Sunday, August 24, 2014

கர்ணனின் திக்விஜயம்? - வனபர்வம் பகுதி 252

Digvijaya of Karna!  | Vana Parva - Section 252 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பூமியின் நாற்புறமும் உள்ள மன்னர்களையும் வீழ்த்திய கர்ணன் மீண்டும் ஹஸ்தினாபுரம் திரும்பியது; கர்ணனை துரியோதனன் பாராட்டியது; துரியோதனனும், சகுனியும் அடைந்த பெருமிதம்...


வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், "பிறகு, ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியான கர்ணன், பெரிய படை சூழ துருபதனின் அழகிய நகரத்தை முற்றுகையிட்டான். அதன்பிறகு நடைபெற்ற கடும்போரில், அந்த வீரனைத் {துருபதனைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா} துருபதனை அவனுக்கு {கர்ணனுக்கு} வெள்ளி, தங்கம் மற்றும் ரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுக்க வைத்து, அவனைக் கப்பமும் கட்ட வைத்தான்.[1] ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா} அவனை {துருபதனை} அடக்கிய பிறகு, அவனுக்குக் (துருபதனுக்குக்) கீழ் அடங்கியிருந்த பிற இளவரசர்களையும் தனது (கர்ணன்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களையும் கப்பம் கட்ட வைத்தான்.


[1] ஆதிபர்வம் 140வது பகுதியில் "நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்" என்றும், "பிறகு, கௌரவர்கள், போர் தங்களுக்கெதிராக உக்கிரமடைவதைக் கண்டு, போர் செய்வதை விடுத்து, பாண்டவர்களை நோக்கி ஓடினர்" என்றும் வருகிறது. இங்குக் கர்ணனும் சேர்ந்து துருபதனிடம் புறமுதுகிடுகிறான் என்பதைக் கவனிக்கவும். வனபர்வத்தின் இந்தப் பகுதியில் நிகழும் போரில் கர்ணன் தனியாகச் {துரியோதனன் படையுடன் சேர்த்துத்தான்} சென்று, திருஷ்டத்யுமனன் துணையுடன் கூடிய துருபதனை வீழ்த்தினான் என்று வருகிறது என்பதையும் கவனிக்கவும்.

பிறகு வடக்கு நோக்கி சென்ற அவன் அந்தப் பகுதியின் மன்னர்களைத் தனக்கு அடிபணிய வைத்து, பகதத்தனுக்குத் தோல்வியைக் கொடுத்த ராதையின் மகன் {கர்ணன்}, தனது எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டே மாபெரும் மலையான இமயத்தின் மீது ஏறினான். அங்கே அனைத்துப் பக்கங்களுக்கும் சென்று, இமயத்தில் வசித்த அனைத்து மன்னர்களையும் தனக்கு அடிபணியச் செய்து, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான். பிறகு அந்த மலையில் இருந்து இறங்கி, கிழக்கிற்கு விரைந்து, அங்கம், வங்கம், கலிங்கம், மண்டிகம் {சுண்டிகம், மிதிலை ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதி என்று நினைக்கிறேன்}, மகதம், கர்க்ககண்டம் ஆகிய நாடுகளையும், பின்பு ஆவசீரம், யோத்யம், அஹிக்ஷத்ரம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தினான்.

(இப்படி) கிழக்குப்பகுதியை வென்ற கர்ணன், பிறகு தன்னை வத்ஸபூமியில் வெளிப்படுத்தினான். வத்ஸபூமியை வென்று, ஆகியோரையும் வென்று அந்த நாடுகள் அனைத்தையும் கப்பம் கட்ட வைத்தான். கேவலம், மிருத்திகாவதி மோஹனம், பத்ராணம், திரிபுரம், கோசலம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தி, அவர்கள் அனைவரையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்.

பிறகு தெற்கே சென்ற கர்ணன், (அந்தப் பகுதியில் உள்ள) பலம்வாய்ந்த தேரோட்டிகளை வீழ்த்தினான். தென்னாட்டில் {Dakshinatya = தக்ஷிநாட்யத்தில்} அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} ருக்மியுடன் மோதலில் நுழைந்தான். கடுமையாகப் போரிட்டபிறகு, ருக்மி, சூதனின் மகனிடம் {கர்ணனிடம்}, "ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {கர்ணா}, உனது பலத்தையும் பராக்கிரமத்தையும் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன். நான் க்ஷத்திரியக் கடமையையே நிறைவேற்றினேன். நீ விரும்பும் தங்க நாணயங்களை மகிழ்ச்சியுடன் உனக்குக் கொடுப்பேன்" என்றான். ருக்மியைச் சந்தித்த பிறகு, கர்ணன், பாண்டியநாட்டிற்கும், ஸ்ரீ என்ற மலைக்கும் சென்றான். காரலன், மன்னன் நீலன், வேணுதாரியின் மகன், மற்றும் தெற்கு திசையில் வாழ்ந்த மன்னர்களில் சிறந்தவர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான்.

பிறகு சிசுபாலனின் மகனிடம் சென்ற சூதனின் மகன் {கர்ணன்} அவனை வீழ்த்தினான். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {கர்ணன்}, {சேதி நாட்டுக்கு அருகில் இருந்த} அண்டை நாட்டு ஆட்சியாளர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவந்தி நாட்டினரை அடக்கி, அவர்களோடு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, விருஷ்ணிகளைச் சந்தித்த அவன் [2], மேற்குப்பகுதிகளை வென்றான். வருணன் பகுதிக்கு வந்த அவன் அனைத்து யவன, பர்ப்பர {Varvara} மன்னர்களையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்.

[2] விருஷ்ணிகளைச் சந்தித்தான் என்றால் வென்றான் என்றே பொருள் என நினைக்கிறேன். அப்படிக் கர்ணன் விருஷ்ணிகளை வென்றான் என்றால் கிருஷ்ணனையும் பலராமனையும் வென்றானா என்பதை இங்குத் தெளிவுபடக் கூறவில்லை.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்தையும் வென்ற அந்த வீரன், தனக்கு எந்த உதவியுமின்றி அனைத்து மிலேச்ச, மலைவாசி, பத்ர, ரோகித, அக்னேய, மாலவ நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். நகனஜிதனைத் தலைமையாகக் கொண்ட பெரும் பலம்வாய்ந்த ரதசாரதிகளை வென்ற அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, சசகர்களையும், யவனர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படி முழு உலகையும் தனக்கு அடிபணிய வைத்த அந்தப் பலம்வாய்ந்த தேரோட்டியும், மனிதர்களில் புலியுமானவன் {கர்ணன்} ஹஸ்தினாபுரத்திற்கு (திரும்பி) வந்தான்.

தன் தந்தை, தம்பிகள், நண்பர்களுடன் இருந்த மனிதர்களின் தலைவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, போர்த்தகுதிகளால் மகுடம் சூடப்பட்டுத் திரும்பி வந்திருந்த அந்தப் பலம்வாய்ந்த வில்லாளியிடம் {கர்ணனிடம்} வந்து அவனுக்கு {கர்ணனுக்கு} உரிய வரவேற்பைக் கொடுத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, "பீஷ்மரிடமோ, துரோணரிடமோ, கிருபரிடமோ, பாஹ்லீகரிடமோ பெறாதாதை, நான் உன்னிடம் பெறுகிறேன். நன்மையே உனக்கு நேரட்டும்! நீளமாகப் பேச வேண்டிய தேவை என்ன? ஓ! கர்ணா! எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! மனிதர்களின் தலைவா {கர்ணா}, உன்னிடமே எனது புகலிடத்தைக் கொண்டிருக்கிறேன் {நீயே எனது அடைக்கலம்}. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் புலியே, பாண்டவர்களும், செழுமையால் முடிசூட்டப்பட்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்தாலும், உன்னில் பதினாறில் ஒரு பங்குக்குக்கூட அவர்கள் ஈடாக மாட்டார்கள். ஓ! வலிமைமிக்க வில்லாளியே, ஓ! கர்ணா, வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அதிதியைக் காண்பது போல, திருதராஷ்டிரரையும், சிறப்புமிக்கக் காந்தாரியையும் பார்" என்றான்.

பிறகு ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த ஹஸ்தினாபுர நகரத்தில் ஓ! என்றும் ஐயோ! என்றும் ஆரவாரம் எழுந்தது. ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, சில மன்னர்கள் அவனைப் (கர்ணனைப்) புகழவும், சிலர் நிந்திக்கவும், சிலர் அமைதியாகவும் இருக்கவும் செய்தனர். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படி மலைகள், காடுகள், வானம், கடல்கள், ஏராளமான உயர்ந்த மற்ற தாழ்ந்த நிலப்பரப்புகள், நகரங்கள், தீவுகள் ஆகியவற்றைக் கொண்ட இந்தப் பூமியைக் குறுகிய காலத்தில் {கர்ணன்} வென்றான். ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, இப்படியே அனைத்து ஏகாதிபதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வற்றாத செல்வத்தை வென்ற சூதனின் மகன் {கர்ணன்} மன்னனின் {துரியோதனன்} முன்னிலையில் தோன்றினான்.

பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, அந்த மாளிகையின் உள்ளே சென்ற வந்த வீரன் {கர்ணன்}, காந்தாரியுடன் இருந்த திருதராஷ்டிரனைக் கண்டான். ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த அவன் {கர்ணன்}, ஒரு மகனைப் போல அவனது {திருதராஷ்டிரன்} பாதத்தைப் பற்றினான். திருதராஷ்டிரனும் அவனைப் பாசத்துடன் அரவணைத்து, பிறகு அவனுக்கு விடை கொடுத்தனுப்பினான். அந்நேரத்திலிருந்து, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் ஏற்கனவே கர்ணனால் வீழ்த்தப்பட்டதாகவே கருதினர்."

[1], [2] ஆகிய விளக்கங்களுக்கு நண்பர்களின் மறுமொழியைக் கீழே இங்கே அளிக்கிறேன். 

[1]க்கான நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களின் மறுமொழி 

ஆதி பர்வம் 140–ல் அங்க மன்னன் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றதாக கருதுகின்றீர்கள் ஆனால் என்னுடைய புரிதல் என்னவெனில்

மகாபாரதத்தில் அங்க மன்னன் கர்ணன் வருமிடங்களில் வியாசர் கர்ணனை வசுசேணன், ராதேயன் , சூதாவின் மகன், விகர்த்தன குமாரன், வ்ருஷா, போன்ற பெயர்களையும் சேர்த்து குறிப்பிடுவார். இது ஏனைய முக்கிய கதாப்பாத்திரங்களும் பொருந்தும். துருபதானான போரில் கர்ணனை அவ்வாறான எந்த பெயரிலும் குறிப்பிடவில்லை . மேலும் திருதிராஷ்டிரரின் 48-வது மகனின் பெயரும் கர்ணனே. அந்த 140 வது பகுதியில் வியாசர் துரியோதணின் சில தம்பிகளின் வரிசையிலே கர்ணனை குறிப்பிடுகின்றார். நிச்சயம் அது அங்கதேசத்து மன்னன் கர்ணனாக இருந்திருந்தால் கர்ணனின் சிறப்புபெயர்களில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டிருப்பார்.

எனவே அந்த கர்ணன் திருதராஸ்டிரரின் 48 வது மகன் கர்ணனே.

[1] நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களின் மறுமொழிக்கு, நண்பர் திரு.ராமராஜன் மாணிக்கவேல் அவர்களின் மறுப்பு

நண்பர் திரு.மெய்யப்பன் இட்டப்பதிவில் அது திருதராஷ்டரன் 48வது மகன் கர்ணன் என்று சொல்லி உள்ளார்.  எனக்கு அதில் உடன் பாடு இல்லை. காரணம்
//துரியோதனன், கர்ணன், பலம்வாய்ந்த யுயுத்சு, துட்சாதனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும், பெரும் வீரம் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முன்னணி பெற ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர்// 

பகுதி 140ல் வியாசபெருமான் துரியோதன் அதற்கு அடுத்து கர்ணன் என்று ஏன் வரிசை வைத்து சொல்லவேண்டும்? பெரும் வீரனாகிய துட்சாதனனை பலம்வாய்ந்த யுயுத்சுக்கு பின்னால் ஏன் வைக்கிறார்? அப்படி என்றால் வீரம் இங்கு காட்டப்படுகின்றது. 48வது மகன் கர்ணன் பெரும் வீரன் என்று எங்காவது காட்டப்பட்டு உள்ளதா?

//நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்//

மேற்கண்ட பதிவில் துரியோதன், விகர்ணன், பலம்வாய்ந்த கர்ணனையும் என்று சொல்லிவிட்டு மற்றும் பல வீர இளவரசர்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாராவில் துச்சாதனன் யுயுச்சு பெயரைக்கூட விட்டுவிட்டவர் ஏன் கர்ணன் பெயரை மட்டும் விட்டுவிட வில்லை? மீண்டும் இங்கு வீரமே சுட்டப்படுகின்றது. துரியோதனனுக்கு நிகரான அர்ஜுனனுக்கு நிகரான ஒரு வீரன் கர்ணன் அவனை விட்டுவிட வியாசருக்கு மனம் இல்லை அடை மொழி தந்தாலும் தராவிட்டாலும் அது அங்கநாட்டு மன்னன் கர்ணன்தான்.
நன்றி.

[2]க்கான நண்பர் திரு.ராமராஜன் மாணிக்கவேல் அவர்களின் மறுமொழி

திக்விஜயம் என்பது ஒரு கொடியின் கீழ் ஒரு நாட்டைநோக்கி படை நடத்துவது இது ஒரு தூதுப்போலத்தான், தூது வென்றால் பரிசைப்பெறலாம் தூது வெல்லைவில்லை என்றால் திறமையைக்காட்டவேண்டும். திக்விஜயம் செய்தவன் வென்றால் நாட்டை அந்த நாட்டுமன்னனிடமே கொடுத்துவிட்டு பரிசுப்பெற்று முன்னேறுவது மட்டும். அதன்பின் அவன் சுதந்திரநாடு உடையவன்தான். திக்விஜயம் செய்தவன் தோற்றால் நாடு வென்றவனுக்கு கிடைக்காது அதனுடன் அவன் திரும்பி தனது நாட்டுக்கு செல்லவேண்டும்.
கர்ணன் திக்விஜயம் செய்வது ஹஸ்தினபுரியின் கொடியின் கீழ் இவனோடு போர்புரிவதால் எந்த நன்மையும் கண்ணனுக்கு கிடையாது வெறும் நேரவிரயமும், படை நஷ்டமும்தான் இதை சிறந்த ஞானியான கண்ணன் உணர்ந்து கர்ணனுடன் நட்புக்கரம் நீட்டி இருப்பார். கர்ணனும் வெல்லவில்லை கண்ணனும் தோற்கவில்லை என்ற நிலை. இன்னும் ஒரு ராஜதந்திரமும் இதில் உண்டு. தோற்றவன் தூங்குவதில்லை வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறான் ஆனால் வென்றவன் மமதையில் திறமையை இழக்கின்றான். கர்ணனின் திறமைக்கு இதுவே கடைசி முற்றுப்புள்ளியாகவும் கண்ணன் வைக்கிறார்.


துருபதனும், திருஷ்டத்தியுமனும் இறுதிப்போர் பதிநான்காவது ஆண்டில் உண்டு என்று நிச்சயமாக எண்ணுகின்றார்கள் அங்கு துரியோதனனுக்கும், கர்ணனுக்கும் இலக்கு வகுக்கப்பட்டு உள்ளது அதுதான் அவர்களின் இந்த தோல்விக்கும் காரணம். தன்னை வென்ற அர்ஜுனனை மருமகனாக அடையவேண்டும் என்றே இலக்கு நிர்ணயத்தவன் துருபதன் அவன் மதியூகம் எத்தனை காலத்தை தாண்டி உள்ளது. சிந்திக்க வைக்கிறது.
நன்றி
வாழ்க வளமுடன் 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்