Monday, August 12, 2013

மன்னன் கல்மாஷபாதன்! - ஆதிபர்வம் பகுதி 178

King Kalmashapada! | Adi Parva - Section 178 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 12)

பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் மகன் சக்திரி; கல்மாஷபாதனுக்குச் சாபம் கொடுத்த சக்திரி; வசிஷ்டரின் மகன்களைக் கொன்று தின்ற கல்மாஷபாதன்; பிள்ளைசோகத்தால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற வசிஷ்டர்...

கந்தர்வன் தொடர்ந்தான், "ஓ பார்த்தா, இக்ஷவாகு குலத்தில் பிறந்த கல்மாஷபாதன்[1] என்றொரு மன்னன் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லாத ஆற்றலைக் கொண்டவனாக இருந்தான்.(1) ஒரு நாள் அம்மன்னன், வேட்டையாட விரும்பித் தனது தலைநகரைவிட்டுக் கானகத்திற்குச் சென்று பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும் (தனது கணைகளால்) துளைத்தான்.(2) அந்த அடர்ந்த கானகத்தில், மன்னன் பல காண்டாமிருகங்களையும் வீழ்த்தினான். இந்த விளையாட்டில் நெடுநேரம் ஈடுபட்டு மிகவும் களைப்படைந்த அவன், கடைசியாகத் தனது துரத்தலைக் கைவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினான்.(3) சக்தி கொண்ட பெரும் விஷ்வாமித்திரர், சிறிது காலத்திற்கு முன் இந்த ஏகாதிபதியைத் தனது சீடனாக ஏற்க விரும்பினார்.அப்படிப்பட்ட அந்த ஏகாதிபதி! பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து கானகத்தில் முன்னேறி வரும்போது, சிறப்பு மிகுந்த வசிஷ்டரின் மகனான, முனிவர்களில் சிறந்தவர் ஒருவர் அதே வழியில் அவனுக்கு எதிர்ப்பட்டார். போரில் எப்போதும் வெற்றிவாகையே சூடிவந்த அந்த மன்னன், வசிஷ்ட குலத்தை வளரச் செய்யும் சக்திரி என்ற பெயர் கொண்ட வசிஷ்டரின் நூறு மகன்களில் மூத்த மகனைக் கண்டான்.(4-6)


[1] கல்மாஷபாதனுக்கு ஸௌதாசன் மற்றும் மித்ரஸஹன் என்ற பெயர்களும் இருந்ததாக கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.

அம்மன்னன் அவரைக் கண்டு, "எங்கள் வழியில் இருந்து விலகி நில்லும்" என்றான். முனிவர் அந்த ஏகாதிபதியிடம் இணக்கமான சமாதானமான முறையில் இனிமையாக,(7) "ஓ மன்னா, இஃது எனது வழி. மன்னர்கள் எப்போதும் பிராமணர்களுக்கு வழி உண்டாக்க வேண்டும் என்பதே அற நெறியின் நிலைத்த விதியாகும். இதுவே தர்மம் மற்றும் கடமைக்கான அனைத்து நீதிகளிலும் சுட்டிக்காட்டப்படுகிறது" என்றார்.(8)

இப்படி அந்த இருவரும் மாறிமாறித் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் சொல்லி, "விலகி நில்லும், விலகி நில்லும்" என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.(9) தர்மத்தின் வழியைத் தனது வழியாகக் கொண்ட அந்த முனிவரும் வழிகொடுக்கவில்லை. செருக்கும், சினமும் கொண்ட அந்த அரசனும் வழி கொடுக்கவில்லை.(10) இதனால் அந்த முனிவரின் மீது கோபம் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், வழியும் கொடுக்காமல், அவரைக் கசையால் அடித்து ராட்சசன் போல நடந்து கொண்டான்.(11) இப்படி அந்த ஏகாதிபதியால் கசையால் அடிக்கப்பட்ட அந்த வசிஷ்டரின் மகனான {சக்திரி} முனிவர்களில் சிறந்தவர், கோபத்தால் தனது உணர்வை இழந்து, விரைவாக அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனை {கல்மாஷபாதனை},(12) "ஓ மன்னர்களில் இழிந்தவனே, நீ ஒரு துறவியிடம் ராட்சசனைப் போல நடந்து கொண்டதால், இந்நாள் முதல் நீ மனித சதையை உண்டு வாழும் ராட்சசனாக மாறுவாய்.(13) மன்னர்களில் இழிந்தவனே, நீ இந்த மனித உருவம் பாதிக்குமாறு உலகம் முழுவதும் சுற்றித் திரிவாய்" என்று சபித்தார். இப்படிச் சக்திரி என்ற அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்ட முனிவர், மன்னன் கல்மாஷபாதனிடம் பேசினார். (14)

இந்நேரத்தில், அந்த ஏகாதிபதியும், வசிஷ்டரின் மகனும் இருந்த அந்த இடத்திற்கு விஷ்வாமித்திரர் வந்தார். ஏற்கனவே கல்மாஷபாதனைச் சீடனாக ஏற்பதில் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் ஒரு பிணக்கு இருந்தது.(15) ஓ பார்த்தா {அர்ஜுனா}, கடும் விரதங்கள் இருந்த, பெரும் சக்தி கொண்ட விஷ்வாமித்திரர் அவ்விருவரையும் (அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைத் தனது ஆன்மப் பார்வையால் கண்டு) அணுகினார்.(16) ஓ பாரதா {அர்ஜுனா}, விஷ்வாமித்திரர் தனது நன்மையை விரும்பி, அந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அரூபமாக இருந்து நடக்கும் சம்பவங்களைக் கவனித்து வந்தார். அந்தச் சாபம் சொல்லப்பட்டவுடன், அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுக்கு இவர் வசிஷ்டரின் மகன் என்பதும், வசிஷ்டருக்கு இணையான சக்தி கொண்டவர் இவர் என்பதையும் அறிந்து கொண்டான்.(17,18)  சக்திரியால் சபிக்கப்பட்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், அந்த முனிவரைச் சாந்தப்படுத்த எண்ணி அவரிடம் தாழ்மையாக வேண்டத் தொடங்கினான்.(19)

ஓ குருக்களின் தலைவா, விஷ்வாமித்திரர், மன்னனின் மனநிலையை அறிந்து கொண்டு (தான் நினைத்த காரியம் மாறிப் போகுமே என்றெண்ணி) அந்த மன்னனின் உடலில் புகும்படி, ஒரு ராட்சசனை ஏவினார்.(20) கிங்கரன் என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசன், சக்திரியின் சாபத்திற்குக் கட்டுப்பட்டும், விஷ்வாமித்திரரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் அந்த ஏகாதிபதியின் உடலில் இறங்கினான்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் ஏகாதிபதி வந்துவிட்டான் என்பதை அறிந்த முனிவர்களில் சிறந்தவரான விஷ்வாமித்திரர், இடத்தை விட்டு அகன்று அங்கிருந்து சென்று விட்டார்.(22) சிறிது நேரம் கழித்து, ஓ பார்த்தா, அந்த ஏகாதிபதி, அந்த ராட்சசனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, அவனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் சென்று, தனது உணர்வுகளை இழந்தான்.(23) அந்த நேரத்தில், ஒரு பிராமணர் அம்மன்னனைக் கானகத்தில் கண்டார். மிகுந்த பசியோடு இருந்த அந்த பிராமணர், அந்த மன்னனிடம் இறைச்சியுடன் கூடிய உணவை இரந்து கேட்டார்.(24) நண்பர்களை மகிழ்விக்கும் அரசமுனி கல்மாஷபாதன், பிராமணரிடம், "இங்கேயே இரும், ஓ பிராமணரே, சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்.(25) நான் அப்படி வரும்போது நீர் விரும்பும் உணவை கொடுக்கிறேன்" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு ஏகாதிபதி சென்றுவிட்டான்.

ஆனால் பிராமணர் அங்கேயே இருந்தார்.(26) உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னன் சில மணி நேரங்களுக்குத் தன் விருப்பப்படி மகிழ்ச்சியாக உலவிவிட்டுக் கடைசியாகத் தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்துவிட்டான்.(27) நடு இரவில் விழித்த அந்த மன்னன், தான் கொடுத்த உறுதிமொழி நினைவுக்கு வந்தவனாக, தனது சமையற்காரனை அழைத்து,(28) கானகத்தில் தங்கியிருக்கும் பிராமணரிடம் தான் கொடுத்த உறுதியைச் சொல்லி, "அங்கே சென்று அவருக்கு உணவும் இறைச்சியும் கொடுத்து உபசரிப்பாயாக" என்றான்".(29)

கந்தர்வன் தொடர்ந்தான், "இப்படிக் கட்டளையிடப்பட்ட அந்தச் சமையற்காரன் இறைச்சி தேடி வெளியே சென்றான். இறைச்சி கிடைக்காமல் வருத்தப்பட்டு, மன்னனிடம் திரும்பி வந்து, தனது தோல்வியைச் சொன்னான்.(30) ராட்சசனின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஏகாதிபதி! எந்த மனவுறுத்தலும் இல்லாமல் மறுபடியும் மறுபடியும், "மனித இறைச்சியை அவருக்கு உணவாகக் கொடுப்பாயாக" என்றான்.(31)

அதற்கு அந்தச் சமையற்காரனும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, (மன்னனுக்குக் கட்டுப்பட்ட) மரண தண்டனை கொடுப்பவர்களிடம் சென்று மனித இறைச்சியை வாங்கி,(32) அதைக் கழுவி, முறையாகச் சமைத்து, வேக வைத்த அரிசி சோற்றால் அதை மூடி, ஆன்ம நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த பிராமணருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்.(33) ஆனால், பிராமணர்களில் சிறந்தவர், தனது ஞானப்பார்வையால், அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டும், உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்தும், கோபத்தால் கண்கள் சிவக்க,(34) "மன்னர்களில் இழிந்த இவன் எனக்குப் புனிதமற்ற, உண்ணத் தகுதியற்ற உணவைக் கொடுத்ததால், அந்தப் பாவி, இதே போன்ற உணவை விரும்புபவனாக ஆகட்டும்.(35) சக்திரி சபித்தது போல இவன் மனித இறைச்சியில் விருப்பம் கொண்டு, பாவியாக இந்த உலகம் முழுவதும் சுற்றி, அனைத்து உயிர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பான்" என்று சொன்னார்.(36)

அதற்காரணமாக, அச்சாபம் இரண்டாவது முறையாக அந்த மன்னன் மீது விழுந்து, மிகவும் பலமிக்கச் சாபமாகியது. இதனால், உடனே அந்த மன்னன் ராட்சச மனநிலை கொண்டு, விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான்.(37) சிறிது காலம் கழித்து, ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், தனக்குள் இருக்கும் ராட்சசனால் தனது மொத்த உணர்வுகளையும் இழந்து, தனக்குச் சாபமிட்ட சக்திரியைக் கண்டு,(38) "இந்த இயல்புக்குமிக்கச் சாபத்தை நீர் எனக்கு அளித்தமையால், உம்மைக் கொன்றே நான் மனித இறைச்சியை உண்பதைத் தொடங்கப் போகிறேன்" என்று சொன்னான்.(39) இப்படிச் சொன்ன அந்த மன்னன், ஒரு புலி தனக்குப் பிடித்த இரையை அடித்துத் உண்பது போல உடனடியாக சக்திரியைக் கொன்று தின்றான்.(40)

சக்திரி இப்படிக் கொல்லப்பட்டு உண்ணப்பட்டதைக் கண்ட விசுவாமித்திரர், வசிஷ்டரின் மற்ற மகன்களுக்கு எதிராகவும் அந்த ராட்சசனைத் தொடர்ந்து ஏவிக் கொண்டிருந்தார்.(41) கோபம் கொண்ட சிங்கம், சிறு மிருகங்களை அடித்து உண்பது போல, அந்த ராட்சசன் சக்திரிக்கு இளையவர்களான, சிறப்புவாய்ந்த வசிஷ்டரின் மற்ற மகன்களையும் விழுங்கினான்.(42) தனது மகன்கள் தொடர்ச்சியாக இறந்ததற்குக் காரணம் விஷ்வாமித்திரர்தான் என்பதை அறிந்த வசிஷ்டர், ஒரு பெரும் மலை பூமியைத் தாங்குவது போல, பொறுமையாக அனைத்துத் துயரங்களையும் தாங்கிக் கொண்டார்.(43) புத்திசாலிகளில் மனிதர்களில் முதன்மையான அந்த முனிவர்களில் சிறந்தவர், (கோபம் கொண்டு) குசிக இனத்தை {விஷ்வாமித்திரரின் இனம்} அழிக்க எண்ணாமல், தனது உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்தார்.(44) அப்படித் தீர்மானித்த, அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், மேரு மலையின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் அந்தக் கற்பாறைகள் நிறைந்த தரையானது, பஞ்சுப் பொதி போல அவரைத் தாங்கியது.(45)

ஓ பாண்டுவின் மைந்தனே {அர்ஜுனா}, தான் கீழே விழுந்ததனால் இறக்க வில்லை என்பதை அறிந்த அந்தச் சிறப்புமிகுந்தவர், நெருப்பை வளர்த்து, அதற்குள் இறங்கினார்.(46) ஆனால், அந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததே தவிர, அவரைப் பொசுக்கவில்லை. ஓ எதிரிகளை அழிப்பவனே, அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு அவருக்குக் குளிர்ச்சியாக இருந்தது.(47) பிறகும் துன்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீளாத அந்தப் பெரும் முனிவர், கடலைக் கண்டு, தனது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு, அதன் நீரில் விழுந்தார்.(48) ஆனால், அலைகள் அவரை விரைவாகக் கரையில் சேர்த்தன. இறுதியாக, கடும் நோன்புகள் நோற்ற அந்த பிராமணர் {வசிஷ்டர்} தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் எவ்வகையிலும் வெற்றிபெறாமல், இதயத்தில் துயர் நிறைந்து, தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்" {என்றான் கந்தர்வன்}.(49)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்