Sunday, March 31, 2013

பரம்பரைகளின் ஆய்வு | ஆதிபர்வம் - பகுதி 66

Genealogy Report | Adi Parva - Section 66 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : பிரம்மனின் மகன்கள்; மகன்கள் இல்லாத தக்ஷன் மகளைப் புத்ரிகைகளாக ஆக்கிக் கொண்டது; அந்தப் பெண்கள் மூலம் வளர்ந்த பரம்பரை; பரசுராமர் வம்ச வரலாறு; ராட்சசர்கள் பிறப்பு; உயிரினங்களின் பிறப்பு...

வைசம்பாயனர் சொன்னார், "(ஏற்கனவே குறிப்பிட்டது போல) பிரம்மனின் ஆன்மிக {மனத்திலிருந்து பிறந்த} மகன்கள் ஆறுபேர் என்று அறியப்படுகிறது. ஸ்தாணு என்ற பெயரில் மற்றொருவரும் இருந்தார். அந்த ஸ்தாணு பெரும் சக்தி கொண்ட பதினோரு மகன்களைப் பெற்றிருந்தார்.(1) அவர்கள் மிருகவியாதர், சர்ப்பர், பெரும்புகழ் கொண்ட நிருருதி, அஜைகபாத், அஹிர்ப்புத்னியர், எதிரிகளை அடக்கும் பினாகி,(2) தஹனர், ஈஸ்வரர், பெரும் காந்தி கொண்ட கபாலி ஆவார்கள். இவர்களுடன் ஸ்தாணு மற்றும் சிறப்புமிக்கப் பகன் ஆகியோர் சேர்ந்து பதினொரு ருத்ரர்களாக அழைக்கப்படுகிறார்கள்.[1](3)



[1] ஏகாதச ருத்ரர்களாக அறியப்படுபவர்கள் மகாதேவன், ருத்ரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், சவும்யதேவன், பலோத்பவன், கபாலிகன், ஹரன் என மச்ச புராணம் போன்றவை சொல்லுகின்றன.  மகாபாரதம் எழுதிய பின் வியாசர் எழுதியதாகக் கருதப்படும் பாகவதத்தில் ருத்ரர்களின் வரலாறு சிறிது வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் அஜர், ஏகபாதர், அக்னிபுத்திரர், விரூபாட்சர், ரைவதர், ஹரர், பகுரூபர், த்ரியம்பகர், அசுரேசர், சாவித்ரர்,சயந்தர் என்பனவாகும். மிருகவியாதர், சரவர், நிருருதி, அஜய், அஹிர்ப்புத்னியர், பினாகி, தஹன்,  ஈஸானன், கபாலி, ஸ்தாணு, பகன் (பவன்) என்று மகாபாரத மூலம் சொல்கிறது. வால்மீகி இராமாயணம் அஜன், ஏகபாதன், அபிர்புத்யன்ம் ஹரன், சம்பு, த்ரயம்பகன், அபராஜிதன், ஈசானன், திரிபுவனன், த்வஸ்டன் மற்றும் ருத்ரன் என்கிறது. அக்னிபுராணம், பத்மபுராணம், ஜோதிட சாத்திரம், ருத்ரபுராணம் எனப் பலவற்றிலும் ஏகாதச ருத்ரர்களின் பெயர்கள் மாற்றங்களுடனேயே இருக்கின்றன. ஸ்தாணு என்பது சிவனைக் குறிக்கும். பிரம்மனின் முகத்தில் இருந்து பிறந்த ஸ்தாணு 11 அம்சங்களைப் படைத்து ஏகாதச ருத்ரர்களைப் படைத்தார் என்பது சாராம்சமாகும்.

மரீசி, அங்கீரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது ஆகிய பெரும் சக்தி கொண்ட ஆறு முனிவர்களும் பிரம்மனின் புதல்வர்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.(4) கடும் நோன்புகளைக் கொண்ட பிருஹஸ்பதி, உதத்தியர், சம்வர்த்தர் ஆகிய மூன்று பேரும் அங்கீரஸின் மகன்களென நன்கு அறியப்பட்டுள்ளது.(5) ஓ மன்னா! {ஜனமேஜயா}, அத்ரியின் புதல்வர்கள் எண்ணற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெரும் முனிவர்களான அவர்கள் அனைவரும் தவத்தில் வெற்றிமகுடம் சூடி, நித்திய அமைதியில் ஆன்மாவைத் திளைக்கச் செய்து, வேதங்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர்.(6) ஓ மன்னர்களில் புலியே! {ஜனமேஜயனே} பெரும் ஞானம் கொண்ட புலஸ்தியரின் மகன்கள், ராட்சசர்களும், குரங்குகளும், கின்னரர்களும் (பாதி மனிதன் பாதிக் குதிரை), யக்ஷர்களும் ஆவர்.(7) ஓ மன்னா {ஜனமேஜயா}, புலஹரின் மக்கள், சரபங்களும் (இறகுகள் கொண்ட பூச்சிகளும்), சிங்கங்களும், கிம்புருஷர்களும் (பாதிச் சிம்மம், பாதி மனிதன்), புலிகளும், கரடிகளும், ஓநாய்களும் ஆவர்.(8) வேள்விகளைப் போன்ற புனிதமானவரான கிரதுவின் மகன்கள், உண்மைக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்து மூன்று உலகங்களாகாலும் அறியப்பட்ட சூரியனின் தோழர்கள் (வாலகில்யர்கள்) ஆவர்.(9)

ஓ பூமியைக் காப்பவனே! {ஜனமேஜயனே} முழு அமைதியுள்ள ஆன்மாவும், பெரும் தவமும் கொண்ட அந்தச் சிறப்பு மிகுந்த முனிவனான தக்ஷன், பிரம்மனின் வலதுகால் கட்டைவிரலில் இருந்து தோன்றியவனாவான்.(10) பிரம்மனின் இடதுகால் கட்டைவிரலில்[2] அந்த உயர்ஆன்ம தக்ஷனின் மனைவி தோன்றினாள். அந்த முனிவன் {தக்ஷன்} அவள் மூலமாகத் தனது ஐம்பது மகள்களையும் பெற்றெடுத்தான்;(11) அந்த மகள்கள் அனைவரும் குற்றமற்ற குணமும் அங்கங்களும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவர்களாக இருந்தனர். தலைவன் தக்ஷனுக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் தனது மகள்களைப் (அவர்களது மகன்கள் தனக்கும், அவர்களது கணவர்களுக்கும் சொந்தமாகும் வகையில்) புத்ரிகைகளாக[3] ஆக்கிக் கொண்டான்.(12) தக்ஷன் தனது பத்து மகள்களைத் தர்மனுக்கும் (தர்ம தேவனாகிய யமனுக்கும்), இருபத்தேழு மகள்களைச் சந்திரனுக்கும், பதிமூன்று மகள்களைக் கசியபருக்கும் புனித விதிகளின்படி மணமுடித்துக் கொடுத்தான்.(13)

[2] கும்பகோணம் பதிப்பில் கைக்கட்டைவிரல்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மன்மனதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே கால் கட்டைவிரல் என்றே இருக்கிறது.

[3] ஒரு பெண்ணின் தந்தையானவன், அந்தப் பெண்ணின் மூத்த மகனைத் தானே எடுத்துக் {வளர்த்துக்} கொள்வதாக அவளுக்குத் திருமணம் ஆகும்போதே ஏற்படுத்திக் கொண்டால், அந்த மகளுக்குப் புத்திரிகை என்று பெயர்.

தர்மனின் மனைவியர் அனைவரின் பெயர்களையும் சொல்கிறேன் கேட்பாயாக. கீர்த்தி {புகழ்}, லக்ஷ்மி{செல்வம்}, திரு{ப்}தி {மனநிறைவு}, மேதை {உறுதியான மனம்}, புஷ்டி {உடற்பலம்}, சிரத்தை {நம்பிக்கை}, கிரியை {செயல்},(14) புத்தி {தீர்மானமான மனம்}, லஜ்ஜை {நாணம்} மற்றும் மதி {அறிவு} ஆகிய பத்து பேரே அவர்கள் ஆவர். சுயம்புவால் {பிரம்மனால்} நியமிக்கப்பட்ட தர்மனின் மனைவியர் இவர்களே ஆவர்.(15)

சோமனின் (சந்திரனின்) மனைவிகள் இருபத்தேழு பேர் என்பதை இந்த உலகம் முழுவதும் அறியும். புனித நோன்புகளைக் கொண்ட சோமனின் மனைவிகள் அனைவரும், நேரத்தைக் குறிக்க அமர்த்தப்பட்டுள்ளனர்;(16) உலகங்களின் வழிமுறைகளுக்குத் துணை நிற்கும் அவர்களே நட்சத்திரங்களும், யோகினிகளும் ஆவர்.

பிரம்மனுக்கு மனு என்ற பெயரில் மற்றுமொரு மகன் இருந்தான். அந்த மனுவுக்குப் பிரஜாபதி[4] என்ற மகன் இருந்தான். (17) பிரஜாபதியின் மகன்கள் எட்டு பேராவர். வசுக்கள் என்றழைக்கப்படும் அவர்களின் பெயர்களை விவரமாகச் சொல்கிறேன். அவர்கள் தரன், துருவன், சோமன், அஹன் {அஹஸ்}, அனிலன், அனலன்,(18) பிரத்யூஷன் மற்றும் பிரபாசன் ஆவர். அந்த எட்டுப் பேரும் வசுக்கள் என்று அறியப்படுவராவர். இவர்களில் தரனும், உண்மையை அறிந்த துருவனும் தூம்ரைக்குப் பிறந்தவர்கள் ஆவர்;(19) சந்திரமாசும் (சோமன் {நிலவு}) சுவசனனும் (அனிலன்) புத்திக்கூர்மையுள்ள ஸ்வாசைக்குப் பிறந்தவர்கள்; அஹன் {அஹஸ்} ரதைக்கும்; ஹுதாசனன் (அனலன்) சாண்டிலிக்கும்,(20) பிரத்யூஷனும் பிரபாசனும் பிரபாதைக்கும் மகன்களாக இருந்தனர்[5]. தரனுக்குத் திரவிணன் மற்றும் ஹுத-ஹவ்ய-வஹன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.(21)

[4] பிரஜாதிபதி என்பது காரணப்பெயராகும். படைப்புத் தொழிலில் உதவ பிரம்மனால் உருவாக்கப்பட்டவர்கள் பிரஜாதிபதிகள். தக்ஷன், மனு போன்று பிரம்மனின் படைப்புத் தொழிலில் உதவி உயிரினப் பெருக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருமே பிரஜாதிபதிகள்தான். பிதாமகனான பிரம்மனின் மகனாக மனு பிரஜாதிபதி இருந்தான் என்றுதான் மூல ஸ்லோகம் சொல்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பில் இது வேறுமாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு, "தரன், தூம்ரையின் மகனாவான்; துருவன் பிரமவ்வித்தியின் மகனாவான்; சோமன் மனஸ்வ்வினியின் மகனாவான்; அனிலன் சுவாசையின் மகனாவான்; அஹஸ் ரதையின் மகனாவான்; அனலன் சாண்டிலியின் மகனாவான்; பிரத்யூஷனும், பிரபாசனும் பிரபாதையின் மகன்களாவர்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தரனும், பிரம்ம ஞானம் கொண்ட துருவனும் தூம்ரையின் மகன்களாவர். சந்திரன் மனஸ்வினியின் மகனாவான். சுவாஸன் சுவாசனையின் மகனாவான். அஹன் ரதையின் மகனாவான், அக்னி சாண்டிலியின் மகனாவன். பிரத்யூஷனும், பிரபாசனும் பிராபதையின் மகன்களாக அறியப்படுகின்றனர்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பு மூல ஸ்லோகத்துடன் சரியாகப் பொருந்துவதாகத் தெரிகிறது.

துருவனின் மகன் உலகங்களை அழிக்கும், சிறப்பு வாய்ந்த காலனாவான் (காலம்). சோமனின் மகன் பிரகாசமான வர்ச்சஸ் ஆவான். வர்ச்சஸ் தனது மனைவி மனோகரையின் மூலம் சிசிரன், பிராணன், ரமணன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான். அஹனின் மகன்கள் ஜோதிஷ், சமன், சாந்தன் மற்றும் முனி ஆவர்.(22,23) அக்னியின் {அனலனின்} மகன் கானக நாணலில் {சரவணத்தில்} பிறந்த குமரனாவான் {முருகனாவான்}. அவன் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டுக் கிருத்திகை மற்றும் பிறரால் வளர்க்கப்பட்டான். கார்த்திகேயனுக்குப் பிறகு, அவனது தம்பிகளாகச் சாகன், விசாகன் மற்றும் நைகமேயன் ஆகியோர் பிறந்தனர். அனிலனின் மனைவி சிவை, சிவையின் மகன்கள் மனோஜவன்(24,25) மற்றும் அவிஞ்சாதகதி ஆகியோராவர். இந்த இருவரும் அனிலனின் மகன்களாவர். நீ அறியவேண்டிய பிரத்யூஷனின் மகன் தேவலர் என்ற பெயரைக் கொண்ட முனிவர் ஆவார்;(26) தேவலருக்கு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய பெரும் மனோசக்தி பெற்ற இருமகன்கள் இருந்தனர். பெண்களில் முதன்மையானவளும் பிருஹஸ்பதியின் தங்கையுமான ஒருத்தி {யோகசித்தை}, புனிதமான உண்மைகளை உரைத்துக் கொண்டு,(27) தவத்துறவுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, உலகம் முழுவதும் உலவி வந்தாள்; அவள் எட்டாவது வசுவான பிரபாசனின் மனைவியானாள்.(28) அவள், கலைகள் அனைத்திற்கும் நிறுவனனான சிறப்புமிக்க விஷ்வகர்மனைப் பெற்றெடுத்தாள். கலைஞர்களில் முதல்வனான அந்த விஷ்வகர்மன், ஆயிரம் கலைகளை உண்டாக்கியவனாகவும், அழிவற்றவர்களின் {தேவர்களின்} பொறியாளனாகவும், அனைத்து வகைகளிலான ஆபரணங்களை உண்டாக்கியவனாகவும் இருந்தான். பலதரப்பட்ட ஆபரணங்களை வடிவமைத்துக் கலைஞர்களில் முதன்மையானவனாகவும் இருந்தான். அவனே தேவர்களுக்கான தெய்வீகத் தேர்களை வடிவமைத்தான்,(29,30) அந்தச் சிறப்புமிக்கவனின் கண்டுபிடிப்புகளின் விளைவால் மனித இனமே வாழ இயன்றது. மனிதர்களால் அந்தக் காரணத்திற்காகவே அவன் வழிபடப்படுகிறான். அவனே அழிவில்லாதவனும், மாற்றமில்லாதவனுமான இந்த விஷ்வகர்மன் ஆவான்.(31)

மகிழ்ச்சிகள் அனைத்தையும் அருளக்கூடிய சிறப்புவாயந்த தர்மன், மனித வடிவத்தை ஏற்று, பிரம்மனின் வலது மார்பில் இருந்து வெளியே வந்தான்.(32) அந்த அஹஸ்தனுக்கு (தர்மனுக்கு) அனைத்து உயிர்களையும் அழகு படுத்தக்கூடிய மூன்று அற்புதமான மகன்கள் இருந்தனர். சமன், காமன், ஹர்ஷன் (அமைதி{சமாதானம்}, ஆசை{மோகம்}, இன்பம்{ஈர்ப்பு}) ஆகியோரே அவர்கள். தங்கள் சக்தியாலேயே அவர்கள் இவ்வுலகங்களைத் தாங்குகின்றனர்.(33) காமனின் {ஆசையின், மோகத்தின்} மனைவி ரதி {சுகம்}, சமனின் {அமைதியின்} மனைவி பிராப்தி {கிடைத்தல்}, ஹர்ஷனின் {இன்பத்தின், ஈர்ப்பின்} மனைவி நந்தை {குறைவின்மை} ஆவர். உண்மையில், இவர்களை நம்பியே உலகங்கள் இருக்கின்றன.(34) மரீசியின் மகன் கசியபர் ஆவார். கசியபரின் வாரிசுகளே தேவர்களும் அசுரர்களும் ஆவர். எனவே, கசியபரே இந்த உலகங்களில் தந்தையாவார்.(35) வடவத்தின் (பெண் குதிரையின்) வடிவத்தைக் கொண்ட த்வஷ்திரி {த்வஷ்டா} {விஸ்வகர்மாவின் மகள்} சாவித்ரியின் {சூரியனின்} மனைவியானாள். அவள், பெரும் பேறுகொண்ட அசுவினி இரட்டையர்களை வானத்தில் பெற்றெடுத்தாள்.(36)

ஓ மன்னா! {ஜனமேஜயா}, அதிதியின் மகன்கள் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட பன்னிருவர் ஆவர். அவர்களில் இளையவனே இந்த உலகமே சார்ந்திருக்கும் விஷ்ணு ஆவான்.(37) (எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், பனிரெண்டு ஆதித்யர்கள், பிரஜாபதி மற்றும் வஸத்காரம் {வஷத்}[5] ஆகியோருடன் கூடிய) இவர்களே முப்பத்து மூன்று தேவர்களாவர். இனி பக்ஷங்கள், குலங்கள், கணங்களின் பிறப்புகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.(38) ருத்திரர்கள், சத்யஸ்கள் {சாத்யர்கள்}, மருத்துக்கள், வசுக்கள், பார்கவர்கள், விஸ்வதேவர்கள் ஆகியோர் பக்ஷங்களாக அறியப்படுகின்றனர்.(39) வினதையின் மகனான கருடனும், வலிமைமிக்க அருணனும், சிறப்பு மிகுந்த பிருஹஸ்பதியும் ஆதித்யர்களாக அறியப்படுகிறார்கள்.(40) அசுவினி இரட்டையர்களும், வருடாந்திரச் செடிகள் அனைத்தும், தாழ்ந்த நிலை கொண்ட {சக்தி குறைந்த} விலங்குகள் அனைத்தும் குஹ்யர்கள் என்று அறியப்படுகின்றனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, இவையே உனக்கு {வரிசை மாறாமல்} ஓதப்படும் தேவர்களுடைய கணங்களாகும்.(41)

[6] எட்டு வசுக்கள் + பன்னிரெண்டு ஆதித்யர்கள் + பதினோரு ருத்ரர்கள் மற்றும் அசுவினி இரட்டையர்கள் சேர்த்து முப்பத்தி மூன்று என்பது வழக்கம். பிராஜாதிபதி, வஷத் ஆகியோர் அல்ல என்பது பக்ஷம், ஆதித்யம், குஹ்யம் என்ற பிரிவுகளின் விளக்கத்தில் காணக் கிடைக்கும்.

மனிதனின் அனைத்துப் பாவங்களையும் இவ்வொப்பித்தல் கழுவிவிடும். சிறப்பு மிகுந்த பிருகு, பிரம்மனின் மார்பைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். கல்விமானான சுக்கிரன் {சுக்கிராச்சாரியார்}, பிருகுவின் மைந்தனாவார். கல்விமானான அந்தச் சுக்கிரனே ஒரு கோளாகி, சுயம்புவின் {பிரம்மனின்} உத்தரவுகளுக்கு இணங்க, மழையைப் பொழிவதிலும், தடுத்து நிறுத்துவதிலும், மூவுலகங்களில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்வதற்கான அழிவுகள் மற்றும் பயணங்களை வழங்குவதிலும், குறைப்பதிலும் வானத்தில் இருந்து ஈடுபடுகிறார். பெரும் புத்திக்கூர்மையும், ஞானமும், கடுமையான நோன்புகளும் கொண்டு, பிரம்மச்சாரியின் வாழ்வை வாழும் கல்விமானான சுக்கிரன், தன் தவசக்தியின் மூலமாகத் தன்னை இருகூறாகப் பிரித்து, தைத்தியர்களுக்கும் தேவர்களுக்கும் தெய்வீக வழிகாட்டியாக {குருவாக} ஆனார்.(42-44)

சுக்கிரன், (தேவர்கள் மற்றும் அசுரர்களின்) நன்மையைக் கருதி பிரம்மனால் இப்படி நியமிக்கப்பட்ட பிறகு, பிருகு மற்றுமொரு அற்புத புதல்வனைப் பெற்றெடுத்தார்.(45) எரியும் சூரியனைப் போன்றவனும், அறம்சார்ந்த ஆன்மாவையும், பெரும் புகழையும் கொண்ட அவர் சியவனராவார். தமது தாயின் கருப்பையில் இருந்து கோபமாக வெளியேறிய அவர், (ராட்சசனிடம் இருந்து) தனது தாயை விடுவிக்கக் காரணமானார்.(46) மனுவின் புதல்வியான ஆருஷியானவள், ஞானியான சியவனரின் மனைவியானாள். பெரும் புகழை கொண்ட ஔருவர் அவளிடத்திலே பெறப்பட்டார். அவர் {ஔருவர்}, தமது தாயான ஆருஷியின் தொடையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார்.(47) ஔருவர் ரிசீகரைப் பெற்றார். குழந்தைப் பருவத்திலேயே, ரிசீகர், பெரும் பலத்தையும் சக்தியையும், அனைத்து அறங்களையும் கொண்டவராக இருந்தார். ரிசீகர் ஜமதக்னியைப் பெற்றெடுத்தார்.(48) அந்த உயரான்ம ஜமதக்னிக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரிலும் இளையவர் ராமராவார் (பரசுராமராவார்). ராமர், நற்பண்புகளைக் கொண்டதில் தமது தமையர்கள் அனைவரை விடவும் மேன்மையானவராக இருந்தார்.(49) அனைத்து ஆயுதங்களிலும் திறன்மிக்கவராக இருந்த அவர், க்ஷத்திரியர்களைக் கொல்பவரானார். அவர் தமது ஆசைகளைத் தமது முழுக் கட்டுக்குள் வைத்திருந்தார். ஔருவர்[7], ஜமதக்னியை மூத்தவராகக் கொண்ட நூறு மகன்களைப் பெற்றிருந்தார்.(50) இந்த நூறு மகன்களும், இந்தப் பூமியில் பரவியிருந்த ஆயிரக்கணக்கான வாரிசுகளைப் பெற்றிருந்தனர். மனுவுடன் இருந்தவர்களான தாத்ரி {தாதா}, விதாத்ரி {விதாதா} என்று பிரம்மனுக்கு மேலும் இரண்டு மகன்கள் இருந்தார்கள். தாமரைகளுக்கு மத்தியில் தன் வசிப்பிடத்தைக் கொண்ட மங்கலகரமான லக்ஷ்மி அவர்களது தங்கையாவாள்.(51,52) வானில் பறக்கும் குதிரைகளே[8] லக்ஷ்மியின் தெய்வீகப் புதல்வர்கள் ஆவர்.

[7]. ஔருவரின் மகன் ரிஷீகர் என்று இருக்க வேண்டும்

[8] ஆகாயத்தில் பிரகாசிக்கும் சூரியக் கிரணங்களே இங்கே குதிரைகள் என்று சொல்லப்படுகின்றன். இதே இடத்தில் ஒரு பழைய உரை, பிரம்மாவின் ஆன்மிகப் புதல்வர்கள் பிதிர்கள் என்று சொல்கிறது.

சுக்கிரனுக்குப் பிறந்த மகளான திவியானவள் {ஜ்யேஷ்டதேவி}, வருணனுடைய மூத்த மனைவியானாள்.(53) அவளிடம் மகனாகப் பலனும், மகளாகத் தேவர்களுக்கு மகிழ்ச்சி தருபவளான சுரையும் {சுராபானம்} (மது) பிறந்தனர். உயிரினங்கள் (உணவுத் தேவைக்காக) ஒன்றையொன்று விழுங்கத் தொடங்கிய போது {அந்தச் சுரையிடம்} அதர்மன் (பாவம்) பிறந்தான். அதர்மன் எப்போதும் அனைத்து உயிரினங்களையும் அழிப்பவனாவான். அந்த அதர்மனானவன் நிருதியைத் தன் மனைவியாகக் கொண்டதால், அவர்கள் (நிருதிக்குப் பிறந்தவர்கள்) ராட்சசர்கள் நைருதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.(54,55) அவளுக்கு {நிருதிக்கு} எப்போதும் பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களான மூன்று கொடூர மகன்கள் இருந்தனர். படைக்கப்பட்ட அனைத்தையும் எப்போதும் கொல்வதில் ஈடுபடும் அவர்கள் பயன் (பயம்), மஹாபயன் (பயங்கரம்) மற்றும் மிருத்யு (மரணம்) ஆவர்.(56) {மிருத்யுக்களான[9]} அவர்கள் அனைத்தையும் அழிப்பதிலேயே இருந்ததால், அவர்கள் மனைவியோ மக்களோ அற்று இருந்தார்கள். தாம்ராவானாவள் உலகங்கள்தோறும் அறியப்படும் ஐந்து மகள்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள், காகி (காக்கை), சேனி (பருந்து), பாசி (கோழி), திருதராஷ்டிரி (வாத்து), சுகி (கிளி) ஆகியோராவர். காகி காக்கைகளைப் {கோட்டான்களையும்} பெற்றெடுத்தாள்; சேனி பருந்துகளையும், சேவல்களையும், கழுகுகளையும் பெற்றெடுத்தாள்; திருதராஷ்டிரி அனைத்து வாத்துகள், அன்னங்கள் ஆகியவற்றைப் பெற்றெடுத்தாள்; அவளே சக்ரவாகங்களையும் பெற்றெடுத்தாள்; இனிய குணங்களையும், மங்கலக்குறிகளை அனைத்தையும் கொண்ட சுகியானவள், கிளிகள் அனைத்தையும் பெற்றெடுத்தாள். குரோதையானவள், கோபம் நிறைந்த மனநிலை கொண்ட ஒன்பது மகள்களைப் பெற்றெடுத்தாள்.(57-61) அவர்கள் மிருகி, மிருகமந்தை, ஹரி, பத்ரமனை {பத்ரமனஸ்}, மாதங்கி, சார்த்தூலி, ஸ்வேதை, சுரபி, அனைத்து அறங்களும் கொண்ட சுரசை ஆகியோர் ஆவர். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மான் இனத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் மிருகியின் வாரிசுகளே.(62,63)

[9] கங்குலியின் பதிப்பில் இங்கே மிருத்யு என்று குறிக்கப்படவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் அடைப்புக்குறிக்குள் மிருத்யு என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மூலத்திலும் மிருத்யு என்ற வார்த்தை இல்லை.

கரடி இனங்களைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும், (இனிய நடை கொண்ட) சிரிமாரம் {கவரிமான்} என்று அழைக்கப்படுபவையும் மிருகமந்தையின் வாரிசுகளாவர். பத்ரமனை தெய்வீக யானையான ஐராவதத்தை {தன் மகனாகப்} பெற்றெடுத்தாள். சுறுசுறுப்புமிக்க வாலில்லா குரங்கு இனத்தைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும், குதிரைகளும் ஹரியின் வாரிசுகளாவர்.(64,65) கோலாங்குலம் (பசுவின் வால் கொண்ட) என்று அழைக்கப்பட்ட அந்த விலங்குகளும் ஹரியின் வாரிசகளாகவே சொல்லப்படுகின்றன. சார்த்தூலி, பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்களையும், புலிகளையும்,(66) சிறுத்தைகளையும் மற்றும் பலம்வாய்ந்த விலங்குகள் அனைத்தையும் பெற்றெடுத்தாள். ஓ மன்னா {ஜனமேஜயா}, யானைகள் அனைத்தும் மாதங்கியின் வாரிசுகளாவர்.(67) ஸ்வேதை, ஸ்வேதம் என்று தன் பெயராலேயே அறியப்பட்டதும், பெரும் வேகம் கொண்டதுமான பெரிய யானையைப் {திக்கஜத்தைப்} பெற்றெடுத்தாள். ஓ மன்னா சுரபி, இனிமையான ரோஹிணி, புகழ்மண்டிய கந்தர்வி ஆகிய இரு மகள்களைப் பெற்றெடுத்தாள். ஓ பாரதா, அவளுக்கு விமலை மற்றும் அனலை என்ற பெயர்களைக் கொண்ட மற்றுமிரு மகள்களும் இருந்தனர்.(68,69) பசுக்கள் அனைத்தும் ரோஹிணியிடமும், குதிரை இனங்களைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் கந்தர்வியிடமும் உதித்தனர்[10]. அநலை, சதைப்பற்றுள்ள பழங்களைக் கொடுக்கும் ஏழு வகை மரங்களைப் பெற்றெடுத்தாள். (அவை பேரீச்சை, பனை, ஹின்டலா (hintala-ஈந்து-datepalm), தலி (tali), சிறு பேரீச்சை (little date), கடலை (nuts), தென்னை ஆகியவையே).(70)

[10] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் இருக்கிறது. அது பின்வருமாறு: "இரையென்பவளுக்குத் தாமரை மலர்களைப் போன்ற கண்களைக் கொண்ட மூன்று கன்னிகைகள் பிறந்தனர். அவர்களிடம் இருந்து பூக்காமல் காய்க்கும் மரங்களும், மற்ற மரங்களும், கொடிகளும் பிறந்தன. லதையென்றும், ருஹையென்றும் இருவரே முக்கியமானவர்களாகச் சொல்லப்படுகின்றனர். அவர்கள் மூவரும் மேற்சொன்ன கொடிசெடி இனங்களுக்கெல்லாம் உரியவர்களாவர். மலர்களில்லாமலே காய்க்கும் மரங்கள் அனைத்தும் லதையென்பவளுடைய வாரிசுகளென அறியத்தக்கவை. அவற்றைதான் வனஸ்பதி என்று சொல்கின்றனர். பூத்துக் காய்க்கும் மரங்கள் ருஹையின் வாரிசுகளென அறியப்படுகின்றன. புதர்களும், மரங்களும், தோலில் பலமுள்ள மூங்கில் முதலிய புல் இனங்களும், கொடிகளும் ருஹையின் வாரிசுகளாவர். அவர்கள் இருவரோடும் வம்சம் முடிந்து போகின்றது. மூன்று கன்னிகைகளில் மூன்றாமவளுக்குத் தனித்து வாரிசுகளில்லாமையால் பெயர் கூறவில்லை" என்று இருக்கிறது.

அவளுக்கு {அனலைக்குச்} சுகி (கிளிகளின் தாய்) என்ற மற்றுமொரு மகளும் இருந்தாள். சுரசைக்குக் கங்கன் என்றொரு மகன் (நீளமான இறகுகள் கொண்ட பறவைகள் வகை) இருந்தான். அருணனின் மனைவி சேனி, சம்பாதி மற்றும் வலிமைமிக்க ஜடாயு என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பெரும் சக்தியும், பலமும் கொண்டவர்களுமான இரு மகன்களைப் பெற்றெடுத்தாள். சுரசை நாகர்களையும், கத்ரு பன்னகங்களையும் (பாம்புகளையும்) பெற்றெடுத்தனர்.(71,72) வினதை, நெடுந்தூரம் பரந்து அறியப்பட்டிருந்த கருடன் மற்றும் அருணன் என்ற இரு மகன்களைக் கொண்டிருந்தாள். ஓ மனிதர்களின் மன்னா, ஓ புத்திசாலி மனிதர்களின் முதன்மையானவனே {ஜனமேஜயா}, முதன்மையான உயிரினங்கள் அனைத்தின் குலமரபுகளும் இப்படியே முழுமையாக என்னால் விவரிக்கப்படுகிறது. இதைக் கேட்பதனால் ஒரு மனிதன் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, பெரும் ஞானத்தை அடைந்து, இறுதியாக மறுமையில் {அடுத்த பிறவியில்} முதன்மையான நிலையை அடைகிறான்" {என்றார் வைசம்பாயனர்}. (73,74)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்