Showing posts with label பாஹ்லீகர். Show all posts
Showing posts with label பாஹ்லீகர். Show all posts

Sunday, April 14, 2019

ஐவகைத் திருமணங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 44

Five types of weddings! | Anusasana-Parva-Section-44 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 44)


பதிவின் சுருக்கம் : எவ்வகை மனிதனுக்கு ஒருவன் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்; திருமண வகைகள்; திருமணம் முழுமை பெற அவசியமானவை எவை; திருமணம் குறித்துப் பாஹ்லீகர் மற்றும் சத்தியவான் ஆகியோர் சொன்ன நீதிகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கடமைகள் அனைத்தின் வேர் எது? உற்றார் உறவினரின் வேரெது? இல்லத்தின் வேரெது? பித்ருக்கள் மற்றும் விருந்தினர்களின் வேர்களெவை? என்பவை குறித்து எனக்குச் சொல்வீராக.(1) இந்தக் காரியமே (ஒருவனுடைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பதே) கடமைகள் அனைத்திலும் முதன்மையானது என்று நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மன்னா, ஒருவன் எவ்வகை மனிதனுக்குத் தன் மகளைக் கொடுக்க வேண்டும்?" என்று கேட்டான்.(2)

Tuesday, February 23, 2016

சாத்யகி பீஷ்மர் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 105

The encounter of Satyaki and Bhishma! | Bhishma-Parva-Section-105 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 63)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தப்பி ஓடிய படைவீரர்கள்; திரிகர்த்தப்படையை முறியடித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய துரியோதனன்; அபிமன்யுவுக்கும் சித்திரசேனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணர்-துருபதன், பீமன்-பாஹ்லீகர்; சாத்யகி-கிருதவர்மன் ஆகியோருக்கிடையில் நடந்த போர்கள்; சாத்யகிக்கும்-பீஷ்மருக்கும் நடந்த கடுமையான போர்; சாத்யகியைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவர்கள்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன்,  தீட்டப்பட்ட தன் கணைகளின் மூலம் சுசர்மனைப் பின்தொடர்ந்து வந்த க்ஷத்திரியர்களை மரணமன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். எனினும் அந்தப் போரில், சுசர்மனும் தன் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மேலும், அவன் {சுசர்மன்}, எழுபதால் {70 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, ஒன்பது {9} கணைகளால் மீண்டும் அர்ஜுனனையும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைத் தன் கணை மழையால் தடுத்து, சுசர்மனின் துருப்பினரை யமலோகத்திற்கு அனுப்பினான்.


அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சுசர்மனின் வீரர்கள்}, யுகமுடிவிலான காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} அந்தப் போரில் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீதியடைந்த அவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். சிலர் தங்கள் குதிரைகளையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிலர் தங்கள் தேர்களைக் கைவிட்டும், பிறர் தங்கள் யானைகளைக் கைவிட்டும் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினார்கள். இன்னும் பிறர், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றுடன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள். அந்தப் பயங்கரப் போரில் தங்கள் ஆயுதங்களைப் புறந்தள்ளிய காலாட்படை வீரகள், ஒருவரையொருவர் கருதிப் பாராமல் அங்கேயும் இங்கேயும் தப்பி ஓடினர். திரிகர்த்தர்களின் ஆட்சியாளனான சுசர்மனாலும், மன்னர்களில் முதன்மையானோரான இன்னும் பிறராலும் தடுக்கப்பட்டாலும் அவர்கள் போரில் நிலைபெறவில்லை.

அந்தப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துரியோதனன், படைகள் அனைத்திற்கும் முன்னின்று, திரிகர்த்தர்கள் ஆட்சியாளனின் உயிருக்காக ({சுசர்மனைக்} காப்பதற்காகத்) தன் வீரியம் முழுமையும் பயன்படுத்திப் பீஷ்மரின் தலைமையில் அந்தப் போரில் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான். தன் தம்பிகள் அனைவரின் துணையோடு பல்வேறு விதமான கணைகளை இறைத்துக் கொண்டு போரில் அவன் {துரியோதனன்} நின்றான். மீதி மனிதர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அதேபோலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம்பூண்டு கொண்டு, பல்குனனின் {அர்ஜுனனின்} நிமித்தமாகத் தங்கள் வீரியம் முழுமையையும் பயன்படுத்தி, பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் {பாண்டவப் படையினர்}, போரில் அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} பயங்கர ஆற்றலை அறிந்திருந்தாலும், உரத்த கூக்குரல்களுடனும் பெரும் துணிச்சலுடனும் பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்று அனைத்துப் புறங்களிலும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். பிறகு அந்தப் பனைமரக்கொடி வீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையை மறைத்தார்.

சூரியன் நடுக்கோட்டை {உச்சி வானை} அடைந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கௌரவர்கள் {கௌரவப் படையினர்} குழம்பிய திரளாக இருந்த பாண்டவர்களுடன் {பாண்டவப் படையினருடன்} போரிட்டனர். வீர சாத்யகி, ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்ததும், ஆயிரக்கணக்கான தன் கணைகளை இறைத்தபடி போரில் நிலைத்தான். மன்னன் துருபதனும், தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்து, மீண்டும் எழுபது {70} கணைகளால் அவரையும் {துரோணரையும்}, ஒன்பதால் {9 கணைகளால்} அவரது தேரோட்டியையும் துளைத்தான். பீமசேனனும், தன் பெரும்பாட்டனான பாஹ்லீகரைத் துளைத்து, காட்டுப் புலியைப் போல உரக்க முழங்கினான்.

அர்ஜுனன் மகன் (அபிமன்யு), கணைகள் பலவற்றால் சித்திரசேனனால் [1] துளைக்கப்பட்டு, மூன்று கணைகளால் சித்திரசேனனின் மார்பில் ஆழமாகத் துளைத்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் {அபிமன்யுவும், சித்திரசேனனும்}, ஆகாயத்தில் உள்ள வெள்ளி மற்றும் சனி கோள்களைப் போலக் களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் தன் எதிராளியின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று உரத்த முழக்கமிட்டான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது சித்திரசேனன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்து, தாமதம் செய்யாமல் துர்முகனின் [2] தேரில் ஏறிக் கொண்டான்.

[1] [2] துரியோதனனின் தம்பி

வீரத் துரோணர், பின்னவனின் {துருபதனின்} தேரோட்டியையும் துளைத்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முகப்பில் இருந்த துருபதன் இப்படிப் பீடிக்கப்பட்டு, பழங்காலத்தில் இருந்து (தனக்கும் துரோணருக்கும் இடையில்) நீடிக்கும் பகையை நினைவுகூர்ந்து, வேகமான தன் குதிரைகளின் உதவியால் பின்வாங்கினான். பீமசேனன், மன்னன் பாஹ்லீகரை, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கணத்திற்குள் தனது குதிரைகள், தேர் மற்றும் தேரோட்டி ஆகியவற்றை இழக்கச் செய்தான். மனிதர்களில் சிறந்த அந்தப் பாஹ்லீகர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் விழுந்து, தன் இதயத்தில் அச்சத்துடன் அந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் லக்ஷ்மணனின் [3] தேரில் விரைவாக ஏறினார்.

[3] துரியோதனனின் மகன்

சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில் கிருதவர்மனைத் தடுத்து, பாட்டன் {பீஷ்மர்} மீது பாய்ந்து, பல்வேறு வகையான கணைகளை அவர் மீது பொழிந்தான். அவன் {சாத்யகி}, தன் பெரிய வில்லை அசைத்தபடி, இறகுகளால் சிறகமைந்த அறுபது தீட்டப்பட்ட கணைகளால் பாட்டனை {பீஷ்மரை} துளைத்து, தன் தேரில் நடனமாடுபவனைப் போலக் காணப்பட்டான். பிறகு பாட்டன் {பீஷ்மர்}, பாம்புகளின் மகளைப் போல அழகானதும், பெரும் வேகம் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பினால் செய்யப்பட்டதுமான வலிமைமிக்க ஓர் ஈட்டியை அவன் {சாத்யகியின்} மீது ஏவினார். விருஷ்ணி குலத்தின் அந்த ஒப்பற்ற வீரன் {சாத்யகி}, காலனுக்கு ஒப்பான தடுக்க முடியாத அந்த ஈட்டியைக் கண்டு, தன் அசைவுகளின் நளினத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான்.

அதன் பேரில், அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியை} அடைய முடியாத அந்தக் கடும் ஈட்டி, சுடர் மிகுந்து பிரகாசிக்கும் ஒரு பெரிய எரி கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. பிறகு, அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தைப் போல ஒளிரும் தன் ஈட்டியைத் தன் உறுதியான கைகளில் ஏந்தி பாட்டனின் {பீஷ்மரின்} தேரின் மேல் வீசினான். அந்தப் பயங்கரப் போரில் சாத்யகியின் பலமான கரங்களால் வீசப்பட்ட அந்த ஈட்டி (விதி முடிந்த) மனிதனை நோக்கி வேகமாக விரையும் மரண இரவைப் போல மூர்க்கமாகச் சென்றது. எனினும் பீஷ்மர், அது தன்னை நோக்கி பெரும் சக்தியுடன் வந்த போதே, கூர் முனை கொண்ட க்ஷுரப்ரங்கள் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணைகள்} இரண்டால் அதை இரண்டாகத் துண்டித்தார்; அதன்பேரில் அது கீழே பூமியில் விழுந்தது. எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அந்த ஈட்டியைத் துண்டித்து, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் சாத்யகியின் மார்பைத் தாக்கினார்.

பிறகு அந்தப் பாண்ட வீரர்கள், ஓ! பாண்டுவின் தமையரே {திருதராஷ்டிரரே}, அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} மீட்கும் பொருட்டு, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வெற்றியை விரும்பியவர்களான பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருவருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த கூடிய வகையில் கடும் போரொன்று மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

Sunday, June 28, 2015

"நீ மன்னனின் மகனில்லை!" என்ற திருதராஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 149

"You're not the son of a king" said Dhritarashtra! | Udyoga Parva - Section 149 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –78)

பதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, "ஓ! துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ! மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.


உயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ! ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.

அவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.

இதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ! ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.

பெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.

அவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.

எனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, "உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.

உறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.

இவ்வழியிலும், ஓ! பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம்? பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.

உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.

நீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ! இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும்? இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ! மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]" என்றார் {திருதராஷ்டிரர்}."

[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்