Thursday, February 06, 2014

தேவர்களுக்கு முக்தி தந்த தாமிரபரணி! - வனபர்வம் பகுதி 88

Tamraparni bestowed salvation to gods | Vana Parva - Section 88| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)


தென் திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.

தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ பாரதா {யுதிஷ்டிரா}, எனது அறிவுக்கு எட்டிய வரை தெற்கில் இருக்கும் புனிதமான தீர்த்தங்களைக் குறித்து விரிவாக உரைக்கிறேன் கேள். அத்திசையில் புனிதமானதும் மங்களகரமானதுமான நீர் நிறைந்த கோதாவரி ஆறு ஓடுகிறது. அதன் இரு மருங்கும் துறவிகள் வசிக்கும் தோப்புகள் {Grove = தோப்பு, வனங்கள் என்றும் கொள்ளலாம்} இருக்கின்றன. அந்தத் திசையில் பறவைகளும் மான்களும் நிறைந்து, துறவிகளின் ஆசிரமங்களும் நிறைந்து பாவங்களையும் பயத்தையும் அகற்றும் வேணை நதியும், பீமரதி நதியும் ஓடுகின்றன.

ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்த இடத்தில் நிருகன் என்ற அரசமுனியின் நதியான பயோஷ்ணி ஆறு இருக்கிறது. அந்தணர்கள் அடிக்கடி வரும் அந்த ஆறு நீர் நிறைந்து காண்பதற்கு இனியதாக இருக்கிறது. உயர்ந்த தவப்பலன்களுடைய சிறப்புமிக்க மார்க்கண்டேயர், மன்னன் நிருகனின் குலத்தின் புகழைக் குறித்துப் பாடியிருக்கிறார். பயோஷ்ணியில் இருக்கும் வராகம் என்ற அற்புதமான தீர்த்தத்தில் மன்னன் நிருகன் செய்த வேள்வியைக் குறித்து மரியாதையுடன் அவர் {மார்க்கண்டேயர்} பாடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வேள்வியில் இந்திரன் தான் பெருமடக்காகக் குடித்த சோமத்தாலும், அந்தணர்கள் தாங்கள் பெற்ற பரிசுகளாலும் போதையுண்டிருந்தார்கள்.

(பாத்திரத்தில்) எடுத்துக்கொண்ட, அல்லது தரையில் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது காற்றால் அடித்துச் செல்லப்படும் பயோஷ்ணியின் நீர், ஒரு மனிதன் தான் சாகும் வரை செய்யும் பாவங்களில் இருந்து விடுவிக்கவல்லது. சொர்க்கத்தைவிட உயர்வான அந்தப் புனிதமான இடத்தில், திரிசூலம் தாங்குபவனால் {சிவனால்} படைத்து அளிக்கப்பட்ட அந்த இடத்தில் மகாதேவனின் உருவத்தைக் காணும் மனிதன் சிவலோகத்தை அடைகிறான். துலாக்கோலில் {Scale = தராசு} ஒரு புறம் கங்கையையும் அனைத்து நதிகளின் நீரையும் வைத்து, மறுபுறம் பயோஷ்ணியின் நீரை வைத்தால், எனது கருத்துப்படி பயோஷ்ணி அனைத்துத் தீர்த்தங்களை விடவும் பலன்களால் மேன்மையானதே.

ஓ பாரதகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, வருணசுரோதசம் என்ற மலையில் கனிகளும் கிழங்குகளும் நிறைந்ததும், வேள்வி மேடையைக் கொண்டதுமான புனிதமான மங்களகரமான மாடர வனம் இருக்கிறது. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா} பிரவேணியின் வடக்கே கண்வரின் ஆசிரமமும், துறவிகள் பயணிக்கும் பல வனங்களும் இருக்கின்றன. ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, சூர்ப்பாரகம் என்ற தீர்த்ததில் சிறப்பு மிக்க ஜமதக்னியின் இரண்டு வேள்வி மேடைகளான பாஷாணம், புனஸ்சந்திரை என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ பாரதா, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்தப் பகுதியில் துறவிகள் அடிக்கடி செல்லும் அசோகம் என்ற தீர்த்தம் இருக்கிறது. மேலும், ஓ யுதிஷ்டிரா, பாண்டியர்களின் நாட்டில் அகஸ்தியம், வருணம் என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, அங்கே பாண்டவர்களுக்கு {பாண்டியர்களுக்கு என்று நினைக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் Pandavas என்றே இருக்கிறது) மத்தியில் குமரிகள் என்று அழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நான் இப்போது தாமிரபரணியைக் குறித்து விளக்குகிறேன் கேள்.

பொதிகை மலையில்
அகத்தியர்
முக்தியின் மீதிருந்த விருப்பத்தால் உந்தப்பட்டு, தேவர்கள் அந்த ஆசிரமத்தில் நோன்புகள் நோற்றனர். மூன்று உலகங்களால் கொண்டாடப்படும், புனிதமான மங்களகரமான, சக்தியுடைய அபரிமிதமான குளிர்ந்த நீருடைய கோகர்ணம் என்ற தடாகம் அப்பகுதியில் இருக்கிறது. அசுத்த ஆன்மா கொண்ட மனிதர்கள் அந்தத் தடாகத்தை அடைவது மிகுந்த சிரமமானது. அந்தத் தீர்த்தத்துக்கு அருகில் அகஸ்தியருடைய சீடரின் புனிதமான ஆசிரமமும், தேவசபம் என்ற மலையும், நிறைய மரங்களும், புற்களும், கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன. அங்கே பெரும் பலனை அளிக்கக்கூடிய ரத்தினங்கள் நிறைந்த வைடூரியம் என்ற மலையும் இருக்கிறது. கனிகளும், கிழங்குகளும், நீரும் நிறைந்திருக்கும் அந்த மலையில் *அகஸ்தியரின் ஆசிரமம் இருக்கிறது.

ஓ மனிதர்களின் தலைவா, நான் இப்போது சூராஷ்டிர {சௌராஷ்டிர} நாட்டில் இருக்கும் புனிதமான இடங்கள், ஆசிரமங்கள், ஆறுகள் மற்றும் தடாகங்களைச் சொல்லப் போகிறேன். ஓ யுதிஷ்டிரா, அங்கே இருக்கும் கடற்கரையில் சமசோத்பேதமும், தேவர்களால் மதிக்கப்படும் தீர்த்தமான பிராபசமும் இருக்கின்றன என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். அவ்விடத்தில் தவசிகள் அடிக்கடி செல்லும் பிண்டாரகம் என்ற தீர்த்தம் இருக்கிறது. அது பெரும் பலனைக் கொடுக்கவல்லது.

அப்பகுதியில் விரைவான வெற்றிக்கு வழிவகுக்கும் பலம்வாய்ந்த மலையான உஜ்ஜயந்தம் இருக்கிறது. புத்திகூர்மையுள்ள தேவ முனிவரான நாரதர் அதை மதித்துப் பழமையான சுலோகத்தை உரைத்திருக்கிறார். ஓ யுதிஷ்டிரா! அதை நீ கேட்க வேண்டும். சூராஷ்டிரத்தில், பறவைகளும் விலங்குகளும் அதிகமாக இருக்கும் புனிதமான உஜ்ஜயந்த மலையில் தவச்சடங்குகளைச் செய்வதால், ஒரு மனிதன் சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறான். உருவம் கொண்டு வந்திருக்கும் பழமையானவனான {ஆதியானவனான} மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} வசிக்கும் பெரும் பலனையும், நிலைத்த அறத்தையும் கொடுக்கவல்ல துவாராவதி {துவாரகை} அங்கேதான் இருக்கிறது.

வேதங்களை அறிந்த அந்தணர்களும், ஆன்மாவின் தத்துவத்தை அறிந்த மனிதர்களும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனே நிலைத்த அறம் என்று சொல்கின்றனர். சுத்தமானவற்றில் அதிகச் சுத்தமான, நேர்மையானவற்றில் அதிக நேர்மையான, மங்களகரமானவற்றில் அதிக மங்களமானவன் கோவிந்தனே {கிருஷ்ணனே}. தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அந்தத் தேவர்களுக்குத் தேவனே {கிருஷ்ணனே} நித்தியமானவன். சுத்தமான ஆன்மாவாகவும், செயல்படும் வாழ்க்கை தத்துவமாகவும், தலைமையான பிரம்மனாகவும் இருக்கும் அவனே அனைவருக்கும் தலைவனாவான். புத்திக்கெட்டாத ஆன்மா கொண்ட ஹரியான அந்த மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அங்கு வசிக்கிறான்.

**************************************************************************
*அகஸ்தியரின் ஆசிரமம் இருக்கிறது.

நன்றி -தினமணி நாளிதழ்

அகத்தியர் மலை: பொதிகை சுற்றுலா செல்வோம் வாங்க..!

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.
தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. வழிபாடு என்பது நம்பிக்கையும், உளவியல்பூர்வமான உணர்வுமாகும்.
அது போலவே சித்தர் வழிபாடும். ஆம், சித்தர்களை யாராவது கண்டுள்ளார்களா என்றால் அதை விவரிக்க முடியாது. அது உளப்பூர்வமான உணர்வே.
அகத்தியர் வாழும் இப் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரை தரிசிக்கச் செல்வதை புனித பயணம் என்றும் சாகச பயணம் என்றும் கூறலாம்.
ஆபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கைக் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், பசுமையான புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப் பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், மிளா, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன (அச்சம் கொள்ள வேண்டாம், அகத்தியர் துணை இருக்கிறார்).
தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் முலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

போணக்காடு பிக்கெட் ஸ்டேசனிலிருந்து நடக்கத் தொடங்கிய அரை மணி நேர பயணத்தில் முதலில் அடைவது, முழு முதல் கடவுளான விநாயகர் கோவிலை. அங்கு அவரை வணங்கி, அவரது துணையுடன் (வழியில் யானைகளால் நமக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கு வேண்டுமென்றாலும் சரி, நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் தொடங்குவோம் என்ற நிலையில் எடுத்து கொள்ளலாம்) நடைப்பயணம் மீண்டும் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற பகுதியை அடைகிறோம். இங்கிருந்துதான் அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது. ஒருவர்பின் ஒருவராக நடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கொஞ்சம் அகலமான பாதையும் உண்டு.
இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம். அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.
குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை (கருப்பசாமி என்றுóம், வனதேவதை என்றும் கூறுகின்றனர்) வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.
சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் மிகவும் அடர்த்தியான வனப் பகுதியைக் கடந்து (இப் பகுதி முழுவதும் யானைகள் வாழ்விடமாகும்) பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம் தொடங்குகிறது. 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.
இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது.(இப் பகுதி சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர் வந்துள்ளது என்கின்றனர்) கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (இப் பகுதியில் உள்ள பாறைகளில் நமது வீடுகளில் உள்ள மாவு அரைக்கும் ஆட்டுக்கல் குழி போன்று உள்ளது. இதில் சித்தர்கள் மூலிகைகள் அரைக்க பயன்படுத்துகின்றனர் என்ற செவிவழிச் செய்தியும் உள்ளது) கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.
இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.
இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப் பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச் சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.
(சுமார் 2,000 அடி உயரம் கொண்ட இச் செங்குத்தான பகுதியை நாம் கடந்து செல்லும்போது நமது உடலில் உள்ள அனைத்து அவயங்களும் வேலை செய்யும், இப்படி ஒரு பயணம் நமக்குத் தேவைதானா என்றுகூட சிலருக்கு எண்ணம் ஏற்படலாம்.)
அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும். அந்த உணர்வில் நம்மில் எத்தனை ஆனந்தம், எத்தனை உள்ளப் பூரிப்பு, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கண்களில் ஆனந்த நீர் மல்கி நம்மை நாம் மறக்கும் பரவச நிலையை என்னவென்று சொல்வது!
இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென சீதோஷ்ண நிலை மாறும், சில நேரங்களில் திடீரென வெயில் ஏற்படும், சில நேரம் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.
மேலும் மூடுபனியுடன் பலத்த காற்று வீசும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்போது அருகில் இருப்பவர் யார் என்று பகல் பொழுதில்கூட சில நேரங்களில் தெரியாது.
இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். வழிபாட்டின் நிறைவில் அனைவரது வேண்டுதலும், மீண்டும் எங்களுக்கு இந்தத் தரிசன வாய்ப்பைத் தாருங்கள் என்பதாகத்தான் இருக்கும்.
தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.
இந்த மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.
இந்தப் பயணத்தின்போது காட்டு மிருகங்களின் தொந்தரவு ஏற்படாமல் இருக்கவும், பயணக் களைப்பு தெரியாமல் இருக்கவும் அனைவரும் "கும்ப முனிக்கு அரோகரா, குறுமுனிக்கு அரோகரா' என்று உச்சரித்தவாறே சென்று வருவர்.
பொதிகை மலைப் பயண அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சென்று வந்தால் மட்டுமே உணர்வுப்பூர்வமாக அறிய முடியும்.
இந்தப் பயணத்தில் விரதமிருந்து சென்று வந்தால் அகத்தியர் அருளைப் பெறலாம். ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு விரதமிருந்து சென்று வரும் இப்பொதிகை மலை யாத்திரையில், அகத்திய பெருமான் பக்தர்களுக்கு, ஓளி வடிவில் அவ்வப்போது காட்சி அருள்வதையும் அறியமுடிகிறது.
தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்தரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர். வனத்தில் அதிக மழை உள்ள நேரங்களில் பாதுகாப்பு கருதி பக்தர்களை வனத்துக்குள் செல்ல அனுமதிப்பதில்லை.
தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரள வனத் துறை செய்துள்ள ஏற்பாடு மற்றும் நடவடிக்கையை கேரள அரசையும், கேரள வனத் துறையையும் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். குறிப்பாக பக்தர்களை வனத்துக்குள் அழைத்துச் செல்ல வழிகாட்டியை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம்.
வனத்தில் ஆங்காங்கே குப்பைகள் போட, கூடைகள் வைத்து அவற்றை அவ்வப்போது எரிப்பது, முற்றிலும் விலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில் பக்தர்கள் பாதுகாப்புடன் தங்கவும், அங்கு குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஏற்படுத்தி அவற்றை சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்ட செயல்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இதைத் தமிழக வனத் துறையினர் பின்பற்றுவார்களா?
தமிழ் முனிவரை தரிசிக்க, தமிழகம் அனுமதிக்க வேண்டும்: பொதிகை மலை உச்சியில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை அடியைச் சேர்ந்த எம்.எஸ்.சுந்தரம்பிள்ளை என்பவர்தான் முதன் முதலில் 1970-ல் அகத்தியர் சிலையை நிறுவியுள்ளார் (தற்போது உள்ளது மூன்றாவது அகத்தியர் சிலை என்றும். இது கேரள அரசால் நிறுவப்பட்டது என்றும் கூறுகின்றனர்). அதுமுதல் அவரது குடும்பத்தினரும், பாபாநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக வனத் துறை மற்றும் கேரள வனத் துறை அனுமதி பெற்று காரையாறு அணையிலிருந்து படகில் அக்கரைக்குச் சென்று துலக்கர் மொட்டை, உள்ளாறு, சிற்றாறு, கன்னிகட்டி வனத்துறை ஓய்வு விடுதி, பேயாறு, காட்டாறு, சங்குமுத்திரை வழியாக பொதிகை மலைக்குச் சென்று வந்தனர்.
1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.
இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. தற்போது தமிழக பக்தர்கள் கேரளம் வழியாகச் சென்று வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வழிப் பயணம் மற்றும் பயணச் செலவு ஏற்படுகிறது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்