Showing posts with label சிரிங்கின். Show all posts
Showing posts with label சிரிங்கின். Show all posts

Thursday, March 14, 2013

ஜனமேஜயன் கோபம்! | ஆதிபர்வம் - பகுதி 50

The wrath of Janamejaya! | Adi Parva - Section 50 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 38)

பதிவின் சுருக்கம் : அமைச்சர்கள் நடந்ததைக் கூறினர்; தக்ஷகன் கசியபர் உரையாடல் தெரிந்த விதம்; தக்ஷகனைப் பழிதீர்க்க முடிவு செய்த ஜனமேஜயன் ...

சௌதி தொடர்ந்தார், "அமைச்சர்கள் சொன்னார்கள், "அந்த மன்னர் மன்னன் {பரீக்ஷித்}, பசியாலும், முயற்சியாலும் களைத்துப் போய், அந்த முனிவரின் {சமீகரின்} தோள்களில் பாம்பைக் கிடத்திவிட்டு தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பி வந்துவிட்டான்.(1) அந்த முனிவருக்குப் {முனிவர் சமீகருக்கு}, பசுவிடம் பிறந்த ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெயர் சிருங்கி. அவன் {சிருங்கி} தனது பெரும் வீரம், சக்தி மற்றும் பெரும் கோபத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டு இருந்தான்.(2) (தினமும்) தனது குருவிடம்[1] சென்று, அவரை வழிபட்டு வரும் வழக்கம் அவனிடம் {சிருங்கியிடம்} இருந்தது. அந்தக் குருவின் உத்தரவின் பேரில் சிருங்கி தனது வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(3) தனது நண்பனின் மூலம், உன் தந்தையினால் அவன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கேட்டறிந்தான். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தந்தை {முனிவர் சமீகர்} எக்குற்றமும் செய்யாதிருப்பினும், உயிரற்ற பாம்பைச் சுமந்து ஒரு சிலையைப் போல அசைவற்றவராக அமர்ந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டான்.(4,5)

[1] பிரம்மனிடம் சென்று என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} கடும் தவங்களை நோற்பவர். முனிவர்களில் முதன்மையானவர். தனது உணர்ச்சிகளை அடக்கி வாழ்பவர். சுத்தமானவர். அற்புதமான செயல்கள் செய்து கொண்டிருப்பவர். தவத் துறவுகளால் அவரது {முனிவர் சமீகரது} ஆன்மா ஞானஒளி பெற்றிருந்தது. அவரது உறுப்புகளும், அதன் செயல்களும் அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. அவரது செயல்களும், பேச்சும் எப்போதும் அருமையாகவே இருக்கும். அவர் {முனிவர் சமீகர்} பேராசைகள் அற்று மனநிறைவுடன் இருந்தார். அவர் பொறாமையற்றும், எந்த விதத்திலும் கருமித்தனமற்றும் இருந்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் அதன் துயரங்களில் அடைக்கலம் கொடுப்பவர். அந்த முதிர்ந்தவர் மௌன விரதம் இருப்பது வழக்கம். உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} அப்படிப்பட்டவர். அந்த முனிவரின் மகன் {சிருங்கி} பெரும் கோபம் கொண்டு உனது தந்தையை {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(6-8) வயதில் இளையவனாக இருந்தாலும், அந்தச் சக்திவாய்ந்தவன் தவ மகிமையில் முதிர்ந்தவனாக இருந்தான். அவன் {சிருங்கி} கோபம் கொண்டு வேகமாக நீரைத் தொட்டு, தவசக்தியினால் ஒளிர்ந்து கொண்டு உன் தந்தையைக் குறித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தான்.(9) அவன், "எனது ஆன்மீக பலத்தைப் {தவத்தின் சக்தியைப்} பார்! எனது இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டுப் பலமான சக்தியும், கொடிய விஷமும் கொண்ட தக்ஷகன் {பாம்பு}, எந்தத் தவறும் செய்யாத என் தந்தை {முனிவர் சமீகர்} மீது இந்தப் பாம்பைக் கிடத்திய தீயவனை, இன்னும் ஏழு இரவுகளுக்குள் தன் விஷத்தால் எரிப்பான்" என்று {சிருங்கி} சபித்துவிட்டு, தனது தந்தை {முனிவர் சமீகர்} எங்கிருந்தாரோ அங்குச் சென்றான்.(10-12)

அவனது தந்தையைச் சந்தித்து, தனது சாபத்தைப் பற்றிச் சொன்னான். அந்த முனிவர்களில் புலியானவர் {முனிவர் சமீகர்}, இனிமையான குணமும், அனைத்து அறங்களும் கொண்டவனும், இனிமையானவனுமான தனது சீடன் கௌர்முகனை உனது தந்தையிடம் {பரீக்ஷித்திடம்} அனுப்பினார். அவன் {சமீகரின் சீடன் கௌர்முகன்} (சபைக்கு வந்த பிறகு) வந்து சிறிது ஓய்வெடுத்த பின், மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} அனைத்தையும் தன் குருவின் {சமீகர்} வார்த்தைகளிலேயே தெரிவித்தான்.(13,14) "எனது மகனால் {சிருங்கியால்} நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், ஓ மன்னா, தக்ஷகன் {பாம்பு} தனது விஷத்தால் உன்னை எரிக்கப்போகிறான். ஓ மன்னா, கவனமாக இருப்பாயாக" {என்றான் கௌர்முகன்}.(15) ஓ ஜனமேஜயா, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட உனது தந்தை {பரீக்ஷித்} பலம்வாய்ந்த தக்ஷகனுக்கு எதிராக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டான்.(16)

ஏழாவது நாள் வந்த போது, கசியபர் என்ற பிராமண முனிவர், ஏகாதிபதியை {பரீக்ஷித்தைச்} சந்திக்க விருப்பம் கொண்டார்.(17) ஆனால் அந்தப் பாம்பு தக்ஷகன், கசியபரைச் சந்தித்தான்.. அந்தப் பாம்புகளின் இளவரசன் {தக்ஷகன்} கசியபரிடம் நேரத்தைக் கடத்தாமல் பேசினான். "எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்? எக்காரியத்திற்காக நீர் போகிறீர்?" என்று கேட்டான்.(18) கசியபர், "ஓ பிராமணரே, நான் குரு பரம்பரையின் சிறந்த மன்னன் பரீக்ஷித் எங்கிருக்கிறானோ அங்குச் செல்கிறேன். அவன் தக்ஷகனின் விஷத்தால் இன்று எரியப் போகிறான்.(19) அவனைக் குணப்படுத்தவே நான் விரைவாகச் செல்கிறேன். உண்மையில் என்னால் பாதுகாக்கப்படும் போது அந்தப் பாம்பால் அவனைக் {பரீக்ஷித்தைக்} கடித்துக் கொல்ல முடியாது" என்றார்.(20)

தக்ஷகன், "நானே தக்ஷகன். என்னால் கடிபட இருக்கும் அந்த மன்னனை எதற்காகக் காக்கப் போகிறீர்? ஓ பிராமணரே {கசியபரே}, என்னால் கடிக்கப்படும் அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} பிழைக்க வைக்க உம்மால் ஆகாது. எனது விஷத்தின் அற்புத பலத்தைப் பாரும்" என்று சொல்லி, அங்கே இருந்த கானக மன்னனைக் (ஆல மரத்தைக்) கடித்தான்.(21-22) அந்த ஆலமரம் பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட உடன் சாம்பலாக ஆனது. ஆனால் ஓ மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதை உயிர்ப்பித்தார்.(23) அப்போது தக்ஷகன், "உமது விருப்பத்தைச் சொல்லும்" என்று கேட்டு அவரது {ஆசையைத்} தூண்டினான். இப்படிக் கேட்கப்பட்ட கசியபரும் தக்ஷகனிடம்,(24) "செல்வத்தில் விருப்பம் கொண்டே நான் அங்குச் செல்கிறேன்" என்றார். அந்த உயர்ஆன்ம கசியபரிடம் தக்ஷகன் மென்மையான வார்த்தைகளால்,(25) "ஓ பாவமற்றவரே {கசியபரே}, நீர் அந்த ஏகாதிபதியிடம் {பரீக்ஷித்திடம்} இருந்து எதிர்பார்த்ததை விட அதிகச் செல்வத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லும்" என்றான் {தக்ஷகன்}.(26) இதைக் கேட்ட, அந்த மனிதர்களில் முதன்மையான கசியபர், அவனிடமிருந்து தான் விரும்பிய அளவு செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, தான் வந்த வழியே சென்றார்.(27)

கசியபர் திரும்பிச் சென்றதும், தக்ஷகன் மாற்றுருவம் கொண்டு, தனது மாளிகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கியிருந்த, மன்னர்களில் முதன்மையானவனும், அறவழி நடப்பவனுமான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} மேல் தனது விஷ நெருப்பைச் செலுத்தினான். அதன் பிறகு ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, நீ (அரியணையில்) அமர்த்தப்பட்டாய்.(28,29) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, கொடூரமானதாக இருந்தாலும், நாங்கள் கண்டதையும், கேட்டதையும் முழுவிவரத்தையும் உரைத்துவிட்டோம்.(30 மன்னனான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} கவலையையும், உதங்க முனிவரின் அவமதிப்பையும் முழுவதும் கேட்டு, செய்யவேண்டியதை நீயே தேர்வு செய்து கொள்வாயாக" என்றனர்."(31)

சௌதி தொடர்ந்தார், "எதிரிகளை அடக்கும் மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்கள் அனைவருடன் பேசினான்.(32) அவன், "ஆலமரம், தக்ஷகனால் சாம்பலானதையும், அது பிறகு அற்புதமான முறையில் கசியபரால் உயிர்ப்பிக்கப்பட்டதையும் எப்போது நீங்கள் அறிந்தீர்கள்? எனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகன் தீண்டி இறந்திருந்தாலும், கசியபரின் மந்திரங்களால் அவரை நிச்சயம் பிழைக்க வைத்திருக்க முடியும்.(33,34) அந்தப் பாம்புகளில் இழிந்தவன் {தக்ஷகன்}, அந்தப் பாவ ஆன்மா, தன்னால் கடிபட்ட மன்னன், கசியபரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால் தன் விஷம் செயலிழக்க வைக்கப்பட்டதைக் குறித்து உலகம் தன்னைக் கேலி செய்து எள்ளி நகையாடும் என்று தன் மனதில் எண்ணியிருக்கிறான். நிச்சயமாக அந்த எண்ணம் இருந்ததால்தான், அவன் {தக்ஷகன்} கசியபரை சமாதானப் படுத்தியிருக்கிறான்.(35,36) அவனைத் {தக்ஷகனைத்} தண்டிக்க நான் ஒரு வழியைத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கானகத்தில் தனிமையில் தக்ஷகனும் கசியபரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை நீங்கள் பார்த்தபடியே அல்லது கேட்டபடியே எனக்குச் சொல்லுங்கள். அதை அறிந்த பிறகு, பாம்பினத்தையே ஒழிக்க ஒரு திட்டம் செய்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(37,38)

அமைச்சர்கள், "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த பிராமணர்களில் முதன்மையானவரும் {கசியபரும்}, பாம்புகளின் இளவரசனும் கானகத்தில் சந்தித்துக் கொண்டதைப் பற்றி முன்பு எங்களுக்குக் கூறியவனைப் பற்றிக் கேட்பாயாக.(39) ஓ ஏகாதிபதியே, {அந்த ஆலமரத்தின்} காய்ந்த கிளைகளை உடைத்து, அவற்றை வேள்விக்கான விறகாக்கும் எண்ணத்துடன் ஒரு மனிதன் அம்மரத்தின் மேல் ஏறியிருந்தான்.(40)

அவன் அந்தப் பாம்பாலோ {தக்ஷகனாலோ} அல்லது அந்த பிராமணராலோ கவனிக்கப்படவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த மனிதனும் அந்த மரத்தோடு சாம்பலானான்.(41) ஓ மன்னர்மன்னா, அந்த மரம் பிராமணரின் {கசியபரின்} சக்தியால் உயிர்மீட்கப்பட்ட போது, உடன் சேர்ந்து இவனும் மீண்டான். ஒரு பிராமணரின் வேலைக்காரனான அவன், எங்களிடம் வந்து,(42) தக்ஷகனுக்கும், பிராமணருக்கும் {கசியபருக்கும்} இடையில் நடந்த உரையாடலை முழுமையாகச் சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா} நாங்கள் பார்த்தவாறும், கேட்டவாறும் அனைத்தையும் இப்போது சொல்லிவிட்டோம். இதைக் கேட்ட நீ, ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, என்ன நடக்க வேண்டும் என்று உத்தரவிடுவாயாக" என்றனர் {அமைச்சர்கள்}."(43)

சௌதி தொடர்ந்தார், "மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் மிகுந்த துயர் கொண்டு அழத் தொடங்கினான். அந்த ஏகாதிபதி தனது கைகளைப் பிசைந்தான்.(44) அந்தத் தாமரைக் கண்கொண்ட மன்னன் {ஜனமேஜயன்} பெரும் சூடான நெடும் மூச்சுகளை விட்டபடியே, கண்களில் நீர்ச் சிந்தி, உரக்கக் கதறினான்.(45) மிகுந்த துக்கம் கொண்டு, சாரை சாரையாகக் கண்ணீர் சிந்தி, நீரைத் தொட்ட அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, மனத்தில் ஏதோ திட்டம் போடுபவனைப் போலச் சிறிது நேரம் சிந்தித்து விட்டு தனது அமைச்சர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினான்.(46)

அவன் {ஜனமேஜயன்}, "எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} விண்ணேகுதலை உங்கள் மூலம் அறிந்தேன்.(47) என் உறுதியான முடிவை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது தந்தையை {பரீக்ஷித்தைக்} கொன்ற தீயவனான தக்ஷகனைப் பழிவாங்கக் காலம் தாழ்த்தக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். எனது தந்தையை எரித்த அவன், சிருங்கியை வெறும் இரண்டாவது காரணமாக்கினான்.(48,49) ஆழ்ந்த வெறுப்பாலேயே அவன் {தக்ஷகன்} கசியபரைத் திரும்பிப் போகச் செய்தான். அந்த பிராமணர் {கசியபர்} வந்திருந்தால் எனது தந்தை {பரீக்ஷித்} நிச்சயம் பிழைத்திருப்பார்.(50) கசியபரின் கருணையாலும், அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாலும் எனது தந்தை பிழைத்திருந்தால் அவன் எதை இழந்திருப்பான்?(51) எனது கோபத்தின் விளைவுகளைப் பற்றிய அறியாமையால், எனது தந்தையை உயிர்ப்பிக்கும் ஆவலுடன் வந்த, அந்த பிராமணர்களில் சிறந்த கசியபரைத் {நேரடியாகத்} தோற்கடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தினான்.(52) மன்னனை உயிர்ப்பிக்கக் கூடாது என்று அந்த பிராமணருக்குச் செல்வத்தைக் கொடுத்த அந்தப் பாவியான தக்ஷகனின் பகைமை மிகப்பெரியதாகும்.(53) என்னையும், உதங்க முனிவரையும், உங்கள் எல்லோரையும் மனநிறைவு கொள்ளச் செய்ய, எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} எதிரியை நானே இப்போது பழி வாங்கப் போகிறேன்" என்றான் {ஜனமேஜயன்}."(54)

ஆங்கிலத்தில் | In English

Sunday, March 03, 2013

பரீக்ஷித்துக்குச் செய்தி வந்தது! | ஆதிபர்வம் - பகுதி 42

The message reached Parikshit! | Adi Parva - Section 42 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 30)

பதிவின் சுருக்கம் : சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரீக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்...

சௌதி சொன்னார், "அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, "ஓ தந்தையே! நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே! நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை" என்றான்.(2)

தந்தையின் கண்டிப்பு! | ஆதிபர்வம் - பகுதி 41

Father rebuked the son! | Adi Parva - Section 41 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 29)

பதிவின் சுருக்கம் : சிருங்கியின் கோபம்; பரீக்ஷித்தைச் சபித்த சிருங்கி; தன் சாபத்தைக் குறித்துத் தனது தந்தையிடம் தெரிவித்த சிருங்கி; தன் மகனைக் கண்டித்த சமீகர்...

சௌதி சொன்னார், "இப்படிச் {கிருசனால்} சொல்லப்பட்டதையும், தன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்த சிருங்கி கோபத்தால் எரிந்தான்.(1) கிருசனைப் பார்த்து, மென்மையாக, "வேண்டிக் கேட்கிறேன், இன்று ஏன் எனது தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமக்கிறார்?" என்று கேட்டான்.(2) அதற்குக் கிருசன், "ஓ அன்புக்குரியவனே, மன்னன் பரீக்ஷித்வேட்டைக்காகத் திரிந்து கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் இறந்த பாம்பை உனது தந்தையின் {சமீகரின்} தோளில் போட்டுச் சென்றான்" என்றான்.(3) சிருங்கி, "அந்தத் தீய ஏகாதிபதிக்கு {பரீக்ஷித்} எனது தந்தை {சமீகர்} என்ன தீங்கு செய்தார்? ஓ கி்ருசா, இதைச் சொல்லி, எனது ஆன்ம பலத்தைக் காண்பாயாக" என்றான்.(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்