Friday, August 12, 2016

துரோணரின் ஆற்றல்! - துரோண பர்வம் பகுதி – 124

The prowess of Drona! | Drona-Parva-Section-124 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 40)

பதிவின் சுருக்கம் : துரோணரைத் தாக்கிய கேகய இளவரசன் பிருஹத்க்ஷத்திரன் கொல்லப்பட்டது; துரோணரை எதிர்த்துத் தாக்கிய சிசுபாலன் மகனான திருஷ்டகேதுவும், திருஷ்டத்யும்னன் மகனான க்ஷத்திரதர்மனும் கொல்லப்பட்டது; தேரோட்டியை இழந்த சேகிதானன் குதிரைகளால் களத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது; துரோணரின் வயது மற்றும் நிறம் பற்றிய குறிப்பு; துரியோதனனை நிந்தித்த துருபதன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நாளின் பிற்பகலில் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் வகைப்படுத்தபட்ட ஒரு பயங்கரப்போரானது துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மீண்டும் நடந்தது. மனிதர்களில் முதன்மையான துரோணர், சிவப்புக் குதிரைகளுடன் கூடிய தமது தேரில் ஏறிப் போரிடும் நோக்கோடு பாண்டவர்களை எதிர்த்து மிதமான வேகத்தில் விரைந்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமையும், பலமும் கொண்டவரும், சிறப்புமிக்கக் குடம் ஒன்றில் பிறந்த வீரரும், உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் ஈடுபடுபவருமான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அழகிய சிறகுகளைக் கொண்ட தமது கூரிய கணைகளால், முதன்மையான தேர்வீரர்கள் பலரைத் தாக்கி வீழ்த்தியபடி அந்தப் போரில் விளையாடுவதாகவே தெரிந்தது.


அப்போது, கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், ஐந்து சகோதரர்களில் மூத்தவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான பிருஹத்க்ஷத்திரன் அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். கூரிய கணைகள் பலவற்றை ஏவிய அவன் {பிருஹத்க்ஷத்திரன்}, கந்தமாதன மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத் திரள்களைப் போல ஆசானை {துரோணரைப்} பெரிதும் பீடித்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதினைந்து கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். எனினும், அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போன்றவையும், துரோணரால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் தன் ஐந்து கணைகளால் மகிழ்ச்சியாக வெட்டினான். அவனால் {பிருஹத்க்ஷத்திரனால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, எட்டு நேரான கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள், தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட பிருஹத்க்ஷத்திரன், அந்தப் போரில் தன் கூரிய கணைகள் பலவற்றால் அவற்றைத் தடுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரனால் மிகக் கடினமான காரியம் அடையப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள் ஆச்சரியத்தில் நிறைந்தன.

அப்போது பிருஹத்க்ஷத்திரனை மெச்சிய துரோணர், அந்தப் போரில், தடுக்கப்பட முடியாத, பிரம்மம் என்று அழைக்கப்பட்ட தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்} போரில் துரோணரால் பிரம்மாயுதம் ஏவப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, அதைத் தன் பிரம்மாயுதத்தால் கலங்கடித்தான். இப்படி அவ்வாயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} துளைத்தான். அப்போது, மனிதர்களில் முதன்மையானவரான துரோணர், பலமிக்கக் கணையொன்றால் கேகயர்களின் இளவரசனை துளைத்ததில், அது பின்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} கவசத்தை ஊடுருவி (அவனது உடலைக்கடந்து) பூமிக்குள் நுழைந்தது. அந்தப் போரில், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கருநாகமொன்று எறும்புப் புற்றைத் துளைத்துச் செல்வதைப் போலவே, அந்தக் கணை கேகய இளவரசனின் உடலைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, சினத்தால் நிறைந்து, தன் அழகிய கண்களை உருட்டியபடி, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும் கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் துரோணரைத் துளைத்தான். மற்றொரு கணையால் துரோணரின் தேரோட்டியுடைய முக்கியப் பகுதிகளைப் பெரிதும் பீடித்தான். ஓ! ஐயா, பிருஹத்க்ஷத்திரனின் கணைகளால் துளைக்கப்பட்ட துரோணர், கேகயர்களின் இளவரசனுடைய தேரின் மீது கூரிய கணைகளின் மழையைப் பொழிந்தார். வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்திரனை நிதானத்தை இழக்கச் செய்த துரோணர், பிறகு சிறகுகள் படைத்த நான்கு கணைகளால் முன்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} நான்கு குதிரைகளைக் கொன்றார். மற்றொரு கணையால் அவர், பிருஹத்க்ஷத்திரனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச் செய்தார். மேலும் இரு கணைகளால் தம் எதிரியின் கொடிமரம், குடை ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்திய அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தமது வில்லில் இருந்து நன்கு ஏவப்பட்ட மூன்றாவது கணையொன்றால் பிருஹத்க்ஷத்திரனையும் மார்பில் துளைத்தார். அதன்பேரில், இப்படி மார்பில் தாக்கப்பட்ட பின்னவன் {பிருஹத்க்ஷத்திரன்} தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.

பிருஹத்க்ஷத்திரனின் படுகொலையின் பேரில் சினத்தால் நிறைந்த கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம், "ஓ! தேரோட்டியே, கவசம் தரித்தவரும், கைகேய மற்றும் பாஞ்சாலப் படைகளைக் கொல்வதில் ஈடுபடுபவருமான துரோணர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக" என்றான். அவனது {திருஷ்டகேதுவின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தேரோட்டி, விரைவில் அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனைக் காம்போஜ இனத்தைச் சேர்ந்த வேகமான குதிரைகளில் துரோணரிடம் அழைத்துச் சென்றான். அப்போது சேதிகளில் காளையான அந்தத் திருஷ்டகேது, வலிமையில் பெருகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சியைப் போலவே தன் அழிவுக்காகத் துரோணரை நோக்கி விரைந்தான். விரைவில் அவன் துரோணரையும், அவரது குதிரைகளையும், தேரையும், கொடிமரத்தையும் அறுபது கணைகளால் துளைத்தான். உறங்கும் புலியை எழுப்பும் ஒருவனைப் போல மீண்டும் அவன் {திருஷ்டகேது}, பிற கூரிய கணைகள் பலவற்றால் அவரை மீண்டும் தாக்கினான். பிறகு துரோணர், கழுகின் இறகுகளைக் கொண்ட கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தப் போரில் போராடிக் கொண்டிருந்த அந்தப் போர்வீரனின் {திருஷ்டகேதுவின்} வில்லை நடுவில் அறுத்தார். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பலமிக்கத் தேர்வீரனான அந்தச் சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர் நான்கு கணைகளால் திருஷ்டகேதுவின் நான்கு குதிரைகளைக் கொன்று, சிரித்துக் கொண்டே பின்னவனின் {திருஷ்டகேதுவின்} தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார். பிறகும் அவர் இருபத்தைந்து கணைகளால் திருஷ்டகேதுவையும் துளைத்தார்.

அப்போது, அந்தச் சேதிகளின் இளவரசன் {திருஷ்டகேது}, விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, ஒரு கோபக்காரப் பாம்பைப் போல அதைப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது வீசினான். இரும்பின் பலத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கனமான கதாயுதம், மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, பல்லாயிரம் கூரிய கணைகளால் அதை வெட்டினார். பல கணைகளைக் கொண்டு பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட்ட அந்தக் கதாயுதம், ஓ! ஐயா, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, தன்னொலியால் பூமியில் எதிரொலித்தபடி கீழே விழுந்தது. தன் கதாயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், கோபம் நிறைந்தவனும், துணிச்சல்காரனுமான திருஷ்டகேது ஒரு வேலையும் {வேல்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியையும் ஏவினான். அந்த வேலை ஐந்து கணைகளால் வெட்டிய துரோணர், மேலும் ஐந்து கணைகளால் அந்த ஈட்டியையும் வெட்டினார். அந்த ஏவுகணைகள் இரண்டும் இப்படி வெட்டப்பட்டு, கருடனால் கிழித்துச் சிதைக்கப்பட்ட இரு பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.

அப்போது பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, அந்தப் போரில், பரத்வாஜரின் அழிவுக்காகவே போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டகேதுவை அழிப்பதற்காக அவன் மேல் கூரிய கணை ஒன்றை ஏவினார். அந்தக் கணையானது, அளவிலா சக்தி கொண்ட திருஷ்டகேதுவின் கவசத்தையும், மார்பையும் துளைத்துக் கடந்து, தாமரைகள் நிறைந்த தடாகத்தில் பாயும் ஓர் அன்னத்தைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. பசியுடன் கூடிய காடையானது சிறு பூச்சி ஒன்றை விழுங்குவதைப் போலவே வீரத் துரோணரும் அந்தப் போரில் திருஷ்டகேதுவை விழுங்கினார் {கொன்றார்}. சேதிகளின் ஆட்சியாளனுடைய {திருஷ்டகேதுவின்} கொலையை அடுத்து, உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அவனது மகன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் தந்தையின் சுமையைச் சுமக்க முனைந்தான். துரோணர் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கப் பெரிய புலியொன்று ஆழ்ந்த கானகத்தில் ஒரு மான்குட்டியைக் கொல்வதைப் போலத் தன் கணைகளால் அவனையும் யமலோகம் அனுப்பி வைத்தார்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பாண்டவர்கள் {அளவில்} குறைக்கப்பட்டபோது, ஜராசந்தனின் வீர மகன் {சகாதேவன்} துரோணரை நோக்கி விரைந்தான். சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல அவன் தன் கணைகளின் மாரியால் விரைவாக வலிமைமிக்கத் துரோணரை கண்ணுக்குப் புலப்படமுடியாதவராகச் செய்தான். அவனது கரநளினத்தைக் கண்டவரும், க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவருமான துரோணர், தம் கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவினார். அந்தப் போரில் தனது தேரில் நின்றிருந்த, அந்த முதன்மையான தேர்வீரனை {ஜராசந்தன் மகனான சகாதேவனை} (தமது கணைகளால்) மறைத்த அந்தத் துரோணர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜராசந்தன் மகனை {சகாதேவனை} விரைவாகக் கொன்றார். உண்மையில், யமனுக்கு ஒப்பான அந்தத் துரோணர், உயிரினங்களுக்கு நேரம் நேர்கையில் அவற்றை விழுங்கும் அந்தகனைப் போலவே தன்னை அணுகிய அனைவரையும் விழுங்கினார் {கொன்றார்}.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், பல்லாயிரம் கணைகளால் பாண்டவர்களை மறைத்தார். துரோணரால் ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவரையும், அவரது பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், போரில் நூற்றுக்கணக்கான மனிதர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொன்றன. சக்ரனால் {இந்திரனால்} கொல்லப்பட்ட அசுரர்களைப் போலத் துரோணரால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், குளிரால் பீடிக்கப்பட்ட பசுமந்தையைப் போல நடுங்கத் தொடங்கின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படை இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட போது, மிகப் பரிதாபகரமான துயர ஓலம் அங்கிருந்து எழுந்தது. சூரியனால் சுட்டெரிக்கப்பட்டும், அந்தக் கணைகளால் கொல்லப்பட்டும் பாஞ்சாலர்கள் கவலையில் நிறைந்தனர். அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைமழையால் மலைத்துப்போன பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், முதலைகளால் தொடை கவ்வப்பட்டவர்களைப் போலவே தங்களை உணர்ந்தனர்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சேதிகள், சிருஞ்சயர்கள், காசிகள், கோசலர்கள் ஆகியோர் போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை எதிர்த்து மகிழ்ச்சியாக விரைந்தனர். சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், "துரோணர் கொல்லப்படுகிறார், துரோணர் கொல்லப்படுகிறார்" என்றனர். இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே அவர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி விரைந்தனர். உண்மையில், அந்தச் சிறப்புமிக்கத் துரோணரை யமனுலகுக்கு அனுப்ப விரும்பிய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் தங்கள் உச்சபட்ச வலிமையை அவர் {துரோணரின்} மேல் செலுத்தினர். அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, போரில் மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருந்த துணிச்சல் மிக்க வீரர்களை, அதிலும் குறிப்பாகச் சேதிகளில் முதன்மையானோரைத் தமது கணைகளால் இறந்தோருடைய மன்னனின் {யமனின்} முன்னிலைக்கு அனுப்பினார்.

சேதிகளில் முதன்மையானோர் அழிக்கப்பட்ட பிறகு, துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள் நடுங்கத் தொடங்கினர். துரோணரின் அந்த அருஞ்செயல்களைக் கண்ட அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனையும், திருஷ்டத்யும்னனையும் உரக்க அழைத்து, "இந்தப் பிராமணர் {துரோணர்} கடுமையான தவங்களைப் பயின்று, பெரும் தவத்தகுதியை அடைந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. போரில் சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரிக்கிறார். ஒரு க்ஷத்திரியனின் கடமை போராகும்; ஒரு பிராமணருக்கு {அந்தக் கடமையானது} உயர்ந்த தவமாகும். தவத்தகுதியும், கல்வியும் கொண்ட ஒரு பிராமணர், தன் பார்வையாலேயே அனைத்தையும் எரிக்கும் வல்லமை பெற்றவராவார். க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடக்க முடியாதவையும், கடுமையான நெருப்பைப் போன்றவையுமான துரோணரின் ஆயுதங்களை அடைந்து வெடித்து எரிகின்றனர். சிறப்புமிக்கத் துரோணர், தமதளவிலான வலிமை, துணிவு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் அனைத்து உயிரினங்களையும் மலைக்கச் செய்து, நமது துருப்புகளைக் கொன்று வருகிறார்" என்றனர் {பாஞ்சால வீரர்கள்}.

அவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை முறையாகப் பின்பற்றுபவனுமான வலிமைமிக்க க்ஷத்திரதர்மன், அம்பு பொருத்தப்பட்ட துரோணரின் வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், மேலும் கோபமடைந்து, தாம் எறிந்த {முறிந்த} வில்லை விடக் கடினமானதும், பிரகாசமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். பகைவரின் படையணிகளை அழிக்கும் கூர்முனைக் கணையொன்றை அதில் பொருத்திய ஆசான் {துரோணர்}, பெரும்பலத்துடன் தமது வில்லின் நாணைக் காதுவரை இழுத்து அந்த இளவரசனின் மீது ஏவினார். அந்தக் கணையானது க்ஷத்திரதர்மனைக் கொன்றுவிட்டு பூமிக்குள் நுழைந்தது. மார்பு பிளக்கப்பட்ட அவன் {க்ஷத்திரதர்மன்} தனது வாகனத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திருஷ்டத்யும்னனுடைய மகனின் கொலையை அடுத்து (பாண்டவத்) துருப்புகள் நடுங்கத் தொடங்கின.

அப்போது வலிமைமிக்கச் சேகிதானன் துரோணரின் மீது பாய்ந்தான். பத்து கணைகளால் துரோணரைத் துளைத்த அவன், மேலும் ஒரு கணையால் அவரது நடுமார்பைத் துளைத்தான். மேலும் அவன் {சேகிதானன்} நான்கு கணைகளால் துரோணரின் தேரோட்டியையும், மேலும் நான்கால் அவரது நான்கு குதிரைகளையும் துளைத்தான். பிறகு ஆசான் {துரோணர்} பதினாறு கணைகளால் சேகிதானனின் வலக்கரத்தைத் துளைத்து, பதினாறால் அவனது கொடிமரத்தையும், ஏழால் அவனது தேரோட்டியையும் துளைத்தார். தேரோட்டி கொல்லப்பட்டதும், சேகிதானனின் குதிரைகள் அந்தத் தேரைத் தங்களுக்கும் பின்னால் இழுத்துக் கொண்டு தப்பி ஓடின. சேகிதானனின் குதிரைகள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் துளைக்கப்பட்டதையும், சாரதியை இழந்த அவனது தேரையும் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் பெரும் அச்சத்தால் நிறைந்தனர். பிறகு துரோணர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் ஒன்றுசேர்ந்திருந்த பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் முறியடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.

முழுதாக எண்பத்தைந்து வயதும், கரிய நிற மேனியும், காது வரை தொங்கிய வெண்மயிரும் கொண்டவரான மதிப்புக்குரிய துரோணர், தன் தேரில் ஏறி பதினாறு வயது இளைஞனைப் போலப் போரில் திரிந்து கொண்டிருந்தார் [1]. உண்மையில் எதிரிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அச்சமற்று திரிந்து எதிரியைக் கொல்லும் துரோணரை, வஜ்ரதாரியான இந்திரனேயன்றி வேறு யாருமில்லை என்றே கருதினர். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான துருபதன், "பசியுடன் கூடிய புலியொன்று சிறு விலங்குகளைக் கொல்வதைப் போல இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களைக் கொன்றுவருகிறார். பாவியும், தீய ஆன்மா கொண்டவனுமான துரியோதனன், (தனது அடுத்த உலகாக) மிக மோசமான உலகங்களையே அடைவான் என்பது உறுதியானதாகும். அவனது பேராசையின் காரணமாகவே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், போரில் கொல்லப்பட்டுக் குருதியில் புரண்டு, நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகிச் சிதைந்த காளைகளைப் போலக் களத்தில் கிடக்கின்றனர்" என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனுமான துருபதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களைத் தனக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, துரோணரை நோக்கி வேகமாக விரைந்தான்" {என்றான் சஞ்சயன்}.

[1] வேறொரு பதிப்பில், "காது வரையில் நரைத்த மயிருள்ளவரும், கரிய நிறமுள்ளவரும், நானூறு பிராயமுள்ளவரும், கிழவருமான துரோணர் பதினாறு வயதுள்ளவன் போல ரணகளத்தில் நாற்புறங்களிலும் சஞ்சரித்தார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "காது வரை தொங்கும் நரைத்து வெளுத்த மயிருடனும், நீல நிறத்துடனும், முழுமையாக எண்பத்தைந்து வயதுடனும் கூடிய மதிப்புக்குரிய துரோணர், அதிக வயதையே சுமந்து கொண்டிருந்தாலும், பதினாறு வயது இளைஞனைப் போலக் களத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்" என்றிருக்கிறது. துரோணரின் வயது எண்பத்தைந்தா? நானூறா?, அவரது நிறம் கருப்பா? நீலமா? என்பவை ஒவ்வொரு பதிப்பிலும் முரண்பட்டே இருக்கின்றன. கங்குலியின் பதிப்பில் விராட பர்வம் பகுதி 43ல் விராடப் போரின் போது அர்ஜுனன் 65 ஆண்டுகளாக காண்டீவத்தை வைத்திருந்ததாக ஒரு குறிப்பு இருக்கிறது. அர்ஜுனன் ஆயுள் முழுவதும் வைத்திருந்ததே அந்த 65 ஆண்டுகள் என்று கொண்டாலும்  துரோணருக்கு வயது 85 என்பது இதனால் கேள்விக்குரியதாகவே ஆகிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்