Sunday, September 22, 2013

ஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 21

Krishna met Jarasandha! | Sabha Parva - Section 21 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அந்த நகரத்தின் பெருமையை எடுத்துச் சொல்வது; கிருஷ்ணன் பீமன் அர்ஜுனன் ஆகியோர் மகத நகருக்குள் நுழைவது; ஒரு மலைச்சிகரத்தைத் தங்கள் கணைளால் உடைப்பது; முறையற்ற வாசல் வழியாக ஜராசந்தனை அணுகுவது; ஜராசந்தன் அவர்களுக்கு மரியாதை செய்வது; ஸ்நாதக பிராமணர்கள் யார் என்பதை கிருஷ்ணன் ஜராசந்தனுக்குத் தெரிவிப்பது; கிருஷ்ணன் ஜராசந்தனை பகைவன் என்று சொல்வது…

Krishna, Bhima and Arjuna head to Magadha as brahmins in guise.

வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்னான், "ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகாக எழுந்து நிற்கும் மகதத்தின் பெரும் தலைநகரைப் பார். கால்நடைக் கூட்டங்களாலும், வற்றாத நீர்த்தேக்கங்களாலும், சரியான வரிசையில் நிற்கும் நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஐந்து மாளிகைளுடன் இருக்கும் இந்த நகரம் அனைத்து பேரிடர்களில் இருந்தும் விடுபட்டதாக இருக்கிறது.(1) பெரும் சிகரங்களையும், இடைவிடாமல் தொடர்ச்சியாக ஒன்றன் மேல் ஒன்று சாய்ந்தவையாக குளிர்ந்த நிழலைத் தரும் உயர்ந்த மரங்களையும் கொண்ட வைஹரம் {விபுலம்}, வராஹம், ரிஷபம், ரிஷிகிரி மற்றும் காண்பதற்கினிய சைத்தியா {சைத்தியகம்} ஆகிய ஐந்து பெரும் மலைகளும் அந்த கிரிவ்ரஜம் என்ற நகரத்திற்கு பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.(2,3) அந்த மலைகளின் மார்புகள் காண்பதற்கினிய கானகம் மற்றும் நறுமணம் வீசும் லோத்திர மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்களாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.(4) இங்கேதான் கடும் நோன்புகள் நோற்ற சிறப்பு வாய்ந்த கௌதமர் {தீர்க்கதமஸ்}, சூத்திரப் பெண்ணான ஔசிநரியிடம் {உசீநரனின் மகளிடம்} கக்ஷீவத் {கக்ஷீவான்} மற்றும் பிற கொண்டாடப்பட்ட மகன்களைப் பெற்றெடுத்தார்[1].(5) கௌதமரிடம் இருந்து உற்பத்தியான அந்த குலம் இன்னும் இயல்பான மனித குலத்தின் (ஏகாதிபதிகளின்) ஆட்சியில் வாழ்வது, கௌதமர் மன்னர்களிடம் கொண்ட அன்பின் சாட்சியாக இருக்கிறது.(6) ஓ அர்ஜுனா, பழங்காலத்தின் அங்க, வங்க தேசங்கள் மற்றும் பிற தேசங்களின் பெரும் சக்தி வாய்ந்த ஏகாதிபதிகள் கௌதமரின் வசிப்பிடமான இந்த இடத்திற்கு வந்து மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கழித்தனர்.(7)

[1] இந்தக் கதையை ஆதிபர்வம் 104 பகுதியில்  படிக்கலாம்

ஓ பார்த்தா {அர்ஜுனா}! கௌதமரின் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும், காண்பதற்கினிய அரச மரங்களையும், அழகான லோத்திர மரங்களையும் பார்.(8) பழங்காலத்தில் அங்கே எதிரிகளைக் கொல்லும் அர்ப்புதன், சக்ரவாபின், சுவஸ்திகன் ஆகிய நாகர்களும், மணி என்ற சிறந்த நாகனும் வசித்தனர்.(9) மகதர்களின் நாடு பஞ்சத்துக்கு ஆட்படக்கூடாது என்பது அந்த மனுவின் ஆணையே. கௌசிகரும் மணிமத்தும் {மணிமானும்} கூட இந்த நாட்டுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்[2].(10) காண்பதற்கினியதும், தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காததுமான இப்படிப்பட்ட நகரத்தைக் கொண்டிருக்கும் ஜராசந்தன், மற்ற ஏகாதிபதிகளைப் போல அல்லாமல், தனது நோக்கங்களின் கனியை அடையத் தீவிரமாக முயல்கிறான். இருப்பினும், நாம் அவனை {ஜராசந்தனைக்} கொன்று அவனது செருக்கைத் தணிப்போம்" என்றான் {கிருஷ்ணன்}.(11)

[2] கும்பகோணம் பதிப்பில், கிருஷ்ணன் சொல்வதாக இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: "பாண்டரம், விபுலம், வாராகம், சைத்யகம், மாதங்கம் எனும் இவ்வைந்து சிறந்த பர்வதங்களிலும் ஸகலஸித்தர்களின் கிருஹங்களும், மஹாத்மாக்களான ஸந்யாஸிகள் ரிஷிகள் இவர்களின் ஆச்ரமங்களும், விருஷபன், தமாலன், மஹாவீர்யன் என்னும் நாகர்களுடைய கிருஹங்களும், கந்தர்வர்கள், ராக்ஷஸர்களின் வீடுகளும் இருக்கின்றன. கக்ஷீவானென்னும் முனியின் தவப்பெருமையினால் தபோதங்கள் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஸித்ததீர்த்தங்களெனவும் சொல்லப்படுகின்றன. மணிமானென்னும் நாகனைக் கண்டமாத்திரத்தினாலேயே மனிதன் க்ஷேமத்தையும், ஸுகத்தையும் அடைவான். இப்படி நாற்புறங்களிலும் வெல்லமுடியாத அழகிய நகரத்தையடைந்ததுதான் ஜராஸந்தன் ஒப்பற்ற காரிய ஸித்தியை நினைக்கிறான். நாம் இப்போது ஸமீபத்தில் போய் அவன் கர்வத்தை போக்கிவிடுவோம்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் சொன்னார், "இப்படிப் பேசிச்சென்ற அபரிமிதமான சக்தி படைத்த இரண்டு பாண்டவர்களும் விருஷ்ணிகுலத்தவனுமான {கிருஷ்ணனுமான} பங்காளிகள், மகத நகரத்திற்குள் நுழைந்தனர்.(12) பிறகு அவர்கள் தாக்குதலுக்கு வளைந்து கொடுக்காத நகரமான மகிழ்ச்சியான நால்வகை குடிமக்களும் நிறைந்த, விழாக்களுக்குப் பஞ்சமில்லாத கிரிவ்ராஜ நகரத்தை அணுகினர்.(13) அந்த நகரத்தின் வாயிலை வந்தடைந்த அந்தப் பங்காளிகள் (அந்த வாயிலைக் கடந்து செல்லாமல்) பிருஹத்ரதன் குலத்தாராலும், அந்நாட்டு குடிமக்களாலும் வழிபடப்பட்டு, அவர்கள் பார்த்துப் பார்த்து ஆனந்தமடையும் சைத்யக மலையின் சிகரங்களைத் தங்கள் கணைகளால் துளைக்க தொடங்கினர்.(14,15) பிருஹத்ரதன், அங்கேதான் ரிஷபன் என்ற மனித ஊனுண்ணியை கொன்று, அந்தப் பெரும் விலங்கின் {ரிஷபனின்} தோலைக் கொண்டு மூன்று பெரிய பேரிகைகளைத் தனது நகரத்தில் செய்து வைத்தான். அந்தப் பேரிகைகளை ஒரு முறை அடித்தாலே, அதன் ஒலி ஒரு மாத காலத்திற்கு நிலைத்திருக்கும். தெய்வீக மலர்களால் மூடியிருந்த அந்த பேரிகைகள் தொடர்ந்து இனிமையான ஒலியை எழுப்பி வந்த இடமும், மகதர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதுமான சைத்யக மலைச்சிகரத்தை அந்தப் பங்காளிகள் உடைத்தெறிந்தனர். ஜராசந்தனைக் கொல்ல விரும்பிய அவர்களின் செயல்கள் அனைத்தும், எதிரியின் தலையில் தங்கள் காலை வைப்பது போல இருந்தன.(16-19) அசைக்க முடியாததும், பெரியதும், உயரமானதும், பழமையாதும், கொண்டாடப்பட்டதும், மலர்களாலும் நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த மலைச்சிகரத்தை தங்கள் உறுதியான பலம் வாய்ந்த கரங்களால் உடைத்து எறிந்தனர். பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அந்த நகரத்திற்குள் நுழைந்தனர்.(20,21)

அந்த நகரத்தில் வாழ்ந்த கல்விமான்களான பிராமணர்கள் தீய சகுனங்களைக் கண்டு ஜராசந்தனிடம் சொன்னார்கள்.(22) புரோகிதர், மன்னனை யானையின் மீது அமர்த்தி, ஊதுவத்தி ஏற்றிச் சுற்றிப் போட்டனர். பேராற்றல் கொண்ட ஜராசந்தனும், தீ சகுனங்களால் ஏற்படும் விளைவுகளை விரட்ட, சரியான நோன்புகள் கொண்ட வேள்விக்கு ஏற்பாடு செய்தான்.(23) அதே வேளையில் ஓ பாரதா {ஜனமேஜயா}, வெறுங்கையாலோ, ஆயுதங்களற்றோ ஜராசந்தனுடன் போர் புரிய விரும்பிய அந்தப் பங்காளிகள், ஸ்நாதக பிராமணர்களின் வேடத்தில் அந்த நகரத்திற்குள் நுழைந்தனர்.(24) அழகிய மலர்கள், பொருட்கள், மனிதனின் ஆசைக்குகந்த அனைத்து வகை பொருட்களுடன் கூடிய அழகான கடைகளை  அவர்கள் அங்கே கண்டனர்.(25) மனிதர்களில் சிறந்தவர்களான கிருஷ்ணன், பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோர், அந்தக் கடைகளைக் கண்டபடியே பொது வழி சாலையில் நடந்து சென்றனர். பெரும் பலம் கொண்ட அவர்கள், மலர் வியாபாரிகளிடம் இருந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பூ மாலைகளைப் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டனர்.(26) பல வகை நிறங்களிலான ஆடைகளை உடுத்தி, பூமாலைகளைத் தரித்துக் கொண்டு, காதில் குண்டலங்களுடன் இருந்த அந்த வீரர்கள், மாட்டு மந்தையைக் காணும் இமாலய சிங்கங்களென பெரும் புத்திகூர்மை கொண்ட ஜராசந்தனின் வசிப்பிடத்தைக் கண்டு அதனுள் நுழைந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, சந்தனம் பூசப்பட்ட அந்த வீரர்களின் கரங்கள், சால மரத்தைப் போல இருந்தன. மரங்களைப் போன்ற கழுத்துகளையும், அகன்ற மார்புகளையும் கொண்டு, யானைகளைப் போல இருந்த அந்த வீரர்களைக் கண்ட மகத நாட்டு மக்கள் பெரிதும் வியப்படைந்தனர்(27-29). அந்த மனிதர்களில் காளைகள், மக்களால் நிறைந்த மூன்று வாயில்களைக் கடந்து, பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் மன்னனை அணுகினர்.(30) விரைவாக எழுந்த ஜராசந்தன், அவர்களுக்கு கால் கழுவ நீரும், தேனும் மற்ற பிற பொருட்களுடன் கூடிய அர்க்கியத்தையும் கொடுத்து அவர்களைக் கௌரவித்தான். அந்தப் பெரும் மன்னன் அவர்களைப் பார்த்து, "உங்கள் வரவு நல்வரவாகட்டும்!" என்றான்.(31,32) 

ஓ ஜனமேஜயா, இதைக் கேட்ட பார்த்தனும் {அர்ஜுனனும்} பீமனும் அமைதியாக நின்றனர். அந்த ஏகாதிபதியிடம் {ஜராசந்தனிடம்} கிருஷ்ணன், "ஓ மன்னர்களின் மன்னா, இவர்கள் இருவரும் {பீமனும் அர்ஜுனனும்} நோன்பு காக்கின்றனர். எனவே அவர்கள் பேச மாட்டார்கள்.(33) அவர்கள் இன்று நள்ளிரவு வரை பேசமாட்டார்கள். அதன்பிறகே அவர்கள் பேசுவார்கள்!" என்றான். அந்த மன்னன் தனது விருந்தினர்களுக்கு {கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன்}, வேள்வி அரங்கில் ஓர் இடம் கொடுத்து தங்க வைத்து, தனது தனி அறைக்குள் ஓய்ந்திருக்கச் சென்றான்.(34) நடு இரவு வந்ததும், பிராமண உடையில் இருந்த தனது விருந்தினர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான் {ஜராசந்தன்}. ஸ்நாதக பிராமணர்கள் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், உடனே அது நள்ளிரவாக இருந்தாலும் அவர்களை வந்து சந்திப்பது அந்த மன்னன் {ஜராசந்தன்} ஏற்றிருக்கும் நோன்பாகும்.(35,36)

அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜராசந்தன்}, தனது விருந்தினர்களின் விசித்திரமான ஆடைகளைக் கண்டு மிகவும் வியப்படைந்தான். இருப்பினும், அவர்களுக்காக மதிப்புடன் காத்திருந்தான் {அவர்களுக்குப் பணிவிடை செய்தான்}.(37) மறுபுறம், ஓ பாரத குலத்தில் சிறந்தவனே, அந்த மனிதக்காளைகள், எதிரிகளைக் கொல்பவர்கள், ஜராசந்தனைக் கண்டு,(38) "ஓ மன்னா, சிரமமில்லாமல் முக்தி அடைவாயாக." என்றனர். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியிடம் இதைச் சொல்லி, ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.(39) ஓ மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பிராமண வேடத்தில் இருந்த பாண்டுவின் மகன்களிடமும் {பீமன் மற்றும் அர்ஜுனனிடமும்} யாதவ குலத்தவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, ஜராசந்தன், "இருக்கைகளில் அமருங்கள்" என்றான்.(40) அந்த மனிதக்காளைகள் பெரும் வேள்வியை நடத்தும் மூன்று புரோகிதர்கள் போல அமர்ந்து அழகாக இருந்தனர்.(41)

ஓ குரு குலத்தவனே {ஜனமேஜயா} வாய்மைக்கு உறுதியாகத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மன்னன் ஜராசந்தன், தனது விருந்தினர்களின் வேடத்தை உணர்ந்து அவர்களிடம், "இந்த முழு உலகத்திலும் உள்ள ஸ்நாதக நோன்பை கடைப்பிடிக்கும் பிராமணர்கள், மலர்களையும், மாலைகளையும், நறுமணப் பொருட்களையும் தங்கள் மேனியில் தரிப்பதில்லை என்பதை நான் அறிவேன். எனவே, மலர்களால் உங்களை அலங்கரித்துக் கொண்டு, கைகளில் வில்நாணிழுக்கும் வடுக்களை {காயங்களைப்} பெற்றிருக்கும் நீங்கள் யார்?(42,43) வண்ண ஆடைகள் உடுத்தி, காலமற்ற காலத்தில் மலர்களால் அலகரித்துக் கொண்டு, பிராமண சக்தியுடன் இருக்கும் நீங்கள் உங்களை நான் பிராமணர்கள் என்று எண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள். வாய்மையே மன்னர்களையும் அலங்கரிக்கிறது.(44) அரசகோபத்தின் அச்சமில்லாமல் சைத்யக மலைச்சிகரத்தை உடைத்து, மாற்றுருவத்தில், முறையற்ற வாயில் வழியாக ஏன் வந்தீர்கள்?(45) பிராமணனின் சக்தி அவனது வாக்கிலேயே இருக்கிறது (செயலில் அல்ல). உங்கள் இந்தக் காரியங்கள், நீங்கள் காட்டிக்கொள்ளும் குலத்திற்கு ஏற்புடையவை அல்ல. எனவே உங்கள் நோக்கம் என்ன என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்.(46) முறையற்ற வழியில் இங்கே வந்தும், நான் கொடுத்த மரியாதையை ஏன் நீங்கள் ஏற்கவில்லை? நீங்கள் என்னிடம் வந்த நோக்கம் என்ன?" என்றான் {ஜராசந்தன்}.(47) 

மன்னனால் இப்படிச் சொல்லப்பட்டதும், பேச்சில் வல்லவனான உயர் ஆன்ம கிருஷ்ணன் அந்த ஏகாதிபதியிடம் {ஜராசந்தனிடம்} மரணக் குரலுடன் அமைதியாகப் பேசினான்.(48) 

கிருஷ்ணன், "ஓ மன்னா, எங்களை ஸ்நாதக பிராமணர்கள் என்று அறிவாயாக. ஓ ஏகாதிபதி {ஜராசந்தா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய அனைவரும் ஸ்நாதக நோன்பை நோற்கத் தகுதியுடையவர்களே.(49) இந்த நோன்பு குறிப்பிட்ட மற்றும் பொதுவான விதிகளை (பலவற்றை) உள்ளடக்கியது. இந்த நோன்பை குறிப்பிட்ட விதிகளுடன் பின்பற்றும் க்ஷத்திரியன் செழிப்பை அடைகிறான்.(50) எனவே, நாங்கள் எங்களை மலர்களால் அலங்கரித்திருக்கிறோம். ஓ மன்னா {ஜராசந்தா}, மேலும் க்ஷத்திரியர்கள் தங்கள் சக்தியைக் கரங்களால் வெளிப்படுத்துவாரேயன்றி பேச்சால் அல்ல. எனவே, ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தா}, க்ஷத்திரியர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை அல்ல.(51) ஓ ஏகாதிபதி {ஜராசந்தா}, படைத்தவன் {பிரம்மன்} தனது சொந்த சக்தியையே க்ஷத்திரியனின் கரங்களில்  வைத்திருக்கிறான். நீ அதைக் காண வேண்டும் என்று விரும்பினால், நிச்சயம் அதை நீ இன்று காணலாம்.(52) பகைவனின் வசிப்பிடத்தை முறையற்ற வழியில் அடைய வேண்டும் என்பதும், நண்பனின் வசிப்பிடத்தை முறையான வழியில் அடைய வேண்டும் என்பதும் விதிக்கப்பட்டிருக்கும் விதிகளே ஆகும்.(53) ஒரு காரியத்தை சாதிப்பதற்காக பகைவனின் வசிப்பிடத்தை அடைந்தால், அவன் எங்களுக்குச் செய்யும் வழிபாடுகளை ஏற்கக்கூடாது என்பதும் நாங்கள் கொண்டிருக்கும் நிலைத்த நோன்பே" என்றான் {கிருஷ்ணான்}.(54)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்