களின் ஒப்புதல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 10

The acquiesce of citizens! | Asramavasika-Parva-Section-10 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 10)


பதிவின் சுருக்கம் : ஒரு பிராமணர் மூலம் திருதராஷ்டிரனைத் தேற்றி, காட்டுக்குச் செல்வதற்குப் பெரும் வருத்தத்துடன் அனுமதி கொடுத்த குருஜாங்கலத்தார்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தோனே, முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குடிமக்களும், மாகாணவாசிகளும், நினைவிழந்த மனிதர்களைப் போலச் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் துயரால் அடைக்கப்பட்ட தொண்டைகளுடன், அமைதியாக இருப்பதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரன், மீண்டும் அவர்களிடம்,(2) "மனிதர்களில் சிறந்தவர்களே, இந்நாட்டில் அறம் சார்ந்து வசிப்போரே, முதிர்ந்தவனும், மகனற்றவனும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனுமான நான், என் மனைவியுடன் {காந்தாரியுடன்} சேர்ந்து பல்வேறு வகை புலம்பல்களில் ஈடுபட்டு(3) காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தில், என் தந்தையும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} மற்றும் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான யுதிஷ்டிரன் ஆகியோரின் அனுமதியைப் பெற்றேன்.(4) பாவமற்றவர்களே, நானும், காந்தாரியும் தலை வணங்கி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு அனுமதி அளிப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்" என்றான் {திருதராஷ்டிரன்}".(5)

அடைக்கலம் ஒப்படைப்பு! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 09

Deposit made! | Asramavasika-Parva-Section-09 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 09)


பதிவின் சுருக்கம் : தான் செய்த தவறுகளைப் பொறுக்கும்படி மக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் காட்டுக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டது...


திருதராஷ்டிரன், "சந்தனு இந்தப் பூமியை முறையாக ஆண்டார். அதே போல, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட விசித்திரவீரியரும் உங்களை ஆண்டார். நிச்சயம் இவை யாவும் நீங்கள் அறிந்தது.(1) என் தம்பி பாண்டு, எனக்கும், உங்களுக்கும் எவ்வளவு அன்புக்குரியவனாக இருந்தான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவனும் உங்களை முறையாகவே ஆண்டான்.(2) பாவமற்றவர்களே, நானும் உங்களுக்குத் தொண்டாற்றியிருக்கிறேன். அத்தொண்டுகள் தேவையான அளவுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனக்குறைவின்றி நான் என் கடமைகளைச் செய்திருப்பதால் என்னை மன்னிப்பதே உங்களுக்குத் தகும்.(3)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்