Monday, August 03, 2015

உத்யோக பர்வச் சுவடுகளைத் தேடி!


எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. வானத்தின் அடர்நீலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறைந்து தூரத்தில் இருந்த நிலமகளை அரவணைத்தபடி கருப்பாக மறைந்தது. ஆகாயமும் பூமியும் சந்திக்கும் இடத்தில், கருப்பும் வெள்ளையும் கலந்த கலவையாகத் தங்கள் நெளிவு சுழிவுகளைக் காட்டியபடி மலைகள் ஓடிக் கொண்டிருந்தன. அவை எப்படி ஓடும்? என் கண்களே அப்படி அலைபாய்ந்தன. சிதறிக் கிடக்கும் பூக்கள் விரிந்து விரிந்து சுருங்குவது போல நட்சத்திரங்கள் அதற்கும் மேலே மின்னிக் கொண்டிருந்தன. இந்த இருட்டிலும் இப்படியோர் ஓவியமா? இல்லை, காலமெனும் சிற்பியின் உளியால் செதுக்கப்பட்ட அற்புதமா இஃது?


மயக்கத்துடன் எதிர் திசையைத் திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் ஆறு கரும் உருவங்கள், நுண்ணிய அசைவுகளுடன் ஆடிக்கொண்டிருந்ததைப் போலத் தெரிந்தது. இல்லை அவை நடக்கின்றன. நானிருந்த திக்கை நோக்கியே அவை வந்து கொண்டிருந்தன. அவைகளுக்குப் பின்னே பெரிய மஞ்சள் நிலா அடிவானத்தில் இருந்து முக்கால் உருண்டையாக முளைத்திருந்தது. அந்தக் கரிய உருவங்கள் அனைத்தும் அந்த மஞ்சள் நிறத்திற்குள்ளேயே அடங்கியிருந்தன.

"யாரிவர்கள்? இந்த வேளையில் இங்கு என்ன செய்கிறார்கள்? நான் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்?" மனம் பதைபதைத்தது. "வருவது மனிதர்கள்தானா? திரும்பிப் போய்விடலாமா? எங்குப் போவது? நாம் எங்கிருந்து வந்தோம்?" மனம் குழம்பியது. சிறு உருவங்களாகத் தெரிந்தவை, நேரமாக ஆகப் பெரிதாகிக் கொண்டே இருந்தன. எவ்வளவு பெரிது? "ஆ... அவர்களின் கால் கட்டைவிரலின் நுனியளவு கூட நாம் இல்லையே... இதோ மிதிக்கப் போகிறார்கள். நாம் தொலைந்தோம்." என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே நினைவு தப்பியது. கீழே சாய்ந்தேன்.

பனியுடன் சேர்ந்து குளுமையாக வீசிக்கொண்டிருந்த தென்றலால் உடல் சில்லிட்டுப் போனது. காற்றில் ஆடிய நாணலின் ஸ்பரிசம் முகத்துக்குக் கிட்டி, தும்மலுடன் மயக்கம் கலைந்தது. முகம் மண்ணில் கிடப்பத்தை மணத்தால் நுகர்ந்துணர முடிந்தது. அந்த மணத்திற்குத்தான் என்ன ஒரு மருத்துவக் குணம். மரணம் போன்ற ஒரு மயக்கத்தையே நொடிப்பொழுதில் தெளித்து விட்டதே.

அச்சத்தால் அழுது உடல் வெளியிட்ட கண்ணீராக முகமெல்லாம் வியர்வை வழிந்திருந்தது. அதனுடன் மண்ணும் கலந்து என்னமோ செய்தது. கவிழ்ந்து விழுந்த நிலையிலேயே முகத்தை நிமிர்த்தினேன். முகத்தில் ஒட்டியிருந்த புழுதியை கீழே வழித்தெறிய இரு கைகளாலும் நெற்றி முதல் துடைத்து வந்தேன். கண்களை விரல்கள் தாண்டவும், புருவத்தை மேலிமை முத்தமிடவும், நட்சத்திர மழையால் நனைந்து கொண்டிருந்த மலைகள் என் விழிகளில் விரிந்தன. அந்த அறுவரின் முதுகுப்புறங்களும் நிலவு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தன. "பின்னே செல்வது ஒரு பெண் போலல்லவா தெரிகிறது", "என்ன இது? எங்கே செல்கிறார்கள்? அந்த மலைகளுக்குத் தான் செல்கிறார்களா? அங்கே எதற்கு?"

மனதைத் திக்கெனச் செய்தது, திடீரென எழுந்த சர சரவென்ற சத்தம். "என்னமோ நடக்கப்போகிறது" என்ற நினைப்பை மனம் எண்ணி முடிப்பதற்குள், கவிழ்ந்திருந்த அந்நிலையிலேயே எனது முகம் மட்டும் தானாகப் பின்புறம் திரும்பி நிலவைப் பார்த்தது. நான்கு கால்களைக் கொண்ட ஒரு பெரும் விலங்கு நிலவுக்குள் இருந்து பாய்ந்தோடி வந்தது. ஒரே குதிதான், நான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அதன் கால்களுக்கிடையில் இருந்தேன். மோவாய் ரோமம் முள்ளெனக் குத்திக்கொண்டு நிற்க, திறந்திருந்த அதன் வாயிற்கு வெளியே எச்சில் சொட்டியபடி நாக்கு தொங்கிக் கொண்டிருந்தது. மலைத்துப்போய் மல்லாந்த நான், மேலே தெரிந்த அதன் வயிற்றைப் பார்த்தேன். அடுத்தக் குதி, அது என்னைத் தாண்டிச் சென்றது.

ஊதா நிற வானம் என் கண்களைத் தாண்டி எனது தலைக்குப் பின்னே ஓடி ஒளிந்து கொண்டது. நிலவும் அப்படித்தான் ஓடவே செய்தது. சட்டென எனது தலை தரையில் மோதியது. அவ்விலங்கு என்னைத் தாண்டி மட்டும் செல்லவில்லை. பின்னங்கால்கள் ஒன்றினால் எனது தலையைத் தூக்கிப் போட்டுவிட்டே சென்றிருக்கிறது. குட்டிக்கரணம் அடிக்கும் குரங்கைப் போல, நானும் நிலவை நோக்கி உருண்டு விழுந்தேன். "அது நாய்!" என்று மனம் சொன்னது. "நாயா? இவ்வளவு பெரியதா?" என்று குறுக்குப் புத்தி கேள்வி கேட்டது. "ஆம். அது நாயேதான். ஆனால் சாதாரண நாயல்ல" என்று நினைத்தபடியே அது சென்ற திக்கை நோக்கிப் பின்புறம் திரும்பினேன்.

"ஆ... அவர்களை நோக்கிச் செல்கிறதே. என்ன நேரப்போகிறதோ?" பயத்தால் கண்களை அகல விரித்தேன். "அம்மா! நாய்" என்று அலறினேன். அந்தப் பெண் திரும்பினாள். கண்களா அவை? சந்திரன் மற்றும் சூரியனின் ஒளிபொருந்திய அவை கருணை கலந்த கண்டிப்புடன் என்னை நோக்கின! "என்னையா நீ எச்சரிக்கிறாய்?" என்ற கண்டிப்பையும், "இவன் நம்மை அறியவில்லைபோலும்" என்ற நினைப்பால் எழுந்த கருணையையும் அந்தப் பார்வையில் உணர்ந்தேன். இடி இடித்தாற்போலக் கேட்ட பெருவொலியால், அவளிடம் இருந்து பார்வையை விலக்கி நாயைப் பார்த்தேன். குரைத்தபடியே சென்ற அது அந்த அறுவரில் ஒருவரின் காலை, வலம் வந்து பெருமூச்சுவிட்டபடி நின்றது. காட்சி மறைந்தது. எங்கும் இருள். "பார்வைப் புலனை இழக்கிறேனா? மரணம் என்னை அரவணைக்கிறதா?" ஒன்றும் புரியவில்லை. "ஒலிகூடக் கேட்கவில்லையே! காதுகளும் உணர்வை இழந்து விட்டனவோ?" மனதிலும் இருள் சூழ்ந்தது. எவ்வளவு நேரம் இப்படியே கிடக்கிறேன்? ஒரு மணிநேரமா? ஒரு நாளா? ஒரு வருடமா? இல்லை... இல்லை... யுகம் யுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு.

"ஏங்க! பசங்க ரெடி, ஸ்கூலுக்கு விடணும்! எந்திரிங்க!" என்ற என் மனைவியின் குரல் கேட்டது. "அப்பாடா! காது கேக்குதுடா!" என்றெண்ணி, பார்வையும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் கண்களைத் திறந்தேன். "ஏம்பா எவ்ளோ நேரம்பா தூங்குவீங்க!" என்று கேட்டான் என் இளைய மகன். சோம்பல் முறித்துக் கொண்டே, "அப்பா தூங்க லேட்டாயிடுச்சுப்பா!" என்றேன். "லேட்டாயிடுச்சுன்னா, என்னத்தான மிஸ் திட்டுவாங்க. உங்களையா திட்டுவாங்க?" என்றான் அவன்.

"என்ன கனவு இது? இது எதைக் குறிக்குது? கனவு மாதிரியா இருந்தது?" கனவுக்கும் நனவுக்கும் இடையில் ஊசலாடியது மனம். அன்றைய நாள் முழுவதும் இக்கனவே என்னை ஆக்கிரமித்தது. என் அலுவல்களுக்கிடையிலும் இக்காட்சி என் கண்களில் தோன்றித் தோன்றி மறைந்தது. இது பாண்டவர்களின் கடைசி நெடும்பயணத்தைக் குறிப்பதாகவே எனக்குப் படுகிறது. அப்படியே அதை நான் நம்பவும் செய்கிறேன்.

இந்த நேரத்தில் ஏன் அப்படி ஒரு காட்சி? அதுதான் தெரியவில்லை! வரவர தூக்கத்திலும் மகாபாரதம்தான் ஓடுகிறது. நான் கண்ட பல கனவுகளில் சமீபத்தில் நான் மிக நுணுக்கமாக உணர்ந்த ஒன்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். உறக்கத்தை விட அதிகமான ஓய்வை இவையே அளிக்கின்றன. "தூங்கிக் காண்பதல்ல; உன்னைத் தூங்கவிடாததே கனவு" என்ற அப்துல் கலாம் அவர்களின் வரிகளுக்கிணங்க மகாபாரதம் என்னைத் தூங்க விடுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவையேனும் இடாமல் கண்கள் உறங்க மறுக்கின்றன. வெளியூர்களுக்குச் செல்ல நேரும் போதெல்லாம் இரவுகள் எனக்கு வருத்தத்தையே அளிக்கும்.

ஏன் இங்கே கனவையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால், இதுவும் மனதில் பதிந்த ஒரு சுவடுதானே. நாம் உணர்ந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று நினைத்தே, "சுவடுகளைத் தேடி" என்ற இந்தப் பதிவில் மேற்கண்ட கனவை சொல்ல விழைந்தேன். கண்டது நேற்றென்பதால் கண்டது போலவே நினைவிலும் பதிந்திருந்தது. உண்மையில் நான் கண்ட அக்காட்சியை உணர்ந்தபடியே இங்குச் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால், கனவுக்கும், நனவுக்கும் வேறுபாடில்லாதவாறு அது உயிரோட்டமாகவே இருந்தது. மேற்கண்ட என் எழுத்துகளுக்கு அந்த உயிரை என்னால் கொடுக்க முடிந்ததா என்பது தெரியவில்லை. உண்மையில் கனவுகளை எழுத்துகளாலோ, ஒளிப்படங்களாலோ கூட முழுமையாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

சரி நிகழ்கால நிஜத்திற்குத் திரும்புவோம்! கனவெல்லாம் கண்டு முடித்து, பிள்ளைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். அலுவலகத்தைத் திறக்கவில்லை. கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அலுவலகத்தை அடைத்துவிட்டு, உத்யோக பர்வத்தின் எஞ்சிய பதிவுகளை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். உத்யோகபர்வம் பகுதி 197-ஐ மொழிபெயர்த்து முடித்துப் பிளாகரில் பதிவேற்றி விட்டு, வாட்சாப்பில் ஜெயவேலன் அவர்களுக்குத் தகவல் அனுப்பினேன். அரை மணிநேரம் கழித்துப் பார்த்தேன். திரு.ஜெயவேலன் அவர்கள் அந்தப் பதிவைத் திருத்தி முடித்திருந்தார்.

198-ம் பகுதியின் நிறைவு பத்தியை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது, எனக்குப் பின்னால் ஓர் உருவம் நின்று கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அலுவலகத்தை முன்புறம் மூடி வைத்திருந்தாலும், என்னை நன்கறிந்த வாடிக்கையாளர்கள், என் வீட்டின் கேட் வழியாக, அலுவலகத்தின் பின்புறமாக வந்துவிடுவார்கள். "ஆஹா... அலுவலுக்கு யாரோ வந்துவிட்டார்கள். இன்றும் உத்யோக பர்வத்தை முடிக்க முடியாது போலிருக்கிறதே" என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தேன். ஜெயவேல் அவர்கள் நின்று கொண்டிருந்தார். எனக்கோ இன்ப அதிர்ச்சி "என்னங்க... சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க. நான் யாரோனு நினைச்சேன்" என்றேன். "ஏன் வரக்கூடாதா?" என்று கேட்டார். "என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க" என்றேன்.

பிறகு மொழிபெயர்ப்பைக் குறித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். "ஏங்க "நளன் தமயந்தி" கதையைவிட "அம்பை" கதை அருமைங்க" என்றார். "அது ஒரு விதம், இது ஒரு விதம்! இரண்டுமே நல்ல கதைகள்தானே" என்றேன். வீட்டினுள்ளே என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த திருமதி. தேவகி ஜெயவேலன் அவர்கள், என் அலுவலகத்திற்குள் முதல்முறையாக நுழைந்தார். "என்னண்ணா இவ்ளோ பள்ளமா இருக்கு" என்று என் அலுவலகத்தின் நிலை குறித்துக் கேட்டார். "ஓ... இவங்களும் வந்திருக்காங்களா? சொல்லவே இல்லையே!" என்று கேட்டேன். "ஆமா வந்த உடனே அவங்க வீட்டுக்குள்ளே போனாங்க. நீங்க எப்படியும் இங்கதான் இருப்பீங்கன்னு, நான் ஆஃபீசுக்குள்ளே வந்தேன்" என்றார்.

என் மனைவி காபியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, தன் கையில் இருந்த கவரை என் மனைவியிடம் கொடுத்தார் ஜெயவேல். "நாங்க வாங்கிக்கிட்டே இருக்கோம். இது தப்பில்லையா?" என்று இம்முறை அவரிடமே கேட்டுவிட்டாள் என் மனைவி. "ஏங்க இது அவருக்கில்லங்க. இரவு நேரத்திலும் அவர் இந்த வேலையச் செய்ய உறுதுணையா இருக்கீங்கல்ல. இது உங்களுக்குத்தாங்க" என்றார். என் மனைவி வாங்கத் தயங்கினாள். "ஏ... வாங்கிக்க லட்சுமி" என்றேன். வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணவனும் மனைவியுமாகத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார்கள் ஜெயவேலன்-தேவகி தம்பதியினர். நானும் காபி குடித்துவிட்டு வரலாமே என்று வீட்டிற்குச் சென்றேன். என் அன்னையின் புகைப்படத்திற்கு அருகே இருந்த கவரைப் பிரித்து ரூபாயை எண்ணினேன். ரூ.19,900/- இருந்தது. மீண்டும் அலுவலகம் திரும்பி 198 மற்றும் 199 பகுதிகளை மொழிபெயர்த்து முடித்தேன். மகாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வம் இனிதே நிறைவை எட்டியது. இன்னும் பதிமூன்று பர்வங்களைக் கடக்க வேண்டும். கனவில் வந்த அந்த அறுவர் மலைகளை எட்டுவதையும், தர்மன் தர்மதேவனிடம் மீண்டும் பேசுவதையும் நான் நிச்சயம் காண்பேன் என நம்புகிறேன்.

இதற்கு முன்பு ஒரு சமயம், உத்யோக பர்வம் மொழிபெயர்க்க ஆரம்பித்த நேரத்தில் என்று நினைக்கிறேன். திரு.ஜெயவேலன் அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு வரச் சொன்னார். நானும் சென்றேன். அவர் புதிதாக ஆரம்பித்திருக்கும் ஒரு நிறுவனத்தைக் குறித்து விவாதித்தார். பிறகு, "நீங்களும் இங்கேயே வந்துவிடலாமே. கணினி வரைகலையே உங்களது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திச் செய்து விடாது. நமது நிறுவனம் இணையம் சம்பந்தமான வேலையைத்தானே செய்யப் போகிறது. நீங்களும் இங்கேயே வந்துவிட்டால், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் நீங்கள் மகாபாரதத்தை மொழிபெயர்க்கலாமே!" என்றார். "சரி பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். பிறகு என்னால் அவரது அலுவலகத்ததிற்கு அடிக்கடி செல்ல முடியவில்லை. நான் ஏற்றிருக்கும் வேலைகளை எனது அலுவலகத்தில் முடிப்பதே பெரும் நேரத்தை எடுத்துக் கொண்டது.

ஒரு நாள் ஓர் அவசர வேலைக்காக நான் ஜெயவேலன் அவர்களின் அலுவலகத்திற்குச் செல்ல நேர்ந்தது. அலுவலை முடித்துவிட்டு, நானும் அவரும் வெளியில் இருந்த டீக்கடையில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அவர், "ஏங்க. மனிதனுக்கு எப்போது என்ன நேர்கிறது என்பது தெரிவதில்லை. நீங்கள் ஏற்றிருக்கும் பணியோ மிகப் பெரியது. முடிந்த அளவுக்கு எவ்வளவு விரைவாக மொழிபெயர்க்க முடியுமோ அவ்வளவு செய்து மகாபாரதத்தை முடித்து விடுங்கள்" என்றார். "நான் முடிந்த அளவுக்குச் செய்தே வருகிறேன்" என்று அவரிடம் சொன்னேன். "இல்லங்க இது பத்தாது. நான் ஒரு யோசனை சொல்றேன். ஒவ்வொரு பர்வத்தின் முடிவிலேயும் நான் உங்களுக்குப் பணம் தரப்போவது நிச்சயம். ஒரு பதிவுக்கு ரூ.100/ - என்று கணக்கு வைத்தே இதுவரை நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நீங்கள் செய்து வரும் வேலையை விட்டுவிடுங்கள். முழு நேரமாக மொழிபெயர்ப்பை மட்டுமே செய்யுங்கள். நான் ஒரு பதிவுக்கு ரூ.200/- தருகிறேன். உங்களால் ஒரு நாளைக்கு நிச்சயம் ஐந்து பதிவுகளை இட முடியும். ஆக ஒரு மாதத்திற்கு நிச்சயம் உங்களுக்கு ரூ.30,000/- கிடைக்கும்" என்றார்.

"நீங்கள் இன்றைய கதையைச் சொல்கிறீர்கள். நான் நாளைய நிலையைப் பார்க்கிறேன். மகாபாரதம் முடிந்த பிறகு? என்னதான் இருந்தாலும் எனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டாமா?" என்று கேட்டேன். "ஏங்க மகாபாரதம் முடிந்ததும், உங்கள யாருங்க சும்மா இருக்க விடப் போறது. எவ்வளவோ இருக்கு மொழிபெயர்க்க! எனவே இது குறிச்சு நீங்க சிந்திங்க" என்று சொன்னார். நான், "பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். கணினி வரைகலைத் தொழிலில் எனக்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தைக் கொண்டிருக்கிறேன். சேர்ந்தாற்போல் இரண்டு மூன்று நாளைக்கு நானில்லை என்றாலே திண்டாடிப் போய்விடுவார்கள். மேலும், தொழிலின் அடிப்படையில் நானும் இவ்வளவு காலம் அவர்களையே நம்பியிருந்திருக்கிறேன். திரு.ஜெயவேலன் அவர்கள் சொன்னதைக் குறித்து அதற்கு மேல் நான் சிந்திக்கவேயில்லை. இப்படி மொழிபெயர்ப்பதற்கான ஊக்கத்தை எப்படியெல்லாம் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் திரு.ஜெயவேலன் அவர்கள் கொடுத்தே வருகிறார். நான் என்ன செய்யப் போகிறேன் அவருக்கு?

2014 நவம்பர் 9ந்தேதி நடைபெற்ற வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவை, 2015 ஜனவரி 18ந்தேதி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள். இது குறித்து ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் என் வலைத்தளத்தில் http://mahabharatham.arasan.info/2015/01/venmurasu-release-function-broadcast-vijaytv.html அந்த லிங்கைப் பகிர்ந்திருந்தேன். நிகழ்ச்சியைக் கண்ட நண்பர்களும், உறவினர்களும் போனிலும், மின்னஞ்சலிலும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மொழிபெயர்ப்பு அல்லாமல், புதிய பதிவு ஒன்றை நான்கு வரி சேர்த்து எழுதுவதற்குள் நாக்குத் தள்ளி விடுகிறது. மேற்கண்ட கனவை எழுதுவதற்கே விக்கித்துப் போனேன். தினமும் குறைந்தது பத்து பக்கமாவது கொண்ட வெண்முரசின் ஒரு பதிவையும் எழுதிவிட்டு, அதற்கு மேலும் வாசகர்களின் கடிதங்களுக்குப் பதில் சொல்வது, ஜெயமோகன் அவர்களைத் தவிர வேறு யாராலும் முடியாது. வெண்முரசை எப்போதாவதுதான் என்னால் படிக்க முடிகிறது. படித்தால் சேர்ந்தாற்போல 10 பதிவையாவது படித்து விடுவேன். பெரும் சாதனையை அருகிலிருந்து உணர முடியாதவனாக இருக்கிறேன்.

திடீரென முழுமஹாபாரத வலைத்தளத்திற்கு நிறையப் பார்வைகள் கிடைப்பதை உணர்ந்து, எங்கிருந்து இவை வருகின்றன என்று பிளாகரில் தேடினேன். http://charuonline.com/blog/?p=2323 என்ற பக்கத்தில் இருந்து அதிகமான பேர் நமது வலைத்தளத்திற்கு வருவதை அதில் காண முடிந்தது. அந்தப் பக்கத்திற்குச் சென்று பார்த்தேன். எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் முழுமஹாபாரதத்திற்கு ஓர் அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரே என்னிடம் தொலைபேசியிலும் பேசினார். 2015 மார்ச் 07ந்தேதி அவரது வீட்டிற்குச் சென்று நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் சந்தித்தோம். நான் எடுத்துக் கொண்ட பணியைப் பாராட்டியபடி மகிழ்ச்சியாகப் பேசினார். நீண்ட நேரம் அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒன்றிரண்டு நாட்களில் http://andhimazhai.com/news/view/charu29.html என்ற பக்கத்தில், தனது வாசகர் ஒருவருக்குப் பதில் சொல்லும் விதமாக நளன் தமயந்தி கதையைச் சுட்டிக் காட்டி நமக்கு ஓர் அறிமுகத்தைத் தந்திருந்தார் சாரு. மேலும் அவர், புதிய தலைமுறை இதழில் "வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்" என்று தான் எழுதி வரும் தொடரில், 26 மார்ச் 2015 தேதியிட்ட இதழில் "மஹாபாரதத்தை மறக்கலாமா?" என்ற தலைப்பின் கீழ், http://mahabharatham.arasan.info/2015/03/introduction-to-mahabharata-by-charu-in-pudhiyathalaimurai-magazine.html நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். இப்படிப் பல்வேறு வகைகளில் நம்மைப் பல தளங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் தனது வலைத்தளத்தில் தமிழ்மொழிக்காக சிறு அறிமுகத்தைத் தந்திருந்தார். http://www.sramakrishnan.com/?p=4551

திரு.ஜெயமோகன் அவர்களுக்கும், திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கும் நான் செலுத்தும் நன்றி வார்த்தைகளால் இல்லாமல் செயலால் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான சந்தர்ப்பம் அமைய பரமனை வேண்டுகிறேன்.

2015 மே 3ந்தேதி அன்று தந்தி தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் "யாத்ரீகன்" என்ற பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், "மகாபாரதப் பாதையில்" என்ற பதிவில் எனது சிறிய பேட்டி ஒன்று வெளிவந்தது. http://mahabharatham.arasan.info/2015/05/Thanthi-TV-Yathrigan-1-03052015.html அதுவும் வாசகர்களின் மத்தியில் எனக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. என்னைத் தொடர்பு கொண்டு படப்பிடிப்பு நடத்திய தந்தி டி.வி.யின் திரு.ஜான்சன் அவர்களுக்கு நன்றி

2015 ஜுன் 3ந்தேதி அன்று மயிலாப்பூர் ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் {RK Convention Center} நடைபெற்ற அரிமா சங்கத்தின் {Lion’s Club} கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் கூட்டத்தைப் பாடி அரிமா சங்கம் & ஷெனாய் நகர் அரிமா சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் http://mahabharatham.arasan.info/2015/06/support-from-lions-club-of-padishenoynagar-and-nungambakkam.html . மேடையொன்றில் நின்று பேசியது அதுவே எனக்கு முதல் முறை. நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் திரு.சாருநிவேதிதா மற்றும் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் பங்கு பெற்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. நிகழ்ச்சியின் முடிவில், பாடி-ஷெனாய் நகர் அரிமா சங்கத்தின் சார்பாக ஒரு நினைவுக் கேடயமும், நுங்கம்பாக்கம் அரிமா சங்கத்தின் சார்பாக ரூ.25,000/-க்கான காசோலையும் எனக்கு வழங்கப்பட்டது. அக்கூட்டத்தை ஏற்பாடு செய்து என்னைக் கௌரவித்த ஆர்கே திரு. A.S.இராமக்கிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் திரு.கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

மீனம்பாக்கம் சுழற்சங்கத்தில் வருகின்ற 2015 ஆகஸ்ட் 12ந்தேதி பேச அழைத்திருக்கிறார்கள். எனது பேச்சுப் பயிற்சியை அங்குதான் சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஆடியோ மற்றும் காணொளி பதிவுகள் நன்றாக வந்து கொண்டிருக்கின்றன. திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் கிட்டத்தட்ட வனபர்வத்தை முடித்துவிட்டார். விராட பர்வம் முழுதுமாக ஆடியோ மற்றும் வீடியோவில் இருக்கிறது. உத்யோக பர்வமும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் அலுவலகத்தில் தன் வேலைகளை முடித்து, வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளையும் முடித்து, இவ்வளவு காணொளிகளைப் படைத்திருப்பது வியப்பைத் தருகிறது. அவருக்கு எனது நன்றி.

2015 மார்ச் 16 அன்று நமது வலைப்பூ ஆயிரம் (1000) பதிவுகளைக் கடந்தது. ஜனவரி 1ந்தேதி 10 லட்சமாக இருந்த பக்கப்பார்வைகள் இப்போது பதினாறு லட்சங்களைக் கடந்திருக்கிறது. ஆறு லட்சம் பார்வைகள் ஏழு மாதங்களில் கிடைத்திருக்கின்றன. முகநூல் பக்கம் இருபத்தேழாயிரம் லைக்குகளைக் கடந்திருக்கிறது. கூகிள்+ல் 5000 பேர் சர்க்கிளில் இணைந்திருக்கிறார்கள்.

2015 ஜனவரி 1ந்தேதி ஆரம்பித்த உத்யோக பர்வம் ஜூலை 31 அன்று நிறைவடைந்தது. 212 நாட்களில் 199 பகுதிகளின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்திருக்கிறது. இடையில் அவ்வப்போது சில ஊர்களுக்குச் செல்ல வேண்டி நேர்ந்ததால் பணியில் கொஞ்சம் வேகம் குறைந்தது. ஆனால் இறுதி கட்டத்தில் வேகமடைந்ததால் இவ்வளவு நாட்களுக்குள் நிறைவு செய்ய முடிந்தது.

இதுவரை,
ஆதிபர்வம் பகுதிகள் 236
சபாபர்வம் பகுதிகள் 80
வனபர்வம் பகுதிகள் 313
விராடபர்வம் பகுதிகள் 72
உத்யோகப்பர்வம் பகுதிகள் 199
என மொத்தம் 900 பகுதிகள் நிறைவடைந்துள்ளன.
பீஷ்மபர்வம் பகுதிகள் 124 ஆகும்.

அடுத்து பீஷ்ம பர்வத்தை மொழிபெயர்க்க வேண்டும். பீஷ்ம பர்வத்தின் மூன்றாவது உப பர்வமாக "ஸ்ரீ மத் பகவத்கீதை" வருகிறது. மிகக் கவனமாக மொழிபெயர்க்க வேண்டும். கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கிலத்தைப் படித்து, கும்பகோணம் தமிழ் பதிப்புடன் ஒப்பிட்டே இது வரை, அதாவது சபாபர்வம் முதல் உத்யோக பர்வம் வரை மொழிபெயர்த்திருக்கிறேன். சில நேரங்களில் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கும். அப்போதெல்லாம் நான் கங்குலியைச் சார்ந்தே மொழிபெயர்த்திருக்கிறேன். இப்போது, பகவத்கீதையைப் பொறுத்தவரை, மேலும் ஓர் ஒப்பீடாகக் கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த தெய்வத்திரு. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்களின் "பகவத் கீதை - உண்மையுருவில்" என்ற புத்தகத்தையும் துணையாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். இந்தப் புத்தகம் பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோவிலில் வாங்கியது. எனவே பகவத் கீதை பகுதிகள் வரும்போது மட்டும் சற்று நிதானமாகவே செய்யலாம் என்றிருக்கிறேன்.

திரு.செல்வராஜ் ஜகன் அவர்கள் பதிவுகளைத் திரட்டித் தந்ததும் உத்யோக பர்வத்தின் முழுமையான பிடிஎஃப் வெளிவரும். நாளை முதல் பீஷ்ம பர்வத்தின் பகுதிகள் வெளிவரும். பிழை சுட்டிக்காட்டி முழுமஹாபாரதம் செழுமையடைய வழக்கம் போலவே நண்பர்களான உங்கள் துணை நாடி நிற்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்.
02.07.2015



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்