Sunday, September 17, 2017

அர்ஜுனனின் தேர் சாம்பலானது! - சல்லிய பர்வம் பகுதி – 62

The car of Arjuna reduced to ashes! | Shalya-Parva-Section-62 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 31)


பதிவின் சுருக்கம் : முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கௌரவ முகாமுக்குச் சென்ற பாண்டவர்கள்; அர்ஜுனனைத் தேரைவிட்டு இறங்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் தேர் எரிந்தது; அதன் காரணத்தை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய கிருஷ்ணன்; கிருஷ்ணனே அதற்குக் காரணம் என்று சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் பாண்டவர்களும், சாத்யகியும் முகாமுக்கு வெளியே தங்கியது; கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய பாண்டவர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அம்மன்னர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, வழியில் சங்குகளை முழக்கிக் கொண்டே தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(1) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது முகாமை நோக்கிச் சென்றனர். பெரும் வில்லாளியான யுயுத்சு, சாத்யகி, திருஷ்டத்யும்னன், சிகண்டி, மற்றும் திரௌபதியின் ஐந்து மகன்களும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். பெரும் வில்லாளிகள் பிறரும் நமது பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(2,3) ஒளியை இழந்து, தன் தலைவனை இழந்து, கேளிக்கைக்குப் பிறகு பார்வையாளர்களால் கைவிடப்பட்ட அரங்கத்தைப் போல இருந்த துரியோதனனின் பாசறைக்குள் பார்த்தர்கள் நுழைந்தனர்.(4) உண்மையில், அந்த அரங்கமானது, கொண்டாட்டங்களை இழந்த ஒரு நகரத்தைப் போலவோ, யானையில்லாத ஒரு தடாகத்தைப் போலவோ தெரிந்தது. அப்போது அது பெண்களாலும், அலிகளாலும், முதிர்ந்த வயதுடைய குறிப்பிட்ட சில அமைச்சர்களாலும் நிறைந்திருந்தது.(5) முன்பெல்லாம் துரியோதனனும், மஞ்சள் சாயம் பூசப்பட்ட உடைகளை உடுத்திய பிற வீரர்களும் அந்த முதிர்ந்த அமைச்சர்களிடம் கரங்களைக் கூப்பி வணங்கி, அவர்களுக்காகக் காத்திருப்பார்கள்[1].(6) தேர்வீரர்களில் முதன்மையானோரான அந்தப் பாண்டவர்கள், குரு மன்னனின் {துரியோதனனின்} கூடாரத்தை அடைந்து தங்கள் தேர்களில் இருந்து இறங்கினர்.(7)


[1] கும்பகோணம் பதிப்பில், "துரியோதனனுக்கு முந்தி செல்பவர்கள் காவிவஸ்திரம் போல் அழுக்கடைந்த வஸ்திரத்தைத் தரித்து அஞ்சலிபந்தஞ்செய்து கொண்டு அவ்விடத்தில் இந்தப் பாண்டவர்களை உபாஸித்தார்கள் என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "முன்பு, காவி சாயம் பூசப்பட்ட தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு, துரியோதனனும் பிறரும், கூப்பிய கரங்களுடன் அவர்களை வணங்கி அவர்களுக்காகக் காத்திருப்பது வழக்கம்" என்றிருக்கிறது.

அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் நண்பனின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுபவனான கேசவன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்},(8) "உன் காண்டீவத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும் {இரண்டு அக்ஷயதூணீரங்ககையும்} எடுத்துக் கொண்டு இறங்குவாயாக. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நான் உனக்குப் பின்பு இறங்குவேன்.(9) ஓ! பாவமற்றவனே, உன் நன்மைக்காக நீ கீழே இறங்குவாயாக" என்றான். பாண்டுவின் வீரமகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனக்குச் சொல்லப்பட்டதைப் போலவே செய்தான்.(10) நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணன், குதிரைகளின் கடிவாளங்களைக் கைவிட்டு, பிறகு தனஞ்சயனின் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(11) உயிரினங்கள் அனைத்தின் தலைவனான உயரான்மா {கிருஷ்ணன்}, அந்தத் தேரில் இருந்து இறங்கியதும், அர்ஜுனனின் வாகனக் கொடிமரத்தின் உச்சியில் இருந்த தெய்வீகக் குரங்கு அங்கேயே அப்போதே மறைந்து போனது.(12) முன்பு துரோணர் மற்றும் கர்ணனின் தெய்வீக ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அந்தப் பெரும் வாகனம், ஓ! மன்னா, கண்ணுக்குத் தெரிந்த எந்த நெருப்பும் ஊட்டப்படாமலே, வேகமாகத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(13) உண்மையில், அம்பறாத்தூணிகள், கடிவாளங்கள், குதிரைகள், நுகத்தடி, ஏர்க்கால் ஆகியவற்றுடன் கூடிய தனஞ்சயனின் தேரானது, சாம்பலாகக் குறைக்கப்பட்டுக் கீழே விழுந்தது {எரிந்து சாம்பலானது}.(14) அந்த வாகனம் இவ்வாறு சாம்பலாகக் குறைக்கப்பட்டதைக் கண்ட பாண்டுவின் மகன்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

மேலும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரங்களைக் கூப்பிக் கிருஷ்ணனை வணங்கி, அன்பான குரலுடன், "ஓ! கோவிந்தா, ஓ! தெய்வீகமானவனே, என்ன காரணத்தினால் இந்தத் தேர் நெருப்பால் எரிக்கப்பட்டது?(15,16) நம் கண் முன்பே நடைபெறும் இந்த மிக ஆச்சரியமான நிகழ்ச்சியானது யாது? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, எந்தத் தீங்குமின்றி என்னால் கேட்க முடியும் என்று நீ நினைத்தால், அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(17)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! அர்ஜுனா, அந்தத் தேரானது முன்பே பல்வேறு வகை ஆயுதங்களால் எரிக்கப்பட்டிருந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரின்போது நான் அதில் அமர்ந்திருந்ததால், அது துண்டுகளாகச் சிதறாமல் இருந்தது.(18) பிரம்மாயுதங்களின் சக்தியால் முன்பே எரிக்கப்பட்டிருந்த அஃது, உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னால் கைவிடப்பட்டதால் சாம்பலாகக் குறைக்கப்பபட்டது" என்றான்.(19)

பிறகு, எதிரிகளைக் கொல்பவனான தெய்வீகக் கேசவன் {கிருஷ்ணன்} சற்றே செருக்குடன் மன்னன் யுதிஷ்டிரனைத் தழுவி கொண்டு, அவனிடம்,(20) "ஓ! குந்தியின் மகனே, நீர் வெற்றியை அடைந்தது நற்பேறாலேயே, உமது எதிரிகள் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து காண்டீவதாரி {அர்ஜுனன்}, பாண்டுவின் மகனான பீமசேனர், நீர் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோர் உயிரோடு தப்பியதும், உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்றதும் நற்பேறாலேயே.(21,22) ஓ! பாரதரே, உம்மால் என்ன செய்யப்பட வேண்டுமோ அதை விரைவாகச் செய்வீராக.(23) நான் உபப்லாவ்யத்துக்கு வந்த போது, காண்டீவதாரியின் துணையோடு என்னை அணுகிய நீர், தேனையும், சில வழக்கமான பொருள்களையும் கொடுத்து, "ஓ! தலைவா,(24) ஓ! கிருஷ்ணா, இந்தத் தனஞ்சயன் உனது சகோதரனும், நண்பனுமாவான். எனவே, இவன் {அர்ஜுனன்} அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவன்" என்ற வார்த்தைகளைச் சொன்னீர்.(25) நீர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நான், "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித்தேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} என்னால் பாதுகாக்கப்பட்டான், வெற்றியும் உமதானது.(26) ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையான ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பயங்கரப் போரிலிருந்து தன் சகோதரர்களுடன் {பாதுகாப்பாக} வெளியே வந்திருக்கிறான்" என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(28)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மயிர்க்கூச்சத்துடன் கூடியவனாகி அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(28) யுதிஷ்டிரன், "ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, துரோணர் மற்றும் கர்ணனால் ஏவப்பட்ட பிரம்மாயுதங்களைத் தாங்கிக் கொள்ள இந்திரனாலும் முடியாது எனும்போது வேறு எவரால் முடியும்?(29) சம்சப்தகர்கள் உன் அருளாலேயே வெல்லப்பட்டார்கள். கடுமைநிறைந்த மோதல்களிலும் உன் அருளாலேயே பார்த்தன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(30) அதேபோலவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானும் என் சந்ததியும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு செயல்களை நிறைவேற்றி ஆற்றலும் சக்தியும் கொண்ட ஒரு மங்கல முடிவை உன் அருளாலேயே அடைந்தோம்.(31) உபப்லாவ்யத்தில் என்னிடம், பெருமுனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, "எங்கே அறம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணன் இருப்பான். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியிருக்கும்" என்று சொன்னார்" என்றான் {யுதிஷ்டிரன்}"[2].(32)

[2] கும்பகோணம் பதிப்பில் இதற்குபிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: "இவ்வாறு கூறக்கேட்ட வாஸுதேவர், யுதிஷ்டிரரைப் பார்த்து, "பாரதரே, குருநந்தனரே, உம்முடையதும், சத்துருக்களுடையதுமான பதினெட்டு அக்ஷௌஹிணி சேனைகளும் இவ்வுலகில் பலத்தினால் அர்ஜுனனுக்கு ஈடாகா. அப்படிப்பட்ட இந்தப் பாண்டு நந்தனனான அர்ஜுனன் திவ்யாஸ்திரங்கள் அனைத்தையும் சங்கரரிடத்தினின்று அடைந்து, "யுத்தத்தில் நீ எனக்கு ஸ்மமாக இருப்பாய்; அல்லது, மேலானவனாக இருப்பாய்" என்று அனுமதி கொடுக்கப்பட்டவனாக மீண்டு பூமியை வந்தடைந்தான். பிரபுவே, நரசிரேஷ்டனனா அர்ஜுனன் உம்மால் அனுமதி கொடுக்கப்பட்டால் சென்றதையும், நிகழ்கின்றதையும், வருவதையும் அரை நிமிஷத்தில் (மரணத்தை) அடைவிப்பான் என்பது என்னுடைய எண்ணம். கோபங்கண்ட தனஞ்சயன் அரை நிமிஷத்திற்குள் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமா, ஜயத்ரதன் ஆகிய இவர்களைக் கொல்லத் திறமையுள்ளவனாவான். அந்த அர்ஜுனன், தேவர்கள் சுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராக்ஷஸர்கள் இவர்களுடன் கூடின மூவுலகங்களையும் ஜயிக்க சக்தியுள்ளவன். இவ்வுலகிலுள்ள மானிடரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? என்னால் தூண்டப்பட்டும், அவர்களைக் கொல்வதில் புத்தியைச் செலுத்தவில்லை. அஃது அவ்வாறு ஏற்பட்டது தெய்வத்தின் செயல். அதனால் அவர்கள் அதிகப் பலசாலிகளானார்கள். அரசரே, இவ்விஷயத்தில் உண்மையான சொற்கள் என்னால் நன்கு உரைக்கப்பட்டன. என்னிடத்தில் எல்லாம் காண்பிக்கப்பட்டன. அதனால் இவன் சத்துருக்களை ஜயித்தான். அரசரே, மிக்கபுஜபலமமைந்த அர்ஜுனனும் எனக்கு ஸமானன். பிரபுவே, மஹேசுவரரிடத்தினின்று அஸ்திரங்களைப் பெற்ற பிரபுவான அந்த அர்ஜுனன் எதைத்தான் செய்ய மாட்டான்?" என்றார்" என்றிருக்கிறது. இக்குறிப்பு, கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்போலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இந்த உரையாடலுக்குப் பிறகு உமது முகாமுக்குள் நுழைந்த அவ்வீரர்கள், இராணுவக் கருவூலத்தையும், பல நகைகளையும், பல செல்வத்தையும் அடைந்தனர்.(33) மேலும் அவர்கள் வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், முத்துக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பல்வேறு ஆபரணங்கள், விரிப்புகள் தோல்கள்,(34) எண்ணற்ற ஆண், பெண் பணியாட்கள், மேலும் அரசுரிமைக்குத் தேவையான பிற பொருட்கள் பலவற்றையும் அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே, எவருடைய எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனரோ அந்த உயர் ஆன்மாக்கள் {பாண்டவர்கள்} உமக்குச் சொந்தமான அந்த வற்றாத செல்வத்தை அடைந்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(35) தங்கள் விலங்குகளைப் பூட்டுகளில் இருந்து விடுவித்த பாண்டவர்களும், சாத்யகியும், ஓய்வு கொள்வதற்காகச் சற்று நேரம் அங்கே இருந்தனர்.(36) அப்போது பெரும்புகழைக் கொண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, "அருளின் தொடக்கச் செயலாக இவ்விரவு நாம் நமது முகாமை விட்டு வெளியே இருப்போம்" என்றான்[3].(37) "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பாண்டவர்கள், சாத்யகியும், எது மங்கலக் காரியம் என்று கருதப்படுகிறதோ, அதைச் செய்ய வாசுதேவனின் துணையுடன் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(38)

[3] கும்பகோணம் பதிப்பில், "நாம் மங்களத்திற்காகப் பாசறைக்கு வெளியே வசிக்க வேண்டும்" என்றிருக்கிறது.

எதிரிகளற்றவர்களான அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புனித ஓடையான ஓகவதியின் கரைக்கு வந்து, அவ்விரவிற்காக அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(39) பிறகு அவர்கள் யது குலத்தின் கேசவனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்டவனான வாசுதேவன், தாருகனைத் தன் தேரை எடுத்து வரச் செய்து, அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கு மிக வேகமாக் சென்றான்.(40) சைவியம், சுக்ரீவம் (மற்றும் பிற குதிரைகள்) ஆகியவை பூட்டப்பட்ட அவனது தேர் புறப்பட்டபோது, (பாண்டவர்கள்) அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "தன் மகன்கள் அனைவரையும் இழந்து ஆதரவற்றவளாக இருக்கும் காந்தாரிக்கு ஆறுதலளிப்பாயாக" என்றனர்.(41) பாண்டவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சாத்வதர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, ஹஸ்தினாபுரத்தை நோக்கிச் சென்று, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவளான காந்தாரியின் முன்னிலையை அடைந்தான்" {என்றான் சஞ்சயன்}".(42)


சல்லிய பர்வம் பகுதி – 62 ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்