Indra severed Namuchi's head! | Shalya-Parva-Section-43 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : தவத்தினால் சரஸ்வதியைத் தூய்மைப்படுத்திய தவசிகள்; அங்கே வேள்வி செய்து பிரம்மஹத்தியைப் போக்கிக் கொண்ட இந்திரன்; அங்கிருந்து சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பெரும் அரச மரத்தைக் கொண்டிருந்த சோம தீர்த்தம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் கோபத்தில் சபிக்கப்பட்ட சரஸ்வதி, அந்த மங்கலமான சிறந்த தீர்த்தத்தின் {வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின்}, நீரோட்டத்தில் இரத்தத்தைச் சுமந்தபடி பாய்ந்தாள்.(1) பிறகு, ஓ! மன்னா!, ஓ பாரதா {ஜனமேஜயா}, ராட்சசர்கள் பலர் அங்கே வந்து, அங்கே பாய்ந்து கொண்டிருந்த குருதியைக் குடித்து, அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) அவர்கள், அந்தக் குருதியால் நிறைவடைந்து, உற்சாகத்தால் நிறைந்து, எந்த வகைக் கவலையுமில்லாமல், (புண்ணியத்தால்) சொர்க்கத்தை அடைந்த மனிதர்களைப் போல, அங்கே ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்.(3) சில காலம் கழிந்ததும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட சில முனிவர்கள், சரஸ்வதியின் தீர்த்தங்களுக்குப் பயணிக்கும்போது அங்கேயும் {அந்த வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திற்கும்} வந்தனர்.(4) அந்த முனிவர்களில் முதன்மையானவர்கள், அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, மேலும் புண்ணியத்தை அடைய விரும்பினர்.(5)
