Thursday, November 30, 2017

சார்வாகன்! - சாந்திபர்வம் பகுதி – 38

Charvaka! | Shanti-Parva-Section-38 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 38)


பதிவின் சுருக்கம் : திரௌபதியைப் புகழ்ந்த மகளிர்; அரண்மனையை அடைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த குடிமக்கள்; ஆசி வழங்கிய பிராமணர்கள்; பிராமணனாக வேடம் பூண்டு வந்த ராட்சசன்; யுதிஷ்டிரனை நிந்தித்த சார்வாகன்; அவனைப் பணிந்து வணங்கிய யுதிஷ்டிரன்; சார்வாகனின் பேச்சை மறுத்து, தங்கள் குரலொலியாலேயே சார்வாகனைக் கொன்ற பிராமணர்கள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பார்த்தர்கள் நகருக்குள் நுழைந்த நேரத்தில், அக்காட்சியைக் காண ஆயிரக்கணக்கான குடிமக்கள் வெளியே வந்தனர்.(1) ஒவ்வொரு கனமும் பெருகும் கூட்டத்தைக் கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையான சதுக்கங்களும், வீதிகளும், நிலவின் எழுச்சியில் பெருகும் பெருங்கடலைப் போல அழகாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, வீதியோரங்களில் நின்றவையும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், மகளிர் நிறைந்தவையுமான பெரும் மாளிகைகள், இந்தப் பெரும் கூட்டத்தால் நடுங்குவதாகத் தெரிந்தன.(3) அவர்கள் {அந்தப் பெண்கள்} பணிவான அடக்கமான வார்த்தைகளில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோரைப் புகழ்ந்தனர்.(4)


அவர்கள், "ஓ! அருளப்பட்ட பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, (ஏழு) முனிவர்களின் அருகில் இருக்கும் கௌதமியைப் போலவே இந்த மனிதர்களில் முதன்மையானோருக்குப் பணிவிடை செய்யும் நீ அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாவாய்.(5) ஓ! மங்கையே {திரௌபதியே}, உன் செயல்களும், நோன்புகளும் உனக்கு அவற்றின் கனிகளைப் பெற்றுத் தந்தன" என்றனர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வகையிலேயே இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப் பெண்கள் புகழ்ந்தனர்.(6)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் புகழ்ச்சிகள், ஒருவருடனொருவர் பேசும் அவர்களது பேச்சுகள், (மனிதர்களால் உண்டான) மகிழ்ச்சிக் கூச்சல் ஆகியவற்றின் விளைவால் அந்நகரமே பேராரவாரத்தால் நிறைந்தது.(7) தனக்குத் தகுந்த நடத்தையுடன் வீதிகளின் ஊடாகக் கடந்து சென்ற யுதிஷ்டிரன், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட (குருக்களின்) அழகிய அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) நகரத்தையும், மாகாணங்களையும் சார்ந்த மக்கள் அந்த அரண்மனையை அணுகி, காதுகளுக்கு ஏற்புடுயை பேச்சுகளைப் பேசினர்.(9)

அவர்கள், "ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நற்பேற்றாலேயே நீ உன் எதிரிகளை வென்றாய். நற்பேற்றாலே அறம் மற்றும் ஆற்றலின் மூலம் உன் நாட்டை நீ மீட்டாய்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, (சொர்க்கவாசிகளைக்) காக்கும் இந்திரனைப் போல உன் குடிமக்களை அறம்சார்ந்து பாதுகாத்து, நூறு ஆண்டுகளுக்கு எங்கள் ஏகாதிபதியாக இருப்பாயாக" என்றனர்.(11)

அரண்மனை வாயிலில் இவ்வாறு அருள்நிறைந்த பேச்சுகளால் புகழப்பட்டும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பிராமணர்களின் ஆசிகளை ஏற்றுக் கொண்டும்,(12) வெற்றியாலும், தன் மக்களின் ஆசிகளாலும் அருளப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்திரனின் மாளிகைக்கு ஒப்பான அந்த அரண்மனைக்குள் நுழைந்து, தன் தேரில் இருந்து இறங்கினான்.(13) அருளப்பட்டவனான யுதிஷ்டிரன், அறைகளுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தேவர்களை அணுகி, ரத்தினங்களாலும், நறுமணப்பொருட்களாலும், மலர் மாலைகளாலும் அவர்களை வழிபட்டான்.(14) பெரும் புகழையும், செழிப்பையும் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் வெளியே வந்து, (அவனுக்கு ஆசி கூறுவதற்காகத்) தங்கள் கரங்களில் மங்கலப் பொருட்களுடன் காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களைக் கண்டான்.(15) ஆசி கூற விரும்பி அவ்வாறு சூழ்ந்திருந்த பிராமணர்களுடன் பார்ப்பதற்கு அந்த மன்னவன், நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள களங்கமில்லா நிலவைப் போல அழகாகத் தெரிந்தன்.(16)

தனது புரோகிதர் தௌமியர், தன் பெரியப்பன் {திருதராஷ்டிரன்} ஆகியோரின் துணையுடன் இருந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களுக்கு இனிப்பு, ரத்தினங்கள், அபரிமிதமான தங்கம், பசுக்கள், ஆடைகள் மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் விரும்பிய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் (கொடையாகக்) கொடுத்தான்.(17,18) அப்போது, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி, "இஃது அருளப்பட்ட தினம்" என்ற உரத்த கூச்சல் எழுந்தது. காதுக்கு இனிமையான அந்தப் புனிதமான ஒலி (பாண்டவர்களின்) நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.(19) அன்னங்களின் கூட்டம் வெளியிடும் ஒலியைப் போலக் கல்விமான்களான அந்தப் பிராமணர்கள் வெளியிட்ட ஒலியானது உரக்கவும், தெளிவாகவும் இருந்ததை மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். வேதங்களை நன்கறிந்த மனிதர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவையும் இனிமையானவையுமான அந்த வார்த்தைகளை மன்னன் கேட்டான்.(20) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெற்றியின் குறியீடாகப் பேரிகை முழக்கங்களும், சங்குகளின் இனிய ஒலியும் எழுந்தன.(21)

சிறிது நேரம் கழித்துப் பிராமணர்கள் அமைதியடைந்தபோது, சார்வாகன்[1] என்ற பெயருடைய ராட்சசன், பிராமண வேடத்தில் வந்து மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான்.(22) துரியோதனனின் நண்பனான அவன், துறவியின் ஆடையில் அங்கே நின்று கொண்டிருந்தான். ஜபமாலைகளுடனும்[2], தலையில் குடுமியுடனும், கையில் திரி தண்டத்துடனும் கூடிய அவன், தவங்களுக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களும், (மன்னனுக்கு) ஆசி கூற வந்தவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மத்தியில் அச்சமில்லாமல் செருக்குடன் நின்று கொண்டிருந்தான்.(23,24) உயர் ஆன்ம பாண்டவர்களுக்குத் தீமையை விரும்பிய அந்தப் பொல்லாத்தீயவன், அந்தப் பிராமணர்களுடன் ஆலோசிக்காமலேயே மன்னனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(25)

[1] சல்லிய பர்வம் பகுதி 64ல் http://mahabharatham.arasan.info/2017/09/Mahabharatha-Shalya-Parva-Section-64.html இந்தச் சார்வாகனைக் குறித்துத் துரியோதனன் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறான்.

[2] கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் ஜபமாலை என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ஸாங்க்யம் என்பதைவிட்டு, "ஸாக்ஷம்" எனக் கொண்டால் ஜபமாலை" என்ற பொருள் வரும் என அடிக்குறிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன் ஒரு சாங்கியனாக இருந்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இஃது ஒரு தனிப்பட்ட சாங்கியத் துறவியைக் குறிக்கிறது. இதைச் சாங்கியக் கொள்கையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது" என்றிருக்கிறது.

சார்வாகன் {யுதிஷ்டிரனிடம்}, "இந்தப் பிராமணர்கள் அனைவரும் என்னைத் தங்கள் பேச்சாளனாக நியமித்து, ʻதீய மன்னனான உனக்கு ஐயோ. நீ உறவினர்களைக் கொன்றவனாவாய்.(26) ஓ! குந்தியின் மகனே, உன் குலத்தையே இவ்வாறு அழித்துவிட்டு நீ என்ன ஈட்டிவிடப் போகிறாய்? பெரியோரையும், ஆசானையும் கொன்ற நீ உன் உயிரை விடுவதே முறையாகும்’ என்று சொல்கின்றனர்" என்றான்.(27) அந்தத் தீய ராட்சசனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அந்தப் பேச்சால் குட்டுபட்ட அவர்கள் உரத்த ஆரவாரம் செய்தனர்.(28) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனுடன் கூடிய அவர்கள், கவலையாலும், வெட்கத்தாலும் பேச்சற்றவர்களானார்கள்.(29)

யுதிஷ்டிரன் {ராட்சசன் சார்வாகனிடம்}, "நான் உம்மை வணங்கி, பணிந்து, வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் நிறைவு கொள்வீராக. என்னை நிந்தனை செய்வது உமக்குத் தகாது. நான் விரைவில் என் உயிரை விடுவேன்" என்றான்"[3].(30)

[3] "இங்கே சொல்லப்பட்டிருக்கும் பிரத்யசன்னவியசனினம் Pratyasanna-vyasaninam என்பது நீலகண்டரால் ʻதுயர் நிறைந்த என் தம்பிகளின் அருகில் நான் நிற்கிறேன். இவர்களுக்காகவே நான் அரசுரிமையை ஏற்கிறேன்’ என்று யுதிஷ்டிரன் சொன்னதாக விளக்கப்படுகிறது. இஃது உண்மையில் மிக அழகாகவே இருக்கிறது. இருப்பினும் வெளிப்படையான பொருள், ʻநான் என் உயிரை விடப் போகிறேன்’ என்பதே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த சுலோகம் மேற்கண்டவாறே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் "ஓ, பெரியோர்களே! நீங்கள், மிகவும் நமஸ்கரித்து யாசிக்கும் என்னை அனுக்ரஹிக்க வேண்டும். கிட்டின பந்துக்களின் துன்பம் பொறாமல் ராஜ்யத்திற்கு வந்த என்னைத் திக்காரஞ்செய்யாமலிருக்க நீங்கள் தயை செய்ய வேண்டும்" என்று யுதிஷ்டிரன் கேட்பதாக இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் உம்மை வணங்குகிறேன். எனக்கு உமது கருணையைக் காட்டுவீராக. நீர் என்னைக் கடிந்துரைக்கலாகாது. பேரழிவின் துயரிலிருந்து இப்போதுதான் நான் மீண்டிருக்கிறேன்" என்று யுதிஷ்டிரன் சொல்வதாக இருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்தப் பிராமணர்கள் அனைவரும், "இவை எங்களுடைய வார்த்தைகளல்ல. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, செழிப்பு உனதாகட்டும்" என்றனர்.(31) வேதங்களை அறிந்தோரும், தவங்களால் அறிவு தெளிவடைந்தோருமான அந்த உயர் ஆன்ம மனிதர்கள், இவ்வாறு பேசியவனின் {ராட்சசன் சார்வாகனனின்} வேடத்தைத் தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் ஊடுருவினர்.(32) பிறகு அவர்கள், "இவன் துரியோதனனின் நண்பனான ராட்சசன் சார்வாகனாவான்[4]. அறத்துறவியின் ஆடையை அணிந்து கொண்டு, தன் நண்பன் துரியோதனனின் நன்மைக்காக இவ்வாறு முயற்சிக்கிறான். ஓ! அற ஆன்மாவே, நாங்கள் இவ்வகையில் ஏதும் பேசவில்லை. இந்த உன் கவலை அகலட்டும். உன் தம்பிமாருடன் கூடிய நீ செழிப்பை அடைவாயாக" என்றனர்"[5].(34)

[4] கும்பகோணம் பதிப்பில் அதிகத் தகவலாக, "ஓ ராஜரே இவன் துர்யோதனனுக்குத் தோழனென்று பிரஸித்தனான பிரம்மராக்ஷஸன்" என்றிருக்கிறது. 

[5] கும்பகோணம் பதிப்பில், அந்தப் பிராமணர்களின் பேச்சு முழுமையாகப் பின்வருமாறு "ஓ ராஜரே, இவன் எங்களுடன் சேர்ந்த பிராம்மணனேயல்லன். இவன் எவனோ வேறே ஒருவன்’ என்று சொல்லிவிட்டு, மிக்கதவங்களால் பரிசுத்திபெற்றவர்களும், வேதமறிந்தவர்களுமான அம்மஹாத்மாக்கள் ஞானக்கண்ணால் அவனை இன்னானென்று தெரிந்து கொண்டு, ‘ஓ ராஜரே இவன் துர்யோதனனுக்குத் தோழனென்று பிரஸித்தனான பிரம்மராக்ஷஸன். அந்தத் துரியோதனனுக்கு நன்மையைச் செய்ய விரும்பி இவன் ஸந்யாஸி உருவங்கொண்டு வந்து நிற்கிறான். இந்த வார்த்தைகளை நாங்கள் சொல்லவில்லை. ஓ தர்ம்புத்தியுள்ளவரே, நீர் இவ்வித பயத்தை அடைய வேண்டாம். தம்பிகளுடன் கூட உமக்கு க்ஷேமம் உண்டாக வேண்டுகிறோம்" என்று சொன்னார்கள்" என இருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது சினத்தால் உணர்விழந்தவர்களான அந்தப் பிராமணர்கள் "ஹும்" என்ற ஒலியை வெளியிட்டனர். பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்தவர்களான அவர்கள், பாவம் நிறைந்த அந்த ராட்சசனை நிந்தித்து, (அந்தத் தங்கள் ஒலியாலேயே) அவனை அங்கேயே கொன்றனர்[6].(35) பிரம்மத்தை ஓதுபவர்களான அவர்களின் சக்தியால் எரிக்கப்பட்ட சார்வாகன், குருத்துகளுடன் {தளிர்களுடன்} கூடிய மரமானது இந்திரனின் வஜ்ரத்தால் {இடியால்} வெடிப்பதைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தான்.(36) அந்தப் பிராமணர்கள், முறையாக வழிபடப்பட்டு, தங்கள் ஆசிகளால் மன்னனை மகிழ்வித்த பிறகு அங்கிருந்து சென்றனர். தன் நண்பர்களுடன் கூடிய பாண்டுவின் அரசமகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(37)

[6] கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிராம்மணர்களுடைய தேஜஸால் கொளுத்தப்பட்டு அந்த ராக்ஷஸன் இடிவிழுந்த தளிருள்ள மரம்போலக் கீழே விழுந்தான்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்