Friday, April 05, 2013

சகுந்தலையை மயக்கிய துஷ்யந்தன்! | ஆதிபர்வம் - பகுதி 73

Viswamitra and Menaka! | Adi Parva - Section 73 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 9)

பதிவின் சுருக்கம் : எட்டு வகைத் திருமணங்கள் குறித்துச் சொன்ன துஷ்யந்தன்; துஷ்யந்தனிடம் வரம் கேட்ட சகுந்தலை; துஷ்யந்தன் சகுந்தலை திருமணம்; கண்வரிடம் நடந்ததைச் சொன்ன சகுந்தலை; சகுந்தலையைப் பாதுகாத்த கண்வர்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவை அனைத்தையும் கேட்ட மன்னன் துஷ்யந்தன், "ஓ இளவரசியே! {சகுந்தலையே}, நீ சொன்னதனைத்தையும் நன்றாகவே சொன்னாய். ஓ அழகானவளே! நீ என் மனைவியாவாயாக. நான் உனக்காக என்ன செய்யட்டும்?(1) தங்கமாலை, ஆடைகள், தங்கத்தாலான காதணிகள், பல நாடுகளைச் சேர்ந்த அழகான வெண்முத்துக்கள், தங்க நாணயங்கள், சிறந்தத் தரைவிரிப்புகள் ஆகியவற்றை இன்றே உனக்குப் பரிசளிக்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, எனது முழு அரசாங்கமும் இன்று உனதாகட்டும். என்னிடம் வா, ஓ மருட்சியுடையவளே! அழகானவளே! கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே! திருமண முறைகள் அனைத்திலும் காந்தர்வ முறையே முதன்மையானதாக மதிக்கப்படுகிறது" என்றான் {துஷ்யந்தன்}.(2-4)



இதைக்கேட்ட சகுந்தலை, "ஓ மன்னா! {துஷ்யந்தரே}, எனது தந்தை {கண்வ முனிவர்} கனிகள் கொண்டு வருவதற்காக இந்த ஆசிரமத்திலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஒரு கணம் பொறுப்பீராக; அவரே என்னை உமக்கு அளிப்பார்" என்றாள் {சகுந்தலை}[1].(5)

[1] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: "ராஜாவே! எனதுபிதா பழங்கள் கொண்டு வருவதற்காக இந்த ஆஸ்ரமத்தைவிட்டுப் போயிருக்கிறார். சற்று நேரம் இரும். அவர் என்னை உமக்குக் கொடுப்பார். எனக்குப் பிதாவே அதிகாரி. அவர் எனக்கு முக்கியமான தேவதை. பிதா என்னை யாருக்குக் கொடுப்பாரோ அவரே எனக்குப் பர்த்தாவாவர். இளமையில் பிதா காப்பாற்றுகிறார். பருவகாலத்தில் கொழுநன் காப்பாற்றுகிறான். முதிர்ந்த பிராயத்தில் புத்திரன் காப்பாற்றுகிறான். ஸ்திரீ ஸ்வதந்திரமாய் இருக்கத்தக்கவள் அல்லள். ராஜஸ்ரேஷ்டரே! தர்மிஷ்டரே! சிறந்த தவமுள்ள என் பிதாவை மதிக்காமல் அதர்மமாக வரனை நான் எப்படி அடையலாம்?" என்று சொன்னாள். துஷ்யந்தன், "சுந்தரியே! தவமே உருக்கொண்டவரும், சாந்தியை இயல்பாக உடையவருமான கண்ணுவரைப் பற்றி நீ இவ்வாறு சொல்வது தகாது; தகாது" என்று சொல்ல, கேட்ட சகுந்தலை, "பிராம்மணர்களுக்குக் கோபமே ஆயுதம்; பிராமணர்கள் கையில் ஆயுதம் பிடிப்பவரல்லர்; இந்திரன் வஜ்ராயுதத்தினால் அஸுரர்களைக் கொல்வது போல் பிராமணர்கள் கோபத்தினால் சத்துருக்களைக் கொல்லுகின்றனர். அக்னி ஜ்வாலைகளினால் தகிக்கிறது; சூரியன் கிரகணங்களினால் தகிக்கிறான்; ராஜா தண்டனையினால் தகிக்கிறான்; பிராமணன் கோபத்தினாலேயே தகிக்கிறான். கோபம் மூட்டப்பட்ட பிராமணன், கோபத்தினாலேயே, இந்திரன் அஸுரர்களைக் கொன்றது போலவே கொல்லுகிறான்" என்று சொன்னாள். அதற்குத் துஷ்யந்தன், "பிரியமானவளே! அந்தக் கண்ணுவ மஹரிஷியை நான் அறிவேன். அவருக்குக் கோபமில்லை. அழகான நிதம்பமுள்ளவளே! சிலாக்கியமானவளே! நீ என்னை அடைவதை நான் விரும்புகிறேன்" - மீதம் கங்குலியில் உள்ளதைப் போலவே பின்வருமாறு இருக்கிறது

துஷ்யந்தன், "ஓ அழகானவளே! களங்கமற்றவளே! நீ எனது வாழ்க்கைத் துணையாக நான் விரும்புகிறேன். நான் உனக்காகவே வாழ்கிறேன் என்றும், என் இதயம் உன்னிடமே இருக்கிறது என்றும்  அறிந்து கொள்வாயாக.(6) ஒருவன் நிச்சயமாகத் தனக்குத் தானே நண்பனாகவும், தன்னைச் சார்ந்தவனாகவுமே இருப்பான்.  எனவே, முறைப்படி, நிச்சயமாக நீயே உன்னை எனக்கு அளிக்கலாம்.(7) மொத்தம் எட்டு வகைத் திருமணங்கள் இருக்கின்றன. அவை, பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,(8) காந்தர்வம், இராட்சசம் மற்றும் பைசாசம் ஆகிய வகைகளாகும்[2]. தான்தோன்றியின் {பிரம்மனின்} மகனான மனு, இவற்றின் தகுதிகள் அனைத்தையும், அதனதன் ஒழுங்குக்கேற்ப சொல்லியிருக்கிறார்.(9) ஓ களங்கமற்றவளே! {சகுந்தலையே}, பிராமணர்களுக்கு முதல் நான்கு வகையும், க்ஷத்திரியர்களுக்கு முதல் ஆறு வகையும் பொருந்துபவையாகும் என்பதை அறிவாயாக.(10) மன்னர்களைப் பொறுத்தவரை, இராட்சச வகையும் கூட அனுமதிக்கப்படுகிறது. வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் ஆசுர வகை அனுமதிக்கப்படுகிறது. முதல் ஐந்தில் மூன்று முறையானவை, மீதம் இரண்டும் முறையற்றவை.(11) பைசாச மற்றும் ஆசுர வகைகள் (எந்த மனிதனாலும்) நடைமுறையில் செய்யப்படவே கூடாது.[3] அறத்தின் அங்கங்களான இவற்றின்படியே ஒவ்வொருவனும் நடக்க வேண்டும்.(12) காந்தர்வ மற்றும் இராட்சச வகைகள் க்ஷத்திரியர்களுக்கு ஏற்ற நடைமுறைகளாகும். நீ இதனால் சிறு அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இறுதியாக சொன்ன இருவகையில் எந்த ஒரு வகையும், அல்லது இருவகையும் கலந்து நமது திருமணம் நடைபெறலாம்.(13) ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, நான் ஆசையால் நிறைந்திருக்கிறேன், நீயும் அவ்வாறே இருப்பதால், காந்தர்வ முறைப்படி நீ எனது மனைவியாகலாம்" என்றான் {துஷ்யந்தன்}.(14)

[2] அலங்கரிக்கப்பட்ட கன்னிகையைத் தானமளிப்பது பிரம்மவிவாகம்; வேள்வியின் முடிவில் ரித்விக்குகளுக்குத் தக்ஷிணையாகக் கன்னிகையைத் தானமளிப்பது தைவவிவாகம்; இணையர் இருவரும் சேர்ந்து அறம் வளர்க்கட்டும் என்று மனத்தினால் எண்ணி தானம் செய்வது பிரஜாபத்யம்; மணமகனிடமிருந்து இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு கன்னிகையைத் தானமளிப்பது ஆர்ஷவிவாகம்; பெருந்திரவியங்களை வாங்கிக் கொண்டு கன்னிக்கையைத் தானமளிப்பது ஆசுரவிவாகம்; மணமகனும், மணமகளும் மனமொப்பிக் கலந்து கொள்வது காந்தர்வவிவாகம்; தூக்கத்திலும், மதுமயக்கத்திலும் கன்னிகையைக் கடத்திச் செல்வது பைசாசவிவாகம்; போரிட்டுப் பலவந்தமாகக் கடத்திச் செல்வது ராக்ஷஸவிவாகம்.

[3] அர்த்தசாஸ்திரம் போன்ற அரசநீதி நூல்களில் இதேத் திருமண வகைகள் உண்டு. பெற்றவரின் சம்மதம் பெற்ற பிரம்மம், தைவம், பிரஜாபத்யம் ஆகியவை ஒப்புக் கொள்ளப்பட்ட விவாகங்கள் ஆர்ஷம், ஆசூரம் ஆகியவற்றை அரசுக்குத் தண்டம் அளித்து ஏற்கும் வகை விவாகங்களாக மாற்றிக் கொள்ளலாம். காந்தர்வம் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படுத்தப்படும். பைசாஸம், ராட்சஸம் ஆகிய திருமணங்கள் செய்தவர் தண்டிக்கப்பட்டுவர். தண்டனைக்குப்பின் மணப்பெண் மற்றும் அவளைப் பெற்றோரின் சம்மதம் இருப்பின் அத்திருமணம் முறைப்படுத்தப்படும்.

இதையெல்லாம் கேட்ட சகுந்தலை பதிலளித்தாள், "இதுதான் அறம் அங்கீகரித்தப் பாதை என்றால், நிச்சயமாக நானே என்னை அளிக்கலாம் என்றால், ஓ பௌரவ குலத்தில் முதன்மையானவரே![4] எனது நிபந்தனைகளைக் கேட்பீராக.(14) நான் கேட்பனவற்றை எனக்குக் கொடுப்பதாக உண்மையாக எனக்கு உறுதிகூறுவீராக. என் மூலமாகப் பிறக்கும் மகனே உமது வாரிசாக வேண்டும். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, இதுவே எனது நிலையான மனத்துணிவாகும் {தீர்மானமாகும்}. ஓ துஷ்யந்தரே! இந்த வரத்தை நீர் எனக்களிப்பதாக இருந்தால், நமது கூடுகை {திருமணம்} நடக்கலாம்" என்றாள் {சகுந்தலை}.(15,16)

[4] இங்கே இது புரூரவஸைக் குறிப்பிட்டுச் சொல்வதாகும், யயாதியின் மகன் பூரூவை அல்ல

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, சிந்திக்க எந்த நேரமும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக, "அப்படியே ஆகட்டும். ஓ ஏற்கத்தக்க புன்னகை கொண்டவளே! {சகுந்தலையே}, நான் உன்னை எனது தலைநகருக்கே அழைத்துச் செல்வேன்.(17) நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ அழகானவளே! {சகுந்தலையே}, நீ இஃது எல்லாவற்றுக்கும் தகுந்தவளே" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அந்த மன்னர்களில் முதன்மையானவன் {துஷ்யந்தன்}, நயத்தகு நடைகொண்ட அழகிய சகுந்தலையை மணந்து, ஒரு கணவனாக இருந்து அவளை {ஒரு மனைவியாக} அறிந்துக் கொண்டான்[5]. அவன் {துஷ்யந்தன்},(18-20) அவளிடம் {சகுந்தலையிடம்} "உனது பாதுகாப்புக்காக எனது நான்கு வகைப் படைகளை அனுப்பி வைக்கிறேன். ஓ இனிமையான புன்னகை கொண்டவளே, நிச்சயமாக நான் உன்னை எனது தலைநகருக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று மீண்டும் மீண்டும் உறுதிகூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.(21)

[5] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, "என்று அந்த ராஜரிஷி அழகாக நடக்கின்ற அவளைப் பார்த்து இவ்வாறு சொல்லி, *[புரோஹிதரை அழைத்து ஸமயோசிதமான சொல்லைச் சொன்னான். "ராஜகுமாரியான சகுந்தலை சொன்னதை வியர்த்தமாக்குவதற்கு நான் கருதவில்லை. சிறந்த கீர்த்தியுள்ள எனது புத்ரன் ஸம்ஸ்காரமில்லாதவனாக ஆகத்தகாது. ஆதலால், சாஸ்திர விதிப்படி விவாஹத்தை நடத்தும்; காலவிளம்பம் செய்ய வேண்டாம்" என்றான். ராஜாவினால் இவ்வாறு சொல்லப்பட்ட பிராமணர், "அரசர்க்கரசே! நியாயம்" என்று சொல்லிச் சிறந்த நியமமுள்ளவராகச் சாஸ்திரப்படி விவாஹத்தைச் செய்தார். அந்தப் பிராமணஸ்ரேஷ்டர் சொற்படி மங்களகங்கணம் கட்டிக் கொண்டு சாஸ்திரப்படி சகுந்தலையைப் பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டு] அவளுடன் கூட இருந்தான். அவன் அவளை ஸமாதானப்படுத்திப் பிரயாணப்படும்போது, "உனக்காக சதுரங்கஸேனையையும் அனுப்புவேன்" என்று பலமுறையும் சொன்னான்" என்றும். "*[ ] இவற்றுக்குட்பட்டவை உத்தரதேச பாடத்தில் இல்லை" என்றும் இருக்கிறது.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஜனமேஜயா, இப்படி அவளுக்கு உறுதி கூறிய மன்னன் {துஷ்யந்தன்} அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் {துஷ்யந்தன்} வந்தவழியே தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, காசியபரை {கசியப குலத்தில் தோன்றிய கண்வரைக்} குறித்து நினைக்கத் தொடங்கினான்.(22) அவன் {துஷ்யந்தன்}, ' சிறப்புமிக்கத் துறவி {கண்வர்}, அனைத்தையும் அறிந்த பிறகு, என்ன சொல்வார்?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இதை நினைத்துக் கொண்டே அவன், தனது தலைநகருக்குள் நுழைந்தான்[6].(23)

[6] கும்பகோணம் பதிப்பில், துஷ்யந்தன், "அழகிய புன்னகையுள்ளவளே! மூன்று வேதங்களையும் அறிந்த பெரியோர்களோடும், அனேக ராஜஸேவகர்களோடும், அனேகமாயிரம் பல்லக்குகளோடும்கூட என் பந்துக்கள் வருவார்கள். ஊமையர்களும், வேடர்களும், கூனர்களும், குள்ளர்களும், அலிகளும், புராணம் சொல்லுகின்றவர்களும் ஸ்துதிபாடுகிறவர்களும், சேர்ந்த சேனை சங்கதுந்துபி வாத்தியங்களின் முழக்கங்களுடன் வனத்திற்கு வரப்போகிறது. அவ்வாறாக உன்னை என் நகரத்திற்கு வருவிப்பேன். அவ்வாறு மங்களங்களான எல்லா ஆசாரங்களாலும் கௌரவம் செய்யாமல் சாதாரணமாக உன்னை என் அரண்மனைக்கு அழைக்க மாட்டேன். அழகிய புருவமுள்ளவளே! உனக்கு ஸத்தியஞ்செய்கிறேன்" என்று சொன்னான். அழகாக நடக்கின்ற அந்த சகுந்தலைக்கு அந்த ராஜரிஷி இவ்வாறு சொல்லி, அவளை இரண்டு கைகளினாலும் தழுவிக் கொண்டு, மலர்ந்த முகத்துடன் பார்த்து, தான் சொன்னதை அவள் ஒப்புக் கொண்டதன் பின், மறுபடியும் அவளைத் தழுவிக் கொண்டான். அழகிய முகமுள்ள அந்தச் சகுந்தலை ராஜாவின் பாதங்களில் விழுந்தாள். ஜனமேஜய ராஜரே! தன் மனைவியான அந்தச் சகுந்தலையை மறுபதியும் தழுவியெடுத்து, "ராஜகுமாரியே! நீ விசனப்படாதே; நான் அழைத்துக் கொண்டு போவேன்; என் தர்மத்தின் மேல் ஆணை" என்று பலமுறை அவளுக்கு உறுதிமொழி சொல்லி, அவ்வரசன் கண்ணுவரைப் பற்றி மனத்தில் சிந்தித்துக் கொண்டே சென்றான். "சிறந்த தவமுள்ளவரும் கசியபகுலத்தவருமான பகவான் கண்ணுவர் கேட்டு என்ன செய்வோரோ? அந்தப் பிராமணஸ்ரேஷ்டரைத் தயை செய்யுமென்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாமல் நான் வந்துவிட்டேனே" என்று நினைத்துக் கொண்டே தனது நகரத்தில் பிரவேசித்தான்" என்றிருக்கிறது.

மன்னன் {துஷ்யந்தன்} சென்ற கணத்தில், கண்வர் தமது குடிலுக்கு வந்தார். ஆனால் சகுந்தலை, வெட்கப்பட்டுக்கொண்டு தனது தந்தையை {கண்வ முனிவரை} வரவேற்கச் செல்லவில்லை.(24) இருந்தாலும், அந்தப் பெரும் துறவி, தனது ஆன்ம ஞானத்தால் அனைத்தையும் அறிந்தார். ஞானக்கண் கொண்டு அனைத்தையும் கண்ட அந்தச் சிறப்புவாய்ந்தவர் {கண்வர்}, மகிழ்ந்து, அவளிடம் {சகுந்தலையிடம்},(25) "இனிமையானவளே, எனக்காகக் காத்திராமல் ரகசியமாக இன்று நீ என்ன செய்தாயோ, அதனால் உனது நல்லொழுக்கத்துக்கு இழுக்கில்லை.(26) புலன் ஆசை கொண்ட ஆணும், விருப்பமுள்ள பெண்ணும் எந்த மந்திரமும் இல்லாமல் காந்தர்வ முறைப்படி சேர்வது க்ஷத்திரியர்களுக்குச் சிறந்த நடைமுறையே.(27) மனிதர்களில் சிறந்தவனான அந்த துஷ்யந்தன், உயர் ஆன்மா கொண்டவனும் அறம் சார்ந்தவனுமாவான். ஓ சகுந்தலா, நீ அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டாய்.(28) உனக்குப் பிறக்கப் போகும் மகன் இந்த உலகில் பெரும் பலம் வாய்ந்தவனாகவும், சிறப்பு வாய்ந்தவனாகவும் இருப்பான். அவன் கடல் மீதும் ஆதிக்கம் செலுத்துவான்.(29) அந்தச் சிறப்பு வாய்ந்த மன்னர்களுக்கு மன்னன் {உன் மகன்} தனது படைகளுடன் எதிரிகளிடம் சென்றால் அது தாங்கமுடியாததாக இருக்கும்" என்றார்.(30)

சகுந்தலை அதன்பிறகே களைப்படைந்து வந்த தன் தந்தையை {கண்வ முனிவரை} அணுகி, அவரது பாதங்களைக் கழுவினாள். அவரது சுமையை வாங்கிக் கொண்டு பழங்களைச் சரியான முறையில் அடுக்கி வைத்து, அவரிடம் {கண்வ முனிவரிடம்},(31) "என்னால் கணவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட துஷ்யந்தருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நீர், உமது கருணையால் அருள வேண்டும்" என்றாள்.(32)

அதற்குக் கண்வர், "ஓ அழகான நிறம் கொண்டவளே {சகுந்தலையே}, உனக்காகவே நான் அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அருள் வழங்குவேன்.  ஆனால், ஓ அருளப்பட்டவளே {சகுந்தலையே}, என்னிடமிருந்து நீ ஆசைப்படும் ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்வாயாக" என்றார்.(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சகுந்தலை, துஷ்யந்தனுக்கு அனுகூலமாக இருக்க ஆசைப்பட்டுப் பௌரவ குல ஏகாதிபதிகள் எப்போதும் அறம் வழுவாமல், தங்கள் அரியணையை இழக்காமல் இருக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள்."(34)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்