Tuesday, June 11, 2013

பாண்டு சொன்ன சுருதசேனையின் கதை! - ஆதிபர்வம் பகுதி 120

The story told by Pandu! | Adi Parva - Section 120 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 56)

பதிவின் சுருக்கம் : துறவுக்குத் தன்னை அர்ப்பணித்த பாண்டு; பிரம்மனைக் காணப் புறப்பட்ட முனிவர்கள்; பாண்டு தங்களுடன் வரவேண்டாம் என்று மறுத்த முனிவர்கள்; பாண்டுவுக்கு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று சொன்ன முனிவர்கள்; தகுதிவாய்ந்தவர் மூலம் பிள்ளை பெற குந்திக்கு ஆணையிட்ட பாண்டு; பாண்டு சொன்ன சுருதசேனையின் கதை...

வைசம்பாயனர் சொன்னார், "பெரும் சக்தி கொண்ட பாண்டு, தன்னைத் துறவுக்கு அர்ப்பணித்தான். குறைந்த காலத்தில் அங்கு வசித்த சித்தர்கள் மற்றும் சாரணர்களிடத்தில் அவர்களுக்குப் பிடித்தமானவனாக ஆனான்.(1)



ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த ஆன்ம குருக்களுக்கு சேவை செய்து, பயனற்ற செருக்கிலிருந்து விடுபட்டு, மனத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஆசைகளை அடக்கி, சொர்க்கத்திற்குள் நுழையத்தக்க பெரும் (ஆன்ம) ஆற்றலை அடைந்தான்.(2) சில முனிவர்கள் அவனைச் சகோதரா என்று அழைத்தனர், சிலர் நண்பா என்று அழைத்தனர், மற்றவர்கள் அவனைத் தனது சொந்த மகனாகவே நினைத்தனர்.(3) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, பல காலம் கழித்துத் தனித்திருந்து பெரும் ஆன்மத் தகுதியடைந்து (பிறப்பால் க்ஷத்திரியனாக இருப்பினும்) பிரம்மமுனியைப் போன்று ஆனான் பாண்டு.(4)

ஒரு புது நிலவு {அமாவசை} நாளில், கடுந்தவங்கள் இயற்றும் முனிவர்கள் ஒன்றாகக் கூடி, பிரம்மனைக் காணும் ஆவலால் புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தனர்.(5) அவர்கள் புறப்படத் தயாராயிருப்பதைக் கண்ட பாண்டு அந்தத் துறவிகளிடம், "நா நலமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களே, எங்கே செல்கிறீர்கள்?" என்றான்.(6)

அதற்கு முனிவர்கள், " இன்று பிரம்மனின் வசிப்பிடத்தில் தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோரின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அந்தத் தான்தோன்றியை {சுயம்புவான பிரம்மனைக்} காண விரும்பி இன்று நாங்கள் அனைவரும் அங்குச் செல்கிறோம்" என்றனர்.(7)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்ட பாண்டு, முனிவர்களுடன் சொர்க்கத்தைக் காண விருப்பம் கொண்டு உடனே எழுந்தான். தனது இரு மனைவியரையும் {குந்தி மற்றும் மாத்ரியையும்} அழைத்துக் கொண்டு, முனிவர்களைத் தொடர்ந்து அந்த ஆயிரம் சிகரங்கள் கொண்ட மலைக்கு வடக்கு நோக்கி நடக்க முற்படும்போது, அந்தத் துறவிகள்,(8) "இந்த எங்கள் வடநோக்குப் பயணத்தில், மலைகளின் அரசன் மீது மெதுவாக ஏறும்போது, தேவர்கள் செல்வதையும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் செல்வதையும், மரங்கள் அடர்ந்து இன்னிசை நிரம்பிய பெரும் மாளிகைகளையும், சமமும் சமமற்றதுமான தரையும் கொண்ட குபேரனின் நந்தவனத்தையும், பெரும் நதிகளின் கரைகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும், சாதாரண மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளையும் அந்த மலையின் சாரலில் நாங்கள் கண்டிருக்கிறோம்.(9-11) பனியால் மூடப்பட்டுக் காய்கறிகளோ, விலங்குகளோ அற்ற உயர்ந்த இடங்களும் அங்கே இருக்கின்றன. பெரும் மழை பெய்து கொண்டே இருப்பதால், முற்றிலும் அணுகப்பட முடியாதவையும் வசித்திருக்க முடியாதவையுமான சில இடங்கள் அங்கே இருக்கின்றன.(12) மற்ற விலங்குகளைப் பற்றிப் பேச வேண்டாம், இறகுகள் கொண்ட உயிரினங்களாலும் {பறவைகளாலும்} அவற்றைக் கடக்க முடியாது. காற்று மட்டுமே அங்குப் புக முடியும். அதைத் தவிர்த்து சித்தர்களும், பெரும் முனிவர்களும் மட்டுமே அங்கே நுழைய முடியும்.(13) அந்த மலைகளின் மன்னனுடைய உயரங்களில் {உயரமான இடங்களில்} இவ்விளவரசிகளால் எவ்வாறு ஏற முடியும்? வலியை அறியாதவர்களான இவர்கள், துயரத்தால் வீழ்ந்துவிட மாட்டார்களா? எனவே, ஓ பாரதக் குலத்தின் காளையே, எங்களுடன் நீ வராதே" என்றனர்.(14)

பாண்டு, "பேறு பெற்றவர்களே, மகனில்லாதவனுக்குச் சொர்க்கத்தில் அனுமதியில்லை என்று சொல்லப்படுகிறது. நான் மகனற்றவன்! அந்தத் துயரத்தால் நான் உங்களிடம் பேசுகிறேன்.(15) எனது மூதாதையருக்கு நான் கொண்ட கடனை என்னால் செலுத்த முடியவில்லை என்பதால் துயருறுகிறேன். எனது உடலின் அழிவுடன் சேர்த்து எனது மூதாதையர்களின் அழிவும் நிச்சயம்!(16) பூமியில் பிறக்கும் மனிதர்கள் நான்கு கடன்களுடன் பிறக்கின்றனர். மூதாதையர்களுக்கான கடன், தேவர்களுக்கான கடன், முனிவர்களுக்கான கடன் மற்றும் சக மனிதர்களுக்கான கடன் ஆகியவற்றுடனே மனிதர்கள் பிறக்கின்றனர்.  அறம்வழுவாமல் அக்கடன்களை அவர்கள் செலுத்த வேண்டும்.(17) சரியான நேரத்தில் இக்கடன்களைத் தீர்க்காதவர்கள் நல்லுலகம் பெற மாட்டார்கள் என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர்.(18) தேவர்கள் நாம் செய்யும் வேள்விகளால் கடன் அடைபடுகின்றனர் {நிறைவடைகின்றனர்}. முனிவர்கள் நாம் பெறும் கல்வி, தியானம் மற்றும் ஆன்ம அறிவு ஆகியவற்றால் கடன் அடைபடுகின்றனர். முன்னோர்கள் {பித்ருக்கள்}, நாம் பிள்ளைகள் பெறுவதாலும், ஈமக்கடன்கள் செய்வதாலும் கடன் அடைபடுகின்றனர். மனிதத்தன்மையுடன், யாருக்கும் எக்குற்றமும் செய்யாமல் வாழ்ந்தால் மற்ற மனிதர்களின் கடன் அடைபடுகிறது.(19) நான், அறம்சார்ந்தவனாக தேவர்கள், முனிவர்கள் மற்றும் சக மனிதர்களின் கடனை அடைத்துவிட்டேன். இந்த மூன்றைத் தவிர மற்றதெல்லாம் எனது உடலுடன் அழியப்போகின்றன.(20) துறவிகளே, நான் எனது முன்னோர்களுக்கான கடனில் இருந்து இன்னும் விடுபடவில்லை. பிள்ளைகளைப் பெற்றுக் கடன்களை அடைக்கவே மனிதர்களில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் பிறக்கின்றனர்.(21) உயர்ந்த முனிவரால் {வியாசரால்} எனது தந்தையின் நிலத்தில் நான் பெறப்பட்டதைப் போலவே, எனது நிலத்தில் (என் மனைவியரிடத்தில்) பிள்ளைகள் பெறப்பட வேண்டுமா?" என்று கேட்டான்.(22)

அதற்கு முனிவர்கள், "ஓ அற ஆன்மா கொண்ட மன்னா! பாவமற்றதும், நற்பேறால் அருளப்பட்டதும், தேவர்களைப் போன்றதுமான சந்ததி உனக்கு இருக்கிறது. நாங்கள் எங்கள் ஞானப்பார்வையால் அதைக் காண்கிறோம்.(23) ஓ மனிதர்களில் புலியே {பாண்டுவே}, எனவே, விதி சுட்டிக்காட்டும்படி உன் செயல்களை நிறைவேற்றுவாயாக. நுண்ணிறவு கொண்ட மனிதர்கள், ஆழ்ந்த ஆய்வுடன் செயல்பட்டு, எப்போதும் நற்கனிகளையே {நல்ல பலன்களையே} அடைகின்றனர்;(24) எனவே, முயற்சி செய்வதே உனக்குத் தகுந்தது. நீ அடையப்போகும் கனி தெளிவாகத் தெரிகிறது. திறமைவாய்ந்த, ஏற்றுக் கொள்ளப்படும் சந்ததியை நீ நிச்சயம் அடைவாய்" என்றனர்.(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துறவிகளின் வார்த்தைகளைக் கேட்ட பாண்டு, மானின் சாபத்தால், உற்பத்தி சக்தியைத் தான் இழந்ததை நினைத்துப் பார்த்து ஆழ்ந்த வருத்தம் கொண்டான்.(26) தான் மணந்த மனைவியான சிறந்த குந்தியை தன்னிடம் தனிமையில் அழைத்து, "இந்த இக்கட்டான நிலையைக் கருத்தில் கொண்டு வாரிசுகளை உருவாக்க முயற்சி செய்வாயாக.(27) ஓ குந்தி, ஒரு மகனே மூவுலகத்திலும் அறம் சார்ந்த புகழை விளைவிப்பவன் என்று அழிவற்ற அறத்தை {நித்திய தர்மத்தைப்} போதிக்கும் ஞானியர் சொல்கின்றனர்.(28) வேள்விகள், கொடைகள், தவத்துறவுகள் மற்றும் கவனமாக நோற்கப்படும் நோன்புகள் ஆகியவற்றால் மகனற்ற மனிதனுக்கு எந்த அறத்தகுதியையும் ஏற்பட்டுவிடாது என்று சொல்லப்படுகிறது.(29) ஓ இனிமையான புன்னகையுடையவளே {குந்தியே}, இவையனைத்தையும் அறிந்த நான், மகனற்றவனாக இருப்பதால், உண்மையான இன்பநிலைகளைக் கொண்ட உலகங்களை என்னால் அடைய முடியாது என்பது உறுதி.(30) ஓ மருட்சியுடையவளே, பாவச்செயல்களுக்கு அடிமையான இழிந்தவனாக நான் இருந்ததால், மாசுள்ள என் வாழ்வின் விளைவாக, மானின் சாபத்தால் என் உற்பத்திசக்தி {இனப்பெருக்கம் செய்யும் சக்தி} அழிந்தது.(31)

அறத்தின் விதிகள் ஆறு வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஓ பிருதையே {குந்தி}, தற்போதுள்ள வழக்கத்தின்படி அவற்றைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(32) அவை, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் முதல் வகை {1.ஔரஸன்},  அன்பு நிமித்தமாகத் திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை {2.பிரனீதன்}, பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை {3.பரிக்ரிதன்}, கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை {4.பௌனர்ப்பவன் }, திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை {5.கானீனன்}, கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை {6.குந்தன்}, தத்து கொடுக்கப்பட்டு பெறப்படும் மகன் ஏழாவது வகை {7.தத்தன்}, சில காரணத்திற்காகப் பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை {8.க்ரீதன்}, தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை {9.ஸ்வயம்தத்தன்}, கருவுற்ற மணமகளிடம் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை {10.ஷாதன்}, சகோதரன் மகன் பதினோராவது வகை {11.உபக்ரீதன்}, தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை {12.ஹீனயோனித்ரிதன்}[1].(33,34)

[1] மேலே அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளவை. கும்பகோணம் பதிப்பில், "தர்மசாஸ்திரத்தில் ஆறுபுத்ரர்கள் தாயபாகத்திற்குரிய சுற்றத்தவரென்றும் மற்ற ஆறு புத்ரர்கள் தாயபாகத்திற்குரியவரல்லாற சுற்றத்தவரென்றும் சொல்லப்பட்டனர். குந்தியே! அவர்களைப் பற்றி நான் சொல்லுகிறேன்; கேள். தன் தர்ம்பத்நியிடம் தனக்குப் பிறந்த ஔரஸன்{1}, அவளிடத்திலே தன் அனுமதியினால் உயர்குலத்தோனுக்குப் பிறந்த க்ஷேத்ரஜன்{2}. தாய்தந்தைகளால் விடப்பட்ட அபவித்தன்{3}, ஒரு பெண்ணிடம் இரண்டாவது விவாகம் செய்து கொண்ட புருஷனுக்குப் பிறந்த பௌனர்ப்பவன்{4}. விவாகம் செய்து கொள்ளாமல் கன்னிகையாயிருக்கும்போது பிறந்த கானீனன்{5}, இன்னானுக்கென்று தெரியாமல் பரபுருஷனுக்குப் பிறந்த கடோத்பன்னன்{6}, தத்தபுத்திரன்{7}, தாய்தகப்பனார்களுக்குக் கிரயம் கொடுத்து வாங்கப்பட்ட க்ரீத புத்ரன்{8}, புத்திரன்போல் அபிமானிக்கப்பட்ட க்ரித்ரிமபுத்திரன்{9}, தானே உனக்குப்புத்ரனாக இருக்கிறேனென்று வந்த ஸ்வயம்தத்தனென்பவன்{10}, கர்ப்பிணியாகவே விவாகம் செய்யப்பட்டவளுக்குப் பிறந்த ஸகோடன்{11}, சூத்ர ஸ்த்ரீயினிடம் தனக்குப் பிறந்தவனாகிய பாரசவன்{12} இவர்கள் பனிரெண்டு புத்ரர்கள். இவர்களில் முன்சொன்ன புத்ரர்கள் இல்லாமையைப் பார்த்துப் பின் சொன்ன புத்ரர்களை அடைய விரும்ப வேண்டும்" என்றிருக்கிறது.

முந்தைய பிரிவில் {முதல் ஆறு பிள்ளைகளை} பிள்ளைப் பெறுவதில் தோல்வியுற்றால், ஒரு தாய் அதற்கடுத்த பிரிவில் {இறுதி ஆறு பிள்ளைகளை} பிள்ளைகளைப் பெற விரும்ப வேண்டும். சில இக்கட்டான சூழ்நிலைகளில், மனிதர்கள் திறமைவாய்ந்த தங்கள் தம்பிகள் மூலம் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(35) சுயம்புவான மனு, தன்னால் சுயமாகப் பிள்ளை பெற முடியாவிட்டால், சிறந்த அறத்தைத் தரும் பிள்ளைகளைப் பெறலாம் பிறர் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.(36) எனவே, ஓ குந்தி, நான் எனது உற்பத்தித் திறனை இழந்துவிட்டதால், நீ எனக்குச் சமமான அல்லது என்னைவிட உயர்ந்த வேறு நபர் மூலம் பிள்ளை பெற நான் உனக்கு ஆணையிடுகிறேன்.(37) ஓ குந்தி, தனது தலைவனால் பிள்ளைப்பேறு பெறப் பணிக்கப்பட்டவளான சாரதண்டாயனர் மகளின் {சுருதசேனையின்} வரலாற்றைக் கேட்பாயாக.(38)

அந்த வீரமங்கை, தனது மாதவிடாய் முடிந்ததும், முறையாகக் குளித்து, நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு இரவில் சென்று காத்திருந்தாள். அவள் நீண்ட நேரம் அங்குக் காத்திருக்கவில்லை. அதற்குள் துறவில் வென்ற ஒரு பிராமணர் அங்கே வந்தார்.  சரதண்டாயனரின் மகள் அவரிடம் பிள்ளை கோரினாள். நெருப்பில் தெளிந்த நெய்யை விட்ட பிறகு[2] (பும்ஸவனம் என்ற வேள்வி செய்து) அந்தப் பிராமணரின் மூலம் அவள் துர்ஜெயனை மூத்தவனாகக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான மூன்று மகன்களைப் பெற்றெடுத்தாள்.(39,40) ஓ நற்பேறு பெற்றவளே {குந்தியே}, நீயும் அந்த வீரமங்கையை உதாரணமாகக் கொண்டு, எனது ஆணையை ஏற்று, உயர்ந்த அறத்தகுதி வாய்ந்த பிராமணரின் வித்தைக் கொண்டு விரைவாகப் பிள்ளைகளைப் பெறுவாயாக" என்றான்[3].(41)

[2] ஆண்பிள்ளை பிறப்பதற்காகச் செய்யப்படும் வேள்வி

[3] மன்மதநாததத்தரின் பதிப்பில் இக்கதை கங்குலியில் உள்ளதைப் போலவே "சாரதண்டாயனரின் மகள்" என்றே இருக்கிறது. ஆனால் கும்பகோணம் பதிப்பிலோ, "கற்புள்ளவளும், புகழுள்ளவளுமான சுருதஸேனையென்னும் பெயருள்ள உன் சகோதரியை உயர்ந்தவனாகிய சாரதண்டாயனியென்னும் கேகயதேசத்தரசன் விவாஹம் செய்து கொண்டான். குந்தியே வீரபத்னியாகிய அவள் தன் குருவினால் (பர்த்தாவினால்) புத்திரோத்பத்தி செய்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டு, ருதுஸ்நானஞ்செய்து நியமத்துடனிருந்து ராத்திரியில் நாலு சந்து கூடுமிடத்திலிருந்த ஒரு தவஸித்தி பெற்ற பிராமணனை வரித்து பும்ஸவனம் என்னும் கிருயையில் அக்நியில் ஹோமஞ்செய்து அந்தக் கிரியை முடிந்தபின் அந்தப் பிராமணருடன் கூடவே சேர்ந்திருந்தாள். அதனால், அவள் துர்ஜயன் முதலான மூன்று மஹாரதர்களைப் பெற்றாள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலோ, "ஓ குந்தி, ஒரு போர்வீரனின் மனைவியான சாரதண்டாயனியின் கதையைக் கேட்பாயாக. அவள் தனக்கு மூத்தவர்களால் ஒரு மகனைப் பெறுமாறு பணிக்கப்பட்டாள். ஓ குந்தி, அவளது பருவகாலம் வந்தபோது, அவள் குளித்தால். இரவில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்குச் சென்று, நல்லசாதனை கொண்ட பிராமணர் ஒருவரை வரவேற்றாள். ஒரு மகனைப் பெறும் நிமித்தமாக அவள் நெருப்பில் ஆகுதியை ஊற்றினாள். இந்தச் சடங்கைச்செய்த பிறகு, அவருடன் வாழ்ந்த அவள், துர்ஜயனை மூத்தவனாகக் கொண்டவர்களும், மஹாரதர்களுமான மூன்று மகன்களைப் பெற்றாள்" என்றிருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்