Sunday, August 11, 2013

விஷ்வாமித்திரரை வீழ்த்திய வசிஷ்டர்! - ஆதிபர்வம் பகுதி 177

Viswamitra defeated by Vasishta! | Adi Parva - Section 177 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்ற விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் விருந்தோம்பல்; வசிஷ்டரிடம் அவரது பசுவைக் கேட்ட விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் சக்தி; தவம் செய்து பிராமணரான விஷ்வாமித்திரர்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ கந்தர்வா, தெய்வீக ஆசிரமங்களில் வசித்த விஷ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகிய இருவருக்குமிடையில் எப்போது பகை ஏற்பட்டது? இதைக்குறித்து எங்களுக்கு அனைத்தையும் சொல்வாயாக" என்று கேட்டான்.(1)

அதற்குக் கந்தர்வன் மறுமொழியாக, "ஓ பார்த்தா {அர்ஜுனா}, வசிஷ்டரின் கதை மூவுலகங்களாலும் புராணமாக மதிக்கப்படுகிறது. நான் அதை முழுமையாக உரைக்கும்போது கேட்டுக் கொள்வாயாக.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே, கன்யாகுப்ஜத்தில், குசிகரின் மகனாகிய உலகப் புகழ் கொண்ட பெரும் மன்னன் காதி என்று ஒருவன் இருந்தான்.(3) அந்த அறம்சார்ந்த காதிக்கு, எதிரிகளை அழிப்பவரான விஷ்வாமித்திரர் என்ற மகன் இருந்தார். அவர் பெரிய படையையும், பல மிருகங்களையும், பல வாகனங்களையும் வைத்திருந்தார்.(4) அடர்ந்த காடுகளின் வழியாக மான் வேட்டைக்காகத் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து விஷ்வாமித்திரர் உலவுவது வழக்கம்.(5)

ஒரு காலத்தில், மன்னர் விஷ்வாமித்திரர் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது, களைப்பாலும், தாகத்தாலும் மிகவும் பலவீனமானார். களைப்படைந்த அந்த ஏகாதிபதி, வசிஷ்டரின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(6) அருளப்பட்டவரும், சிறப்புவாய்ந்தவருமான அம்முனிவர் {வசிஷ்டர்}, மன்னர் விஷ்வாமித்திரர் வருவதைக் கண்டு, அந்த மனிதர்களில் சிறந்தவரை {விஷ்வாமித்திரரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டார்.(7) ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு, முகத்தையும், கால்களையும் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியாவும், வனத்தில் விளையும் கனிகளையும், தெளிந்த நெய்யையும் கொடுத்து வணங்கினார்.(8) அந்தச் சிறப்புவாய்ந்த முனிவரிடம் {வசிஷ்டரிடம்}, விரும்பியதைக் கொடுக்கும் ஒரு பசு {காமதேனு} இருந்தது. அந்தப் பசுவிடம், "இதைக் கொடு" என்று கேட்டதும், அவரிடம் கேட்டதை உடனே கொடுத்துவிடுவாள்.(9)

அவள் கானகத்தில் விளையும் பல பழங்களையும், தானியங்களையும், பாலையும், ஆறு வகை {சுவைகளில்} ரசங்களையும், அமுதத்தைப் போன்ற பல பொருட்களையும் கொடுத்தாள். ஓ அர்ஜுனா, குடிக்கும் வகையிலும், சாப்பிடும் வகையிலும், நக்கிச் சாப்பிடும் வகையிலும், உறிஞ்சிச் சாப்பிடும் வகையிலும் பல பண்டங்களையும், பல்வேறு மதிப்புமிக்க ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் கொடுத்தாள். இந்த விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் கொடுக்கப்பட்டு, அந்த ஏகாதிபதி பெரிதும் வழிபடப்பட்டார். இதனால், தனது அமைச்சர்களுடனும், சேனைகளுடனும் கூடிய அந்த மன்னர், மிகுந்த மனநிறைவையடைந்தார்.(10-12) ஆறு உயர்ந்த {மேலெழுந்த} உறுப்புகளையும், அழகான விலா மற்றும் தொடைகளையும், ஐந்து அகலமான உறுப்புகளையும், தவளையைப் போன்ற கண்களையும், அழகான உருவத்தையும், பருத்த {பால் சுரக்கும்} மடிகளையும், குற்றமற்ற, நேர்த்தியான உயர்ந்த காதுகளையும், அழகான கொம்புகளையும், நன்றாக வளர்ந்த தலையையும் கழுத்தையும் கொண்டிருந்த அந்தப் பசுவைக் கண்டு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்} மிகவும் வியந்தார்.(13,14)

ஓ இளவரசனே {அர்ஜுனா}, அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்}, அனைத்தையும் கண்டு மனநிறைவை அடைந்து, நந்தினி என்ற அந்தப் பசுவை வெகுவாகப் புகழ்ந்து அந்த முனிவரிடம்,(15) "ஓ பிராமணரே! ஓ பெரும் முனிவரே, பத்தாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொண்டோ, எனது நாட்டைப் பெற்றுக் கொண்டோ, இந்த நந்தினியை எனக்குக் கொடுப்பீராக. {இப்பசுவைக் கொடுத்துவிட்டு} எனது நாட்டை அடைந்து மகிழ்ச்சியடைவீராக" என்றார்.(16)

விஷ்வாமித்திரரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வசிஷ்டர், "ஓ பாவங்களற்றவரே, தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் மற்றும் எனது வேள்விகளின் காரியத்திற்காகவே நான் இந்தப் பசுவை என்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறேன். உமது நாட்டையே நீர் கொடுத்தாலும், அதற்கு மாற்றாக நான் நந்தினியைக் கொடுக்க மாட்டேன்" என்றார்.(17)

அதற்கு விஷ்வாமித்திரர், "நானோ க்ஷத்திரியன், நீரோ கல்விக்கும், தவத்திற்கும் உம்மை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணராவீர். ஆன்மாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைதியான பிராமணர்களுக்குப் பெரிதான சக்தி ஏதாவது இருக்குமா?(18) பத்தாயிரம் பசுக்களை நான் உமக்குக் கொடுக்க முன் வரும்போதும், நான் விரும்பியதை நீர் எனக்குக் கொடுக்காவிட்டால், நான் எனது வர்ணத்தின் பழக்கத்தைக் கைவிடாமல், இப்பசுவைப் பலவந்தமாக எடுத்துச் செல்வேன்" என்றார்.(19)

அதற்கு வசிஷ்டர், "நீர் பெரும்பலம் கொண்ட க்ஷத்திரியனும், பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியும் ஆவீர். அதன் உரிமை குறித்துக் கருதாமல், நீர் விரும்பியதை விரைவாகச் செய்வீராக" என்றார்".(20)

கந்தர்வன் தொடர்ந்தான், "இப்படி வசிஷ்டரால் சொல்லப்பட்ட விஷ்வாமித்திரர், ஓ பார்த்தா, அப்போது, அன்னத்தைப் போன்றும், நிலவைப் போன்றும் வெண்ணிறம் கொண்ட அந்தப் பசுவான நந்தினியை கசையால் அடித்து, மேலும் பலவாறாகத் துன்புறுத்திப் பலவந்தமாக இழுக்க முயன்றார். ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்த அப்பாவி நந்தினி, சிறப்புமிகுந்த வசிஷ்டரை அணுகி தனது முகத்தை உயர்த்திப் பாவமாகப் பார்த்தாள்.(21,22) கடுமையாகத் துன்புறுத்தப்பட்டும், அவள் அந்த முனிவரின் ஆசிரமத்தைவிட்டு அகல மறுத்தாள். அவளது துன்பத்தைக் கண்ட வசிஷ்டர்,(23) "ஓ இனிமையானவளே, நீ தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறாய். நான் உனது கதறலைக் கேட்கிறேன். ஆனால், ஓ நந்தினி, விஷ்வாமித்திரர் உன்னைப் பலவந்தமாக இழுத்துச் செல்லும்போது, சதா மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு பிராமணனான நான் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்".(24)

கந்தர்வன் தொடர்ந்தான், "அப்போது, ஓ பாரதக் குலத்தின் காளையே, விஷ்வாமித்திரரையும், அவரது படைகளின் காட்சியையும் கண்டு பயந்து போன நந்தினி, அந்த முனிவரை {வசிஷ்டரை} இன்னும் அருகில் சென்று அணுகி,(25) "ஓ சிறப்பானவரே, அப்பாவியான என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்? விஷ்வாமித்திரரின் படையினரால் கடுமையாகக் கசைகளால் அடிபடும் என்னைத் தலைவன் இல்லாதவள் {முதலாளி இல்லாதவள்} போலப் பரிதாபகரமாக ஏன் கதறவிடுகிறீர்?" என்று கேட்டாள்.(26)

அழுது கொண்டு, துன்பத்திலிருக்கும் நந்தினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர், தனது பொறுமையை இழக்காமல், தனது மன்னிக்கும் நோன்பிலிருந்தும் விலகாமல்,(27) "ஒரு க்ஷத்திரியனின் பலம் உடலில் இருக்கிறது. ஒரு பிராமணனின் பலம் அவனது மன்னிக்கும் தன்மையிலிருக்கிறது {பொறுமையிலிருக்கிறது}. நான் எனது மன்னிக்கும் தன்மையை விட முடியாத காரணத்தால், ஓ நந்தினி, நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அங்கு செல்வாயாக" என்றார்.(28)

அதற்கு நந்தினி, "ஓ சிறப்பு மிகுந்தவரே, நீர் என்னைக் கைவிடுகிறீரா என்ன? நீர் என்னைக் கைவிடாமல், ஓ பிராமணரே! என்னைப் பலவந்தத்தின் காரணமாக எங்கும் அழைத்துச் செல்ல முடியாது" என்றாள்.(29)

வசிஷ்டர், "ஓ அருளப்பட்டவளே, நான் உன்னைக் கைவிடவில்லை! உன்னால் முடியுமென்றால், நீ இங்கேயே இரு! தடிமனான கயிறுகளால் கட்டப்பட்டு, அதனால் பெரிதும் பலவீனமடைந்து, உனது இளம் கன்று இழுத்துச் செல்லப்படுகிறது! அதோ பார்" என்றார்".(30)

கந்தர்வன் தொடர்ந்தான், "அப்போது, வசிஷ்டரின் பசு, அவ்வார்த்தையைக் கேட்டு, கழுத்தை மேல்நோக்கி அசைத்துத் தனது தலையை உயர்த்திப் பார்த்துப் பயங்கரமாக மாறியது.(31) தொடர்ந்து அடிக்கப்பட்ட அந்தப் பசு, கோபத்தால் கண்கள் சிவக்க, விஷ்வாமித்திரரின் படைகளை எல்லாப் பக்கங்களிலும் தாக்கிற்று.(32) கசையடியால் துன்புறுத்தப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக் கண்கள் சிவக்க, அவளுக்குக் கோபம் அதிகமாகியது.(33) கோபத்தால் எரிந்த அந்த நந்தினி, மதிய நேரச் சூரியன் போல உக்கிரமாகக் காணப்பட்டாள். அவள் எரியும் நிலக்கரியாலான பெரும் நெருப்பைத் தனது வாலிலிருந்து மழையெனப் பொழிந்தாள்.(34)

சிறிது நேரம் கழித்து, அவளது வாலிலிருந்து, பல்ஹவர்களின் படையை உற்பத்தி செய்தாள். அவளது {பால் கொடுக்கும்} மடியிலிருந்து திராவிடர்கள் மற்றும் சகர்கள் ஆகியோரின் படையை உற்பத்தி செய்தாள். தனது கருப்பையிலிருந்து யவனர்கள் படையையும், சாணத்திலிருந்து சபரர்களையும்,(35) சிறுநீரிலிருந்து காஞ்சிப் படைகளையும், தனது எல்லாப் புறங்களிலிருந்தும் மற்றச் சபரர்களையும், தனது வாயின் உமிழ்நீரிலிருந்து பௌந்தரர்களையும், கிராதர்களையும், மற்ற யவனர்களையும், சின்ஹலர்களையும் {சிங்களர்களா?}, மிலேச்ச குடிகளான, கசர்கள், சிபுகர்கள், சீனர்கள், ஹூனர்கள், கேரளர்கள் மற்றும் பல மிலேச்சப் படைகளையும் உற்பத்தி செய்தாள்.(36,37) பல்வேறு வகை சீருடைகளில் இருந்த அந்த மிலேச்சர்களின் படைகளிடம், அவர்கள் பிறக்கும்போதே பல்வேறு ஆயுதங்களும் உண்டாயிற்று. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண் முன்பே அரங்கேறி, அந்த ஏகாதிபதியின் படைகள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த மிலேச்சர்களின் படை எவ்வளவு பெரியது என்றால், விஷ்வாமித்திரரின் ஒரு சிப்பாயைத் தாக்க அந்த மிலேச்ச படையிலிருந்து அறுவரோ, எழுவரோ பாய்ந்தனர்.(38,39)

ஆயுதங்களின் அடர்த்தியான மழையால் விஷ்வாமித்திரரின் படை சிதுறுண்டு பல திக்குகளுக்கும் ஓடியது. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண்ணெதிரிலேயே நடைபெற்றது.(40) ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, வசிஷ்டருடைய படையினர் கோபத்தால் உந்தப்பட்டு இருந்தாலும், விஷ்வாமித்திரர் படையினரில் ஒருவரின் உயிரையும் எடுக்கமுடியவில்லை.(41) அந்த ஏகாதிபதியின் படையை நந்தினி சாதாரணமாக ஓட விட்டாள். அந்தப் படை இப்படியே எந்தப் பாதுகாப்பையும் காணாமல் இருபத்தியேழு மைல்களுக்கு ஓடின.(42) விஷ்வாமித்திரர் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு, பிராமண சக்தியை உணர்ந்து, க்ஷத்திரிய சக்தியை வெறுத்து, "ச்சீ... ச்சீ... க்ஷத்திரிய சக்தி சிறுமை கொண்டது. பிராமண சக்தியே உண்மையான சக்தி.(43,44) பலத்தையும், பலவீனத்தையும் ஆராய்ந்து, ஆன்மிகமே உண்மையான பலம் என்பதை உணர்ந்தேன்" என்று சொன்னார். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்}, தனது பெரிய நாட்டைக் கைவிட்டு,(45) அனைத்து இன்பங்களுக்கும் தனது முதுகைக் காட்டி {அனைத்து இன்பங்களையும் துறந்து}, தனது மனத்தை தவத்தில் நிலைக்க வைத்தார். தவத்தில் வெற்றிமுடிசூடி, மூவுலகங்களையும் தனது ஆன்ம நோன்புகளின் வெப்பத்தால் எரித்து,(46) அனைத்து உயிர்களையும் அதனால் துன்பத்துக்குள்ளாக்கினார். இப்படியே அந்த விஷ்வாமித்திரர் பிராமணத் தன்மையை அடைந்தார். இறுதியாக, அந்தக் குசிகனின் மைந்தன் {விஷ்வாமித்திரர்}, இந்திரனுடன் சேர்ந்து (தேவலோகத்தில்) சோம பானம் அருந்தினார்" {என்றான் கந்தர்வன்}.(47)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்