Saturday, June 14, 2014

கண்ணன் வந்தான்! - வனபர்வம் பகுதி 182அ

Visit of Krishna! | Vana Parva - Section 182a | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

கிருஷ்ணன் சத்யபாமாவுடன் காம்யக வனம் சென்று பாண்டவர்களைச் சந்தித்தல்; நாரதர் மற்றும் மார்க்கண்டேயர் வருகை; கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்க மார்க்கண்டேயர் விளக்கங்களைச் சொல்லத் தொடங்குதல்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குருவின் மகனே {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனும் மற்றவர்களும் காம்யக வனத்தை அடைந்ததும், முனிவர்க்கூட்டத்தால் அன்போடு வரவேற்கப்பட்டு, அங்கேயே கிருஷ்ணையுடன் {திரௌபதி} வாழ்ந்தனர். பாண்டுவின் மகன்கள் அங்கே பாதுகாப்புடன் வசித்து வந்த போது, பல அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட அந்தணர், "சூரனின் வழித்தோன்றலும், வலிய கரங்களும், சுயக்கட்டுப்பாடும் கொண்டவனும், உயர்ந்த அறிவாளியும், அர்ஜுனனுக்கு அன்பிற்குரிய நண்பனுமானவன் {கிருஷ்ணன்} இங்கே வருவான். குருவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவர்களே, நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள் என்பதை ஹரி {கிருஷ்ணன்} அறிவான். அந்த ஹரி {கிருஷ்ணன்} எப்போதும் உங்களைக் காண விரும்புபவனாவான். அவன் எப்போதும் உங்கள் நன்மையை நாடுபவன். மேலும், பல வருடங்களாகக் கடும் தவத்திற்கும், கல்விக்கும், நோன்புக்கும் தன்னை அர்ப்பணித்திருந்த மார்க்கண்டேயரும் உங்களை இங்கே வந்து சந்திப்பார்" என்றார் {அந்த அந்தணர்}.


இவ்வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் சைப்யம், சுக்ரீவம் என்ற குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில், சத்யபாமாவுடன் கூடியவனாகத் தேரோட்டிகளில் சிறந்தவனான கிருஷ்ணன், புலோமனின் மகளான சச்சியுடன் கூடிய இந்திரன் போல அங்கே காணப்பட்டான். குருவின் வழித்தோன்றல்களில் மிகவும் நேர்மையானவர்களைக் காண விரும்பிய தேவகியின் மகன் {கிருஷ்ணன்} அங்கே {காம்யக வனத்திற்கு} வந்தான். புத்திகூர்மையுடைய கிருஷ்ணன், தனது தேரில் இருந்து இறங்கி, நிர்ணயிக்கப்பட்ட வழியின்படி அந்த அறம்சார்ந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்பாக இதய மகழ்ச்சியுடன் நிலம்படிந்தான் {நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது}. அதேபோல, பலசாலி மனிதர்களில் முதன்மையான பீமனின் முன்னிலையிலும் அவ்வாறே செய்தான். பின்பு அவன் {கிருஷ்ணன்} தௌமியருக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தான். அதே வேளையில் இரட்டையர்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும்} அவனிடம் {கிருஷ்ணனின் முன்பாக} நிலம்படிந்தனர். பிறகு, சுருள் முடி கொண்ட அர்ஜுனனை வாரி அணைத்துக் கொண்டு, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்} ஆறுதல் வார்த்தைகள் பேசினான் {கிருஷ்ணன்}.

அன்பிற்குரிய அர்ஜுனன் தன் அருகே வரவும், தாசார்ஹ குலத் தலைவனின் வழித்தோன்றலான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கிருஷ்ணன்}, அவனைக் {அர்ஜுனனைக்} கண்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால், மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டான். அதே போல, கிருஷ்ணனின் அன்பிற்குரிய மனைவியான சத்யபாமாவும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அன்பிற்குரிய மனைவியான துருபதனின் மகளைத் {திரௌபதியைத்} தழுவினாள். தங்கள் மனைவியுடனும் {திரௌபதியுடனும்}, புரோகிதருடன் {தௌமியருடனும்} கூடிய பாண்டுவின் மகன்கள், வெண்தாமரையைப் போன்ற கண்களைக் கொண்ட கிருஷ்ணனுக்குத் தங்கள் மரியாதைகளைச் செய்து எல்லாப்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். படைக்கப்பட்ட அனைத்திற்கும் மதிப்புமிக்கத் தலைவனும் பலம்வாய்ந்த தலைவனுமான சிவன் (தனது மகன்) கார்த்திகேயனுடன் சேர்ந்திருக்கும் போது பெறும் அழகைப் போலவே, செல்வங்களை வெல்பவனும், அசுரர்களுக்குப் பயங்கரமானவனுமான பிருதையின் {குந்தியின்} மகன் அர்ஜுனனுடன் கூடி நிற்கும்போது கிருஷ்ணன் அழகாக இருந்தான்.

வளையங்களுடன் கூடிய கிரீடத்தைத் தனது தலையில் தாங்கியிருந்த அர்ஜுனன், கானகத்தில் {இதுவரை} என்னவெல்லாம் நடந்தன என்பது குறித்துச் சுருக்கமாகக் கதனின் [1] அண்ணனான கிருஷ்ணனிடம் விவரித்தான். பிறகு அர்ஜுனன், "சுபத்திரையும், அவளது மகன் அபிமன்யுவும் எப்படி இருக்கிறார்கள்?" என்று {கிருஷ்ணனிடம்} கேட்டான். மதுவைக் கொன்றவனான கிருஷ்ணன், பிருதையின் மகனுக்கும், புரோகிதருக்கும் {தௌமியருக்கும்} நிர்ணயிக்கப்பட்ட முறையில் தனது மரியாதைகளைச் செலுத்திவிட்டு, அவர்களுடன் அமர்ந்து, மன்னன் யுதிஷ்டிரனைப் புகழ்ந்து பேசினான். அவன் {கிருஷ்ணன்}, "ஓ! மன்னா, நாடுகளை வெல்வதைக் காட்டிலும் அறமே விரும்பத்தக்கது; அது உண்மையில் ஒரு தவப்பயிற்சியாகும். கடமை உமக்கு நிர்ணயித்தவற்றுக்கு உண்மையுடனும் கள்ளங்கபடமற்றும் கீழ்ப்படிந்த நீர், இவ்வுலகையும், இதைத் தொடர்ந்து வரும் உலகையும் வென்றுவிட்டீர். முதலில் {பிரம்மச்சரிய காலத்தில்} நீர் அறக்கடமைகளை ஆற்றும்போது கல்வி பயின்றீர். முறையான வழியில் முழுமையான ஆயுத அறிவியலை அடைந்து, க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்ட முறையான வழிகளில் செல்வத்தை வென்று, எல்லாக்காலங்களிலும் கொண்டாடப்படும் வேள்விச் சடங்குகளைச் செய்தீர். நீர் சிற்றின்பங்களில் மூழ்கவில்லை; ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, இன்ப நோக்கங்களைக் கொண்டு {காமத்தினால்} நீர் செயல்படுவதுமில்லை, அல்லது, செல்வத்தில் பேராசை கொண்டு, நீர் அறம் வழுவியதில்லை; இதன் காரணமாகவே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, நீர் அறம்சார்ந்த மன்னன் {தர்மராஜா} என்ற பெயர் கொண்டிருக்கிறீர். நாடுகளையும், செல்வங்களையும், இன்ப வழிகளையும் {போகங்களையும்} வென்றும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கொடை {தானம்}, உண்மை {சத்தியம்}, தவம், நம்பிக்கை, தியானம், இரக்கம் மற்றும் பொறுமை ஆகியவையே உமக்குச் சிறந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

[1] வசுதேவருக்கும் தேவரக்ஷிதா என்ற பெண்ணுக்கும் பிறந்தவன் ஆவான். இவன் கிருஷ்ணனுக்குத் தம்பியாவான்.

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, குருஜாங்காலத்தின் மக்கள், சபாமண்டபத்தில் சீற்றத்துடன் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} நிலையைக் கண்ட போது, அறம் மற்றும் பண்பாட்டுக்குப் புறம்பான, மிகவும் வெறுக்கத்தக்க அதை {அச்சம்பவத்தை}, உம்மைத் தவிர வேறு யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? அனைத்து விருப்பங்களும் நிறைவேறி ஐயமின்றி, விரைவில் மனிதர்களை நீண்ட காலம் ஆள்வீர். நிபந்தனைகள் முழுமையடைந்ததும், குருக்களைத் தண்டிக்க இதோ நாம் தயாராக இருக்கிறோம்" என்றான் {கிருஷ்ணன்}.

தாசார்ஹ குலத்தின் முதன்மையானவனான கிருஷ்ணன், தௌமியரிடமும், பீமனிடமும், யுதிஷ்டிரனிடமும், இரட்டையர்கள் மற்றும் கிருஷ்ணையிடமும், "உங்கள் ஆசிகளால் மணிமுடி தாங்கிய அர்ஜுனன், அனைத்து ஆயுதங்களின் அறிவியலையும் அறிந்து திரும்பிவிட்டான்" என்றான். பிறகு, நண்பர்கள் சூழ இருந்த தாசார்ஹ குலத்தின் தலைவனான கிருஷ்ணன், யக்ஞசேனனின் மகளான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, ஓ! யக்ஞசேனன் மகளே, உனது மகன்கள், ஆயுதங்களின் அறிவியலைக் கற்பதற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நேர்மையான நண்பர்களுடன் நன்னடத்தையுடன் நடந்து கொள்கிறார்கள். உனது தந்தையும், உனது உடன்பிறந்த சகோதரர்களும், அவர்களுக்கு ஒரு நாட்டையும், சில இடங்களையும் அளித்தார்கள்; ஆனால் பிள்ளைகளுக்குத் துருபதனின் இல்லத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை, தாய்மாமன்கள் இல்லத்திலும் அவர்களுக்கு அது தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக ஆனர்த்தர்களின் நிலத்திற்கு வந்து, ஆயுதங்களின் அறிவியலைப் பயில்வதில் மிகவும் மகிழ்கிறார்கள். உனது மகன்கள் விருஷ்ணிகளின் நகரத்துக்குள் நுழைந்த உடனே, அங்கே இருக்கும் மக்களுக்கு விருப்பமானவர்களாகிறார்கள். நீ எப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிநடத்துவாயோ, அல்லது மரியாதைக்குரிய குந்தி எப்படி வழிநடத்துவாளோ அப்படியே சுபத்திரை அவர்களைக் கண்காணிப்புடன் வழிநடத்துகிறாள். உண்மையில், அவள் மேலும் கவனமாகவே இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும்.

ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, அநிருத்தன், அபிமன்யு, சுநீதன், பானு ஆகியோருக்கு குருவாக இருப்பது போலவே, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} அவர்களுக்கு {உனது பிள்ளைகளுக்கு} குருவாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். ஒரு நல்ல குருவாக, கதாயுதம், வாள், கேடயம், ஏவுகணை ஆகியவற்றைத் தாங்கவும், தேரோட்டவும், குதிரையோட்டவும், வீரமாக இருக்கவும் தொடர்ந்து பயிற்றுவிக்கிறான். ஓ! துருபதனின் மகளே {திரௌபதி}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, அவர்களுக்கு நல்ல பயிற்சியை அளித்து, பலதரப்பட்ட ஆயுதங்களை முறையாகப் பயிற்றுவித்து, உனது மகன்கள் மற்றும் அபிமன்யுவின் வீரச்செயல்களால் திருப்தியடைகிறான். உனது மகன்கள் விளையாட்டுக்காக வெளியே செல்லும்போது, அவர்கள் ஒவ்வொருவரையும், ரதங்களும், குதிரைகளும், வாகனங்களும், யானைகளும் தொடர்ந்து செல்கின்றன" என்றான் {திரௌபதியிடம் கிருஷ்ணன்}.

பிறகு கிருஷ்ணன், அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரனிடம், "தாசார்ஹ குலத்தின் போர்வீரர்களும், குகுரர்களும், அந்தகர்களும், ஓ! மன்னா, உமது கட்டளையை ஏற்பார்கள். அவர்கள் நீர் விரும்பியதைச் செய்வார்கள். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, குதிரைவீரர்கள், காலாட்படை, குதிரைகள், ரதங்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டு, பலராமனின் தலைமையில் காற்றுபோல (எதிர்த்து நிற்க முடியாதபடி) வரும் மது குலத்தின் படை உமது கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கிறது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பாவிகளில் தீயவனும் திருதராஷ்டிரன் மகனுமான துரியோதனனை, அவனைத் தொடர்பவர்களுடனும், அவனது நண்பர்கள் கூட்டத்துடனும், சௌபத்தின் தலைவன் சென்ற வழியே விரட்டுவீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சபா மண்டபத்தில் ஏற்கப்பட்ட நிபந்தனைகளின் படி நீர் இருப்பதை வரவேற்கிறோம். ஆனால், தாசார்ஹ படை வீரர்களால் எதிரிகள் கொல்லப்பட்டு, ஹஸ்தினா நகரம் {ஹஸ்தினாபுரம்} உமக்காகத் தயாராக இருக்க நீர் அனுமதி அளிப்பீராக. அப்போது, நீர் உமது பாவங்களில் இருந்து விடுபட்டு, துன்பத்தை விலக்கி, அற்புதமான நிலப்பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் நன்கு அறியப்பட்ட அந்த ஹஸ்தினா நகரத்தில் நுழையும்போது, அங்கு நீர் விரும்பும் இடங்களில் உலவி இன்பமாக இருக்கலாம்" என்றான் {கிருஷ்ணன்}.

பிறகு தயாள குணம் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களில் சிறந்தவனான கிருஷ்ணன் தெளிவாகச் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டு, அதை மெச்சி, ஆழ்ந்து ஆலோசித்த பிறகு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} கூப்பிய கரங்களுடன், "ஓ! கேசவா, நீயே பாண்டு மகன்களின் புகலிடம் என்பதில் ஐயமில்லை; பாண்டுவின் மகன்கள் உன்னிலே தங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வரும்போது, நீ சொன்ன பணியை நீ செய்வாய் என்பதில் ஐயமில்லை. அதைவிட அதிகமாகவும் செய்வாய். உறுதி கூறியபடி, நாங்கள் பனிரெண்டு வருடங்களைத் தனிமையான கானகங்களில் கழித்தோம். ஓ! கேசவா, நிர்ணயிக்கப்பட்ட வழியில் மறைந்திருக்கும் காலத்தையும் {அஜ்ஞாதவாசத்தையும்} முழுமையாக முடித்த பின்னர்ப் பாண்டுவின் மகன்கள் உம்மைப் புகலிடமாகக் கொள்வர். ஓ! கிருஷ்ணா, இதுவே உம்முடன் தொடர்புடையோரின் நோக்கமாக இருக்க முடியும். பாண்டுவின் மகன்கள் உண்மையின் வழியில் இருந்து பிறழமாட்டார்கள், ஏனெனில், பிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் தானத்துடனும், தங்கள் மக்கள் மீது கொண்ட பக்தியுடனும், தங்கள் மனைவியர் மற்றும் உறவினருடனும் உன்னிலேயே பாதுகாவலனைக் கொண்டிருக்கின்றனர்" என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்